அன்றிலிருந்து இப்படிதான்.. இந்த இரண்டு நாட்களாய் ஈசன் எப்போதும் போல் தான் இருக்கிறான். சொல்ல போனால் அடிக்கடி எதாவது சொல்லி கூட கிண்டல் செய்கிறான் ஆனா அன்று லட்சுமி சொன்னதை கேட்டானா இல்லையா என்றுதான் தெரியவில்லை. இந்த சந்தேகமே போட்டு லட்சுமியை பாடாய் படுத்த, இதற்குமேல் பொறுக்க முடியாது ஈசனிடமே நேரடியாய் கேட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்தாள்.
‘இப்போ என்ன என் புருஷன் தான.. கேட்ட என்னவாம்.. என்ன பண்ணிருவாங்கலாம்.. இல்லைன்னு சொன்னா மறுபடியும் சொல்லுவோம்.. ஆமான்னு சொன்னா அப்போ ஏன் இப்படி கண்டுகாத மாதிரி இருந்தீங்கன்னு நல்லா கேட்போம்..’ என்று உறுதி பிறக்க, எப்போதடா ஈசனிடம் பேசுவோம் என்று இருந்தது.
கல்லூரி முடிந்து வீடு வந்து, பாதியில் விட்டு சென்ற வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, ஈசனுக்காக காத்திருக்க, அவனோ வெகு நேரமாகியும் வரவில்லை.. லட்சுமிக்கோ இருப்புக்கொள்ளவில்லை.. அழைத்து பார்ப்போமா என்று தோன்ற, அவனுக்கு அழைக்க, எடுத்தவனோ,
“லஷ்மி கொஞ்சம் வேலையிருக்கு… வர லேட்டாகும்.. கதவை சாத்திட்டு நீ தூங்கு… நான் இன்னொரு கீ யூஸ் பண்ணிக்கிறேன்…” என, அதை கேட்ட இவளுக்கோ மனம் குமுறியது.
“லஷ்மி… ஹலோ…லஷ்மி இருக்கியா…” என்று அந்தப்பக்கம் இருந்து குரல் வர,
“ஹா.. ஒண்ணுமில்ல மாமா… சரி நான் வைக்கிறேன்…” என்று வைத்துவிட்டாள்.
ஈசன் சொன்னதுபோல் கதவடைத்துவிட்டு வந்து படுத்தவளுக்கு உறக்கம் மட்டும் வருவேனா என்றிருக்க, மனம் ஏனோ பாரமாய் இருப்பது போல் இருந்தது. என்னடா இது வாழ்க்கை என்று தோன்றியது. உண்மை தான்…
அவளை பொருத்தமட்டில் திருமணத்திற்கு முன்புவரை, பொழுது ரேவதியோடும் பாலாவோடும் கழியும். ஆனால் இப்போது இருவருமே அவரவர் வேலையில் பிஸியாகிவிட்டனர்.
பாலா கல்லூரி விட்டு வந்தால், அண்ணனுக்கு துணை என்று போய்விடுகிறான். ரேவதியோ இப்போதே வேலைக்கு சேர்ந்துவிட்டாள். தான் மட்டும் இப்படி சும்மா இருப்பது போல் இருந்தது.
சரி திருமணம் தான் ஆனதே, அந்த வாழ்வாவது முழுமையானதா என்றால் அதுவும் இல்லை.. இத்தனை நாள் இல்லாமல் மனதில் ஓர் வெறுமை சூழ, தான் மட்டுமே இப்படி தனித்து இருப்பதும் எப்படியோ இருக்க, எல்லாம் சேர்ந்து தலை வலிப்பது போல் இருந்தது.
“எல்லாமே உன்னால தான் லட்சுமி… ஒழுங்கா ஈஸ் மாமா கேட்கும் போதே சொல்லிருக்கலாம்.. இப்போ பாரு.. சொல்லியும் கூட நிம்மதி இல்ல.. அப்படி என்ன பிடிவாதம் உனக்கு..” என்று சொல்லிக் கொண்டாள்.
வாழ்வு முழுவதும் இப்படி போய்விடுமோ என்று பயம் கூட வந்தது. என்ன ஆனாலும் சரி ஈசன் வந்து பேசியபிறகே தூங்க வேண்டும் என்று காத்திருந்தவள் அவளும் அறியாது கண்ணசந்து விட, அவள் உறங்கி வெகுநேரம் கழித்தே ஈசன் வந்தது எல்லாம் அவள் அறிய வாய்ப்பே இல்லை.
