மாமியார் வீட்டு விருந்தென்றால் சும்மாவா.. தடபுடல் தான்… தாறுமாறு தான். மருமகன் என்ற உறவும் சாதாரணம் அல்ல. மாமியார் வீட்டு உறவும் வெறும் உறவல்லவே.
திருமணத்திற்கு பின் எப்படி ஒரு பெண், இவர்கள் எல்லாம் தன் குடும்பம், தன் உறவுகள் என்று கணவன் வீட்டினரை ஏற்கிறாளோ, அதுபோலவே ஆணுக்கும் அவனது உறவு வட்டம் விரிவடைகிறது. இவர்களும் என் உறவுகள், இவர்களும் என் குடும்பம் என்ற பிணைப்பை கொடுப்பது ஒரு பெண்.
குடும்பஸ்தன் என்ற அங்கீகாரம் அத்தனை எளிதா என்ன??
எந்தவொரு குடும்பத்திலும் பெண் அனுசரித்து, அனைவரையும் ஆதரித்து போகும் போது அங்கே உறவுகளும் சொந்தங்களும் நிலைப்படுகின்றன. உறவுகளுக்கான பாலமாய் பெண் இருக்கிறாள் என்பது நிஜம் தானே. அடுத்த தலைமுறையை கொடுப்பவள் மட்டுமல்ல பெண். தன் அடுத்த தலைமுறைக்கான அனைத்து சொந்தகளையும், உறவுகளையும் சேர்த்து சேகரித்து கொடுப்பவளும் அவளே.
லட்சுமியும் அப்படிப்பட்ட பெண் தான். அவள் நினைத்திருந்தால் திருமணமான புதிதில் தான் பிறந்த வீடு செல்ல வேண்டும் என்று பிடிவாதம் செய்திருக்கலாம். கண்ணீர் விட்டு கதறி அழுது இல்லை சண்டை போட்டு என்று எப்படியேனும் ஈசனை இதற்கு சரி என்று சொல்ல வைத்திருக்கலாம்.
அப்படி சொல்லியிருந்தால் அவனும் வேண்டா வெறுப்பாய் வந்திருப்பானே ஒழிய மனம் கனிந்து சரியென்று சொல்லியிருக்க மாட்டான். ஆனால் அப்படி எதுவுமே சொல்லாது காத்திருந்தாள். தனக்கு கஷ்டமாய் இருந்தாலும் பரவாயில்லை என்று பொறுமையாய் காத்திருந்தாள். அதன் பலனே இன்று அவள் எதிர் பாரா நேரம் ஈசனே அங்கே போவோம் என்று சொன்னது.
ஈசனும் லட்சுமியும் வருகிறார்கள் என்றதுமே பேச்சிக்கு நம்பவே முடியவில்லை. பேச்சிக்கு மட்டுமில்லை குடும்பத்தில் யாருக்குமே நம்ப முடியவில்லை. ஈசன் போகலாம் என்று சொன்ன அன்றே, இரவு என்றும் பாராது லட்சுமி பேச்சிக்கும், மரகதத்திற்கும் அழைத்து சொல்ல, இருவருமே கேட்டது ஒரே கேள்வி தான்.
“நிஜமாத்தான் சொல்றியா லட்சுமி…??”
இருவருக்கும் முதலில் இதை நம்பவே முடியவில்லை.
‘அட ஆமா.. ஈஸ் மாமா தான் நாளைக்கு அங்க போகலாம்னு சொன்னாங்க…’ என்று லட்சுமி இருவரையும் நம்ப வைக்க படாதபாடு தான் பட்டாள்.
