“கைய எடு…” என்று ஈசன் உறும, விக்கித்து நின்றாள் லட்சுமி.
அவளையும் அறியாது வாய் “மாமா…!!!!!” என்று அதிர்ந்து முணுமுணுக்க, அவளது கைகளோ இன்னும் அவனை பிடித்தபடி தான் இருந்தது.
“கையை எடுன்னு சொல்றேன்ல..”
“மா… மாமா… கால்ல ரத்தம். நா… நான் கையை எடுத்தா உங்கனால பேலன்ஸ் பண்ண முடியாது…” என்று குரல் நடுங்க சொன்னவளுக்கு, இதழ்கள் துடிக்க கண்களில் கண்ணீர் பெருகியது.
“என் கால்ல தான ரத்தம்.. உனக்கென்ன..” என்று கோபத்தில் வார்த்தைகளை உமிழ, அவளது கரங்கள் இன்னும் அவன் கரத்தின் மீதிருப்பதை கண்டவன்,
“இப்போ நீ கையை எடுக்கலைன்னா, நான் காலை கீழ வச்சு இன்னும் அழுத்திடுவேன்..” என்று சொன்னவனின் பார்வை, நான் சொன்னதை செய்வேன் என்று சொல்ல,
“மாமா….” என்று அதிர்ந்தவள் என்ன இது என்பது போல் பார்க்க, ஈசனது கண்கள் கோவத்தில் சிவந்திருக்க, போதாத குறைக்கு இந்த வலி வேறு. ஆனால் அவனுக்கு நிஜமான வலி என்பது வேறென்று அவளுக்கு தெரியவில்லையே.
லட்சுமியின் பார்வை ஈசனிடம் இருக்க, அவளது கரமோ அவனது கரத்தின் மீதேயிருக்க, அவளையே பார்த்திருந்த ஈசனோ காலை கீழே வைக்க போனான்..
அதை கண்டவளது மனம் எப்படி துடித்ததோ “வே… வேணாம் மாமா….” என்றவள் வேகமாய் தன் கைகளை விலக்கி கொண்டாள். அடிபட்டது என்னவோ அவனுக்கு தான், ஆனால் வேதனை இவளது முகத்தில் தெரிந்து.
லட்சுமி பிடித்த கரங்களை எடுக்க, ஒரு நொடி தடுமாறித்தான் போனான். அதுவும் கூட நொடி பொழுது தான். பின் தன்னை சமாளித்துகொண்டவன், ஒற்றை காலிலேயே லேசாய் நகர்ந்து சென்று அங்கிருந்த இருக்கையில் பொத்தென்று விழ, லட்சுமியோ வேகமாய் அவனருகே வர, அங்கேயே நில் என்பது போல் கையை காட்டினான்.
பல்லை கடித்து, கண்களை இறுக மூடி தன் வலியை ஈசன் அடக்க,
சட்டென்று என்ன செய்வது என்றும் தெரியவில்லை. அரக்க பறக்க அங்கும் இங்கும் கண்களை உருட்டி பார்த்தவள் வேகமாய் முதலுதவி பெட்டியை எடுத்து வர, ஈசன் அருகே செல்லவே பயமாய் இருந்தது. ஆனால் இது பயப்படும் நேரமும் அல்லவே. கண்ணீரை அடக்கி, ஆழ்ந்த ஒரு மூச்சை விட்டு அவனருகே செல்ல,
ஈசனோ “உன்னை அங்கயே நில்லுன்னு சொன்னேன் லஷ்மி…” என்று சொன்னபடி இருக்கையை ஓங்கி ஒரு குத்து குத்த,
“ச.. சரி மாமா… நான் நான் வரலை…” என்று அதிர்ந்து சொன்னவள், “ப்ளீஸ் மாமா பர்ஸ்ட் எய்ட் பண்ணிட்டு ஹாஸ்பிட்டல் போகலாம்…” என கெஞ்ச,
