லட்சுமி அப்படியே தான் அமர்ந்திருந்தாள்.. நகர முடியவில்லை. தோன்றவில்லை. ஈசன் தன் மடியில் அவளை அமர்த்தியது தான் தெரியும், அடுத்து அவன் செய்தது எல்லாம் கனவு போல் இருந்தது. எதிர்பார்க்காத ஒன்று கூட. ஆகையால் அதிர்ச்சி தான் மேலோங்கியது.
எதோ சொன்னானே என்று யோசிக்க, இன்னும் கூட லட்சுமிக்கு காது மடல் கூசுவது போல் இருந்தது. ஈசன் ஒன்றும் அப்படியே எல்லாம் விட்டு செல்லவில்லை.
“அன்னிக்கு நைட்டு நீ சொன்னதை கேட்டேன் லஷ்மி…” என்றவன், இன்னும் இறுக அவளை அணைக்க, லட்சுமிக்கோ இன்னும் இதெல்லாம் நம்பவே முடியவில்லை. அவன் முகம் பார்க்க வேண்டும் என்று முயன்றாள், ஆனால் முடியவில்லை.
நான் உன் கணவன், நீ என் மனைவி, இது நம் வாழ்வு என்பதை உணர்த்தவே ஈசன் அவளை அணைத்தான். நெருங்கினான்.. ஆனால் அது அவளுக்கு புரிந்ததா என்று தெரியவில்லை. ஈசனது கைகளில் இருந்தாலும், லட்சுமியின் மனம் அப்படியே உறைந்திருந்தது. மேற்கொண்டு எதுவும் யோசிக்க முடியவில்லை.
அவள் அப்படியே இருப்பது கண்டு ஈசன் தான் அவள் முகம் நிமிர்த்தி பார்க்க, லட்சுமியின் கண்களில் குழப்பமே மிஞ்சியது. என்ன முயன்றும் ஈசனுக்கு லட்சுமியின் கண்களில் பதில் கிடைக்கவில்லை. சரி யோசிக்கட்டும்.. திடீரென்று எதுவும் சொன்னால், செய்தால், ஒருவேளை அதிர்ச்சியாக கூட இருக்கும் என்று நினைத்தவன்,
“பேஸ் வாஸ் பண்ணிட்டு வா லஷ்மி…” என்று அவளுக்கு தனிமை கொடுத்தே சென்றான். ஆனால் அதெல்லாம் அவளுக்கு புத்தியில் எட்டவே இல்லை.
திருமணமான இத்தனை நாளில் ஈசனும் இத்தனை நாள் இப்படியெல்லாம் நடந்துகொண்டது இல்லை. கணவன் என்ற உரிமையை அவன் எப்போதுமே வெளிபடுத்தியது இல்லை.. ஆனால் இப்போது, நான் உன் கணவன் என்பதை அவன் உணர்த்த தொடங்கவும் அவளுக்கு தான் மனம் அடித்துக்கொண்டது. இனி அடுத்து என்ன செய்ய என்று யோசிக்க, முதலில் இனி எப்படி அவன் முகம் பார்க்க என்று இருக்க,
“ஹே லஷ்மி… என்ன இன்னும் இப்படி உட்காந்து இருக்க….” என்று ஈசன் குரல் வெகு அருகே அவளுக்கு கேட்க, வேகமாய் எழுந்தவள் அப்போது தான் உணர்ந்தாள், தான் மட்டுமே அங்கே அமர்ந்திருக்கிறோம் என்று.
ஈசனை காண, அவனோ ஷேவ் செய்து, குளித்து, உடை மாற்றி வந்திருந்தான்..
‘இவ்வளோ நேரமாவா இங்க இருக்கோம்…’ என்று எண்ண, அதையே தான் அவனும் கேட்டான்.
“இவ்வளோ நேரம் என்ன லஷ்மி பண்ண…” என்றபடி அவள் முகம் பார்க்க, அவன் விட்டு போன க்ரீம் எல்லாம் காய தொடங்கியிருந்தது. போதாத குறைக்கு அவள் முழித்து நின்றது வேறு சிரிப்பை கொடுக்க,
“லஷ்மி….என்ன இது…” என்று அவளை காட்டி சிரிக்க,
“என்ன…” என்று கேட்டவளுக்கு வார்த்தையே வரவில்லை.
சொல்லபோனால் ஈசன் அவளிடம் இயல்பாய் இருக்கிறான். அவளால் தான் அது முடியவில்லை. ஏனோ ஆரம்பத்திலிருந்தே அது முடியவில்லை. சொல்லபோனால் இதுநாள் வரை ஒரு சாதாரண பேச்சு என்பதே இல்லை. ஒன்று சண்டை வரும், இல்லை பேச்சு வார்த்தையே இருக்காது.
