‘மாட்டிக்கிட்ட லட்சுமி… நீ சொல்லித்தான் ஆகணும்…’ என்று தோன்றும் பொழுதே, ‘சொல்லிடு லட்சுமி… இது தான் சரியான சமயம்.. உன் புருஷன் தானே சொல்ல என்ன வந்துச்சு.. உன்னை எனக்கு பிடிக்கும் மாமான்னு சொல்ல அப்படி என்ன கஷ்டம்…’ என்று அவளின் மனமே பெருங்குரல் எடுத்து சொல்ல, லட்சுமிக்கு நாவோ மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது தான் மிச்சம்.
கண்களை விரித்து அவன் முகத்தையே பார்க்க, ஈசன் கரங்கள் மெல்ல அவள் கன்னங்களை பற்ற, லட்சுமியின் கண்களோ தானாய் மூடிக்கொள்ள, அவள் கன்னத்தில் இருந்த ஈசன் கரத்தின் கட்டை விரலோ மென்மையாய் மூடியிருந்த லட்சுமியின் கண்களை வருடியது.
லட்சுமியின் உடலில் ஓர் மெல்லிய நடுக்கமும், அதிர்வும் ஓடியதை லட்சுமியும் அறிந்தாள் ஈசனும் உணர்ந்தான். கண்களை வருட வருட ஓர் சுகம்.. என்னவோ எங்கோ ஓர் ஆழ்ந்த நிலைக்கு போவது போன்று ஓர் உணர்வு.. லட்சுமிக்கு தெரியவில்லை அவள் தன்னிலை இழக்கிறாளா, இல்லை அவன் செய்கிறானா என்று.
“சொல்லு லஷ்மி… உனக்கும் எனக்கும் இடையில எந்த ஒளிவு மறைவும் இல்லைல…” என்று மீண்டும் ஈசன் சொல்ல,
அவனது அந்த குரலும், தன் கன்னங்களை தாங்கியிருக்கும் அவன் கைகளின் கதகதப்பும், மூடியிருக்கும் தன் கண்களில் அவன் தரும் மென் வருடலும், மொத்தமாய் லஷ்மியை அசைக்க, அவளது இதழ்களோ லேசாய் நடுங்கியபடி “மாமா…..” என்று உச்சரித்து..
“ம்ம் சொல்லு லஷ்மி… நமக்கு நடுவுல எந்த ஒளிவு மறைவும் இல்லையே… இல்லை நமக்கு நடுவுல எதுவுமேயில்லையா…???” என்று இரண்டு கேள்விகளையும் அவள் முன் வைக்க,
லட்சுமியோ இன்னும் தவித்தாள். எதற்கு பதில் சொல்ல. எதற்கு சொன்னாலும் அதன் பின்னே பதிலுக்கான விளக்கமும் சொல்லவேண்டுமே..
‘சொல்.. சொல்.. சொல்.. சொல்லிவிடு லட்சுமி.. கேட்கும் போதே சொல்லிடு… பின்ன நீயே சொல்லணும் நினைச்சாலும் அதுக்கு வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ…’ என்று அவள் மனமே போட்டு உந்த, லட்சுமியோ அசைய முடியாமல் அமர்ந்திருந்தாள்.
