அவன் சொன்னதை செய்தவள் மெல்ல வந்து அவனருகே அமர, ஈசனோ மீண்டும் கண்களை மூடி அமர்ந்திருந்தான். லட்சுமி தன்னருகே அமர்ந்திருக்கிறாள் என்பதை உணர முடியாதா என்ன அவனுக்கு..??
“உனக்கு என்னை பிடிக்கலைன்னா சொல்லிடு லஷ்மி.. அதுக்கு என்ன செய்யணுமோ செய்றேன்…” என,
சுத்தமாய் லட்சுமிக்கு அவன் என்ன சொல்கிறான் என்றே புரியவில்லை. முதலில் தன் காதுகளில் அவன் கூறிய வார்த்தைகள் விழுந்தாலும் அது புத்தியில் எட்டினால் தானே அவளுக்கு புரிய..?? ஒருவேளை தான் கேட்டது எல்லாம் நிஜம் தானா இல்லை ஈசன் சொன்னது ஒன்று தான் கேட்டது ஒன்றோ என்று தன் மீதே சந்தேகம் எழ,
“என்.. என்ன மாமா…??” என்றாள் குழப்பமாய்.
அவ்வளவு தான் ஈசனுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோவமும் வேகமும் வந்ததோ.. இல்லை இத்தனை நேரம் தன்னுள்ளே அடக்கி வைத்திருந்தானோ, வேகமாய் அவள்புறம் திரும்பி, அவள் கன்னங்களை இறுக்கி பிடித்து,
“என்ன..?? என்ன லஷ்மி… ஒண்ணுமே தெரியாதது போலவே கேட்கிற…???” என, ஈசனது கண்களும் முகமும் லட்சுமிக்கு ஒரு பயத்தை கொடுக்க, அவன் அழுந்த பிடித்து இருந்ததோ வலியை கொடுக்க,
“மாமா….!!!” என்று கண்களை விரிக்க தான் முடிந்தது.. வார்த்தைக்கு பதில் வாசயைப்பு மட்டுமே. ஆனால் ஈசனோ தீவிரமாய் அவள் முகத்தை தான் பார்த்திருந்தான்.
“சொல்லு லஷ்மி… என்னை பிடிக்கல தான.. சொல்லு… ” என்று இன்னும் போட்டு அவள் கன்னத்தை அழுத்த, லட்சுமி கண்ணில் இருந்து நீர் வலிந்து அவன் கைகளை தொட்டது.
கையில் ஈரம் உணர்ந்தவன், அவள் கண்ணீரை காண “ச்சே….” என்று தன் கைளை உதறினான்.
“உனக்கு என்ன தான் வேணும் லஷ்மி??? சத்தியமா எனக்கு புரியல?? இல்லை நீ என்கிட்ட என்ன எதிர்பார்க்கிற…?? நிச்சயமா உன் மனசில என்னவோயிருக்கு.. இப்போ நேத்து இல்லை.. பல வருசமா என்னவோயிருக்கு… அப்படி என்னடி உன்னை நான் பண்ணிட்டேன்.. இதுக்கு முன்ன தான் என்னெவோ இருந்துட்டேன்.. சரி நம்மளும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கணும்னு நான் பார்த்து பார்த்து எல்லாம் பண்ணா.. நீ நீ…” என்று வேகமாய் பேசிக்கொண்டே போனவனுக்கு, மீண்டும் காலையில் லட்சுமி பேசிய விதமும் பார்த்த விதமும் கண் முன்னே வர, “என் கண் முன்னாடி நிக்காத.. போ…” என்று கத்தினான்.
“மாமா…!!!!!”
ஈசன் கோவமாய் பேச அரம்பிக்கவுமே அவளுக்கு லேசாய் என்னவென்று புரிய, காலையில் தான் செய்ததும் தவறு என்று ஏற்கனவே உணர்ந்தேயிருந்ததால், சரி ஈசன் பேசி முடிக்கவும் மன்னிப்பு கேட்டு அவனை சமாதானம் செய்யலாம் என்று நினைத்திருக்க,
அவனோ தன் கண் முன்னே நிற்காதே என்று சொல்லிவிட, தாங்குமா அவள் நெஞ்சம். லட்சுமி கத்தியதில் அவனுமே திரும்பி அவளை நோக்க, ஈசனுக்கோ இன்னும் வேகம் அடங்கவில்லை.