“இன்னும் முகம் கழுவாம என்ன செய்ற லஷ்மி….”
அவளுக்கு தன்னை நினைத்தே எரிச்சல் வந்தது. அவன் ஒன்று செய்தால் நீ இப்படி இருக்க வேண்டுமா என்று.
“ம்ம்ச்… ஒண்ணுமில்ல…” என்று சொல்லியபடி அங்கேயே தள்ளி நின்று முகம் கழுவியவள், அவனிடம் ஒன்றுமே பேசாது ஏன் நின்று கூட ஒரு பார்வை பார்க்காது நடக்கத் தொடங்க,
“லஷ்மி….” என்று ஈசன் அவள் கைகளை பிடித்து நிறுத்தியிருந்தான்.
அவனது குரலே சற்று நேரம் முன்பிருந்த இலகுவை இப்பொது விட்டுவிட்டேன் என்று சொல்ல, அவளோ என்னவென்பது போல் பார்த்தாள்.
“என்னாச்சு உனக்கு…???” என்று கண்கள் இடுக்கி, புருவம் சுருக்கி ஈசன் கேட்க, லட்சுமிக்கும் புரியவில்லை என்னாச்சு எனக்கு என்று.
“ம்ம்.. ஒண்ணுமில்லையே…”
“இன்னும் உனக்கு என்ன தான் பிரச்சனை லஷ்மி…” என்று கேட்டவனுக்கு, இன்னும் இவள் என்னத்தை தான் மனதில் வைத்து குமைகிறாள் என்றிருந்தது.
சொல்லபோனால் அலுப்பாக கூட இருந்தது.. இன்னும் என்ன என்று… இன்னும் எத்தனை நாளைக்கு மாறி மாறி விளக்கம் கொடுக்கவேண்டும் என்று. அவன் மனதில் இருப்பதெல்லாம் அவன் சொல்லிவிட்டான். அவன் பக்கம் அவன் தெளிவாகவே இருக்கிறான். ஆனால் லட்சுமி அப்படியில்லை. பிடிக்கும் என்பதை சொல்லவே இத்தனை நாட்கள்.. அப்படி என்ன இவளுக்கு தன் மீது கோவமும் வருத்தமும் என்று தோன்றியது.
எது எப்படியானாலும் சரி, இன்றே இதை இத்தோடு பேசி முடிக்கவேண்டும். நான்… நானே என் மனதை திறந்து சொல்லிவிட்டேன் இன்னும் இவளுக்கு என்ன என்ற நினைப்பும் தோன்றியது. மீண்டும் கேட்டான்..
“உனக்கு என்ன பிரச்சனை…” என, அவளோ பதில் பேசாது நின்றிருந்தாள்.
இது வேலைக்காகாது என்று நினைக்க, “நீ வா…” என்று கைகள் பிடித்து அழைத்து செல்ல, அங்கே வரவேற்பறையிலோ மரகதம் வேலையாளிடம் காலை உணவு கொடுத்து விட்டிருப்பார் போல, அவன் வந்து நின்றிருந்தான்.
“அங்க வச்சிட்டு போ…” என்று ஈசன் சொல்ல, வேலையாலும் வைத்துவிட்டு சென்றுவிட,
“லஷ்மி சாப்பிடலாமா…” என கேட்க, அவளோ சரியென்று தலையை உருட்டினாள்.
ஒன்றுமே சொல்லாமல் அவளை பார்த்தவன், அவளுக்கும் சேர்த்தே எடுத்து வைத்தான்..
“சாப்பிடு லஷ்மி…” என, அவளும் எதுவும் சொல்லாமல் உண்டவள், அவ்வப்போது ஈசனை காண,
“சாப்பிடு லஷ்மி.. வயிறு காலியா இருக்கும் பொது மூளை சரியா வேலை செய்யாது…” என, அதன் பின் எதுவுமே அவள் சொல்லவில்லை.
ஆனால் லட்சுமிக்கே உள்ளே மனம் பதை பதைத்து கொண்டு இருந்தது. அது ஏன் என்றும் விளங்கவில்லை. ஈசன் அவனளவில் தெளிவாய் இருக்கிறான். ஆனால் ஏன் தன்னால் அப்படி முடியவில்லை என்று புரியவில்லை.
ஈசனை தெளிவு படுத்தியதே லட்சுமி தானே.. ஆனால் இப்போதோ அனைத்தும் மாறி நிற்கிறது. ஒருவளை அனைத்தையுமே சொல்லியிருந்தால் இதெல்லாம் நடந்திருக்காதோ என்னவோ. என்னதான் அவன் மீது நேசம் இருந்தாலும் அதையும் எத்தனை நாளைக்கு தான் மனத்திலே போட்டு பூட்டி வைக்க,
அதன் பாரம் தாங்க முடியவில்லை.. ஈசனின் அருகமையில் நிஜமாய் தன் மனதில் இருக்கும் எண்ணங்களில் பாரம் அவளால் தாங்கவே முடியவில்லை.
