ஈசனது பார்வை லட்சுமியை மட்டுமே தொடர்ந்து கொண்டு இருந்தது. இதற்கும் அவனை சுத்தி, அவன் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, அவனோ அதை பற்றி எல்லாம் சிறிதும் கவலை படவில்லை.
சரியாய் அவள் எதுவோ சொல்ல வரும்போது அந்நேரம் பார்த்து முத்தழகும், மரகதமும் வர, வாழ்வில் முதல் முறையாய் ‘இந்த நடுவாசல மூடனும்…’ என்று தோன்றியது அவனுக்கு. இந்த எண்ணம் தோன்றியதும், இதழில் ஒரு புன்னகை தானாய் வந்து ஒட்டிக்கொண்டது.
“ஏ அய்யா ஈசா என்ன நீயா சிரிக்கிற..??” என்று முத்தழகு கேட்க,
“அது ஒண்ணுமில்ல கிழவி… நீ சரியா உள்ள என்ட்ரி குடுத்தியா அதான்…” என்று சொல்ல, யாருக்கு புரிந்ததோ இல்லையோ லட்சுமிக்கு மிக நன்றாகவே புரிந்தது.
‘நல்லவேளை இவங்க வந்தாங்க.. இல்ல இந்த ஈஸ் மாமா என்னை ஒருவழி பண்ணிருக்கும்…’ என்று நினைத்தவள், சற்றே நிம்மதியாய் ஒரு ஆசுவாச பெருமூச்சு விட, ஈசன் அவளையே தான் பார்த்துகொண்டிருந்தான்.
சுற்றி இத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணமெல்லாம் இல்லை. ‘என் மனைவி நான் பார்கிறேன்…’ என்பது போல் இருக்க, தவியாய் தவித்ததோ லட்சுமி தான்.
மரகதமும், முத்தழகும் கேட்டதற்கெல்லாம் தலையை தலையை உருட்டினாளே தவிர, வாய் திறக்கவில்லை. ஈசன் பார்வை தன்னை தொடர்வது கண்டு, பேச்சு வரவில்லை. வேலை இருப்பது போல் வீடு முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்தாள்.
‘இந்த ஈஸ் மாமாவ என் பின்னாடி சுத்த வைக்கணும் பார்த்தா.. என்னை இந்த வீடு முழுக்க ஈஸ் மாமா சுத்த வைக்கிறாங்களே… கஷ்ட காலம் டி லட்சுமி…’ என்று நொந்துகொண்டாள்.
பாலா உள்ளே நுழைந்ததுமே, “சொல்ல வேணாம்னு சொல்லி தானே டா அனுப்பினேன்…” என்று ஈசன் கடிய,
“நான் சொல்லலைண்ணா… என் வாய் அதுவா உளறிடுச்சு…” என்று சொல்லி இளித்து வைக்க, சத்தியமாய் அந்நேரம் லட்சுமிக்கு பாலா கடவுளாக தான் தெரிந்தான்.
‘நல்ல காரியம் பண்ண…’ என்று மெச்சுதலாய் அவள் பார்க்க, ‘என்ன காரியம் பண்ணிருக்க..’ என்று ஈசன் அவனை முறைக்க,
‘ஆத்தி… இதுங்க ரெண்டுக்கும் நடுவுல மாட்டணுமா…’ என்று சுதாரித்தவன்,
“ம்ம்மா.. நான் பிரண்ட்ஸ பார்க்க போறேன்…” என்று சொல்லி கிளம்பிவிட்டான்.
“என் பேரனுக்கு நேரமே சரியில்ல.. ஊர் கண்ணெல்லாம் அவன்மேல தான் பட்டிருக்கு… ” என்று முத்தழகு சொல்லிகொண்டே ஈசனுக்கு திருஷ்டி சுத்தி போட, அதை வெறுமெனே நின்று வேடிக்கை பார்த்தவள்,
“நேரம் எனக்கு தான் சரியில்ல…” என்று முணுமுணுத்தாள். அதை கண்டுகொண்டவன், “லஷ்மி… எதுவும் சொன்னியா…” என்று கேட்க,
“ஹா… என்.. என்ன மாமா…” என்று திருதிருவென்று முழித்தாள்.
