“ம்ம் சரி எல்லாம் சேர்ந்து கூட்டு களவாணி தனம் செய்ய போறீங்க.. மாட்டிக்காம இருந்தா சரி தான். ஆனா கொடுக்கிற காசுக்கு ப்ராஜெக்ட் பத்தி மட்டுமாவது என்னன்னு தெரிஞ்சுக்க பாருங்க.. வைவால போய் முழிக்க கூடாது பாரு.. ஆனா இதெல்லாம் தப்பு.. மூணு வருஷம் படிச்சு ஒரு ப்ரோக்ராம் கூட சொந்தமா போட தெரியலைனா என்ன படிச்சீங்க…?? ப்ராஜெக்ட்டாவது உருப்படியா புரிஞ்சு கேட்டிட்டு வாங்க…” என்றவனின் குரலில் அதையாவது உருப்படியாய் செய்யுங்கள் என்ற பாவம் இருந்தது.
ஈசன் மனமோ “இந்த லஷ்மி என்ன செய்ய போறா… இப்போ இருந்து சும்மா வீட்ல இருக்க போறாளா ..??” என்று யோசிக்க, பாலா பேசிக்கொண்டே வர கல்லூரியும் வந்து விட, ஈசன் காரை நிறுத்திய தோரணையில் ஒரு சிலர் திரும்பி பார்க்க, ஒரு சிலரோ நின்று கூட பார்த்தனர்.
“யம்மா சிந்தனை செல்வி… காலேஜ் வந்திடுச்சு இறங்கு….” என்று ரேவதி லட்சுமியை தட்ட,
“ம்ம்ம்…” என்றவள் ஒன்றும் பேசாமல் இறங்க, ஈசனும் சேர்ந்தே இறங்கினான்.
“அதான் இறக்கி விட்டாச்சுல்ல.. பின்ன என்ன போக வேண்டியது தான.. விட்டா கிளாஸ்ல வந்து உட்கார வச்சிட்டு தான் போவாங்க போல…” என்று முணுமுணுத்தபடி லட்சுமி நிற்க,
லட்சுமி இப்போதாவது எதுவும் சொல்வாளா, அத்தனை ஏன் சும்மாவாது தன்னை பார்ப்பாளா என்பது போல் பார்க்க, அவளோ இன்னும் ஏன் இங்கே நிற்கிறாய் என்பது போல் பார்த்தாள்.
ஈசனுக்கோ உள்ளே கொஞ்சம் கொஞ்சமாய் பொறுமை கரைய, அவள் முகத்தை பார்த்தபடியே “சாயங்கலாம் வெய்ட் பண்ணுங்க, இந்தப்பக்கம் ஒரு வேலை இருக்கு.. வரும் போது நானே வந்து கூட்டிட்டு போறேன்…” என ஒவ்வொரு வார்த்தைகளையும் கடித்துத் துப்ப,
லட்சுமியோ பட்டென்று “அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நாங்க பஸ்ல வருவோம்…” என்று முகத்தில் அடித்தார் போல் சொல்ல, ஈசனுக்கு அவமானமாய் போய் விட்டது.
கன்னத் தாடைகள் இறுக, கை முஷ்டியை மடக்கியவன், ஒன்றுமே பேசாமல் அவளை ஒருநொடி உறுத்து பார்த்து, காரை வேகமாய் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.
வேகம்…. வேகம்…. வேகம்….
வேகம் மட்டுமே பிரதானமாய் இருந்தது.. எதிலிருந்து தப்பிக்க இந்த வேகம் என்று தெரியவில்லை. அவளது கோவமும், அலட்சியமும் பாராமுகமும் ஈசனை போட்டு பாடாய் படுத்த, அந்த அவஸ்தையில் இருந்து தப்பிக்கவா இத்தனை வேகத்தில் காரை ஓட்டுகிறான் என்பது போல் இருந்தது. நிஜமாகவே அவனுக்கு இது அவஸ்தையாக தான் இருந்தது.
தான் காதலித்தவள் போகிறேன் எனும் போது அமைதியாய் விலகி நின்ற ஈசனுக்கு தோன்றாத உணர்வெல்லாம் இப்போது தோன்ற, மனம் பேயாட்டம் ஆடியது.
‘என்னை… என்னை… ஈசனை… லஷ்மி அலட்சியபடுத்துவதா… அதுவும் அத்தனை பேரின் முன்னும்…’ என்று நினைத்த நொடி ஸ்டியரிங் அவன் கைகளில் படாத பாடு பட, அரைமணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை, கால்மணி நேரத்தில் கடந்து வந்திருந்தான்.
