திருமணமான இத்தனை நாள் கழித்து, ஒருவர் மனதை ஒருவர் நன்கு அறிந்தபின்னே ஏற்படும் நெருக்கம், தடைகளே இல்லையென்றாலும் எதோ ஓர் வேகம் இருவருக்குமே இருக்க, லட்சுமியின் கால்கள் லேசாய் துவளத் தொடங்க,
சிறிது நேரத்தில் ஈசனே அவளை விடுவிக்க, முதல் முறை வெக்கம் என்பதை உணர செய்தான்.
“லஷ்மி…” என்ற அவன் குரல் இன்னும் அவளை தலைகுனிய செய்ய,
“ம்ம்.. மாமா…” என்று வேண்டுமென்றே அவன் நெஞ்சில் குத்தினாள்.
“அடிப்பாவி என்ன அடிக்கிற…”
“ஏன் அடிக்க கூடாதா…”
“எங்க இப்போ அடி பாப்போம்…” என்றவன் மீண்டும் அவளை பிடித்து அணைக்க,
“மாமா… என்ன இது….” என்றவளுக்கு என்னவோ இல்லாத வெக்கம் வந்து விலக போக, “இரு லஷ்மி…” என்று மீண்டும் அவளை இறுக்க,
“ஹ்ம்ம் இப்போதான் உங்களுக்கு பொண்டாட்டின்னு கண்ணுக்கு தெரிஞ்சேனா…” என்று கோவமாய் கேட்பது போல் கேட்டாலும் சலுகையாய் அவன் மார்பில் ஒண்டினாள்.
“ம்ம்ம்.. மனசுக்கு எவ்வளோ நிம்மதியா இருக்கு தெரியுமா.. இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இரு…”என்றவனும், பின் நியாபகம் வந்தவன் போல,
“லஷ்மி நான் நாளைக்கு ஊருக்கு போகணும்.. வர எப்படியும் நாலஞ்சு நாள் ஆகும்…” என, பட்டென்று அவளிடம் இருந்து விலகியவள்,
“சரி.. அப்போ எதுனாலும் நீங்க ஊருக்கு போய்ட்டு வந்த அப்புறம் பார்க்கலாம்…” என்று சொல்லி நடக்க, “ஹேய் என்ன கோவமா…” என்று அவள் பின்னேயே போனான்..
“பின்ன… ஊருக்கு போறேன்னு இப்போ சொல்றீங்க… ஏன் நாளைக்கு கிளம்பிட்டு சொல்லவேண்டியது தானே…”
“ஆடிட்டர் நேத்து தான் வந்து பேலன்ஸ் சீட் கொடுத்தார்… கைல எவ்வளோ இருக்கு, பேங்க்ல எவ்வளோ எடுக்கணும், இதெல்லாம் பார்த்து தானே கிளம்ப முடியும்…” என, அவன் சொன்னதே எதோ பெரிய விஷயம் என்று பட,
“ஏன் மாமா… என்ன செய்ய போறீங்க…???” என்று ஆவலாகவே கேட்டாள்.
ஈசனுக்கு அவள் அப்படி கேட்டது அத்தனை ஆனந்தம்.. இதுநாள் வரைக்கும் யாரும் கேட்டதில்லை. தனியாக தொழில் என்றதுமே கஜேந்திரன் பார்த்து செய் என்றதோடு சரி. மரகதம் முத்தழகு எல்லாம் ஈசன் எது செய்தாலும் அது சரியே என்பது போல், பாலா கேட்கவே வேண்டாம் அண்ணன் சொல்லே மந்திரம்..
ஆனால் மனைவி அப்படி இருக்க முடியுமா.. எப்பேற்பட்டவனாக இருந்தாலும் கேள்வி கேட்கும் அதிகாரம் மனைவிக்கு உண்டு தானே.. தான் என்ன செய்ய போகிறேன் என்பதை சொல்ல,
“நிஜமாவா மாமா… நிறையா பணம் வேணுமே..” என்று விழிகள் விரித்து கேட்க,
“ஹ்ம்ம் இங்க வா…” என்றவன் மீண்டும் அவளை பீரோ அருகில் அழைத்து சென்று, நம்பர் லாக் போட்டிருந்த லாக்கரை திறக்க, உள்ளே கட்டு கட்டாய் பணம்.
பல லட்சங்கள் தொடும்..
