“ரொம்ப சந்தோசம் மாப்பிள்ள….” என்று வேலாயுதம் சொல்ல ஈசன் லேசாய் சிரித்து வைத்தான்.
பிறந்ததில் இருந்து எத்தனை முறை இங்கு வந்து போயிருக்கிறான். ஆனால் இன்று முற்றிலும் வித்தியாசமாய் இருந்தது. அப்போதோ வெறும் உறவினன். இப்போது அப்படியில்லையே..
பேச்சிக்கு இப்பொழுது தான் மனம் நிம்மதியாய் இருந்தது. முத்தரசி தான் லட்சுமியிடம், “எப்படி டி.. தம்பி கிளம்புச்சு…??” என்று விசாரிக்க,
“அட என்ன சித்தி நீங்க அப்போ கேமராவே செட் பண்ணலையா…??” என்று கேட்க,
“அடி கழுத… நான் என்ன சொல்றேன்.. நீ என்ன சொல்ற…” என்று முத்தரசி அதட்ட, ஈசன் இதெல்லாம் பார்த்துகொண்டு தான் இருந்தான்.
லட்சுமி அனைவரிடமும் சகஜமாகவே பழகுகிறாள் ஆனால் ஒரு ஒதுக்கம் இருப்பது நன்றாகவே அவனுக்கு தெரிந்தது.. கூடவே ஏன் என்ற கேள்வியும் பிறந்தது.
இங்கு வந்துவிட்டு சிறிது நேரத்தில் அவன் கிளம்பி சூப்பர் மார்கட் செல்லவேண்டும் என நினைத்து வந்திருந்தான். ஆனால் எங்கே கிளம்ப முடிந்தது. காலையில் வந்தவர்கள் மதிய உணவு முடிந்த சற்று நேரம் கிடைக்க,
சரி கிளம்பலாம் என்று பார்த்தால், இந்த லட்சுமி எங்கே போனாள் என்றே தெரியவில்லை. எத்தனை நேரம் தான் அவனும் வேலாயுதம், மனோஜோடு பேசிக்கொண்டு இருப்பது.
லட்சுமி பேசும் சத்தமும் கேட்கவில்லை, இருக்கும் அடையாளமும் தெரியவில்லை.
‘எங்கடா போனா இவ….’ என்பது போல் பார்வையை ஓட்ட, அதை அப்பக்கம் வந்த முத்தரசி கவனித்து, லட்சுமியை அழைக்க, மாடியில் அவளறைக்கு சென்றிருப்பாள் போல வேகமாய் இறங்கி வந்தாள்.
“ஏன் லட்சுமி.. இங்க எல்லாரும் இருக்கும் போது மேல என்ன செஞ்ச…” என்று கேட்டபடி ஈசனை கண் காட்ட, அவளும் ஒன்றும் சொல்லாமல் என்னவென்பது போல் ஈசனை காண,
“நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன் லஷ்மி….” என, அப்படியே முகம் சுணங்கி விட்டது இவளுக்கு.
ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் சரி என்று தலையை உருட்ட, “என்ன லஷ்மி…??” என்று அவனும் கேட்க,
“ஒன்னுயில்ல மாமா.. நீங்க கிளம்புங்க.. நான் எல்லாம் எடுத்து வைக்கிறேன்..” என்று மட்டும் சொன்னவள் அவன் முகமே பார்க்கவில்லை.
“ம்ம்ச் இப்ப எதுக்கு முகத்தை உம்முன்னு வைக்கிற….” என்றவனுக்கு குரல் கடினமுற்றது. எதையுமே சொன்னால் தானே தெரியும். ஒவ்வொரு முறையும் அவனாகவே எல்லாம் கண்டறிய முடியுமா??
அப்படியென்ன தன்னிடம் இவளுக்கு அழுத்தம் வேண்டியிருக்கு என்று தோன்ற லேசாய் எரிச்சல் கூட வந்தது. அதுவுமில்லாமல் அவனுக்கு அங்கே பொழுதே போகவில்லை. அவன் வீட்டிலேயே அவன் இருக்க மாட்டான் அப்படியிருக்க, அவனை இங்கே பிடித்துவைக்க முடியுமா.
