என்ன சொல்கிறாள் இவள் என்பது போல் பார்க்க, லட்சுமி பேச பேச, ஒவ்வொன்றும் அவன் கண்கள் முன்னே காட்சிகளாய் விரிய, சின்ன பெண் என்று தான் செய்த ஒவ்வொன்றையும், சொல்லபோனால் இப்போது மறந்தே விட்ட ஒவ்வொன்றையும் லட்சுமி இப்படி பொக்கிசமாய் போட்டு மனதிற்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.
உண்மை இது தான். பெற்றோர்கள் பார்த்து செய்த திருமணம், இருவருக்குமே பிடித்திருக்கிறது என்கிற போது வாழ்வில் அடுத்த படிக்கு செல்ல வேண்டும் என்று தான் ஈசன் நினைத்திருந்தான். ஆனால் லட்சுமி இதெல்லாம் சொல்லவும் நிஜமாய் மலைத்து விட்டான்..
“அம்மாடி…. இவ்வளோ எப்படி இத்தனை நாள் மனசுக்குள்ள வச்சிருக்கா.. இத்தனை நாள் என்கிட்டே கூட சொல்லலை.. அப்படி என்ன அழுத்தம்..” என்று தோன்ற ஆச்சர்யமாய் அவளை பார்த்தான்.
அவளோ, “சொல்லுங்க மாமா.. நீங்க அடுத்து என்னை கண்டுக்கவே இல்லை…” என,
ஈசனுக்குள்ளே மீண்டும் கேள்வி, நான் என்ன செய்தேன் என. அதையே தன் பார்வையில் தேக்கி அவளை பார்க்க, லட்சுமியோ சற்று தெளிந்திருந்தாள். அழுகை மட்டுபட்டிருந்தது. இத்தனை வருடங்கள் மனதில் போட்டு அழுத்தி அழுத்தி வைத்தவை எல்லாம் இன்று ஒரே மூச்சில் கொட்டி, உரியவனிடம் சேர்த்துவிட்டோம் என்று ஓர் நிம்மதி கூட பிறந்தது.
ஆமா இதான் நான்.. இது தான் என் மனசில இருந்தது.. சொல்லிட்டேன் என்ன செய்வ என்ற மிதப்பு கூட லேசாய் எட்டி பார்த்தது. ஆனால் ஈசன் இன்னும் புரியாமல் அவளை காண, இத்தனை சொல்கிறேன் உனக்கு இன்னும் புரியவில்லையா என்ற கோவம் எழ, ஒரு வேகமும் பிறந்தது.
“என்ன மாமா புரியலையா…?? அந்த அனிதா விட்டு போனான்னு நீங்க என்னை தான் பிடிச்சி திட்டுனீங்க,, நியாபகம் இருக்கா இல்லையா.. அதுசரி அவ போனா நான் என்ன செய்வேன்.. ஒன்னு சொல்லவா, அவளை நீங்க கல்யாணமே பண்ணிருந்தாலும் அவ போயிருப்பா… ஏன்னா அவளுக்கு இந்த லைப் செட்டே ஆகாது..
அப்புறம் நீங்க அவளை நிஜமாவே லவ் பண்ணிருந்தா, உங்களோட இந்த லட்சியம், கொள்கை கோட்பாடுன்னு நீங்களாவே ஒரு இமேஜ் கிரியேட் பண்ணி வச்சிருக்கீங்களே, அதெல்லாம் உங்க கண்ணுக்கே தெரிஞ்சிருக்காது.. ஆனா ரெண்டு பேருமே அப்படி இல்லை. அப்படி இருக்கப்போ அவ போனா என்னை ஏன் திட்டனும்…” என்று கோவமாய் கேட்க,
அவனுக்கோ ‘நான் எப்போ இவளை திட்டினேன்.. இவ தானே என்னை மொறைச்சு மொறைச்சு பார்த்திட்டு இருந்தா.. லாஸ்ட்ல என்னை திருப்புரா…’ என்று தோன்ற,
“லஷ்மி… நீ சொன்னது எல்லாம் சரி.. நான் ஒத்துக்கிறேன்.. ஆனா.. நான்… நான்.. எப்போ உன்னை திட்டினேன்..” என, லட்சுமிக்கு இன்னும் கோவம் தலைக்கு ஏறியது.