“என்ன லஷ்மி… சொல்லேன்… இல்லை நான் சொல்லவா..” என்றவனின் குரலில் அத்தனை குழைவு இருக்க, ஈசனின் அருகாமையை வெகு நெருக்கமாய் அவளால் உணர முடிய, கண்கள் திறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவளால் முடியவில்லை. ஆனால் மனமோ அவன் என்ன சொல்ல போகிறான் என்பதை கேட்க விழைய, மிகவும் சிரமப்பட்டே, எச்சில் கூட்டி விழுங்கி,
“என்ன மாமா… என்.. என்ன சொல்ல போறீங்க…..??” என்று வினவ, எதோ அவள் இதழ்களின் அருகே ஏதோ ஓர் குறுகுறுப்பு, கண்கள் திறந்தால் தானே காண முடியும்.. ஆனால் அவளால் உணர முடிந்ததோ, தன்னிதழை எதுவோ உரசியது என்பதை அவளால் நன்றாகவே உணர முடிய, ஈசனது விரலோ இன்னும் அவள் கண்கள் புருவம் என்று வருட,
“என்ன சொல்லட்டும்… உன்னை எனக்கு பிடிச்சிருக்கு சொல்லவா…?? ஹ்ம்ம் சொல்லட்டுமா…?” என்றவனின் குரலிலும் அழுத்தம் இருக்க, அவன் கைகளும் இன்னும் ஓர் அழுத்தத்தை அவள் கன்னங்களுக்கு கொடுக்க,
இதற்குமேல் அவளால் பொறுக்கமுடியவில்லை, ஈசனின் கரத்தை பற்றியவள், சட்டென்று கண்கள் திறந்தாள். கண் இமைகள் படபடவென அடித்துக்கொள்ள, அவளது இதயமோ அதற்கு போட்டியாய் இன்னும் துடித்தது.
“மா..மா…” என்று குரலே எழும்பாமல் கேட்க,
அவள் மனமோ ‘இதுக்கு ஈஸ் மாமா கனவான்னு கேட்கும் போதே ஆமான்னு சொல்லிருக்கலாம்…’ என்று நினைக்க,
அவனோ, “சொல்லு லஷ்மி… இதுவும் கனவு தானா..?? இல்லை சண்டை வந்தது நிஜமா…??” என்று மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தான்.
ஆனால் லட்சுமிக்கோ மந்திரத்திற்கு கட்டுப்பட்ட நிலை.
“கனவும் இல்லை ஒண்ணுமில்லை மாமா., ஆமா நமக்குள்ள சண்டை வந்தது.. ஆனா அதுவே சரியாகும் போது தான் பாட்டி அத்தை எல்லாம் வந்திட்டாங்க.. ஒருவேளை அது பாதியில முடிஞ்சதுனால கூட உங்களுக்கு அது எல்லாம் சேர்ந்து கனவு போல வந்திருக்கலாம்..” என்று வேகமாய் சொல்ல,
ஈசனோ மனதினுள் ‘இதை.. இதை.. இதை தான் எதிர்பார்த்தேன்…’ என்று சொல்லிக்கொண்டான்..
“ஓ.. சண்டை வந்து சமதானமாகி.. இல்லை இல்லை முழுசா ஆகலை., ரைட்… எனக்கு எதுவுமே பாதியில் விட்டு பழக்கமே இல்ல லஷ்மி.. அதான் தூங்கும்போது அந்த நினைப்பே மாறி மாறி வந்து.. ம்ம்ச் பாரு… உன்னையும் சேர்த்து நான் குழப்பிட்டேன்… ”
நிஜமாகவே இதற்கு லட்சுமிக்கு என்ன பதில் சொல்லவென்று தெரியவில்லை. ஆம் என்று சொன்னாலும் பிசகு.. இல்லை என்றாலும் பிசகு.. ஒன்றும் சொல்லாமல் மௌனமாய் அமர்ந்திருக்க, ஈசனோ தலையணையை சாய்ந்து அமர வசதியாய் போட்டு, சாய்ந்தும் அமர்ந்து,
“சொல்லு லட்சுமி.. நம்ம பாதில விட்டோம்ல எதுல விட்டோம்….” என்று இலகு போல கேட்க, அவளுக்கோ மறுபடி முதலில் இருந்தா என்று தோன்றியது.