ஈசனின் குரல் காட்டமாய் வரவுமே, லட்சுமி சுற்றி பார்வையை ஓட்ட, அங்கே யாருமில்லை என தெரியவும்,
“இப்போதானே மாமா சாப்பிட்டீங்க.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு போகலாம்ல..” என,
“ரெஸ்ட்டா.. அது சரி.. காலையில இருந்து பண்ணைக்கு கூட போகலை… இன்னிக்கு லோட் வருது லஷ்மி.. கணக்கு பார்த்து எல்லாம் வாங்கி வைக்கணும்.. பணம் கொடுக்கணும்..” என,
“ம்ம்….” என்று மட்டும் சொன்னாள் சுரத்தே இல்லாமல்.
அவள் முகம் பார்க்கவும் என்ன நினைத்தானோ, “ம்ம்ச் இப்போ என்ன ரெஸ்ட் எடுக்கணும்.. அவ்வளோ தானே.. எங்க எடுக்கணும் சொல்லு…” என்றபடி அவளருகே வர, சட்டென்று அவள் முகம் பிரகாசமாய் மாறி,
“ஹ்ம்ம் உன் ரூம் காட்டனும்.. அதுக்கு என்னை ரெஸ்ட்னு சொல்லி இழுத்துட்டு போற.. எதையுமே வெளிப்படையா சொன்னா என்ன லஷ்மி…” என்று சலித்தபடி வந்தான்.
“ஓ.. அவ்வளோ சலிப்பா.. அப்படி ஒன்னும் நீங்க வர வேண்டாம்.. போங்க…” என்றவள் அவனை உள்ளே வரவிடாது அறையின் வாயிலை மறைத்து நிற்க,
“அது சரி.. ஆளப்பாரு… போடி….” என்று அவளை இடித்து நன்றாய் உரசிக்கொண்டே உள்ளே சென்றான்.
அவன் என்னவோ சாதாரணமாய் சென்றுவிட்டான் லட்சுமிக்கு தான் உடம்பெல்லாம் கூசி சிலிர்த்து விட்டது.. என்னவோ உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் சூடாய் ஓர் உணர்வு.. கண்கள் இங்கும் அங்கும் அலைபாய, இன்னும் அப்படியே தான் நின்றிருந்தாள்.
“ஹேய் என்ன அங்கேயே நிக்கிற… இங்க ரெஸ்ட் எங்க இருக்குனு சொல்லு.. நான் எடுக்கிறேன்…” என்று ஈசன் வம்பு பேச, அவளுக்கோ சட்டென்று அவன் முகம் பார்க்கவே சங்கடமாய் போனது.
‘பண்ணதையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத மாதிரி பேச்சு வேற… சுத்த மோசம் இந்த ஈஸ் மாமா…’ என்று முணுமுணுக்க, அது அவன் காதில் விழுந்ததோ என்னவோ,
“என்ன லஷ்மி கூப்பிட்டியா…??” என்று அருகே வர,
“அ.. அதெல்லாமில்ல மாமா… நீங்க.. நீங்க இப்படி பெட்ல படுங்க…” என்று வேகமாய் உள்ளே வந்தவள் சொல்ல,
‘ஹ்ம்ம் அப்படி வா….’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான். என்னவோ அவனுக்கு லட்சுமியை சீண்ட வேண்டும் போல் இருந்தது. கட்டிலில் படுத்தவன் சும்மா இருக்காமல், “ஆமா நீ ரெஸ்ட் எடுக்கல..??” என,
அவளோ “நான் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணனும் மாமா…” என்று சொல்லிக்கொண்டே சொன்னதை செய்ய,
“ஆமா.. ஒரு பேக்.. ரெண்டு நோட்டு… ஒரு பேனா… இதுக்கு பேக்கிங் வேற…” என்று வேண்டுமென்றே சொல்ல,
“மாமா நீங்க அந்த லச்சணத்துல தான் காலேஜ் போனீங்களா….” என்று அவனுக்கே திருப்பினாள்.