“ஓ… அப்போ உங்களுக்கு எல்லாமே மறந்து போச்சா.. நான்.. நான் தான் லூசு மாதிரி இதெல்லாம் போட்டு இத்தனை வருசமா…” என்று லட்சுமி பேசிக்கொண்டே போக, ஈசனின் செல் போன் சிணுங்கியது. எடுக்கவா என்பது போல் அவளை பார்க்க,
“எடுத்து பேசுங்க.. என்னை ஏன் பார்க்கிறீங்க… ஒன்னு போன் வரும், இல்லை நடுவாசல் வழியா யாரும் வருவாங்க…” என்று லட்சுமி சொன்ன தினுசில் ஈசனுக்கு லேசாய் புன்முறுவல் வர, அலைபேசியை எடுத்து பார்த்தவன்,
“பாலா…” என்று அவளிடம் சொல்லிக்கொண்டே, “ஹலோ…” என்றான்..
அந்த பக்கம் பாலா என்ன சொன்னானோ, “ம்ம் சரி… நானே கூப்பிடுறேன்.. அப்புறம் வா..” என்று வைத்தவன்,
“லஷ்மி… காலேஜ்ல கான்வக்கேசன் பார்ம் குடுத்தாங்கலாமே, அதை ஃபில் பண்ணி தர கேட்கிறான்.. பிரண்ட்ஸ் கூட காலேஜ் கிரவுண்டுக்கு போறானாம் அப்படியே ஆபிஸ்ல குடுத்திடுறேன் சொல்றான்..” என,
“ம்ம்ச் இப்போ இது முக்கியமா…” என்பது போல் பார்த்தாள்,
“வேணாம்… எங்களுக்கும் பார்ம் ஃபில் பண்ண தெரியும்…” என்று நொடித்துவிட்டே போனாள்.
ஈசனுக்கு மனம் லேசானது போல் இருந்தது. ‘ஹப்பாடி இப்போதாவது சொன்னாலே…’ என்று நிம்மதியும் பிறந்தது. லட்சுமி வரவுக்காய் காத்திருக்க, அவளோ வந்த பாடில்லை.
“ஒரு பார்ம் எடுத்திட்டு வர இவ்வளோ நேரமா…” என்று இங்கிருந்தே கேட்டவன், பதிலே வராது போக, எழுந்து என்ன செய்கிறாள் என்று பார்க்கக் சென்றான்,
அவளோ அறையையே புரட்டி போட்டு தேடுவது போல் எதையோ தேடிக்கொண்டு இருந்தாள்.
“என்ன லஷ்மி.. என்ன.. பார்ம் காணோமா..” என்றபடி உள்ளே வர,
“ம்ம்ச்.. தள்ளுங்க…” என்று அவனை லேசாய் தள்ளிவிட்டு மீண்டும் அவள் தேட,
“ஹே.. சொல்லிட்டு தேடு டி…” என்று லேசாய் அரட்டினான்.
அவன் குரலில் நிமிர்ந்தவள், “பார்ம் எல்லாம் இருக்கு மாமா.. பென் தான் காணோம்…” என்று சொல்லிவிட்டு தேட,
“இதுக்கா இப்படி எல்லாத்தையும் இழுத்து போட்டு வச்சிருக்க, என் ஷர்ட்ல பென் இருக்கு.. எடுத்திட்டு வா…” என்றான்.
“எனக்கு அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. என்னோட ஹீரோ பென் தான் வேணும்…” என்றபடி மீண்டும் கட்டிலின் கீழே எல்லாம் குனிந்து தேட, அதுவோ கிடைக்கமாட்டேன் என்றது.
“ஹீரோ பென்னா… எது இந்த மூடி பிஞ்சு லேசா கீழ கூட உடைஞ்சு போய் ஒன்னு வச்சிருந்தியே அதுவா…”
“நீங்க பாத்தீங்களா மாமா.. எங்க அது…” என்று அவலாய் அவனருகே வந்தாள்.
“ம்ம்.. இன்னிக்கு காலையில் கூட பார்த்தேன் லஷ்மி.. பழையது.. பிஞ்சு போச்சேன்னு நான் தான் தூக்கி போட்டேன்…” என,
அவ்வளோதான்.. “என்ன தூக்கி போட்டீங்களா..?? யார கேட்டு தூக்கி போட்டீங்க?? அவ்வளோ தைரியமா உங்களுக்கு….” என்று அவன் பனியனை பிடித்து உலுக்கவே தொடங்கிவிட்டாள்.
“ல.. லஷ்மி.. என்ன.. ஏய் என்ன டி இது..” என்று அவள் கைகளை பிடிக்க,
“எங்க எங்க தூக்கி போட்டீங்க… டஸ்ட் பின்லயா… வாங்க வாங்க…” என்று அவன் பனியனை பிடித்தே இழுத்துச் சென்றவள், அவர்கள் அறையில் இருக்கும் குப்பை டப்பாவை பார்க்க, அதனுள்ளே தான் இருந்தது இத்தனை நேரம் அவள் தேடிய ஹீரோ பென்.