அவனோ “ஏன் போகணும்….” என்ற ஒற்றை கேள்வியில் அவளை இன்னும் அதிர வைத்தான். ஈசன் சொல்வது செய்வது பேசுவது எதுவுமே அவளுக்கு ஏன் என்று தெரியவில்லை. ‘என்னாச்சு…’ என்பது போல் பார்க்க,
“என்ன.. என்ன டி.. ஒண்ணுமே தெரியாத மாதிரி அப்படி பாக்குற..?? இந்த பதட்டம் அக்கறை எல்லாம் இங்க தான்.. ஆனா வெளிய எல்லார் முன்னாடியும் அசிங்கப்படுத்துவ… வேணாம்.. எதுமே வேணாம்…போதும்….” என்று கோவத்திலும் வலியிலும் பேச,
“மாமா… ப்ளீஸ் மாமா.. எதுவா இருந்தாலும் ஹாஸ்பிட்டல் போய்ட்டு வந்து பேசுவோம்.. ப்ளீஸ் மாமா…. ” என்றவள் அவன் முகத்தையும் ரத்தம் வடியும் அவன் கால்களையும் மாறி மாறி பார்த்தபடி கெஞ்ச,
அவளது கண்ணீர் நிறைந்த விழிகள் லேசாய் ஈசனை அசைத்தது என்னவோ உண்மை.
முகம் சிவந்து, கண்களில் கண்ணீர் வழிந்தபடி, பதற்றமாய் தன்னருகே நெருங்கவும் முடியாமல், தன்னை விட்டு விலகவும் முடியாமல் துடித்து நிற்பவளை காண ஈசனுக்கு என்னவோ போல் ஆனது.
‘ச்சே இவ அழுதாலும் தாங்கல… அலட்சியபடுத்தினாலும் தாங்கல… படுத்துறா’ என்று தோன்ற,
இதில் எது உண்மை…?? இந்த கண்ணீர் கண்களா?? இல்லை அந்த அலட்சிய அமிலத்தை வீசும் அந்த வெற்று பார்வையா?? அந்நிலையிலும் ஈசன் மனம் லட்சுமியை அறிய முற்பட,
அவளோ “ப்ளீஸ் மாமா ப்ளீஸ்….” என்று கெஞ்சிக்கொண்டிருக்க,
‘வேணாம் ஈசா… இப்போ எதுவும் நினைக்காத.. அதுவும் இவளை பத்தி.. நினைக்கவே நினைக்காத.. எல்லாமே இவளால தான்.. வேணாம் ஈசா… இது உன் இயல்பு இல்லை…. லஷ்மி கிட்ட இருந்து உன் பார்வையை திருப்பு ஈசா…’ என்று அவன் மனம் கட்டளை இட, வேகமாய் தன் தலையை உலுக்கிக்கொண்டவன்,
“ஸ்ஸ்….” என்று வலியை தாங்கி, தானே காலில் இருந்த அந்த கூர் துண்டை எடுத்து கீழே போட “ஐயோ பார்த்து பார்த்து மாமா….” என்று பதறியது என்னவோ லட்சுமி தான்.
இப்போது அவளுக்கு சுத்தமாய் ஈசனை தவிர வேறெதுவும் தெரியவில்லை. அதுவும் அவனது வேதனை நிறைந்த முகம், அவளை கலங்க செய்ய, முதலில் அவன் காயத்திற்கு ஒருவழி செய்ய வேண்டுமே என்று தான் தோன்றியதே தவிர, ஈசன் ஏன் தன்னிடம் இத்தனை கோவப்படுகிறான் என்று சிறிதும் தோன்றவில்லை.
“அண்… அண்ணா… என்னாச்சு…??” என்று பதறியபடி வேகமாய் வர,
“பார்த்து வா பாலா…” என்று கணவன் மனைவி இருவருமே ஒருசேர சொல்ல, இருவரும் ஒருமுறை தங்கள் இணையை பார்த்து பின் பார்வையை திருப்பிக்கொண்டனர்.
