“நேரமாச்சு… இந்த ஈஸ் மாமா எங்க போனார் தெரியலையே… பஸ் போயிடும்.. இந்த ரேவதி வேற என்னால தான் லேட்டுன்னு சொல்வா…” என்றபடி வாசலில் ஒரு கண்ணும், வேலையில் ஒரு கண்ணுமாய் இருந்தாள் லட்சுமி.
அந்தா இந்தாவென்று அவள் கல்லூரி செல்லும் நாளும் வந்துவிட, மரகதம், அவரே சமைத்து கொடுத்தனுப்பி விட்டார். காலைக்கும் மதியத்திற்கும்.. இரவு மட்டும் வந்து செய்தால் போதும். அதுவும் கூட அவரே கொடுத்து விடுகிறேன் என்று தான் சொன்னார்.
ஆனால் லட்சுமி தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். அனைத்தையும் எடுத்து வைத்தவள், ஈசன் வரவிற்காய் காத்திருந்தாள்.
“சொல்லிட்டு கிளம்பலாம்னு பார்த்தா.. இப்போ பார்த்து ஈஸ் மாமா எங்கதான் போனாங்க.. பஸ் வேற போயிடும்….” என்று முனங்கியவளின் கைபேசி சிணுங்க, எடுத்து பார்த்தால் அவன் தான்.
இவள் ஹலோ சொல்லும் முன்னே “லஷ்மி ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணு.. நானே கூட்டிட்டு போறேன்.. வண்டில போகலாம்…” என்று மட்டும் சொல்லிவிட்டு இவளது பதிலும் வாங்காது வைத்துவிட்டான்.
ஆனால் ஈசனை சொன்னதை கேட்டவளுக்கோ கண்கள் அப்படியே முட்டை கண்ணாய் விரிந்தது. காதில் இருந்து அலைபேசியை எடுக்க கூட தொன்றவில்லை.
“நிஜமாதானா?? நிஜமாவே ஈஸ் மாமா என்னை வண்டில கூட்டிட்டு போக போறாங்களா?? அட இதென்ன அதிசயம்…” என்று முணுமுணுக்க, அவள் மனமோ,
‘எது எப்படியோ.. இன்னிக்கு முதல் நாள்.. அப்படியே ஈஸ் மாமா கூட புல்லட்ல போய் இறங்கினா சும்மா அவ அவ அசந்து போய் பார்ப்பா.. லட்சுமி எத்தனை நாள் ஆசை பட்டிருப்ப.. ஈஸ் மாமா கூட பைக்ல போகணும்னு…’ என்று மகிழ்ந்தவள், ஈசன் வரவிற்காய் காத்திருந்தாள்.
அத்தனை ஆனந்தமாய் இருந்தது லட்சுமிக்கு. முதன் முதலில் அவள் எதுவுமே கூறாமல் அவனாகவே அழைத்து போகிறேன் என்கிறான்.. சும்மாவே லட்சுமிக்கு இப்படி வண்டியில் போவது பிடிக்கும். அதில் ஈசனோடு போவதை கேட்கவும் வேண்டுமா..
‘சூப்பர் சூப்பர்…’ என்று அவளாகவே சொல்லிகொண்டாள்.
‘புல்லட்ல ஈஸ் மாமா போறதே செம கெத்தா இருக்கும்… நானும் பின்னாடி உக்காந்து ஐயோ…!!!! செம…’ என்று நினைத்து பார்த்தவளுக்கு உள்ளம் பூரித்தது. அத்தனை சந்தோசத்திலும்,
“ஹ்ம்ம் இப்படி பைக்ல போய் கூட ரொம்ப வருஷம் ஆச்சு…” என்று தோன்ற அவள் தந்தையின் நினைவு வந்தது.
மகளை எப்போதுமே வண்டியில் உட்கார வைத்து தான் எங்கும் அழைத்து செல்வார். சின்ன குழந்தையாய் இருக்கும்போது முன்னே அமர்த்தி கூட்டி செல்வார். அப்போதே கூலிங் கிளாஸ் வேறு வாங்கி கொடுத்து மகளை அதை போடா வைத்து தான் முன்னே அமர்த்தி செல்வார். கொஞ்சம் பெரியவளானதும் பின்னே தன் அப்பாவின் முதுகை கட்டிக்கொண்டு அமர்ந்து சென்ற நினைவு எல்லாம் இப்போது வந்து மனதை ஏனோ பிசைந்தது.
லட்சுமியின் தந்தை இறக்கவும், வேலாயுதம் தன் குடும்பத்துடன் இங்கே வந்துவிட, லட்சுமியின் அப்பாவின் வண்டி அடுத்து அவரது ஆகிவிட்டது. ஏனோ அதன்பிறகு லட்சுமி அதில் ஏறி செல்ல ஆசை பட்டது இல்லை.
“நீயும் வா…” என்று அவளையும் யாரும் அழைத்ததில்லை.
இதெல்லாம் நினைவில் வர, “அப்பா… நீங்க இருந்திருக்காலம்…” என்று மானசீகமாய் அவள் தந்தையோடு பேசியவள், கடிகாரத்தை பார்க்க, நேரம் ஓடியது. மேலும் சிறிது நேரம் காக்க வைத்தவன், ஒருவழியாய் வந்து சேர்ந்தான்.
‘என்ன ஈஸ் மாமா மட்டும் வர்றாங்க.. வண்டி சத்தமே கேட்கலை…’ என்று யோசிக்க,
“என்ன லஷ்மி அப்படியே நிக்கிற.. கிளம்பு… எல்லாம் எடுத்து வச்சிட்ட தானே.. கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… நேரத்துக்கு போயிடலாம்… லஞ்ச் அம்மா கொடுத்து விட்டாங்களா…??” என்று கேட்டபடி இவளைக் கிளப்ப, அவளும் தன் பையை எடுத்து தோளில் போட்டுகொண்டு கிளம்பி வெளியே வந்தாள்.
வீட்டை பூட்டி சாவியை பாக்கெட்டில் போட்டு திரும்ப, லட்சுமியோ சுற்றும் முற்றும் பார்த்துகொண்டு இருந்தாள்.
“ஹேய்.. என்ன வேடிக்கை பார்க்கிற…??” என்றபடி ஈசன் வர,
“வண்டி எங்க மாமா…??” என்றாள் அவளும்.
“முன் வாசல்ல நிக்கிது லஷ்மி… வா…” என்றபடி நடக்க, இவளும் சரி முன்னே நிறுத்தியிருக்கிறான் போல என்று நினைத்துகொண்டு நடந்தாள்.
மனம் முழுக்க பரபரவென்றிருந்தது. சொல்லபோனால் அவனை புல்லட்டில் காணும் போதெல்லாம் லட்சுமிக்கு ஆசை எட்டி பார்க்கும். தான் ஒருநாளாவது அவனோடு அமர்ந்து, அவன் தோள் மீது கை போட்டு அமர்ந்து செல்ல மாட்டோமா என்று. இன்று என் ஆசை நிறைவேறப் போகிறது என்று நினைத்து கொண்டாள்
இப்படியே அவனோடு நடந்து முன்னே வர, அங்கே நின்றது புல்லட் அல்ல, பொலெரோ.. அம்சமாய் அட்டகாசமாய் அந்தஸ்தாய் நின்றிருந்தது. ஈசனை போலவே. ஆனால் அதெல்லாம் கண்ணிலே கூட படவில்லை. புல்லட் எங்கே என்பது போல அவள் பார்க்க,
“லஷ்மி வேடிக்கை பார்த்தே நேரத்தை போக்கிடலாம்னு நினைச்சியா… சீக்கிரம்..” என்று அவசர படுத்த,
“அட அப்போ கார்ல போறோமா??? அதுவும் சூப்பர் தான்.. ரெண்டு பேரும் செம லச்சு.. மெலோடியா பாட்டு போடணும்..” என்று நிமிடத்தில் நூறு எண்ணங்களை கொண்டு காரின் ஏற நினைக்க, அப்போது தான் கவனித்தாள் காரினுள்ளே முன்னிருக்கையில் டிரைவர் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் பாலா அமர்ந்திருக்க, பின்னே ரேவதியும் இருந்தாள்.
சட்டென்று லட்சுமிக்கு ஏமாற்றமாய் போய்விட்டது. தான் வந்து அழைத்து போகிறேன் என்று ஈசன் சொன்னதும், நொடியில் எத்தனை மனக்கோட்டை கட்டிவிட்டாள். ஆனால் அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல் இப்போது ஆகிவிட, சடுதியில் இந்த ஏமாற்றத்தை அவளால் தாங்க முடியவில்லை. அவளால் இதை சமாளிக்க முடியவில்லை. அத்தனை நேரமிருந்த உற்சாகம் மறைந்துவிட, கண்களில் நீர் வந்துவிடும் போல் இருந்தது. தலையை தொங்க போட்டபடி நிற்க,
“என்ன லஷ்மி.. ஏறு….” என்று சொன்னவனுக்கு, வழக்கம் போல் படக்கென்று தலையை திருப்பி அவனை ஒரு பார்வை பார்த்தவள் பின் வேகமாய் சென்று ரேவதி அருகில் அமர்ந்துகொண்டாள்.
எவ்வித உணர்வுகளையும் பிரதிபலிக்காத அவள் பார்வை ஈசனுக்கு என்ன உணர்த்தியதோ, “என்னாச்சு.. நல்லா தானே வந்தா…??” என்ற யோசனையோடு வண்டியை எடுக்க, இரண்டொரு முறை பின்னே திரும்பி அவளை பார்க்கவும் செய்தான்.
ஈசனுக்கும் ஆசைதான் லட்சுமியை புல்லட்டில் அமர வைத்து அழைத்து செல்லவேண்டும் என்று. முதலில் சிறு தயக்கம் வருவாளோ என்று. பின் பாலாவும் ரேவதியும் இருக்கையில் இவளை மட்டும் அழைத்து போவதும் சரியில்லை என பட காரை எடுத்தான். ஆனாலும் முதல் நாள் அவளை தானே அழைத்து போகவேண்டும் என்று ஆசை பட்டது என்னவோ நிஜம்..
“என்னண்ணா இன்னிக்கு கார் எடுத்திட்ட…??” என்று பாலா கேட்க,
“ரொம்ப நாள் ஆச்சுலடா.. நேத்து தான் கிளீன் பண்ண சொன்னேன்…” என்று ஈசன் வண்டியை ஓட்ட,
பாலாவோ ரேவதியிடம் “எல்லாம் பொண்டாட்டி வர்றதுனால…” என்று கேலியாய் கண் ஜாடை காட்ட, ரேவதியும் கிண்டலாய் தலையசைத்து சிரிக்க, ஈசன் கண்களில் இதெல்லாம் பட்டாலும் அவனது கண்ணும் கருத்தும் அவன் மனைவி மீது தான் இருந்தது.
காரில் இருப்பதோ நான்கே பேர், அதுவும் ஈசனை தவிர மற்ற இருவரும் அவளது சகாக்கள். இவர்கள் இருவரிடமும் வாய் ஓயாது பேசுவாள். ஆனால் இப்போது துளியும் பேச்சில்லை. பேச்சென்ன பார்வை கூட இவர்கள் பக்கம் திரும்பவில்லை.
“என்னாச்சு இவளுக்கு…?? அடிக்கடி இப்படி முகத்தை தூக்கிடுறா.. அப்படி என்ன எதிர்பார்க்கிறா…” என்று நினைத்தவனுக்கு,
“ம்ம்ச் என்னதான்டி வேணும் உனக்கு.. படுத்துற…” என்று இன்னும் அவள் மீது எண்ணம் அதிகமாக, கண்ணாடி வழியே அவ்வப்போது லட்சுமியை காண, காரின் வேகமோ கூடிகொண்டே போனது.
சீட் பெல்ட் போட்டு அமர்ந்திருந்த பாலவிற்கே ஆட்டம் காண, பின்னே அமர்ந்திருந்த ரேவதியையும் லட்சுமியையும் கேட்க வேண்டுமா.
“அண்ணா மெல்ல போ.. நேரம் இருக்கு…” என்று பாலா ஆச்சர்யம் கலந்த குரலில் தன் அண்ணனை பார்த்து சொல்ல,
“அண்ணா மெதுவாவே போகலாம்” என்று ரேவதி கூட சொல்ல, லட்சுமி அப்போது தான் என்ன என்று பார்த்தாள்.
பார்த்தது மட்டும் தான், பின் வண்டி சீராய் செல்வதை பார்த்துவிட்டு மீண்டும் ஜன்னல் புறம் விழிகளை பதித்து விட, ஈசனுக்கே “ச்சே…” என்று ஆனது.
‘வேணாம் ஈசா.. அவளை பார்க்காத.. இதென்ன புதுசா உனக்கு… வேணாம்…’ என்றவன் தன் கவனத்தை எல்லாம் வண்டியில் செலுத்த, சில நேரம் அந்த காரில் மௌனம் நிலவியது.
ஆனால் பாலாவும் ரேவதியும் இருக்கும் இடத்தில் அமைதி நிலைக்குமா என்ன?? பேச்சு சலசலக்க,
ரேவதி, “லட்சுமி என்ன டி… அமைதியா வர்ற.. என்னாச்சு..” என்று கேட்க, ஈசனுக்கு கண்கள் முன்னே பார்த்துகொண்டு இருந்தாலும் கவனமெல்லாம் பின்னாடி லட்சுமியின் மீது தான் இருந்தது.