“சொல்லு லஷ்மி.. இதுல எது நிஜம்… மாமா… மாமான்னு சொல்லி அழற இந்த லஷ்மியா இல்லை ‘நீயெல்லாம் ஒரு ஆளா…’ அப்படின்னு பார்த்துட்டு போற அந்த லஷ்மியா… எனக்கு இன்னிக்கு தெரிஞ்சே ஆகணும்…”
லட்சுமிக்கு நா வறண்டு போனது. பதில் பேசவில்லை.. என்னவென்று சொல்வாள்?? எதை சொல்வாள்?? உன்னை எனக்கு பிடிக்கும் என்றா..?? அதுவும் இந்த நிலையிலா.. அப்படி சொன்னால் முதலில் நம்புவான?? ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை என கேட்டால் அதற்கு என்ன சொல்ல??? மூச்சு விடவே சிரமமாய் இருந்தது.. என்னவோ வகையாய் மாட்டிக்கொண்ட உணர்வு.. உடம்பெல்லாம் பலமே இல்லாதது போல தோன்ற, எங்கே தன்னையும் மீறி எதுவும் சொல்லிவிடுவோமோ என்று தோன்ற,
‘சொல்லேன் லஷ்மி.. இப்போவாது சொல்லிடேன்..’ என்று அவள் மனசாட்சி வேறு எடுத்து கொடுக்க, இதயம் வேகமாய் துடிக்க, கண்களோ இன்னும் நீரை சுரந்தது.
“இல்லையில்லை ஈஸ் மாமா கோவமா இருக்காங்க.. முதல்ல சமாதானம் செய்யணும்…” என்று தனக்கு தானே கூறிக்கொண்டவள்,
“அப்.. அப்படியெல்லாம் இல்லை மாமா… நான்.. நான் எதோ வேற.. வேற சிந்தனைல இருந்துட்டேன்… சாரி.. உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்….” என்று அவன் முகம் பார்க்காமல் பேசியவள் வேகமாய் எழ போக, எழுந்தது மட்டும் தான் தெரியும்.
ஈசன் லட்சுமியின் கைகளை பின்னே மடக்கி இழுத்து தன்னருகே அமர்த்தி இருந்தான். வெகு நெருக்கத்தில். அவள் கைகள் வேறு பின்னே மடக்கியிருக்க, அதுவேறு வலிக்க, ஈசன் மீது முக்கால்வாசி சாய்ந்தது போல் அமர்ந்திருந்தது வேறு கூச்சம் கொடுக்க தவித்து தான் போனால் லட்சுமி.
“நீ பதில் சொல்லாம ஒரு இஞ்ச் கூட நகர முடியாது…” என்று சொல்லியபடி, பின்னே மடக்கி இருந்த அவள் கைகளை விடுவித்து முன்னே இருக்கரம் கொண்டு அவளை தன்னோடு இறுக்க, அவளுக்கு இன்னும் தவியாய் தவித்தது உள்ளம்.
“அப்.. அப்படியெல்லாம் நிஜமாவே இல்ல மாமா…” என்று எழும்பாத குரலில் சொல்ல, இதை என்னை நம்ப சொல்கிறாயா என்பது போல் பார்த்தான்.
“நி.. நிஜமா மாமா…” என்று எச்சில் விழுங்கினாள்.