அப்போது தான் பாலா வீடிருந்த நிலையை கவனிக்க, “என்னண்ணா…??!!!” என்று அதிர்ச்சியாய் கேட்க,
“ஹாஸ்பிட்டல் போய்ட்டு வரலாம் பாலா.. வந்து பேசிக்கலாம்..” என, பாலாவும் சரியென்று சொல்லி எழ, அண்ணன் தம்பி இருவரும் மருத்துவமனை கிளம்பினர்.
லட்சுமிக்கோ தானும் செல்ல வேண்டும் என்று மனம் துடியாய் துடித்தது. வாசல் வரை அவளும் பின்னோடு வர, ஈசன் பாலாவை பிடித்து நடப்பதை பார்த்தவளுக்கு தான் சென்று அவனுக்கு பக்கபலமாய் நிற்க வேண்டும் போல் உந்த,
“நா.. நானும் வரட்டுமா…” என்றாள் திக்கி திணறி…
ஈசனோ காதே கேட்காதது போல் இருக்க, பாலாவிற்கு என்ன தோன்றியதோ, “கார் எடுத்திட்டு வரவாண்ணா…” என்று தன் அண்ணன் முகம் பார்க்க,
அவனோ “இப்போ நீ வர்றியா இல்லை நானே வண்டியை எடுக்கவா..???” என்று இறுகிய குரலில் சொல்ல, அதற்குமேல் பாலா யோசிக்கவே இல்லை. கிளம்பி விட்டனர்.
லட்சுமிக்கோ அழுகையை அடக்கவே முடியவில்லை. ஏனோ தனக்கு அடிபட்டிருந்தால் கூட இத்தனை வலியும் வேதனையும் இருக்குமா என்று அவளுக்கு யோசனை தான். உள்ளே வந்தவள் ஒருமூச்சு அழுது தீர்த்தாள். கண்ணீர் கண்களை மறைத்தாலும் கண் முன்னே வீடிருக்கும் நிலை மங்கலாகவேனும் அவள் கருத்தில் பதிய, முகத்தை அழுந்த துடைத்தவள், சற்று நிதானித்தாள்.
‘டிவி எப்படி உடைஞ்சது.. டீபாய் வேற இங்க இருக்கு…’ என்று அவளாய் சிந்தனை செய்தபடி அனைத்தையும் சுத்தம் செய்ய, போதாத குறைக்கு ரத்த கரை வேறு இருக்க, அதையும் சுத்தம் செய்தவளுக்கு மழுக்கென்று கண்ணில் நீர் வர, தன் உணர்வுகள் அனைத்தையும் அடக்கியபடி ஒருவழியாய் எல்லாம் சுத்தபடுத்தி, அனைத்து பொருளையும் முன்னிருந்தது போலவே மாற்றி வைத்துவிட்டு எப்போதடா ஈசனும் பாலாவும் வருவர் என்று காத்திருந்தாள்.
லட்சுமிக்கு மனமோ ஒருநிலையில் இல்லை. ஒருபக்கம் ஈசனது கோவம், மறுபக்கம் ஆளில்லா வீட்டில் எப்படி இப்படியானது.. நிச்சயம் யாரோ வந்திருக்கிறார்கள் என்று தோன்ற, ஒருவேளை திருடனோ என்றும் தோன்றியது. நேரம் போனதே தவிர இவர்கள் இருவரும் வந்தது போல் தெரியவில்லை.
மேலும் அரைமணி நேரம் காக்க வைத்துவிட்டே அண்ணனும் தம்பியும் வந்து சேர்ந்தனர்.
“டாக்டர் என்ன சொன்னாங்க..?? காயம் பெருசா ஒன்னும் இல்லையே… ரொம்ப வலிக்குதா மாமா…???” என்று கேட்டபடி அவர்களை நெருங்கியவள் அப்போது தான் கவனித்தாள் இவர்களோடு ஒரு ஆட்டோவும் பின்னே வந்தது.