ஆனாலும் முகத்தில் அத்தனை சிரிப்பு. ஈசன் அருகிலிருந்தாலும், தான் பேசுவது அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தாலும் லட்சுமி அப்பட்டமாகவே தன் மகிழ்வை அவ்விரு பெண்மணிகளோடு பகிர,
ஈசனுக்கு மனதில் என்னவோ போல் ஆனது. தன் ஒருவனின் முடிவு இத்தனை பேருக்கு மகிழ்வை கொடுக்கிறதா என்று தோன்றியது. இதுநாள் வரை இப்படியெல்லாம் சிந்தித்ததே இல்லை. தனக்கு சரியயென்று தோன்றுவதை அப்படியே செய்வான். பிறர் என்ன நினைப்பர் என்ற நினைப்பே அவனுக்கு இருந்ததில்லை.
சும்மாவா சொன்னார்கள் கல்யாணம் என்று ஒன்றாகி ஒரு ஆடவனின் வாழ்வில் பெண் என்பவள் நுழைந்தால், அனைத்தும் மாறும் என்று. அது தான் ஈசனுக்கும் இப்போது நடக்கிறது.
லட்சுமி பேசுவதையே பார்த்தவனுக்கு இத்தனை நாள் தான் அப்படி போகாது இருந்திருக்க கூடாதோ என்று நினைத்தான். திருமணமாகி இடைப்பட்ட இந்த நாட்களில் லட்சுமி ஒருமுறை கூட இப்படி சிரித்து பேசி கண்டதில்லை. மனதிற்குள் மிகவும் சங்கடமாய் இருந்தது.
இனி எப்போதுமே அவளை இதுபோலவே சிரித்த முகமாய் பார்த்திருக்க வேண்டும் என்ற எண்ணம் முளைக்க, லட்சுமி பேசி முடிக்கும் வரை காத்திருந்தவன், “லஷ்மி…” என,
“என்ன மாமா….” என்றாள் அவளும் தன் முகத்திலும் இதழிலும் உறைந்துவிட்ட சிரிப்போடு.
அவளை பார்த்து பேச வசதியாய் அவள் பக்கம் திரும்பி படுத்தவன், “ஹ்ம்ம் இத்தனை நாள் அங்க போகணும்னு ஆசை பட்டியா…??” என்று, தான் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது என்று தெரிந்தாலும், கேட்டான்.
இதென்ன கேள்வி என்பது போல் அவள் முகம் மாற,
“சொல்லு லஷ்மி…” என்று இவனும் ஊக்க,
“எந்த பொண்ணுக்கு தான் மாமா கல்யாணத்துக்கு அப்புறம் பிறந்த வீட்டுக்கு போக பிடிக்காம இருக்கும்.. அது பக்கத்துல இருந்தாலும் சரி பாகிஸ்தான்ல இருந்தாலும் சரி.. போகணும்னு தோணும்..” என்றவளும் அவனை போலவே அவன் புறம் திரும்பி படுக்க,
வழக்கத்தில் இல்லாத வழக்கமாய் இப்படி இருவரும், அதுவும் இந்த நட்ட நடு ராத்திரியில், படுத்துக்கொண்டே முகம் பார்த்து பேச, இருவருக்குமே மனதிற்குள் இந்த பொழுது ரசிக்கும்படியாய் தான் இருந்தது.
லட்சுமிக்கு எப்பொழுதுமே ஈசனது அருகாமை பிடிக்கும். என்ன வெளியில் காட்டிக்கொள்ள மாட்டாள். ஈசன் இப்போது தான் இதெல்லாம் உணர்கிறான். ஆனாலும் அவனுக்கு நான் எனக்கும் தோன்றும் உணர்வுகளை எல்லாம் மறைத்து வைக்கவெல்லாம் மாட்டேன் என்ற எண்ணம்.
இதுவரைக்கும் அப்படிதானே.. ஆக இனிமேலும் அப்படிதான்.
“என்கிட்ட அங்க போகணும் சொல்லிருக்கலாமே.. இத்தனை நாள் மனசில வச்சிட்டு ஏன் இருந்த லஷ்மி…??” என, பதிலுக்கு அவளிடம் லேசாய் முறைப்பு தான் வந்தது.