லட்சுமி உண்ணும் வரை காத்திருந்தவன், அதன் பின்னே எழுந்தான்.. அவளும் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு வர, உனக்காகவே காத்திருக்கிறேன் என்பது போல் ஈசன் அமர்ந்திருக்க,
“வே.. வேலை எதுவும் இல்லையா மாமா…” என்று சற்று திணரலாகவே கேட்டாள்.
“வேலையெல்லாம் நிறைய இருக்கு லஷ்மி.. ஆனா அதெல்லாம் விட எனக்கு முக்கியம் நீ…” என, இமைகளை மட்டும் நிமிர்த்தி அவனை காண,
“உனக்கு என்ன பிரச்சனை லஷ்மி… எதுவா இருந்தாலும் சொல்லு.. நான் சரி பண்றேன்..” என்று பொறுமையாகவே சொல்ல, லட்சுமியோ பதிலே சொல்லாது தலை குனிந்தாள்.
என்ன பிரச்சனை அவளுக்கு, அதுவே அவளுக்கு தெரியவில்லையே… அமைதியாய் இருக்க, அவள் கரங்களை பிடித்து தன் கைகளுக்குள் வைத்தவன்,
“சரி நீ சொல்ல வேணாம்.. நானே சொல்றேன்… உனக்கும் என்னை பிடிக்கும்னு எனக்கு முன்னாடியே தெரியும்.. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே.. இல்லாட்டி நம்ம கல்யாணத்துக்கு நீ சரி சொல்லியே இருக்க மாட்ட..
ஆனா நான் அதை எதிர்பார்க்கல லஷ்மி… உன்கிட்ட ஒன்னு சொல்லவா, நமக்கு கல்யாணம் பேசும்போது நீதான் பொண்ணுன்னு எனக்கு தெரியாது.. ஆனா அது நீதான்னு தெரிஞ்ச அப்புறம் ஒரு நிம்மதி..
அது ஏன்னு எனக்கு இப்போ வரைக்கும் தெரியலை.. தெரிஞ்சுக்கவும் ஆசைபடலை.. சில விஷயங்கள் நதிமூலம் ரிசிமூலம் பார்க்க கூடாது.. எனக்கு அதுபோல தான் நீ.. இப்போ கூட நீ என்கிட்ட இருக்கும்போது கூட அதே உணர்வு தான்.. என்னவோ நீ தான் எனக்கு பொண்டாட்டியா வர போறன்னு சொல்லவும், என்னை புரிஞ்சுப்பா… நானும் அதே போல இருக்கணும்னு நினைச்சேன்.. ஆனா சட்டுன்னு என்னாலையும் ஒட்ட முடியல..
ஆனா இப்போ சொல்றேன் லஷ்மி.. இப்போ நிஜமா உன்கூட சேர்ந்து வாழ அவ்வளோ ஆசை படுறேன். உன்கூட இருக்க ஒவ்வொரு நிமிசமும் எனக்கு மனசுக்கு அவ்வளோ நிம்மதி அமைதி கொடுக்குது.. அது எனக்கு ஆயுசு முழுக்க வேணும் தோணுது..
அதுக்கு நீ என் கூட இருக்கணும்.. நீ எனக்கு வேணும்.. இந்த அளவுக்கு மட்டும் இல்லை.. இன்னும் நெருக்காமா. இன்னும் இன்னும்.. சொல்ல தெரியல.. ஆனா உனக்கும் எனக்கும் நடுவுல மறுக்கவும் மறைக்கவும் எதுவுமே இல்லன்னு சொல்ற அளவுக்கு நீ வேணும் லஷ்மி.. (Zolpidem) இதுக்கு மேல எனக்கு என்ன சொல்ல தெரியலை.. ஆனா உனக்கு அப்படி இல்ல அப்படிதானே..” என்று மடை திறந்த வெள்ளமாய் தன்னகத்தில் இருந்ததெல்லாம் ஒன்று விடாமல் பேசியவன், கடைசியில் உனக்கு அப்படி இல்லை என்று சொல்லி நிறுத்த,
லட்சுமியோ ஈசன் பேச பேச, அவள் மனதில் எதுவோ கரைந்து உருகியது. இது தானே அவள் எதிர்பார்த்தாள். அவள் மனதை அவன் அறியுமுன்னே அவன் மனதில் லட்சுமி நிரம்பியிருக்க வேண்டும். இமைக்க மறந்து, அப்படியே விழிகள் விரித்து பார்க்க, ஈசனின் பேச்சை கேட்டு நெஞ்சம் குளிர்ந்து.