ஈசன் முகத்தை நேருக்கு நேர் காணும் போதெல்லாம் ஒரு அசட்டு சிரிப்பும், திருதிரு முழியும் லட்சுமிக்கு தோன்ற, ஈசனுக்கோ அப்படி அவளை பார்க்கும் போதெல்லாம் எதாவது சொல்லி, இல்லை எதாவது கேட்டு சீண்ட வேண்டும் போல் இருந்தது. இந்த உணர்வு புதிது அவனுக்கு.
“இல்ல நீ எதோ சொன்ன மாதிரி இருந்தது…” என்று அவளையே பார்த்து கேட்க, அவன் பார்வையே நீ என்னிடம் சிக்காமலா போவாய் என்று சொல்லியது.
லட்சுமிக்கோ வார்த்தை வராது திக்க “அ.. அது.. ஒண்ணுமில்ல மாமா… நீ நீங்க சாப்பிடுறீங்களா..?? நேரமாச்சு, மாத்திரை வேற போடணும்…” என,
அவளையே ஒருநொடி கூர்ந்து பார்த்தவன் “கொஞ்ச நேரம் போகட்டும்…” என்று சொல்லிவிட்டான்.
“ம்ம்…” என்று தலையை உருட்டியவள், அடுத்து என்ன செய்வது என்பது போல் பார்க்க, மரகதம் அவளை அழைக்க, விட்டால் போதுமென்று சென்றுவிட்டாள். சுற்றி யாருமில்லை, கஜேந்திரனும், ஈசனும் மட்டும் அமர்ந்திருக்க, கஜேந்திரன் பார்வையோ ஈசனையே வட்டமிட்டது. அதை கவனித்தவன்,
“என்னங்கய்யா…??” என்று கேட்க,
“ஹ்ம்ம்… பார்த்து இரு ஈசா…” என்றார் ஒருமாதிரி குரலில்.
அவர் குரல் அவனுக்கு என்ன உணர்த்தியதோ, மேற்கொண்டு எதுவும் சொல்லாமல், கேட்காமல், “சரிங்கய்யா…” என்று மட்டும் சொல்ல,
“நான் கால்ல அடிபட்டதுக்கு சொல்லலை… டிவி உடைஞ்சதுக்கு சொன்னேன்…” என்றார்..
‘இவருக்கு எப்படி தெரியும்…’ என்று சட்டென்று மனதில் கேள்வி மூழ, “அய்யா…!!!” என்றான் அதிர்ந்து விளித்து..
“மத்தவங்க வேணும்னா நீ சொன்னதை நம்பலாம்.. இல்லை நீ சொல்றத மீறி உன்னை கேள்வி கேட்க தயங்கலாம்.. ஆனா நான் அப்படி இல்லை.. பார்த்து இரு.. மனுசனுக்கு, கோவம் வேகம் இருக்கலாம், ஆனா அதுவே புத்திய மறைக்கிறதா இருக்க கூடாது.. உனக்கு கல்யாணம் ஆகிருச்சு.. மனசுல வச்சிக்கோ.. ” என்றவர் குரலில் நீ தனி குடித்தனமே வந்தாலும் நான் உன்னை கேள்வி கேட்பேன் என்ற செய்தி இருந்தது..