அதனை கண்டதும், ஹப்பாடி என்று நிம்மதி பிறந்தாலும், ஈசனை கண்டு முறைத்தவள், “எடுங்க..” என,
“என்ன.. நானா…???” என்று அதிர்ந்து பார்த்தான்..
‘ஒரு பேனாவ தூக்கி போட்டதுக்கு சட்டைய பிடிச்சு உலுக்குறா… குப்பை தொட்டில இருந்து என்னை எடுக்க சொல்றா…’ என்று அதிர்ந்து பார்க்க,
“ஒருவேளை அது அவள் அப்பா வாங்கி கொடுத்ததோ” என்று தோன்ற, ‘என்ன இருந்தாலும், குப்பையில் போட்டதை தான் எடுப்பதா…’ என்றும் தயக்கம் பிறக்க, “அது லஷ்மி…” என்று இழுக்க,
“அப்போ எடுக்க மாட்டீங்க.. அதுசரி இது எனக்கு எவ்வளோ ஸ்பெஷல் தெரியுமா…” என்று கேட்டபடி அவளே எடுத்து, வேகமாய் ஒரு துணி வைத்து துடைக்க,
“லஷ்மி… உனக்கு வேணும் சொன்னா புதுசு வாங்க கூடாதா.. அதுவே சரியா எழுதாது போல… பார்ம் ஃபில் பண்றது எல்லாம் நல்ல பேனால ஃபில் பண்ணனும்..” என்று சொல்ல, லட்சுமி தன் கையில் வைத்திருந்த பேனாவை அவன் கண் முன்னே நீட்டி,
“இது உங்களுக்கு நியாபகம் இல்லையா…” என்று கேட்டாள்.
அவனோ இல்லயென்று தலையசைக்க,
“இது… இதை எனக்கு வாங்கி கொடுத்ததே நீங்க தான் மாமா.. எனக்கு ஹீரோ பென்ல எழுத பழக்கியதே நீங்க தான் மாமா…” என்றாள், கோவம் பாதி அழுகை மீதியாய்.
“லஷ்மி….” என்று அதிர்ந்தே விட்டான் ஈசன்..
அவள் சொன்ன பிறகே அனைத்தும் முழுதாய் நினைவு வந்தது.. ஒவ்வொன்றும் கோர்வையாய் அவன் மனதில் பவனி வர, லட்சுமி தன்னை இத்தனை ஆழமாய் நேசித்தாளா என்று தோன்ற, அதிர்ந்து தான் போனான்..
ஆனால் அவளுக்கோ கோவம்… தான் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து மனத்தில் சேகரித்தால், இவன் ஒன்றுமே நினைவில் இல்லை என்பது போல் நிற்கிறான் என்று.
“அப்போ உங்களுக்கு எதுவுமே நியாபகம் இல்லை.. அப்படிதானே… உங்கக்கிட்ட இதெல்லாம் சொன்னேன் பாருங்க.. போங்க… வெளிய போங்க மாமா… எரிச்சல் வருது..” என்று அவனை பிடித்து அறையை விட்டு வெளிய தள்ளியவள்,
“இந்தாங்க, நீங்கதான் பார்ம் ஃபில் பண்ணனும்.. அதுவும் இந்த பென்ல தான்…” என்று இரண்டையும் அவன் கையில் திணித்தவள், பட்டென்று கதவையும் சாத்திக்கொண்டாள்.
மனம் அடங்க மறுத்தது..
‘ச்சே எதுவுமே நியாபகம் இல்லையா.. அப்போ அவங்க என்னை ஒண்ணுமே நினைக்கலையா.. அப்புறம் எப்படி இதெல்லாம் வாங்கி குடுத்தாங்க.. எவ்வளோ தைரியம் பேனாவ குப்பைல போடுவாங்க..’ என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவளாகவே சொல்லிக்கொண்டு இருக்க,
வெளியே நின்ற ஈசனுக்கோ சிரிப்பு தாங்கவில்லை. ஆனந்த சிரிப்பு.. காதலிப்பதை விட காதலிக்கப்படுவது சுகம்.. அந்த சுகம் தந்த சிரிப்பு..
‘டேய் சிரிச்சு தொலையாத.. இல்லை அதுக்கும் வந்து திட்டுவா…’ என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு,