‘உனக்கு இதெல்லாம் தேவையா லட்சுமி… நீயாதான் சொல்லல, ஆனா ஈஸ் மாமா கேட்கும் போதாவது சொல்லிருக்கனுமா இல்லையா.. அதுவும் பண்ணல.. பெரிய இவளாட்டம் அது இதுன்னு கற்பனை பண்ணி பிகு பண்ணது தான் மிச்சம்.. இப்போ பார் ஈஸ் மாமா எப்பவும் போல இருக்காங்க.. நீதான் குழம்பி தவிக்கிற…’ என்று முணுமுணுத்து கொண்டிருந்தவளை, ரேவதி விசித்திரமாய் பார்த்தாள்.
“என்னடி ஆச்சு உனக்கு… காலைல இருந்து சரியில்ல… இப்போ நீயா புலம்புற…???”
“ம்ம்ச் சும்மா இருடி…” என்று அவள் தொடையில் தட்டியவள், மீண்டும் முன் போலவே முகத்தை வைத்து எதுவோ முணுமுணுக்க,
“அதுசரி நானும் இந்த ரெண்டு நாலா பார்த்திட்டு தான் இருக்கேன்.. நீ சரியே இல்லை… என்னன்னு கேட்டா சொல்லவும் மாட்டேங்கிற..” என்று ரேவதி கடிய,
லட்சுமிக்கு இப்படி அனைவரும் கவனிக்கும் படியா தான் நடந்துகொள்கிறோம் என்று தோன்றியது.
ஈசன் மீது தன் மனதில் ஓர் நாட்டம் வந்தபோது அதை வெளிக்கட்டாதவள், அவனையே கரம் பிடித்து, தன் மனதிற்கு பிடித்தவனோடு தன் வாழ்வை அமைத்துகொண்ட போதும் கூட அந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாதவள், இன்று அவனால் விழைந்த குழப்பத்தை மட்டும் தனக்குள்ளே போட்டு மறைத்து வைத்துகொள்ள முடியவில்லை. சொல்லபோனால் சுத்தமாய் வேறெதிலும் அவளால் கவனம் செலுத்த முடியவில்லை.
யாரிடம் கேட்பது?? ஈசனை தவிர இதை யாரிடம் கேட்க முடியும்..?? ஆனால் அவனிடமே என்றாலும் கேட்க முடியுமா என்ன?? கேட்டுவிடலமா?? கண்கள் மூடி, ஆழ மூச்செடுத்து, தலையை இல்லை என்று தானாய் அவள் ஆட்ட, இதெல்லாம் பார்த்திருந்த ரேவதியோ,
“போச்சு… முத்திடுச்சு… என்ன தான்டி உன் பிரச்சனை..?” என்று லட்சுமி முதுகில் தட்டினாள்.
அவள் தட்டியதில் கண்கள் திறந்தவள், “ஹா.. ஏன்டி லூசு அடிச்ச…??” என்று எரிச்சலாய் கேட்டாள் லட்சுமி.
“அதுசரி நான் லூசா..??? சொல்லுவ டி சொல்வ… நான் பண்றது பார்த்தா லூசாட்டம் இருக்கு.. நீ பண்றதெல்லாம் எப்படி இருக்காம்…?”
“போடி போ.. எப்போ பார் என்னை கிண்டல் பண்றதே உனக்கு வேலை…”
“ஸ்ஸ்ஸ்.. இதுக்குமேல முடியாதுடா சாமி… ஏன் டி இப்படி இருக்கன்னு கேட்டது குத்தமா.. சரி விடு.. ஈசண்ணாக்கிட்ட பேசிக்கிறேன்…” என்று சொன்னபடி ரேவதி இருக்கையில் இருந்து எழ,
ஈசனிடம் கேட்கிறேன் என்றதும் எங்கிருந்து தான் வேகம் வந்ததோ, “ஏய் ஏய் நில்லு டி…” என்று லட்சுமி பிடித்து இழுத்த இழுப்பில் ரேவதி பொத்தென்று மீண்டும் அமர்ந்தாள். அமர்ந்தவள் கைகளை இருக்கையின் முனை இடித்துவிட.,
“ஸ்… அம்மா….” என்று தேய்த்துவிட்ட படி,
“ஏன் டி… உட்காருன்னு சொன்னா உட்கார போறேன்.. அதுக்கேன் இப்படி இழுக்குற..” என்று முகத்தை வலியில் சுருக்க, அவள் முகம் பார்க்க எப்படி இருந்ததோ, லட்சுமிக்கே பாவமாய் இருந்தது போல.