ஈசனிடம், காலில் எப்படி அடிபட்டது என்ற கேள்வியோடு, டிவி எப்படி உடைந்தது என்ற கேள்வியும் சேர்ந்தே வந்தது. முதலில் அதை இதை சொல்லி மழுப்பியவன், பின்
“வேகமா ரூம்க்கு போறப்போ கை தட்டி விழுந்திடுச்சு…” என,
“என்ன கை தட்டி விழுந்துச்சா…???” என்று அனைவரும் நம்ப மாட்டாமல் கேட்டனர்,
“ஆமாம்…” என்றவன் முகத்தில் இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும், மேற்கொண்டு கேள்வி எதுவும் கேட்க கூடாது என்பது போல் பிரதிபலிக்க, அதற்குமேல் யாரு எதுவும் கேட்கவில்லை.
ஆனால் கஜேந்திரன் ஈசனை பெற்றவர் அல்லவா.. சும்மாயிருப்பாரா.. நீ தானே இதை செய்தாய் என்றும் கேட்காமல், ஏன் என்றும் கேட்காமல், மகனுக்கு மேலோட்டமாய் அறிவுரை மட்டும் சொல்ல, ஈசனுக்குமே தான் செய்தது தவறு என்று புரிந்திருந்ததால், அடுத்து எதுவும் அவரிடம் சொல்லவில்லை.
மேலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு, அனைவரும் கிளம்ப, மீண்டும் அங்கே ஈசனும் லட்சுமியும் மட்டும் தனியே இருக்க, லட்சுமிக்கோ மனம் திக் திக் என்று அடித்துகொண்டது.
ஆனால் ஈசனோ எதுவுமே கேட்கவில்லை. ஒருவார்த்தை பேசவில்லை. அனைவரும் செல்லவும், அவனும் உண்டுவிட்டு, லட்சுமி மாத்திரை எடுத்துகொடுக்க, ஒன்றுமே சொல்லாமல் விழுங்கியவன், நேராய் அறைக்கு செல்ல எத்தனிக்க, லட்சுமி வேகமாய் அவனை பிடிக்க வர,
“வேணாம் லஷ்மி…” என்றவன் மெல்ல எட்டு வைத்து தானே அறைக்கு சென்றுவிட்டான்.
ஆனால் லட்சுமிக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது.
‘என்ன இந்த ஈஸ் மாமா ஒண்ணுமே கேட்காம போறாங்க.. மறந்துட்டாங்களா.. இல்லையே மறக்கர ஆள் இல்லையே… என்னவா இருக்கும்…’ என்று தன்னை தானே போட்டு குழப்பிக்கொண்டு, மீதமிருந்த வேலை எல்லாம் முடித்து அறைக்கு சென்றாள்.
ஈசனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல் தோன்ற, மனதில் ஓர் நிம்மதி. மெல்ல பூனை போல் நடந்து சென்று கட்டிலில் ஏறி படுக்க,
அடுத்த நொடி “லஷ்மி….” என்ற அலறலோடு ஈசன் எழுந்தமர்ந்தான். அவன் அலறிய விதத்தில் லட்சுமியும் அடித்து பிடித்து படுத்த வேகத்தில் எழுந்து அமர, ஈசனோ லட்சுமியை பாவமாய் பார்த்தான்..
“என்.. என்ன மாமா…???!!!”
“அது.. அது ஒரு கனவு லஷ்மி…”
‘கனவா இப்போதானே தூங்கினாங்க.. அதுக்குள்ள எப்படி கனவு வரும்…’ என்று சிந்தித்தவள், ஒன்றும் கேட்காமல் அவனையே பார்க்க,
“என்ன லஷ்மி, நான் கனவு கண்டு எழுந்த வேகத்துக்கு நீ ஒரு நூறு கேள்வியாவது கேட்பன்னு பார்த்தா, இப்படி அமைதியாயிருக்க.. என்னன்னு கேளு லஷ்மி… ” என்று ஊக்கினான்.