சரி ரேவதியிடமாவது ஏதாவது சொல்வாள் என்று பார்த்தால், “ஒண்ணுமில்ல…” என்று மட்டும் சொன்னவள் மேற்கொண்டு எதுவுமே பதில் பேசவில்லை. ரேவதியும் இரண்டொரு முறை கேட்டுவிட்டு பாலாவோடு பேச தொடங்கி விட்டாள். அவனும் அவனது வீர தீர பிராதபங்களை எல்லாம் அவளிடம் அளந்துகொண்டு வந்தான்..
பாலாவிற்கு புகைப்படம் எடுப்பது என்றால் உயிர். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதே வேலை தான். தன் மொபைல் கேமாரவில் எப்போது பார் எதையாவது படம் எடுத்துக்கொண்டு தான் இருப்பான். வீட்டில் இருக்கும் சிறு தக்காளி கூட அவன் கலை கண்ணுக்கு தப்பாது.
அண்ணன் வேண்டாம் என்று சொன்னதும் பாலா அமைதியாய் வர, தம்பியின் அமைதி ஈசனுக்கு புரியாதா என்ன..??
“ஹ்ம்ம் எத்தனை நாள் காலேஜ் பாலா???” என்று ஈசன் மீண்டும் பேச்சை துவங்க,
“இந்த வீக் புல்லா இருக்கும்ணா.. ப்ராஜெக்ட் தானே.. அடுத்து அதுக்கு தான் பார்க்கணும்.. நாங்க எல்லாம் பே ப்ராஜெக்ட் தான்… ” என்று சொல்ல,
“நீ ரேவதி???” என்று ஈசன் ரேவதியை கேட்க,
“நானும் பே ப்ராஜெக்ட் தாண்ணா.. கேபிள்ல அடுத்து ஃபுல் டைமா சேர்ந்திடுறேன்.. அவ்வளோதான்..” என்று தன் அபிப்பிராயத்தை சொல்ல,
“நீ என்ன செய்ய போகிறாய்…” என்பது போல் லட்சுமியை பார்க்க, அவளுக்கோ இங்கே இப்படி ஒரு சம்பாசனை நடப்பது போலவே தெரியவில்லை போல. அவள் முழுக்க முழுக்க அவளது உலகத்தில் இருந்தாள்.
“அப்படி என்னதான் எப்போ பார் யோசிப்பாளோ தெரியலை..” என்று நினைத்தவனுக்கு எரிச்சலாய் கூட வந்தது “ச்சே…” என்று ஸ்டியரிங்கை குத்த,
“என்னண்ணா…” என்று பாலா கேட்க,
“ஒண்ணுயில்ல.. ஒரு கணக்கு டேலி ஆகவே இல்லை.. அதை யோசிச்சேன்…” என்று பேச்சை மாத்தியவன்,
“அதென்ன எல்லாரும் பே ப்ராஜெக்ட்னு சொல்றீங்க.. சொந்தமா பண்ற ஐடியா இல்லையா என்ன?? மூணு வருஷம் பின்ன என்ன படிச்சீங்க..??” என்று கேட்டான்.
அவனுக்கு தெரியும் இவர்கள் இருவரும் பே ப்ராஜெக்ட் என்றால் நிச்சயம் லட்சுமியும் அந்த முடிவில் தான் இருப்பாள் என்று. மூன்று வருடம் என்ன படித்தார்களோ என்று இருந்தது.
“அண்ணா எங்களுக்கும் கோடிங்கும் பரம்பரை பகை….” என்று வழக்கமாய் சொல்லும் வசனத்தை பாலாவும் ரேவதியும் ஒருசேர சொல்ல, அவர்கள் சொன்ன விதத்தில், லேசாய் சிரித்துக்கொண்டவன், “அப்போ இன்னும் ஒன் வீக் தான் காலேஜ் அப்படியா…” என,
“ஆமாண்ணா.. அதுக்கப்புறம் ரிவ்வியுக்கு மட்டும் அப்பப்போ போகணும்…” என்றான் பாலா.
“ஹ்ம்ம்….” என்று யோசித்த ஈசன், “பே ப்ராஜெக்ட்னா எங்கடா.. மதுரையா..??” என்று கேட்டான்.
“ஆமாண்ணா.. பசங்க போய் எல்லாம் பார்த்துட்டு கூட வந்திட்டாங்க… அடுத்து நம்ம போய் ஒன்ஸ் பார்த்து பேசி முடிவு பண்ணனும்…”
“ஓ.. அப்போ ஒரே இடத்துல வாங்க போறீங்களா என்ன??”
“ஹா… அது எப்படி.. அப்படி பண்ணா எல்லாம் மாட்டிக்குவோமே.. வேற வேற இடத்துல தாண்ணா…” இது ரேவதி.