“ஹேய் என்ன… நான் நல்லாதானே பேசுறேன்.. பேசினாலும் முறைக்கிற, பேசலைன்னாலும் முறைக்கிற…” என்றவனின் குரலிலும் உற்சாகம் தான்.
“ஹ்ம்ம் பேசுறீங்க.. யார் இல்லைன்னு சொன்ன.. இன்னிக்கு தானே பிள்ளையார் சுழி போட்டு இருக்கீங்க… அதான் நானும் எதுவும் சொல்லலை..” என்றவளின் பாவனையில் ஈசன் என்ன கண்டானோ, கண்களை சுருக்கி அவள் முகம் பார்த்து
“அப்போ எல்லாத்தையும் நானே கண்டுபிடிச்சு நானே செய்யனுமா…???” என இலகு போல் கேட்டாலும், ஈசன் மனமோ அது அத்தனை எளிதல்ல என்று சொல்லியது.
“அது உங்க விருப்பம் மாமா…” என்றவள் மேற்கொண்டு பேச்சுக்கொடுத்தால், ஈசன் தன்னை பேச வைத்துவிடுவான் என்று நினைத்து, “சரி தூங்குவோம்… நேரமாச்சு….” என்று புரண்டு படுத்துவிட்டாள்.
ஆனால் ஈசன் உறங்கவில்லை. லட்சுமி போல் புரண்டும் படுக்கவில்லை. அவன் மனதில் இருவகையான எண்ணங்கள். ஒன்று லஷ்மி, இன்னொன்று தொழில்.
லட்சுமியை அவனால் இவள் இப்படிதான் என்று ஒரு கணக்கில் கொண்டு வரவே முடியவில்லை. பல நேரங்களில் புரியாத புதிராக இருக்கிறாள். சில நேரங்களில் இயல்பாய் தோன்றுகிறாள். இந்த ஒருநாளில் அவளை பற்றி சிந்தனை தான் ஜாஸ்தி. ஆனால் அவனுக்கு தெரியவில்லை, லட்சுமியை அவன் கவனிக்க ஆரம்பித்தே ஒருநாள் தான் ஆகிறதென்று. என்னவோ வெகு நாட்களாய் தான் அவளை புரியாமல் திண்டாடுவது போல் ஓர் உணர்வு.
உண்மையும் அதானே.. காதல் தானாய் அமைவது வேறு.. அமைத்துகொள்வது வேறு.
ஈசனை பொருத்தமட்டில் இது பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைத்த திருமணம். லட்சுமிக்கோ இது அவளது காதலுக்கு கிடைத்த வரம். இரண்டுக்கும் எக்கசக்க வித்தியாசம் இருக்கிறதே.
திருமணம் தானாய் தான் நடந்தது. ஈசனது விருப்பம் என்னவென்று எல்லாம் கேளாமல் நடந்தது. ஆனால் லட்சுமி தன் மனைவி என்ற எண்ணத்தை தன் மனதில் பதித்துக்கொண்டான். இத்தனை நாள் தோன்றவில்லை. தோன்றியிருக்க வேண்டும் தானே. ஆனால் இப்போது அவனே தோன்ற வைத்துகொண்டான். இவள் என் மனைவி.. திருமதி. ஈசன் என்று.
ஆனால் லட்சுமி விரும்பியது இதுவல்லவே..
மனைவி என்ற எண்ணம் வந்தாலே, அதன் பின்னே கணவன் மனைவி என்று அனைத்து உணர்வுகளும் வரும் தானே. அவனை பொருத்தமட்டில் இந்த வாழ்வு பிடித்திருக்கிறது. லட்சுமி பிடித்திருக்கிறது. லட்சுமியோடான தன் வாழ்வு எதிர்காலத்தில் சிறப்பாகவே இருக்கும் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் ஏனோ அவளோடு இந்த திருமண வாழ்வை முழுவதுமாய் தொடங்க ஒரு சிறு தயக்கம்.