ஈசன் சொல்லிய தினுசில், “என்ன கனவு மாமா…” என்று அவள் கேட்டுவிட,
“அது லஷ்மி… என்னவோ தெரியல, உனக்கும் எனக்கு பெரிய சண்டை… ரொம்ப பெரிய சண்டை… நான் உன்னை ரொம்ப திட்டிட்டேன்.. பாவம் லஷ்மி நீ.. ரொம்ப அழுதுட்ட.. ச்சே.. நான்லாம் என்ன மனுஷன்.. கட்டின பொண்டாட்டிய இப்படி அழ வைக்கலாமா..
கனவுன்னாலும் அது தப்பு தானே லஷ்மி… ஆனா கனவுல கூட என் கால்ல வலி லஷ்மி.. அப்புறம் தான் தெரிஞ்சது எனக்கு தான் நிஜமாவே கால்ல அடி பட்டிருக்குன்னு..” என, சத்தியமாய் லட்சுமிக்கு மண்டை காய்ந்தது.
‘ஐயோ.. இதென்ன ஈஸ் மாமா இப்படி சொல்றாங்க… ஒருவேளை மாத்திரை போட்டு படுக்கவும் எதுவும் இப்படி குழப்பம் ஆகிடுச்சோ.. அப்படியும் இருக்குமா… இல்லையே வலிக்கு தானே மாத்திரை..’ என்று யோசனையில் லட்சுமி மூழ்க,
அவள் முகத்தையே பார்த்திருந்தவன், “லஷ்மி…..” என்று பல்லை கடித்து அழைத்தவன்,
“என்ன நீ.. நானே உன்னை கனவுல திட்டினேன்னு வருத்தமாருக்கேன்.. நீ இப்படி முழிக்கிற…??” என்று கேட்க, லட்சுமி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்.
‘நிஜமாவே ஈஸ் மாமாக்கு கனவு தானா.. இல்லை வேணும்னே நம்மள பேச வைக்க ட்ரை பண்றாங்களா..??? இது கனவு தான் மாமா அப்படின்னு சொன்னா, ஒருவேளை உண்மை தெரிஞ்சிட்டே கேட்டிருந்தா, மாட்டிக்குவோம்.. இல்லை மாமா நம்ம கொஞ்ச நேரம் முன்னாடி சண்டை போட்டோம்னு சொன்னா அவ்வளோ தான் அடுத்து என்ன எதுன்னு கேட்டு அப்பவும் மாட்டுவோமே.. போச்சு லட்சுமி ஆகமொத்தம் நீ வசமா மாட்டுன…’ என்று அவள் நினைத்துகொண்டிருக்க, அதே நேரம் சரியை
ஈசனும் ‘வசமா மாட்டினியா…’ என்று எண்ணி சிரித்துகொண்டான்.
ஆனால் அவன் முகமோ பாவமாய் இருந்தது. ஒன்றுமே தெரியாத அப்பாவியாய் இருக்க, தலையில் கை வைத்து அமர்ந்தவள், மெல்ல தன் கண் இமைகளை மட்டும் நிமிர்த்தி அவன் முகம் நோக்க, அவனோ இவளை தான் தீவிரமாய் பார்த்துகொண்டு இருந்தான்.
“அப்.. அப்போ அந்த சண்டை எல்லாம்….” என்று ஈசன் கேட்ட பாவனையில்,
“அ.. அது.. அதெல்லாம் சும்மா மாமா.. உங்களுக்கா தோணிருக்கு அவ்வளோதான்.. நமக்குள்ள ஏன் மாமா சண்டை வர போகுது..” என்று சொல்லி சமாளிக்க,
“ஓ..!!!” என்று அவள் சொன்னதை கேட்டு யோசிப்பது போல் பாவனை செய்து,
“அதானே.. நமக்குள்ள ஏன் லஷ்மி சண்டை எல்லாம் வர போகுது.. உனக்கும் எனக்கும் ஏதாவது ஒளிவு மறைவு இருக்கா என்ன?? இல்லையே… பின்ன ஏன் சண்டை வரப்போகுது…” என்று சரியாய் ஒரு புள்ளியில் வந்து நிற்க,