“என்ன நினைச்சிட்டு இருக்கா அவ… ச்சே… இவளுக்காக.. இவளுக்காக தான நான் என் வேலை எல்லாம் விட்டு போனா… இப்படி நடந்துக்கிறா… என்ன நினைக்கிறா…??? நான்.. நான் என்ன அவ்வளோ லேசா…
முகத்தை திருப்புறா… பட்டுன்னு பேசுறா… என்ன திமிர் இவளுக்கு… அப்படி என்ன பண்ணிட்டேன் இவளுக்கு நான்.. யாரும்.. யாருமே… இப்படி என்கிட்டே நடந்ததில்லை.. நானும் யாருகிட்டயும் இப்படி இறங்கி போனதில்லை… என்ன தான் பொண்ணு இவ…” என்ற நினைப்பு மட்டுமே அவன் மனதில் ஓடிக்கொண்டு இருக்க, எப்படி வீடு வந்து சேர்ந்தானோ.
வீட்டினுள் நுழைந்தவன் கார் சாவியை தூக்கி எறிய, சாய்விருக்கையில் பொத்தென்று விழுந்தவனுக்கு என்ன முயன்றும் தன் கோவத்தை அடக்க முடியவில்லை.
“லஷ்மி…….” என்று பல்லை கடித்தவனுக்கு,
“என்னை பார்த்தா உனக்கு எப்படி டி இருக்கு…??” என்று சத்தமாகவே ஆளில்லா வீட்டில் கத்த, தன் கோபத்தை எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல், சாய்விருக்கைகளுக்கு நடுவே போடப்பட்டிருந்த டீ பாயை அமர்ந்த வாக்கிலேயே எட்டி உதைத்தான்.
அவன் வெறுமெனே உதைத்தாலே அது வாசல் தாண்டி சென்று விழும். அத்தனை ஆக்ரோஷத்தில் எட்டி உதைத்தால், உதைத்த வேகத்திற்கு டீ பாய் வேகமாய் போய் டிவி ஸ்டாண்டின் மீது மோதி நிற்க, அது மோதிய வேகத்தில் டிவி அழகாய் கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டது.
சுக்கு நூறாய் டிவி கீழே விழுந்து உடைய, அந்த சத்தத்தில் என்னவென்று பார்த்தவனுக்கு இன்னும் எரிச்சல் கூடியது.
“இது வேறயா….” என்று பொறுமிக்கொண்டே, கதைவடைத்து விட்டு வெளியே சென்றுவிட்டான்.
ஈசனுக்கு இங்கு இப்படியென்றால் அங்கே கல்லூரியிலோ, ரேவதி லட்சுமியை போட்டு பாடாய் படுத்தி இருந்தாள்.
“நீ என்ன தான்டி மனசில நினைக்கிற…?? ரொம்ப தான் பண்ற?? உனக்கு என்ன பேரழகின்னு நினைப்பா.. ஈசண்ணா அவ்வளோ பேசுறாங்க.. மூஞ்சியில அடிச்ச மாதிரி பேசுற.. ஈசண்ணாக்கு வெளிய எவ்வளோ வேலை இருக்குனு உனக்கு தெரியுமா?? அதெல்லாம் விட்டு வந்தா.. இப்படி பேசுற..” என்று போட்டு பொரிய,
அவள் பேசும் வரைக்கும் அமைதியாய் இருந்தவள், “என்ன பேசி முடிச்சிட்டியா??? உங்களுக்கு தான் அவர் அண்ணா.. எனக்கு… என் புருஷன்.. அவர்கிட்ட எப்படி நடக்கணும்.. நடக்க கூடாதுன்னு எனக்கு தெரியும்.. நீ உன் வேலை மட்டும் பாரு..” என்று வார்த்தைகளை விட,
“அம்மாடி……” என்று வாயடைத்து போனாள் ரேவதி.
இதுநாள் வரை இப்படி எல்லாம் லட்சுமி பேசியதே இல்லை. மனதிற்கு கஷ்டமாய் இருந்தாலோ இல்லை, எதுவும் கோவமாய் இருந்தாலோ அமைதியாய் இருப்பாள் இல்லையெனில் ‘கொஞ்சம் சும்மா இரு டி…’ என்று மட்டும் முகம் சுளிக்க சொல்வாள் லட்சுமி.
அவளது இயல்பு அது தான். ஆனால் இன்றோ ‘நீ உன் வேலையை பார்…’ என்றதும் ரேவதிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.