இப்படியே இருவருக்குமாய் பேச்சு தொடர, இதுவும் கூட நன்றாக தான் இருந்தது அவனுக்கு. கிட்டத்தட்ட அந்த அறையில் இருந்த முக்காவாசி பொருட்களை மூட்டை கட்டினாள் லட்சுமி. கட்டில், மெத்தை, மேஜை, பீரோ மட்டும் தான் அப்படியே இருந்தது.
“இப்போ எதுக்கு லஷ்மி அத்தனையும் எடுக்கிற.. இந்தா இருக்கு வீடு.. வேணுங்கிறப்போ வந்து எடுக்க கூடாதா..”
“ஆ… ஒவ்வொரு தடவையும் இங்கயும் அங்கயும் நான் நடக்கணுமா…” என்றவள் அவள் எப்போதும் வைத்து உறங்கிக்கொண்டு இருந்த சிறு தலையணையை எடுத்து வைக்க,
“இதுவேறையா.. புதுசு கூட வாங்கிக்கலாம்…” என்றான் வாயை வைத்துகொண்டு இருக்காமல்.
அவன் சொன்னதும் அவனை ஆழமாய் பார்த்தவள், “இந்த தலைகாணி என்கிட்ட கிட்டதட்ட பத்து வருசமா இருக்கு மாமா… இதுபோல புதுசு வாங்கிடலாம். ஆனா அந்த பத்து வருசத்தை புதுசா உங்கனால வாங்கி கொடுக்க முடியுமா..” என,
‘அம்மாடி… என்னா பேசுறா…’ என்றே தோன்றியது ஈசனுக்கு.
அடுத்து ஒன்றும் சொல்லவில்லை.. வெறுமெனே படுத்தபடி அவளது நடமாட்டத்தை பார்த்துகொண்டு இருந்தான்.
ஆனால் லட்சுமி அப்படி செய்யவில்லை, கை தன் வேலையை செய்தாலும், வாய் பேசிக்கொண்டே தான் இருந்தது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு கதை சொன்னாள். இவளுக்குள் யாரிடமும் பகிரப்படாத சங்கதிகள் நிறைய இருக்கிறது என்று தோன்றியது ஈசனுக்கு. யாரிடமும் அவள் இப்படி பேசியதில்லை என்பதை அவள் உணரவில்லை. ஆனால் ஈசன் உணர்ந்துகொண்டான்.
நேரம் போனது தெரியவில்லை. சிறிது நேரத்திலேயே காப்பியும் பலகாரமும் வர, “ஹப்பா போதுமடா சாமி…” என்று அதை மட்டும் முடித்துக்கொண்டு ஈசன் கிளம்பிவிட்டான்.
இருந்துவிட்டு நாளை தான் செல்லவேண்டும் என்று சொல்ல, “அத்தை இங்க இருக்கு வீடு… எப்போ வேணா வரலாம் போகலாம்.. இதுக்கு ஏன் பார்மாலிட்டி…” என்றவன் லட்சுமியை பார்த்து,
“நீ வேணா இருந்துட்டு வர்றியா லஷ்மி…??” என்று கேட்க,
அவளுக்கு உள்ளே சுறுசுறு என்று வந்துவிட்டது. என்ன அர்த்தத்தில் கேட்கிறான் என்று.. அது எப்படி ஒன்றாய் வந்து தனியாய் செல்ல இவனால் முடியும் என்று. நானில்லாமல் அந்த வீட்டில் இவனால் இருக்க முடியுமா என்று.. ஒன்றும் சொல்லாமல் அவனை பார்க்க,
“இல்ல லஷ்மி.. ரெண்டு நாள்ல காலேஜ் ஓப்பன் ஆகுதுல்ல அதான் இருந்திட்டு வர்றதுன்னா வா…”என்று மீண்டும் சொல்ல,
“இங்க இருக்க வீடு தான…” என்று பல்லைக் கடித்து அவள் சொன்னதில் அவனுக்கு முதலில் சிரிப்பே வந்தது.
ஒருவரை புரிந்துகொள்வது வேறு.. ஒருவரது உணர்வை தாமே உணர்வது வேறு.. ஈசன் லட்சுமியை உணர்வதும் புரிவதும் எப்போதென்று யாருக்கு தெரியும்.