“பொய்.. நானும் கூட எதுவும் இருக்காதுன்னு தான் நினைச்சேன்.. ஆனா என்னவோ ஒன்னு என்னை பத்தி உன் மனசுல இருக்கு. சொல்லு லஷ்மி.. உன்னை நான் அப்படி மத்தவங்க முன்னாடி என்னிக்காவது அலட்சியமா நடத்திருக்கேனா…?? அப்படி பண்ணா உன்னால தாங்க முடியுமா?? வலிக்குது டி.. ஒவ்வொரு தடவையும் நீ அப்படி பார்க்கும் போது…
என்ன என்னன்னு யோசிச்சு யோசிச்சு மனசு மூளைன்னு எல்லாமே வலிக்குது டி.. சொல்லு.. உனக்கு என்ன வேணும்… என்ன எதிர் பார்க்கிற…?? இது நம்ம வாழ்க்கை.. என் பொண்டாட்டின்னு நான் கொஞ்சம் கொஞ்சமா உன்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணா.. நீ?? போடான்னு சொல்லாத மாதிரி சொல்ற.. என்னை கொல்ற லஷ்மி நீ…” என்றவன் பேச பேச அவனது பிடியோ இன்னும் இறுகியது.
“சொல்லிடு லஷ்மி.. இல்லை இப்படியில்லை.. எனக்கு சுத்தம்மா உன்னை பிடிக்கலை அப்படின்னா அதையும் சொல்லிடு லஷ்மி.. நான் என்ன செய்யணுமோ செய்றேன்…” என்று அவள் காதருகே அழுந்தந்திருதமாய் சொல்ல,
“ஐயோ இல்ல மாமா….” என்று அவன் நெஞ்சில் சாய்ந்தே கதறி விட்டாள் லட்சுமி.
“சத்தியமா அப்படி எல்லாம் எதுவுமேயில்லை மாமா…. ப்ளீஸ் இப்படியெல்லாம் பேசாதீங்க… நிஜமா மாமா.. நான் உங்களை என்னிக்குமே அவமானப்படுத்தனும்னு நினைக்கலை மாமா.. ப்ளீஸ்….” என்று அவன் சட்டையை பிடித்தே அவன் மீதே இன்னும் நெருக்கமாய் சாய்ந்து கதறியவளை, கண்டு ஈசன் தான் என்ன உணர்கிறோம் என்று தெரியாமல் பார்த்தான்.
அவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது போக, மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், “நிஜமா மாமா.. நான் என்னிக்குமே உங்களை அவமானப்படுத்தனும்னு நினைக்கவேயில்லை மாமா….” என்று தவித்து சொல்ல,
“பின்ன ஏன் அப்படி பாக்குற…???” என்று தன் முதலும் முக்கியமுமான கேள்விக்கு வந்தான்.
“என்னை பிடிக்காம போயி தானே… காலையில அப்படி பேசின.. ஏன் எனக்கு என் பொண்டாட்டிய கூட்டிட்டு போகணும்னு ஆசை இருக்காதா…” என
“ஹா…!!!!!!” என்று திகைத்து போனாள் லட்சுமி..
“என்ன அப்படி திகைச்சு போய் பார்க்குற..?? வேலை எல்லாம் விட்டு நான் வந்தா.. எவ்வளோ ஈசியா பேசுற லஷ்மி.. இங்க பார்.. இப்பவும் சொல்றேன்.. இந்த கல்யாணம் பிடிக்கல, என்னை பிடிக்கலைன்னா சொல்லிடு.. யாரும் உன்னை எதுவும் கேள்வி கேட்க மாட்டாங்க.. அதுக்கு நான் உறுதி.. சொல்லு லஷ்மி…” என்று அவளை போட்டு சொல்லு சொல்லு என்று படுத்த,
“ ஐயோ போதும் மாமா…” என்று தன் காதுகளை மூடிக்கொண்டாள்.
“போதும் மாமா… ப்ளீஸ்.. என் எனக்கு.. எங்க அப்பா நியாபகம்… அதான்.. அவர் எப்பவுமே என்னை வண்டில வச்சு தான் எங்கயும் கூட்டிட்டு போவார்.. அந்த நியாபகம்..” என்று பேசிக்கொண்டே போக இன்னும் அவளுக்கு அழுகை கூடியது.