அதற்க்கு காரணமும் அவளே தான். அவள் பார்வை தான். அந்த பார்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் கதை தான். அது தெரியவேண்டும் போல ஓர் ஆசை.
ஆசை நாள் ஆக ஆக ஒரு பிடிவாதமாய் மாறும். பிடிவாதம் வேறு எதையும் சிந்திக்க விடாது, ஆசை கொண்டதிலேயே குறியாய் இருக்க வைக்கும். ஆசைப்பட்டது சட்டென்று கிடைத்துவிட்டாலும் சரியல்ல, கிடைக்காமலே போனாலும் சரியல்ல, ஆனால் கண் முன்னே வைத்துகொண்டு அதனை சொந்தம் கொண்டாடாமல் இருப்பது தான் பெருங்கொடுமை. ஈசனுக்கும் அப்படிதான் ஆனது இப்போது.
யாராவது ஒரே நாளில் நீ இப்படி மாறுவாய் என்று சொல்லியிருந்தால் நிச்சயம் அவன் சிரித்திருப்பான். ஆனால் நடந்ததும் அதுவே.. எந்த பந்தாவும் இல்லாது ஏற்றுக்கொண்டான். ஒரு புதுவித உற்சாகத்தை கொடுத்தது.
ஒவ்வொரு நொடியும் லட்சுமியை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்ற, முதலில் அவளை தன்னிடம் இலகுவாக்க வேண்டும் என்ற எண்ணமும் வர, அவ்வபோது அவள் பார்க்கும் வெற்று பார்வையும் கண் முன்னே வர, தன்னை பற்றி அவள் மனதில் என்னவோ இருக்கிறது அது தெரியாமல் இவ்வுறவு பூர்த்தியாகாது என்று ஈசன் உருதிகொண்டான்.
கூடல் என்பது இரு உடல்களுக்கு மட்டுமல்ல. முதலில் இரு மனமும் கூட வேண்டும். ஒருவர் அன்பில் ஒருவர் லயிக்க வேண்டும். நீ நான் என்பது எல்லாம் சும்மா, எப்பொழுதுமே நாம், நாம் தான் என்று உணர்ந்திட வேண்டும். அப்பொழுது தானே வாழும் வாழ்வு என்பது அழகானதாய் இருக்கும்.
ஈசனுக்கு தானும் அப்படியொரு வாழ்வு வாழ ஆசை பிறந்தது. அதுவும் லட்சுமியோடு.
‘என்னவோ மறைக்கிறா.. என்கிட்டே என்ன பிடிவாதம்…’ என மனம் சிணுங்கினாலும்,
‘இதுவும் கூட நல்லாத்தான் ஈசா இருக்கு.. நாமளும் கல்யாணம் பண்ணோம்.. வாழ்ந்தோம்… குழந்தை பெத்தோம்னு இல்லாம… இது ரொம்பவே நல்லா இருக்கு.. முதல்ல அவ மனசில என்ன இருக்குன்னு கண்டு பிடிக்கணும்..’ என்று எண்ணியவனின் பார்வை லட்சுமியை வருட,
அவளோ தான் தூங்கிவிட்டேன் என்று இவனை நம்பவைத்துக்கொண்டு இருந்தாள்.
தங்கள் வாழ்வை பற்றிய எண்ணத்தில் ஒரு தெளிவு பிறக்க, அடுத்து அவன் மனம் நினைத்ததோ தொழிலை பற்றி. நிச்சயம் துரைசாமி ஏதாவது அடுத்து பிரச்சனை செய்வான் என்று தெரியும். இப்படி தங்கள் சூப்பர் மார்கெட் அருகிலேயே வந்து மற்றொரு கடை வைக்க ஏற்பாடு செய்வான் என்று நினைக்கவில்லை.