‘அம்மாடி…’ என்று வாயில் விரல் வைத்தவள், இதெல்லாம் எப்போது இங்கே வந்தது, யோசனையாய் அவனை காண,
“நேத்து தான் லஷ்மி கொண்டு வந்து வச்சேன்… மார்னிங் ஆடிட்டர் கொண்டு வந்து பேலன்ஸ் சீட் குடுக்கவும், கையில் பத்து லச்சம் இருந்தது.. மிச்சம் பேங்கில் எடுத்தேன்.. ஏற்கனவே மேனேஜர்கிட்ட சொல்லியிருந்தேன்.. சோ டக்குனு எடுக்க முடிஞ்சது…” என்று விளக்க,
“நான் பார்க்கல மாமா…” என்றாள் அப்பாவியாய்.
“நீதானே…” என்றவன், மீண்டும் லாக்கரை லாக் செய்துவிட்டு பீரோவை மூடியவன், அதன் மீதே சாய்ந்து நின்று,
“நீ சுத்தமா உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு பார்க்கிறது இல்ல லஷ்மி… இனி அப்படி இருக்காத…” என, அவளுக்கும் தெரியும் தானே தான் எப்படி இருக்கிறோம் என்று..
“ம்ம்…” என்று தலையை உருட்டினாள்.
அவளுக்குமே மனதில் இந்த எண்ணம் தான். ஆனாலும் தெரியவில்லை ஏன் யாரிடமும் அத்தனை ஒட்டுதல் வரவில்லை என்பது.. அவளது வட்டத்தில் பாலா, ரேவதி இப்போது அனைத்திற்கும் மேலாய் ஈசன்.
“நீங்க ஊருக்கு போயிட்டா நான் என்ன செய்றது…” என்று முகம் தூக்கினாள்,
“ஹ்ம்ம் நீ போய் பெரிய வீட்ல இரு லஷ்மி.. இல்லை உன் அம்மா கூட இருக்கணும்னா அங்க இரு…”
“அதில்ல மாமா.. ப்ராஜெக்ட் விசயமா ரெண்டு நாள் கழிச்சு எல்லாம் மதுரைக்கு போறாங்க.. நான் உங்க கூட போகணும்னு நினைச்சேன்…”
“எல்லாம் இப்போ சொல்லு… எதையுமே நீயா நினைச்சா நான் எப்படி லஷ்மி கண்டுபிடிக்க முடியும்.. சில விஷயங்கள் யூகிக்கலாம்.. ஆனா நீயா சொன்னா தான் எனக்கும் புரியும்… இப்போ என்ன அடுத்து போறப்போ நான் கூட்டி போறேன்… இப்போ பிரண்ட்ஸ் கூட போ… ”
“ம்ம் சரி…” என்றாள் அரைமனதாய்.
ஒருவழியாய் ஊருக்கு போவதற்கு லட்சுமி சரி என்று சொன்னதே ஈசனுக்கு நிம்மதியாய் இருக்க, அடுத்து அடுத்து அவன் செய்ய வேண்டியவைகள் எல்லாம் வரிசை கட்டி நிற்க, இரண்டு மூன்று பேரிடம் அலைபேசியில் பேசியவன், பின்னே பணத்தை எடுத்து பிரித்து வைத்து, ஊருக்கு செல்ல அனைத்தையும் எடுத்தும் வைத்துகொண்டு இருக்க, லட்சுமியோ வெறுமெனே அவனை வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள்.
அவன் ஊருக்கு போகிறேன் என்றதுமே ஓர் சுணக்கம் ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. போக கூடாது என்று சொல்ல மனமும் இல்லை. அவன் ஆசைப்பட்ட ஓர் விஷயம்.. இத்தனை நாள் கழித்து நடக்க போகிறது. அதை தான் ஏன் தடுப்பானேன் என்று நினைத்தாள்.
ப்ராஜெக்ட் பணம் கொடுத்து வாங்குவது என்றாகிவிட்டபின், அதில் அப்படியென்ன என்று கவனம் செல்லுதவும் மனமில்லை. அப்படியே நண்பர்களோடு சென்றாலும் இவள் ஒன்றும் செய்ய போவதில்லை. காசை கட்டிவிட்டு வரப்போகிறாள். இந்த எண்ணம் தோன்ற, பேசாமல் தானும் ஈசனோடு சென்றால் என்ற ஆசையும் பிறந்தது.
திருமணமானதில் இருந்து எங்கேயும் செல்லவும் இல்லையே.. ஆசை பிறக்கவும், யோசிக்காமலே, “மாமா நானும் வரவா…” என்று ஆவலாய் கேட்க, அவனோ கையில் ஒரு பைலை வைத்து சரிபார்த்து கொண்டு இருந்தான்.