காதுகளை மூடியவள், இப்போது முகத்தை மூடிக்கொண்டு அப்படியே சரிந்து அமர்ந்து அழ, அவனுக்கு என்னவோ போல் ஆனது.
“லஷ்மி…” என்று மெல்ல அழைக்க, அவளோ பதிலே இல்லாமல் அழுதுகொண்டு இருந்தாள்.
“என்.. எனக்கு எங்க அப்பான்னா ரொம்ப பிடிக்கும் மாமா.. ரொம்ப.. ஆனா அவர் இப்படி எங்களை விட்டு…” என்று மேற்கொண்டு பேச முடியாமல் தவிக்க, ஈசனுக்கு ரொம்பவும் ஒருமாதிரி ஆகிவிட்டது.
‘ஐயோ.. என்னடா இது.. தான் ஒன்று நினைக்க.. அவள் ஒன்று சொல்கிறாள்…’ என்று தோன்ற, அழுகையில் குழுங்கும் அவள் முதுகை மெல்ல வருடியவன், ஆழ்ந்த மூச்சுக்களை வெளியிட்டு தன்னை தானே சமாதானம் செய்துகொண்டு,
“சரி சரி.. அழாத லஷ்மி….” என்று சொல்ல, அவளோ இன்னும் இன்னும் அழுதாள்.
ஈசனுக்கு அப்போது தான் ஒன்று நினைவு வந்தது, லட்சுமி தந்தை இறந்த அன்று, லட்சுமி கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வரவில்லை. அன்றே எல்லாம் சொன்னார்கள் “அழுது தீர்த்திடு…” என்று ஆனால் அவள் அழவே யில்லை.
“லஷ்மி….” என்று மீண்டும் அழைக்க, அவன் குரலில் என்ன உணர்ந்தாளோ கீழ் அமர்ந்தபடி அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நிஜமா மாமா.. எங்கப்பா என்னை எப்படி பார்த்துப்பார் தெரியுமா… எங்க போனாலும் வண்டியில தான்.. நீ… நீங்க… வண்டியில போவோம்னு சொன்னதும் அதெல்லாம் எனக்கு நியாபகம் வந்திடுச்சு மாமா..” என்று சொல்லியபடி தன் கண்களை துடைத்தவள்,
“நிஜமா மாமா… மத்தபடி நான் உங்களை அவனப்படுத்த நினைக்கல மாமா.. அதுவுமில்லாம, நீங்க வண்டில போவோம்னு சொல்லவும், நம்ம புல்லட்ல தான் போறோம்னு நினைச்சிட்டு… நானும் ரொம்ப…” என்று பேசிக்கொண்டே போனவள் திடீரென்று, நாக்கை கடித்து, அதிர்ந்து பேச்சை நிறுத்தி, அவனை காண,
ஈசனோ ஆவலாய் இவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது போல் “ம்ம் சொல்லு லஷ்மி நீயும் ரொம்ப….” என்று அவளை ஊக்க, அவன் பார்வையோ கண்டுகொண்டானோ என்று இவளுக்கு தோன்ற வைத்தது.
‘ஐயோ லஷ்மி… உளறிட்ட,.. போச்சு போச்சு.. ஈஸ் மாமா கோவமா பார்த்தா கூட தாங்கிடலாம் போல.. இப்படி கொஞ்சலா பார்த்தா தாங்காதே…’ தனக்குள்ளே பேசிக்கொண்டவளின்,
கண்களில் இன்னும் கூட கண்ணீர் ஒட்டிக்கொண்டு இருந்தாலும், லேசாய் அசடு வழிந்து, திரு திருவென்று முழிக்க,
“சொல்லு லஷ்மி.. நீயும் ரொம்ப….” என்று ஈசன் மீண்டும் கேட்க, அவள் என்ன சொல்ல வந்தாளோ,
“ஏ அய்யா ஈசா… கால்ல அடி பட்டிருச்சாமே…” என்று அலறியபடி நடுவாசல் வழியாக முத்தழகு வர, அவர் பின்னே மரகதமும் வர, வேகமாய் இருவரும் விலகி அமர்ந்தனர்.