“சாரி சாரி டி..” என்று சமாளித்தவள், பாவமாய் அவளை பார்க்க,
“உன் சாரிய நீயே வச்சுக்கம்மா…” என்றபடி தன் கைகளை மீண்டும் தேய்த்துக்கொண்டாள் ரேவதி.
ரேவதியையே பார்த்திருந்த லட்சுமிக்கு, அவளிடம் சொல்வோமா வேண்டாமா என்ற எண்ணம் முளைத்தது..
‘சொல்லலமா..??? முதல்ல இதெல்லாம் வெளிய சொல்லலாமா..??? அப்படியே சொன்னாலும் இவளுக்கு புரியுமா என்ன..?? ம்ம்ச் வேணாம், என்ன இருந்தாலும் இது எனக்கும் ஈஸ் மாமாக்கும் நடுவுல இருக்கிறது.. சொல்ல கூடாது…’ என்று தானே கேள்வியும் பதிலுமாய் இருக்க,
அவளது அமைதி உணர்ந்து ரேவதி அவளை நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவளுக்கு என்ன தோன்றியதோ, லட்சுமியின் கை மீது தன் கரம் வைத்து,
“சரி என்ன பிரச்சனைன்னு நான் கேட்கலை… ஆனா இப்படி இருக்காத.. நல்லா இல்ல.. ஒருவேளை ஈசண்ணாக்கும் உனக்கும் பிரச்சனைனா அதை அண்ணாக்கிட்ட மனசு விட்டு பேசு.. அதை விட்டு நீயா இப்படி குழம்பிட்டு இருந்தா உனக்கு கண்டிப்பா தெளிவு கிடைக்காது…” என்றாள்.
லட்சுமிக்கு சரி என்று தலையாட்டுவதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அடுத்து ரேவதி என்ன சொல்ல வந்தாளோ, மதிய வேளை வகுப்புகள் தொடங்குவதற்கான மணி ஒலிக்கப்பட, அடுத்த சில நொடிகளில் இவர்களின் பேராசிரியரும் வகுப்பிற்குள் நுழைய, மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் போனது.
சுற்றுபுறத்தில் நடக்கும் மாற்றங்கள் எல்லாம் என்னை எதுவும் செய்யாது என்பது போல், லட்சுமியின் மனமோ இரண்டு நாட்களாய் வீட்டில் நடப்பதையே சுற்றி வந்தது.
அன்று இரவு ஈசனிடம் “மா.. மாமா… என்.. எனக்கு… உங்களை ரொம்ப பிடிக்கும் மாமா..” என்று சொல்லி முடிக்க, ஈசனது கண்களும் அடுத்து தானாய் மூடிக்கொள்ள, அடுத்து என்ன செய்வது என்று லட்சுமிக்கு தெரியவில்லை.
ஈசன் விழித்திருந்தாலும் அடுத்து என்ன செய்ய என்று தெரிந்திருக்காது தான். ஆனால் இது வேறு விதமாய் அவஸ்தையாய் இருந்தது. அவனால் எப்படி உறங்க முடிந்தது என்று இருந்தது. நிஜமாகவே உறக்கம் தானா என்றும் தோன்றியது.
ஆனால் லட்சுமிக்கு அது எதுவுமே முடியவில்லை. உறங்கவும் முடியவில்லை, உறங்குவது போல் பாசாங்கு செய்யவும் முடியவில்லை. அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.. மெல்ல அவளது பார்வை ஈசனை வருட, அவளது மனமோ அடுத்த கேள்விக்கு தாவியது.
‘நிஜமாவே ஈஸ் மாமாக்கு நான் சொன்னது கேட்டுச்சா..??? கேட்டிருந்தா இப்படி அமைதியா தூங்குவாங்களா..??? ஒருவேளை கேட்கலையோ…??? சாதரணமா தூக்கத்துல கண்ணு திறந்து பார்க்கிற மாதிரி தான் பார்த்தாங்களா.. ஐயோ லட்சுமி… என்ன இப்படி ஆகிபோச்சு உன் நிலைமை… பேசாம எழுப்பி கேட்றுவோமா நான் சொன்னது கேட்டுச்சா இல்லையான்னு…’ என்று தோன்ற, வேகமாய் அவனை எழுப்ப கைகள் நீண்டுவிட, நீண்ட கைகள் அப்படியே நின்றது.
‘இல்ல வேணாம்.. நிஜமா தூங்கிருந்தா.. எழுப்பின மாதிரி ஆகிடும்.. வேணாம்.. ஆனா ஒருவேளை தூங்காம இருந்தா…???’ என்று மீண்டும் மனம் குழம்பியது.
இப்படியே தனக்குள்ளே ஆயிரம் கேள்விகள் பிறக்க, அது போதாதென்று தன்னை தானே குழப்பிக்கொண்டிருந்தவள் ஒருவழியாய், “சரி எதுனாலும் காலையில ஈஸ் மாமாவே சொல்வாங்கல்ல.. இல்ல நம்மலே கேட்போம்…” என்று முடிவெடுத்து அவன் உறக்கம் கலையாதவாறு படுத்தாள்.
மறுநாள் காலையோ, லட்சுமிக்கு விழிக்கும்போது வழக்கம் போல் ஈசன் பண்ணைக்கு தயாராகிக்கொண்டிருக்க, லட்சுமி வேகமாய் கட்டில் விட்டு எழுந்தாள்.
“மாமா.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க…??”
“தினமும் பண்றது தான் லஷ்மி….”
“ம்ம்ச் அது எனக்கு தெரியாதா… கால்ல அடிபட்டிருக்கு.. ரெஸ்ட் எடுக்கணும் சொல்லிருக்காங்கள்ள.. அப்புறம் ஏன் கிளம்புறீங்க…” என்றபடி வேகமாய் அவனருகே வர, அவனோ அடிப்பட்ட காலை நன்றாய் தரையில் ஊண்டி நின்றிருந்தான்.
“மாமா… என்ன இது…??” என்று அவன் காலை காட்டி கேட்க,
“ஷ்… முதல்ல சௌண்ட் கம்மி பண்ணு லஷ்மி…. ரெண்டு பேர் தான் இருக்கோம்….” என்றவன் ஓரடி அவளை நோக்கி எடுத்து வைக்க, அவளையும் அறியாமல் அவள் கால்கள் பின்னே ஓரடி எடுத்து வைத்தது.
மெல்ல சிரித்துகொண்டவன், “கால்ல அடிபட்டிருக்குன்னு நம்ம வேலையை அப்படியே விட முடியுமா…” என,
அவளோ அவன் கால்களையும் முகத்தையுமே மாறி மாறி பார்த்தவள், “விட யார் சொன்னா.. எல்லாத்துக்கும் ஆள் இருக்கு.. ஒரு ரெண்டு நாள் வீட்ல இருந்தா என்னவாம்.. நான் லீவ் போடலாம்னு இருந்தேன்…” என்று சொன்னவள், பின் என்ன நினைத்தாளோ,
“முதல்ல இப்படி உட்காருங்க மாமா.. நின்னுட்டே இருந்தா வலிக்க போகுது…” என்று அவனை அருகே இருந்த சேரில் தோளை பிடித்து அழுத்தி அமர வைக்க,
“ஷ்… நீ இப்படி அழுத்துறது தான் வலிக்குது.. யப்பா ஏன்னா கை… இப்படி கல்லு மாதிரி இருக்கு…” என்று வேண்டுமென்றே வம்பிழுத்தான்.
ஈசனுக்கு காலில் லேசாய் வலி இருந்தது தான். ஆனால் நேற்று இருந்த அளவெல்லாம் இல்லை. அப்படியே இருந்தாலும் கூட அவன் வீட்டில் இருக்க மாட்டான் கிளம்பியிருப்பான்.
“ஹா சொல்வீங்க சொல்வீங்க.. என் கைக்கு என்ன வந்திச்சு… ஏன் மாமா ஒரு நாலாவது வீட்ல இருக்கலாம்ல.. நான் லீவ் போடுறேன்…” என,
அவள் முகத்தை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது. உறக்கத்தில் இருந்தவள் அப்படியே எழுந்து வந்தால் சிரிப்பு வராமல் எப்படி இருக்கும். ஆனால் அதெல்லாம் அவள் உணரும் நிலையில் இல்லை. ஈசன் கால்களில் அடி, ஆகையால் அவன் எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்க வேண்டும். அது மட்டுமே அவள் மனதில்.
ஆனால் ஈசனுக்கோ வேலை நிறைய இருந்தது. இன்று ஆடிட்டர் வேறு வருவார். ஆகையால் இன்று சென்றே தான் ஆகவேண்டும்.. ஆனால் லட்சுமி நின்ற கோலமோ உன்னை நான் போக அனுமதியேன் என்பது போல் இருக்க, அவளையே பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,
“வேலை நிறைய இருக்கு லஷ்மி… இன்னிக்கு ஆடிட்டர் வர்றார்… எல்லாம் பார்க்கணும்…” என, முகத்தை ஒரு முழத்திற்கு தூக்கினாள்.
“அதான் மாத்திரை குடுத்து இருக்கே.. போட்டா வலி தெரியாது…” என்று சொன்னபடி ஈசன் எழ, லட்சுமிக்கு மனதில் ஒரு சுணக்கம்.
அவளை கடந்து வெளியே சென்றவன், என்ன நினைத்தானோ, திரும்பி பார்த்து, “லஷ்மி…”என,
“என்ன மாமா… வலிக்குதா… நான் தான் வீட்ல இருங்க சொல்றேன்ல.. நான் லீவ் போடுறேன் மாமா…” என்று வேகமாய் அவனருகே சென்றபடி சொல்ல, அவள் சொன்னதை கேட்டு இன்னும் சிரிப்பு தான் வந்தது.
லீவ் போடுறேன் லீவ் போடுறேன் என்று பல முறை சொல்லிவிட்டாள்.
“இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க…???”
“உனக்கு காலேஜ் கட் அடிக்கனுமா…?? அதுக்கு என்னையும் சேர்த்து வீட்ல இருக்க சொல்றியா…” என்று கேட்க, அவளுக்கு சட்டென்று முகம் வாடிவிட்டது..
பதில் சொல்லாமல் அவனை அட்ட பார்வை பார்க்க, அவனோ,
“வேணாம்மா… நீ அப்படி பார்க்கிறதுக்கே எனக்கு அர்த்தம் புரியல.. இனி இப்படி வேற பார்த்தா லிஸ்ட் பெருசா போகும்…” என்று வந்த சிரிப்பை மறைத்து சொல்ல,
அப்போது தான் லட்சுமிக்கு முதல் நாள் நடந்த அனைத்தும் நினைவில் வந்தது. அதோடு சேர்த்து ஈசன் தான் சொன்னதை கேட்டானா?? இல்லையா என்ற கேள்வியும் சேர்ந்து வந்தது. அவன் சொன்னதும் மூச்சை இழுத்து பிடித்தவளின் கண்கள் லேசாய் விரிய, இமைக்காது அவனையே பார்த்திருக்க, ஈசனோ இன்னும் அகலமாய் சிரித்து,
“போ.. போ.. ஏற்கனவே தலைவிரி கோலமா வந்திருக்க, இதில கண்ண வேற விரிச்ச அவ்வளோதான்… பயம்மா இருக்கு…” என்று அவளை வீட்டினுள்ளே திருப்பிவிட்டு சென்றுவிட்டான்.