பதில் பேசாமல் தன்னருகே அமர்ந்தவளை காண பின் லட்சுமிக்கு எப்படி இருந்ததோ, லேசாய் தன் தலையில் அடித்துக்கொண்டு, “ஹேய்.. சாரி டி.. ப்ளீஸ்… இது வேற டென்சன்.. மனசில வச்சிக்காத ரேவதி…” என்று சமாதனம் செய்ய,
“ம்ம்ச் விடு டி.. இனி உங்கிட்ட எதுவும் கேட்கலை போதுமா…” என்று ரேவதி பிடிவாதம் செய்தாள்.
ஆனால் இப்போது லட்சுமிக்கு தான் எப்படியோ போனது. ‘எல்லாம் இந்த ஈஸ் மாமானால.. ச்சே நான் கேட்டேனா?? காலேஜுக்கு கூட்டிட்டு போங்கன்னு கேட்டேனா…’ என்று மீண்டும் அவனுக்கு வசை பாடியவள், ரேவதியை ஒருவாறு சமாதானம் செய்ய,
“இங்க பாரு லட்சுமி, ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.. உனக்கு பிடிச்ச வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. அதை, உனக்கும் சரி ஈசண்ணாக்கும் சரி பிடிச்ச மாதிரி வாழ பாருங்க.. ஈகோ பாக்கிற இடத்துல தான் பாக்கணும்.. எல்லாத்துலயும் பார்த்தா அது வாழ்க்கையில்லை…” என்றவளின் வார்த்தைகள் என்ன உணர்த்தியதோ லட்சுமிக்கு மனம் சற்றே மட்டுப்பட்டது.
‘ஈஸ் மாமா சொன்னாங்களா.. பைக்ல கூட்டிட்டு போறேன்னு.. இல்லையே.. நானா தானே நினைச்சேன்.. அதுசரி இவங்க ரெண்டு பேரும் பின்ன எதுல போவாங்களாம்.. பாலா கூட எப்படியாது போயிடுவான்.. ரேவதி எப்பவும் என்கூட தானே வருவா?? என்னை ஈஸ் மாமா கூட்டிட்டு போயிட்டா அவ தனியா போகணுமே…
நான் ஒருத்தி லூசு மாதிரி என்னென்னவோ நினைச்சு.. எப்படியோ பேசிட்டேன்.. ச்சே ஈஸ் மாமாக்கு எவ்வளோ வேலையிருக்கும்.. அதெல்லாம் விட்டு வந்தா.. நான் இப்படி பேசிருக்க கூடாது.. கோவமா போயிருப்பாங்களோ… முதல்ல போயி சாரி கேட்கணும்… ’ என்று ஈசனுக்கு சார்பாய் யோசித்த மனதுடன் எப்போதடா வீடு செல்வோம் என்று அமர்ந்திருந்தாள் லட்சுமி.
ஒருவழியாய் கல்லூரி முடிந்து, வீட்டிற்கு வர, தன்னிடம் இருந்த சாவி கொண்டு கதவை திறந்து உள்ளே வந்து பார்த்தவளுக்கு அத்தனை அதிர்ச்சி.
வரவேற்பறை கந்திரகோலமாய் கிடந்தது. சாய்விருக்கைகள் கோணல் மாணலாய் கிடக்க, டீபாய் ஒரு பக்கம் கிடக்க, என்று பார்வையை ஓட்டியவளுக்கு அப்போது தான் டிவி விழுந்திருப்பது தெரிய..
“ஐயோ…!!!” என்று கன்னத்தில் கை வைத்தவள்,
“என்னாச்சு.. ஏன் எல்லாம் இப்படி இருக்கு.. யார் வந்தா…??” என்ற அதிர்ச்சியோடு வீட்டை சுற்றி முற்றி பார்க்க, புல்லட் சத்தம் கேட்டது.
‘ஈஸ் மாமா வர்றாங்க.. போச்சு வந்து பார்த்து இனி இதுக்கும் கத்த போறாங்க.. திருடன் எவனும் வந்தானா…??’ என்றபடி யோசித்து நிற்க ஈசன் உள்ளே வந்திருந்தான்.
அவன் வந்த விதமே, எதோ உணர்த்த “மாமா…” என்று அவளையும் அறியாது வாய் சொல்ல, அவளை ஒரு தீ பார்வை பார்த்தவன், ஒன்றும் சொல்லாமல் அவளை கடந்து போக,
“மாமா.. கீழ….” என்று அவள் சொல்லி முடிக்க வில்லை, உடைந்து கிடந்த கூர் முனை துண்டு ஒன்று அவன் காலை பதம் பார்க்க,
“ஸ்ஸ்…” என்ற சப்தத்துடன் காலை பார்க்க, ரெத்தம் வழிந்தது.
“ஐயோ மாமா… ரெத்தம்…” என்றபடி அவனருகே வந்து லட்சுமி ஈசன் கையை பிடிக்க,