மறுநாள் வழக்கம் போல் விழிப்பு தட்ட, கண்கள் திறந்தவள், அப்போதும் தான் அறையில் தனியாய் இருப்பது உணர,
“அப்போ ஈஸ் மாமா நைட்டு வீட்டுக்கு வரவே இல்லையா….” என்று அவளாகவே கேட்டபடி எழ, அப்போது தான் பார்த்தாள், எப்போதும் அவன் சட்டை தொங்கும் இடத்தில், ஈசனின் சட்டை காற்றில் ஆட,
“வந்துட்டாங்களா… ச்சே அதுகூட தெரியாம தூங்கிருக்கோம்…” என்று தலையில் குட்டிக்கொண்டவள், வேகமாய் குளித்து முடித்து வெளியே செல்ல, வீட்டில் ஈசன் இருப்பதற்கான அடையாளமே இல்லை.
‘சட்டை தொங்குது ஆளை காணோம்…’ என்று நடுவீட்டில் நின்று சுற்றி பார்க்க, அப்போது தான் வீட்டின் பின் கட்டில் ஏனோ சத்தம் கேட்டது.
பழைய கால வீடல்லவா, பின்னே கொல்லைபுறம் இருக்க, அங்கே இருந்த தொட்டியின் அருகில் இருக்கும் துவைக்கும் கல் மீது கண்ணாடி வைத்து, அதன் எதிரே சேரில் ஈசன் அமர்ந்து, முகச் சவரம் செய்ய தயாராகி கொண்டு இருந்தான்.
லட்சுமி வந்தது எல்லாம் தெரியும் தான் ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் தன் வேலை பார்க்க, லட்சுமிக்கோ இன்னிக்கு உங்களை விட போறதில்ல மாமா என்று எண்ணிக்கொண்டே அவனருகே சென்றால். மனதில் ஓர் தயக்கம் இருந்தது தான். ஆனால் இனி தயங்கி எல்லாம் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒரு முடிவிற்கு வந்துவிட்டாள்.
“மாமா…” என்றபடி தொட்டியின் திண்டில் எக்கி அமர,
அவனோ அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, ப்ரஷ்ஷில் சேவிங் க்ரீமை வைத்துக்கொண்டு இருந்தான். ஈசன் தன்னை பார்த்தும் பார்க்காமல் இருப்பது எரிச்சல் தர,
“மாமா… நான் உங்கட்ட பேசணும்…” என்றாள் பல்லை கடித்து,
“ம்ம் சொல்லு லஷ்மி….” என்றவனோ அவள் முகத்தை கூட பார்க்கவில்லை. எதிரே இருந்த கண்ணாடியில் அவன் முகத்தையே இப்படி அப்படி திருப்பி பார்க்க, அவளுக்கோ இன்னும் பற்றிக்கொண்டு வந்தது.
‘நான் சொல்லிட்டே இருக்கேன்.. கண்டுக்காம இருந்தா என்ன அர்த்தம்..’ என்று தோன்ற,
“மாமா….” என்றவள், அவன் கையை தட்ட, ஈசன் கையில் இருந்த ப்ரஷ் கீழே விழ, என்ன இது என்பது போல் பார்த்தவன், பின் ஒன்றும் சொல்லாமல், கீழே விழுந்த பிரஷ்ஷை எடுத்து மீண்டும் க்ரீம் வைத்து, அவள் முன்னே நீட்டினான்.
அவளோ ஒரு நொடி திட்டுவானோ என்று பார்க்க, ஈசன் இப்படி அவள் முன்னே நீட்டவும், ஒன்றும் புரியாமல், மீண்டும் “என்ன மாமா…”என,
“க்ரீம் தடவி விடு…” என்று சொன்னவன் கைளை கட்டிக்கொண்டு அமர, ங்கே என்று விழித்தாள் லட்சுமி.
பின்னே வேறென்ன செய்ய.. தான் எதற்கு வந்தோம் என்பது கூட நினைவில் இல்லை.
“நானா…???!!!”
“நீ தான தட்டி விட்ட… சோ நீ தான் தடவனும்.. ம்ம் சீக்கிரம்…”
“நா… நான் எப்படி… ம்ம்ஹும் எனக்கு இதெல்லாம் தெரியாது…” என்று மண்டையை ஒரேடியாய் உலுக்கினாள்.
“அட இதென்ன பெரிய விஷயம்.. இதோ இப்படி முகத்துல வச்சு இப்படி செய்யணும்…” என்று சொல்லியபடி அவள் முகத்தில் லேசாய் சேவிங் க்ரீமை தடவி விட,
“அய்யோ மாமா என்ன செய்றீங்க… அய்யே ச்சீ…” என்று சிணுங்கியபடி முகத்தை துடைத்தவள். வேகமாய் இறங்கினாள். ஆனால் ஈசன் விடுவானா??
“ஓய் எங்க ஓடுற… நீ தான் செய்யணும்.. செய்…” என்று அவள் கைகளை விடாது பிடித்து நிறுத்த.. லட்சுமிக்கோ கைகள் நடுங்கியது..
“ம்ம்ஹும் ம்ம்ஹும் ப்ளீஸ் மாமா…” என்று காலை உதற,
“நோ… நீ தான தட்டின… நீ தான் செய்யணும்… ஏன் லஷ்மி எனக்கு செய்ய மாட்டியா….???” என்று அவளையே கூர்ந்து பார்த்து கேட்க, லேசான தாடியோடு, கலைந்த தலைமுடியுடன், பனியன் மட்டுமே அணிந்து, அமர்ந்திருந்த விதமும், தன்னை பார்த்த விதமும் நிச்சயம் லட்சுமியை எதோ செய்தது.
“இல்.. இல்ல மாமா.. அது.. அது…நான் எதா காயம் பண்ணிட்டா…” என்று திக்க,
“ஹா.. க்ரீம் தடவுரதுல என்ன காயம்… என் முகம் எனக்கும் முக்கியம் தான்.. அதுனால க்ரீம் மட்டும் தான் வைக்க சொன்னேன்.. என்று மீண்டும் அவள் கையை பிடித்து இழுக்க, லட்சுமிக்கோ அவன் சொல்வதை செய்வது தவிர வேறு வழியில்லை.
அவளுக்கும் மனதில் ஆசையாய் இருந்தது.
‘என் ஈஸ் மாமா நான் செய்றேன்…’ என்ற எண்ணம் தோன்ற,
“சரி சரி அப்போனா கண்ண மூடி உட்காரனும்…” என்று புது டீலிங் பேசினாள்.
“அதுசரி… பின்ன நீ எப்படி பண்றன்னு நான் பார்க்க வேணாமா…??? வா வா நேரம் ஆகுது லஷ்மி…” என்று அவளை பிடித்து இன்னும் படுத்த,
“ஹம்ம்…” என்று நடுங்கும் கரங்களை அவன் முகத்தின் அருகே கொண்டு போக, ஈசனது பார்வையோ அவளையே தான் பார்த்து கொண்டிருந்தது.
லட்சுமியின் கையோ ஈசன் சொன்ன வேலையை செய்ய, அவளது கண்களோ ஈசன் பார்வை விட்டு அகலமுடியாமல் தவிக்க, தான் என்ன உணர்கிறோம் என்றே அவளுக்கு விளங்கவில்லை. இங்கிருந்து ஓடிவிடலாமா என்று தோன்றும் அதே நொடி, ஈசனின் அருகாமையை விரும்ப, தவித்து தான் போனாள்.
“அப்படியா…” என்றவன், கண்ணாடி பார்க்க, கன்னம் மட்டுமில்லை மூக்கு நெற்றி என்று எல்லா இடத்திலும் சேவிங் க்ரீம் இருந்தது. அவனுக்கே சிரிப்பு வந்துவிட,
‘என்ன இது….’ என்பது போல் லட்சுமியை பார்க்க, அவன் முகத்தை பார்த்தவளுக்கோ தான் என்ன செய்திருக்கிறோம் என்பது புரிய, போதாத குறைக்கு, கண்கள் தவிர ஈசன் முகத்தே க்ரீம் நிறைந்திருக்க, சிரிப்பை லட்சுமியை அடக்கவே முடியவில்லை..
“மாமா… ஹா ஹா மாமா… இப்போதான் நீங்க இன்னும் சூப்பரா இருக்கீங்க…” என்று சிரித்தபடி சொன்னவளை, பார்த்து சிரித்தவன்,
“எப்படி செஞ்சு வைச்சிருக்க… இப்படியா பண்றது…” என்று சொல்லியபடியே, லட்சுமி கைகளை பிடித்து இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், அவள் நகராத வாறு, ஒரு கையால் அவளது இடையை சுற்றி இறுக்கி பிடித்து,
“எப்படி செய்யனும்னு நான் சொல்லித் தரேன்…” என்று சொல்லியபடி, மற்றொரு கையால் அவள் முகத்தை பிடித்து தன் முகம் நோக்கி இழுத்து, கன்னத்தோடு கன்னம் வைத்து தேய்த்தான்.
ஈசன் முகத்தில் இருந்த க்ரீமும், லேசான தாடியும், லட்சுமியின் கன்னங்களை தீண்ட, ஈசனது கரங்களோ உன்னை நான் விடேன் என்பது போல் வளைத்து பிடித்திருக்க, போதாத குறைக்கு அவன் மடி மீது வேறு அவள் அமர்ந்திருக்க, அவளையும் அறியாது லட்சுமியின் கரம் ஈசன் தோள் பற்ற, மொத்தமாய் லட்சுமி யை தன் வசமிழக்க வைத்தான் ஈசன்.
“மா.. மாமா…” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை…
லட்சுமியை இன்னும் தன் மீது அழுத்தி பதித்து கொண்டவன், அவள் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து அழுத்தியபடி, மெல்ல அவள் காதருகே,
“அன்னிக்கு நீ சொன்னது எல்லாம் நான் கேட்டேன் லஷ்மி…” என்றான்.