ஈசன் அவனை போட்டியாய் எல்லாம் நினைக்கவே இல்லை. இப்பொழுதும் கூட ஏன் இனிமேலும் கூட இவனெல்லாம் ஒரு ஆளா என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். ஆனாலும் தான் மேலும் மேலும் முன்னேற வேண்டும் என்ற வேகம் இருந்தது. நிச்சயம் இது பணத்திற்காக இல்லை.
பணம் வாழ்விற்கு முக்கியம் தான். அதுவே அனைத்தும் ஆகிவிடாது. நீர் எப்படி ஓடிக்கொண்டே இருக்கிறதோ அது போல தான் பணமும். பயணித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் அதனைக்கொண்டு சிலராவது பயனடைய முடியும்.
அப்படி இல்லாது ஒரே இடத்தில தேங்குவது அத்தனை சரியாகாது. நீரும் ஒரே இடத்தில் தேங்கி நின்றால் சில நாளில் சாக்கடை போல் ஆகி விடுகிறதே. ஆக அதிக பணமும் ஒருவரிடம் தேங்க தேங்க, மனித மனதில் அழுக்கும் தேங்க ஆரம்பிக்கிறது.
ஈசன் அப்படி பட்டவன் தான். வாழ்க்கைக்கு பணம் தேவை. ஆனால் அதன் பின்னே ஓடி வாழ்வை தொலைக்க முடியாது. தேவைக்கு அதிகமாகவே வசதி இருக்கிறது. போதும். இனி சம்பாரிக்க வேண்டியதெல்லாம் பெயர்.. அடையாளம்.. அதையும் தாண்டி இன்னும் ஏதாவது இருந்தால் அதுவும்..
நாம் இருந்தாலும் இறந்தாலும் பேர் சொல்லவேண்டும் என்பார்களே அது போல ஆள் தான் ஈசன். அவனுக்கு பெயர் மிகவும் முக்கியம். ஏழு தலைமுறைக்கு சொத்தும் பணமும் சேர்த்து என்ன செய்ய, ஏழு தலைமுறைக்கும் பெயர் சேர்க்க வேண்டும் என்ற ஆசை.
பணம் இன்று வரும் நாளை போகும். பெயர் அப்படி இல்லை. நிலைத்து நிற்கும்.
இப்படியாக அவன் மனதில் சிந்தனை ஓட, வெகு நாளாய் தான் செய்யவேண்டும் என்று நினைத்த விசயமும் நினைவில் வந்தது. எப்படியும் லட்சக் கணக்கில் செலவு ஆகும். அதை பற்றியெல்லாம் கவலையே இல்லை.
தேனியில் கடை ஆரம்பிக்கவே அவனுக்கு கோடியில் வந்து நின்றது. அடுத்த மாதம் போல் வேலை தொடங்கலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் இப்போது சிந்தனை வேறு பக்கம் செல்ல, சரி முதலில் தான் நினைத்தை செய்து முடிப்போம் பின் தொழிலுக்கு என்ன செய்வது என யோசிப்போம் என ஒரு முடிவுக்கு வந்த பின்னே தான் அவனால் உறங்கவே முடிந்தது.
மறுநாள் மாமியார் வீட்டு விஜயம்.
லட்சுமி கிளம்பியதை பார்த்து, “இங்க இருக்க வீட்டுக்கு போக இவ்வளோ அலம்பல்…” என்று கிண்டல் கூட செய்தான்.
அவளோ நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என்பது போல் இருக்க, ‘எல்லாம் என் நேரம்டா…’ என்று நினைத்தவன், லட்சுமியை அழைத்துக்கொண்டு செல்ல ஏகபோக வரவேற்பு அங்கே.
பேச்சி, முத்தரசி, வேலாயுதம் என அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. மனோஜ் வந்து அக்கா என்று கைகளை பிடித்துக்கொண்டான்.