உண்மையை சொல்லிவிடலாமா… உன்னோடு பைக்கில் வர ஆசைப்பட்டேன் என்று சொல்லிவிட்டால் போதும் தானே.. இதை மட்டும் சொல்லிவிடலாம்.. என்று நினைத்து,
“அது மாமா.. நீங்க வண்டியில போகலாம்னு சொல்லவும்… நான் ரொம்ப..” என்று பேசிக்கொண்டே வந்து நிறுத்தியவள்,
‘ஐயோ மறுபடியும் இந்த ரொம்பத்துலையே வந்து நிக்கிறோமே…’ என்று தனக்கு தானே குட்டிக்கொண்டு,
“அது.. ரொம்ப, சந்தோஷ பட்டேனா.. ஆனா நீங்க கார் கொண்டு வரவும்.. ஒருமாதிரி போச்சு… அதான்.. சாரி மாமா.. நான் நிஜமாவே உங்களை ஹர்ட் பண்ணனும்னு அப்படி பேசலை. சட்டுன்னு ஒரு கோவம்,.. அப்புறம் அப்பா நியாபகம் வேறயா.. ப்ளீஸ்.. மனசுல எதுவும் வச்சுக்காதீங்க..” என்று பதில் அளித்தவளுக்கு, ஹப்பாடி சொல்லிட்டோம்.. ஓரளவுக்கு சொல்லிட்டோம்.. ஆனா ஈஸ் மாமா நம்பணுமே என்பது போல் அவனை பார்க்க,
அவனோ கைகளை கட்டி, நீ என்ன என்ன சொல்ல முடியுமோ அத்தனையும் சொல் என்பது போல் பார்த்தான்.
“என்ன மாமா நான் தான் சொல்லிட்டேனே.. அப்புறமும் இப்படி பார்த்தா என்ன அர்த்தம்…??” என..
“என்ன அர்த்தம்.. அதான் எனக்கும் தெரியலை.. நீ பார்த்த அந்த பார்வைக்கு என்ன அர்த்தம் தெரியலை.. சுத்தமா தெரியலை.. கேட்டா நீ என்னென்னவோ சொல்ற.. ஆனா கடைசியில என்னை சொல்ற, நான் பார்க்கிறதுக்கு என்ன அர்த்தம்னு.. நான் பார்க்கிறதுக்கு ஒரே ஒரு அர்த்தம் தான்.. அது நீ என் பொண்டாட்டி.. அது மட்டும் அதான் அர்த்தம்.. ஆனா நீ பார்க்கிறதுல அப்படி எதுவுமே இல்லை..
என்ன நடந்தாலும் என் மனசுல இருக்கிறதை நான் சொல்லவே மாட்டேன்னு சொல்றது போல ஒரு துடைச்சு வச்ச பார்வை.. நீ வேணா என்னை அப்படி பார்க்கலாம்.. அதில அர்த்தமிருக்கோ இல்லையோ.. அது என்னை படுத்துது.. நிறைய நிறைய கேள்வி கேட்க வைக்குது.. என்னடா இது ?? எதுக்குடா இதுன்னு.. இப்போ நேத்து இல்லை.. ரொம்பநாளா… நீ முதன்முதல்ல அப்படி பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து.. இதே கேள்வி.. இந்த கேள்வி மட்டும் தான்.. ஆனா அப்போ உன்ன இப்படி கேள்வி கேட்க எந்த உரிமையும் இல்ல.. இப்போ இருக்கு.. கேட்கிறேன்.. சொல்லு லஷ்மி…” என்றவனுக்கு அத்தனை வேகம்.
அவளுக்கோ ‘அம்மாடியோ…’ என்று இருந்தது.
சில விஷயங்கள் இப்படிதான், வாய்ப்பு கிடைக்கும் போதே, இல்லை முதல் முறையிலேயே சொல்லிவிட வேண்டும், செய்துவிட வேண்டும்.. அப்புறம் நாளைக்கு என்று நாமே ஒரு காரணம் சொல்லி, அதனை தள்ளிபோட்டு, பின் நமக்கே அதன் பாரம் தாங்காமல் இதை சொல்லிவிடுவோமா?? செய்துவிடுவோமா?? என்று ஓர் ஆவல் தோன்ற,
அனைத்தும் நமக்கு சாதகமாய் இருந்தால் சரி.. இல்லையேல் காலம் கடந்த கதை தான்.
இப்போதும் கூட அப்படிதான் லட்சுமிக்கு. இத்தனை நாள் சொல்லவில்லை.. ஆனால் இப்போது திருமணமே முடிந்து, அவன் மனதிலும் என்ன இருக்கிறது என்று ஓரளவு புரிந்து, ஈசனாகவே கேட்டபோதிலும், சட்டென்று மனத்தில் இருப்பதை போட்டு உடைக்க முடியவில்லை.
வாய் வரை வந்த வார்த்தைகள் யாவும் அப்படியே மீண்டும் வயிற்றுக்குள் சென்றுவிட, உள்ளங்கை எல்லாம் வேர்க்க தொடங்கியது. ஈசனுக்கோ இன்று என்ன ஆனாலும் சரி, நீ பேசி தான் ஆகவேண்டும் என்ற தீவிரம். இன்னும் எத்தனை நாளைக்கு.. இல்லை எத்தனை வருடத்திற்கு, அவள் பார்வைக்கான பொருளை தேடிக்கொண்டு இருப்பான்..
முன்பாவது சரி.. ஆனால் இப்போதோ அவள் அவனுடைய மனைவி.. அவள் உணர்வுகளை தெரிந்துகொள்ள அனைத்து உரிமையும் அவனுக்கு இருக்கிறதே. சொல்லபோனால் அவளோடு சேர்ந்து தன் வாழ்வை பிணைத்துகொள்ள நினைக்கும் போது லட்சுமி அமைதி காப்பது அவனுக்கு ஒருபக்கம் கவலையளித்தாலும், இன்னொரு பக்கம் கோவத்தையும் அளித்தது.
அவளோ வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்க, ஈசனோ “சோ.. நீ சொல்லமாட்ட… சரி சொல்ல வேண்டாம்.. ஆனா எனக்கே தெரியும்.. விடு.. நீ என்ன நினைக்கிற.. என்ன நினைச்ச… எனக்கே தெரியும்.. ஆனா நீ சொன்னா தான் எதுவும்.. ஏனா இது நான் ஆரம்பிக்கலை.. நீ தான் ஆரம்பிச்ச.. சோ நீதான் முடிக்கணும்..” என்றவன் குரலில் சுத்தமாய் ஓர் உணர்வும் இல்லை.
அடுத்து அவன் அவளோடு பேச தயாராய் இல்லை என்பது போல் கண்களை மூடி கொள்ள, லட்சுமி தான் விக்கித்து போய் அமர்ந்திருந்தாள். நிஜமாய் அவள் இதை எதிர்பார்க்கவில்லை. இன்னும் சிறிது நேரம் போனாள் ஒருவேளை அவளே சொல்லியிருக்க கூடும்.
சில விசயங்களை ஆற போட கூடாது.. அது நம்மை அவஸ்தைக்குள்ளக்கி விடும். அதை இப்போது நன்றாகவே உணர்ந்தாள்.. அவளால் எதையும் தாங்க முடியும் ஈசனது பாரா முகத்தை தவிர, சொல்ல போனால் அதில் ஆரம்பித்தது தானே எல்லாம்..
‘ப்ளீஸ் மாமா.. இன்னொரு டைம் முழிச்சு என்கிட்டே சொல்லு லஷ்மின்னு கேளுங்களேன்.. நான் சொல்லிடுறேன்.. சத்தியமாய் சொல்லிடுறேன்…’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்ள, ஈசனோ மெல்ல விழிகள் திறந்த மீண்டும் இவளை பார்த்தான். அவனது பார்வையை நேர்கொண்டு அவளால் காண முடியவில்லை..
‘சொல் சொல் சொல்…’ என்று அவன் கண்களும், ‘சொல்லிடு லட்சுமி.. சொல்லிடு…’ என்று அவள் மனமும் போட்டு பாடாய் படுத்த,
மொட்டு விரிந்தது போல் மெல்ல விரிந்த அவள் இதழ்களோ, “மா.. மாமா… என்.. எனக்கு… உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா..” என்று சொல்லி முடித்திருந்தது.. அடுத்த நொடி ஈசனின் கண்களும் தானாய் மூடிக்கொண்டது.