ஈசனையும் பாலாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, யார் என்பது போல் வெளியே பார்க்க, ஆட்டோவில் இருந்து இறங்கியவன் கையில் புது டிவி அட்டை பெட்டி அமர்ந்திருக்க, புரிந்துபோனது லட்சுமிக்கு. மருத்துவமனைக்கு சென்றுவிட்டு நேராய் டிவி வேறு வாங்க சென்றிருக்கிறார்கள் என்று.
“ஏன் மாமா டிவிக்கு என்ன அவசரம் இப்போ…” என்றபடி உள்ளே வர, ஈசனோ எதற்கும் பதில் சொல்வதாய் இல்லை.
கடையில் இருந்து வந்த ஆள் தான் வந்த வேலையை பார்த்துவிட்டு, ஈசனிடம் பணத்தையும் வாங்கிகொண்டு செல்ல, மீண்டும் லட்சுமி ஆரம்பித்தாள்
“டாக்டர் என்ன சொன்னாங்க…” என்று..
ஈசனோ எதுவும் பேசமாட்டேன் என்பது போல் கண்களை மூடி சாய்விருக்கையில் அமர்ந்திருக்க, பாலா தான் “ரெண்டு நாள் காலுக்கு ரொம்ப வேலை குடுக்க கூடாது சொல்லிருக்காங்க.. வலிக்கு மாத்திரை கொடுத்திருக்காங்க…” என்று விவரம் சொல்லி, லட்சுமியிடம் மாத்திரைகளை கொடுக்க, அவளும் கவனமாகவே கேட்டு வாங்கி வைத்தாள்.
பாலாவிற்குமே மண்டை குடைச்சல் தான். எப்படி இப்படி ஆனது என்று. ‘நல்லா இருந்த டிவி எப்படி கீழ விழுந்து செத்து போச்சு…’ என்று நினைத்தவன் அப்போதிருந்து கேட்க நினைத்து இப்போது தான் கேட்டான்.
“அதான் பாலா எனக்கும் தெரியலை… ஒருவேளை திருடன் வந்திருப்பானோ..” என்று குழப்பமாய் லட்சுமி கேட்க,
“ஆமா திருடன் வந்து டீவியை மட்டும் உடைச்சிட்டு ஓடிட்டான்.. அறிவு…” என்று பாலா சற்றே கேலி செய்ய, உதடு பிதுக்கி கழுத்தை நொடித்தவள், ஈசனை காண, அவனோ இன்னும் அப்படியே தான் அமர்ந்திருந்தான்.
அவன் முகமே என்னவோ போல் இருக்க, சோபாவில் கழுத்தை சாய்த்து அமர்ந்திருந்தவனின் தோற்றம் லட்சுமியை என்னவோ செய்தது.
“எ.. என்ன மாமா.. ரொம்ப வலிக்குதா….” என,
பாலாவும் அப்படியே அண்ணன் முகம் பார்க்க, மெல்ல கண்களை திறந்தவன், தன் தம்பியை பார்த்து, “வீட்ல போய் இதெல்லாம் உளறிட்டு இருக்காத பாலா…” என்றவன் மேற்கொண்டு சில வேலைகளை சொல்லி அவனை அனுப்பினான்.
பாலா சென்றதும், லட்சுமி என்ன செய்வது என்பதுபோல் தயங்கி நிற்க, அவளுக்கோ ஈசனருகே செல்ல வேண்டும் போல் தோன்ற, ஈசனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க காலை எடுத்தாள், அவ்வளவே,
“லஷ்மி…..” என்ற ஈசனது ஆழ்ந்த குரல் அவளை உலுக்கியது என்னவோ நிஜம் தான்.
“அ… என்.. என்ன மாமா… எதுவும் வேணுமா…???” என்றபடி வேகமாய் ஈசன் அருகே வர,
“கதவை சாத்திட்டு வந்து உட்கார்…” என்றவனின் குரலில் எவ்வித உணர்வும் இல்லை. லட்சுமி ஈசனை திரும்பி திரும்பி பார்த்தபடி கதவடைக்க சென்றாள்.