“ம்ம் என்ன லஷ்மி…” என நிமிர்ந்து பார்க்க,
“ம்ம்ச் ஒன்னும்மில்ல வேலைய பாருங்க…” என்று நகர போனாள்.
“லஷ்மி… உன்கிட்ட நான் எத்தனை முறை சொல்ல, எதுவும் சொன்னாதான் தெரியும்னு…”.
“நானும் வரட்டுமா மாமா..”
“நான் என்ன வேலையா போறேன்னு தெரியும் உன்னை கூட்டிட்டு போய் எப்படி லஷ்மி… முதல்ல உன்னை எங்க தங்க வைப்பேன் சொல்லு…”
“அதெல்லாம் பரவாயில்ல மாமா.. நீங்க எங்க தங்குறீங்களோ அங்கவே நான் தங்குறேன்….”.
“இப்படி வந்து உட்கார் முதல்ல..” என்று அவளை தன்னருகே அமர வைத்தவன், “என் கூட வர்றது இருக்கட்டும்.. உனக்கும் வேலை இருக்கு தான. நீ தான சொன்ன மதுரை போகணும்னு…” என்றான்.
“ம்ம் ஆமா.. ஆனாலும் நான் போய் என்ன செய்ய.. பீஸ் கட்டிட்டு வர போறோம்.. அதை பாலா இல்லை ரேவதி செய்யமாட்டாங்களா…”
“நோ.. இது தப்பு லஷ்மி…”
“ஏன் மாமா.. இதிலென்ன இருக்கு…” என்றாள் புரியாமல்.
“இங்க பார் லஷ்மி.. நமக்கு இன்னும் லைப் நிறைய இருக்கு.. ஆனா இந்த டைம் உனக்கு திரும்ப வராது.. ப்ராஜெக்ட் விடு.. பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து மதுரை போறீங்க.. நினைச்சாலும் அடுத்த வருஷம் எல்லாம் இப்படி சேர்ந்து போக முடியுமா.. இங்க இருக்க மதுரை தான்.. எப்போ வேணா போகலாம் தான்.. ஆனா இப்படி பிரண்ட்ஸ் கூட போறது அது வேற லஷ்மி.. இப்படியொரு வாய்ப்பு அடுத்து கிடைக்காது.. சோ அதை என்ஜாய் பண்ணு.. போயிட்டு வந்து நீயே சொல்வ பாரேன். அப்புறம் இன்னொன்னு, காசு கட்டி படிக்குறோம், கண்ண மூடிட்டு அவங்க கொடுக்கிறதை வாங்கிட்டு வராத, கொஞ்சமாது என்ன ப்ரொஜெக்ட் என்னன்னு புரிஞ்சு படிக்க பாருங்க… ” என்று அறிவுரைகளை சொல்ல,
‘இதுக்கு நான் கேட்காமையே இருக்கலாம்…’ என்று தோன்றியது லட்சுமிக்கு.
ஆனால் ஈசன் சொல்வது சரிதானே.. கல்லூரி காலம் என்பது யாராலும் மறக்க முடியாத ஒன்று. அதுவும் நட்புகளோடு சேர்ந்து வெளியே செல்லும் வாய்ப்பு கிடைக்கும் போதே அனுபவித்துகொள்ள வேண்டும். ஈசனை பொருத்தமட்டில் லட்சுமி வாழ்வில் சிறு சிறு சந்தோசங்களை கூட விட்டுவிட கூடாது.
அவனுக்குமே அடுத்து நிறைய வேலைகள் இருந்தன.. தேனியில் புதிய கடை தொடங்குவதாய் இருந்தவன் அதைவிடுத்து அங்கொரு புதிய பால் பண்ணை தொடங்க போகிறான். நிறைய செலவாகும் தான். ஆனால் எது வந்தாலும் பார்த்துகொள்வோம் என்ற தைரியம் இருந்தது.
ஈசன் கிளம்பியதும், லட்சுமியும் பெரிய வீட்டிற்கு செல்ல, மருமகள் வந்தது அங்கே அனைவருக்கும் மகிழ்ச்சி.
“கூடிய சீக்கிரம் ஈசனையும் இங்க கூட்டிட்டு வந்திடு லட்சுமி…” என்று மரகதம் சொல்ல, லட்சுமிக்குமே அனைவரோடும் சேர்ந்து வாழவே மனம் விரும்பியது.