“சொல்லு லஷ்மி உனக்கு அப்படி இல்லதான.. உனக்கு வேறெதுவோ ஒரு கோவம்.. ஒரு வருத்தம் என் மேல இருக்குதான..” என்று ஈசன் கேட்டுகொண்டே இருக்கும் போது,
“என் அப்பா இறக்கும் போது, எனக்கு பதினஞ்சு வயசு மாமா.. அதுவரைக்கும் நான் எதுக்குமே அழுதது இல்லை. என் அப்பா தான் எனக்கு எல்லாமே.. நான் என்ன நினைக்கிறேனோ அதை நான் சொல்லாமையே செய்வார். என் அப்பா இறந்ததுக்கு கூட நான் அழலை.. அழுகை வரலை.. அவர் போனதுக்கு அப்புறம், நான் ரொம்ப லோன்லியா பீல் பண்ணேன் மாமா.
அம்மா பாவம், அவங்களுக்கு எதுவுமே தெரியாது.. எல்லாமே கிடைச்சது.. ஆனா அதெல்லாம் மனசுக்கு ஒரு நெருக்கத்தை கொடுக்கல.. அப்போதான் மாமா நீங்க வந்தீங்க… உனக்கு நான் இருக்கேன்னு சொல்லாம, ஒவ்வொரு விசயமும் எனக்கும் பார்த்து பார்த்து பண்ணீங்க… எனக்கு எவ்வளோ சந்தோசமா இருந்தது தெரியுமா.. என்கிட்ட நீங்க அன்பா பேசும் போதும், அக்கறையா எதுவும் கேட்கும் போதும் சரி, எனக்கு எங்கப்பா கிட்ட எவ்வளோ பாதுக்காப்பா உணர்வேனோ அதே போல பீல் பண்ணேன் மாமா..
நீங்க எனக்கு வேணும்னு நான் நினைக்கல.. எப்பவுமே நான் உங்களுக்காக, உங்ககூட மட்டும் இருக்கணும்னு நினைச்சேன். ஆ.. ஆனா… நீங்க பாதிலேயே விட்டு போயிட்டீங்க…” என்று சொல்லும் போது, என்ன அடக்க முயன்றும் அவளால் வந்த அழுகையை நிறுத்தவே முடியவில்லை.
கைகள் கொண்டு முகத்தை மூடி அழுதாள். வெகு நேரம் அழுதாள். அன்று அப்போது அழுதிருக்க வேண்டியதர்கெல்லாம் சேர்த்து வைத்து அழுதாள். ஈசனுக்கு என்னவோ போல் ஆகியது.. தானே அவளருகே நெருங்கி லட்சுமியை தன் மீது சாய்க்க முயல, அவளோ வேண்டாம் என்பது போல் தடுத்து,
“நீங்க என்னை விட்டு அப்போ போயிட்டீங்க மாமா… சுத்தமா அடுத்து என்னை கண்டுக்கவே இல்லை… ஏன் என்னன்னு கேட்கவே இல்லை.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. சொல்லுங்க மாமா.. நானா வந்து உங்கக்கிட்ட பேசினேன்.. நீங்க தானே வந்து பேசுனீங்க… எனக்காக ஒன்னொன்னும் பார்த்து பார்த்து செஞ்சீங்க.. ஆனா ஏன் மாமா அப்படி பாதிலேயே விட்டு போனீங்க….” என்று அழுகையினூடே கேட்டவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான்.
சத்தியாமாய் ஈசன் இதை எதிர்பார்க்கவில்லை. இத்தனை இவள் மனதில் போட்டு பூட்டி வைத்திருப்பாள் என்று சிறிதும் நினைக்கவில்லை. முதலில் இவ்வளவு வருத்தங்கள் லட்சுமிக்கு உண்டு என்று இப்போது தான் தெரிந்துகொண்டான்..
‘நீங்க எனக்கு வேணும்னு நினைக்கல, நான் எப்பவுமே உங்களுக்காக, உங்க கூட இருக்கணும் நினைச்சேன்..’
லட்சுமி சொன்ன இதே வரிகள் மனதில் ரீங்காரம் இட, வாழ்வில் இரண்டாம் முறையாய் அவளை கண்டு பிரமித்தான்..
‘என்ன பொண்ணு டா இவ….’ நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஈசன் மனதினுள்ளே இந்த எண்ணம் தான்… நானே உன்னை பிடித்திருக்கு என்கிறேன், உனக்கென்னதான் பிரச்சனை என்றே நினைத்திருந்தவனை, லட்சுமியின் ஒவ்வொரு வார்த்தைகளும் ஆட்டி படைத்தது. அவனது தான் என்ற எண்ணத்தை ஆட்டம் காண வைத்தது.