சும்மாவா சொன்னார்கள்.. நிஜம் தான் பார்க்கவே அத்தனை கம்பீரம்.. கெத்து.. தைரியம் இருந்தால் என்னருகே வந்து தொட்டு பார்.. கிட்ட வந்து பார் என்று சொல்லாமல் சொல்வது போல் நின்றிருந்தன காங்கேயம் காளைகளும், பசுக்களும்.. இன்னும் இரண்டு கன்றுகளும்..
திமிலை தூக்கி, தலையை ஆட்டி, கொம்புகளை மணலில் நுழைத்து ஒரு சிலுப்பு சிலுத்து நிற்பதே அத்தனை கம்பீரமாய் இருந்தது. சிங்கத்திற்கு பிடரி முடி சிலிர்த்து நிற்குமல்லவா.. ஆனால் காங்கேயம் மாடு வகைகளை காண்கையில் நமக்கு தான் சிலிர்க்கும்.
அதுவும் ஒரே நேரத்தில் இத்தனை பார்க்கும் போது.. “ஹப்பா….” என்று மூச்சடைத்தது.
ஆம் ஈசன் ஊருக்கு சென்றது இவைகளை வாங்கத்தான்.. தொழிலுக்காய் அல்ல.. சொந்த விருப்பத்திற்காய். வெகு நாளைய ஆசை.. இப்போது தான் முடிந்தது. முன்பே வாங்கிருப்பான். ஆனால் நேரமும் காலமும் துணை இருக்க வேண்டும் தானே.
இரண்டு காளைகள், நான்கு பசுக்கள், இரண்டு கன்று குட்டியும். கிட்டத்தட்ட நெருக்கி முப்பது லட்சம் தொட்டிருந்தது.. சும்மா போய் அப்படியே வாங்கி வரவில்லை ஈசன்..
எப்படி என்ன செய்ய வேண்டும், என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொண்டு, ஏற்கனவே வளர்த்தவரை உடன் வைத்து, தானும் மாடுகளோடு பழகி பார்த்து பின் தான் ஊருக்கு வந்தான், முழுதாய் ஐந்து நாட்கள் ஆனது.
குழந்தையை வருடுவது போல் அவன் வருடிக்கொண்டு நிற்க, லட்சுமியோ தூரத்திலேயே நின்றிருந்தாள். அருகில் செல்ல பயமாய் இருந்தது.. அதன் கொம்புகளை பார்க்கவே மனதில் ஓர் சிலிர்ப்பு இருந்தாலும் அதன் தோற்றத்தை கண்டு ஓர் பயம் வரத்தான் செய்தது.
“லட்சுமி போ.. நல்ல நேரம் முடிய போகுது.. போயி ஆரத்தி எடுத்து மாடுகளுக்கு திரிஷ்டி பொட்டு வை….” என்று மரகதம் சொல்ல,
“ம்ம்ஹும்.. நான் போகலை.. அத்தை நீங்களே எப்பவும் போல வைங்களேன்.. எனக்கு பயமா இருக்கு…” என்று தலையை உருட்டினாள்.
“அதுசரி… இம்புட்டு லட்சக்கணக்குல காசு போட்டு வாங்கி வந்திருக்கான்.. நீ என்ன இப்படி தள்ளி நிக்கிற.. போ லட்சுமி…” என்று முத்தழகும் சொல்ல,
“ஏன் நீ போறது.. என்னை சொல்ற…” என்று இன்னும் சிலுப்பினாள்.
“மதினி சும்மா போ…” என்று பாலாவும் அவளை வம்பிழுக்க, மரகதம் வந்து லட்சுமி கையில் ஆரத்தி தட்டை திணிக்க,
கஜேந்திரனோ “ஈசா… லட்சுமி பயப்படுது, கூட வந்து நீ இப்படி நில்லு…” என்றார்.
ஈசனும் சிரித்துகொண்டே அவளருகே வந்தவன் “என்னை அவ்வளோ பேசுற.. பாவம் அதென்ன பண்ணுச்சு.. இப்படி பயப்படுற…” என்று அவளுக்கு மட்டுமே கேட்கும் படி சொன்னவன், அவள் கைகளில் வைத்திருந்த தட்டை தானும் பிடித்து, அவன் வாங்கி வந்திருந்த காங்கேயம் மாடுகளுக்கு ஆரத்தி எடுத்தான்.
தென்னந்தோப்பில் தான் அவைகளை கொண்டு வந்திருந்தான். பண்ணைக்கு கொண்டுபோகவில்லை. சாதாரணமாய் பண்ணை மாடுகளை வளர்ப்பது போல இவைகளை வளர்க்க முடியாதே.. தனி கவனம், சிரத்தை வேண்டும். என்னதான்
ஈசன் அருகே இருந்தாலுமே, மாடுகளுக்கு பொட்டு வைக்கும் போது லேசாய் லட்சுமிக்கு கைகள் நடுங்கத்தான் செய்தது. அவளது விரல்களையும் பிடித்து, ஈசனே மாடுகளுக்கு திலகமிட, அனைவரும் பார்த்துகொண்டு தான் இருந்தனர்.
“எனக்கும் வை…” என்று ஈசன் லேசாய் தலை குனிந்து நிற்க,
“என்ன…?!!!” என்று அதிர்ந்தே விட்டாள் லட்சுமி.
“வை.. வை லஷ்மி…”
“மாமா… என்ன இது… மாடுங்களுக்கு தான வைக்கணும்….”
“நான் தானே வாங்கிட்டு வந்தேன்….” என்று அவனும் சொல்ல,
“இதென்ன மாமா….” என்று சிணுங்கினாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது… நான் உனக்கு குங்குமம் வச்சு விட்டிருக்கேன்ல… நீ இது வைக்க கூடாத…” என, இவன் விடவே மாட்டான் என்று நினைத்து ஈசனுக்கும் நெற்றியில் திலகம் வைத்துவிட்டாள்.
“அண்ணா அப்படியே நில்லுங்க… மதினி இங்கிட்டு பாரு….” என்று பாலா சொல்ல, என்னவென்று பார்த்தால், கேமாராவும் கையுமாய் நின்றிருந்தான். புதிது.. ஈசன் தான் வாங்கி கொடுத்திருந்தான்.. பாலாவின் வெகு நாளைய ஆசை.
ஆனால் ஈசனோ, “நீ முதல்ல கேமரா ஆங்கில்ல போட்டோ எடுக்க பழகு.. அப்புறம் சொந்தமா வாங்கலாம்…” என்றுவிட, கேபிளில் இருக்கும் கேமேராவிலும் கை வைக்க முடியாது.
அவ்வபோது வாடகைக்கு கேமெரா எடுத்து தான் பழகினான். இயல்பாகவே பாலாவிற்கு புகைப்படங்கள் எடுப்பதில் ஒருவித வெறி என்று கூட சொல்லலாம்.
முத்தழகு கூட ஒருநாள் கேட்டார், “சின்னவனுக்கு புதுசா ஒன்னு வாங்கி குடுத்தா என்ன…” என்று.
பொதுவாக இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கஜேந்திரன் காதுகளுக்கு போகாது. அப்படியே போனாலும், தனக்கு வேண்டியதை வாங்க தானே தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றுவிடுவார்..
ஆனால் ஈசனோ “வாங்கலாம் தப்பில்ல.. ஆனா முதல்ல அவன் நல்லா பழகட்டும்.. வடைக்கு எடுத்து பழகுறான்.. சூதானமா செய்யனும்னு எண்ணம் இருக்கும் பயம் இருக்கும்.. இப்போவே சொந்தமா வாங்கி கொடுத்தா ஆர்வத்துல அதையே போட்டு நோண்டிட்டு இருப்பான்… கொஞ்ச நாள் போகட்டும்…” என்று சொல்லியிருந்தான்.
அந்த கொஞ்ச நாட்களும் சென்றுவிட, சொன்னது போலவே அவனுக்கு புதிதாய் வாங்கி கொடுத்தான்..
“இதென்ன ஒரு பத்தாயிரம் இருக்குமா…” என்று மரகதம் கேட்டதற்கு,
“ம்மா,.. இது நெருக்கி ஒரு லட்சம்…” என்றான் பாலா..
“என்ன அம்புட்டா… இதுக்கு நான் அஞ்சு பவுனுக்கு நல்ல அட்டிகை வாங்கி போடுவேனே…” என்று மரகதம் சொல்ல,
“ஏ பெரியவனே.. ஏன் இப்படி லட்ச லட்சமா செலவு செய்ற…” என்று முத்தழகு கேட்டேவிட்டார்.
பெண்கள் இப்படி சொல்ல, கஜேந்திரன் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. எப்போதும் சொல்வது தான் “பார்த்து செய்…” என்று மட்டுமே சொல்லிவிட்டார்.
முத்தழகு இப்படி கேட்கவும் ஈசன், “கிழவி, நான் காங்கேயம் வாங்கனும்னு நினைச்சது என் ஆசைக்கு.. அவனுக்கு கேமெரா வாங்கி கொடுத்தது அவன் ஆசைக்கு.. அடுத்து அவனே தான் அவனை வளர்த்துக்கறனும்,…” என்று சொல்லிவிட, பாலாவோ புகைப்படமாய் எடுத்து தள்ளினான்.
முதலில் ஈசனையும் லட்சுமியையும் வைத்து மாடுகளோடு எடுக்க, பிறகு, கஜேந்திரனையும் ஈசனையும் காளைக்கு இரண்டு பக்கமும் நிற்க வைத்து, அதன் திமிலில் இருவரையும் கை வைக்க சொல்லி ஒரு புகைப்படம் எடுத்தான்.
“லட்சுமி… வர காசெல்லாம் இப்படி ஆசைக்கு வாங்கினேன் அது இதுன்னு செலவு செய்றானே.. என்னன்னு கேட்க மாட்டியா…” என்று முத்தழகு மீண்டும் ஆரம்பிக்க,
“பாட்டி.. ஈஸ் மாமா, சம்பாரிக்கும் போது ஏன் இவ்வளோ சம்பாரிக்கிறீங்கன்னு கேட்கிறோமா இல்லையே… பின்ன ஏன் செலவு செய்யும் போது கேட்கணும்.. தப்பா எதுவும் செஞ்சா பரவாயில்ல.. ஆனா தப்பா எதுவும் செய்யலையே…” என,
அதை கேட்ட அனைவருக்குமே மனம் நிறைந்து போனது.. ஈசன் கூட பார்த்திருந்தான், இவள் என்ன சொல்ல போகிறாள் என்று. ஆனால் லட்சுமியின் பதிலில் இன்னும் அவனுக்கு மனதில் சட்டென்று ஒரு நிறைவு.
“ஆத்தி… நல்லா வந்து சேர்ந்தீங்கம்மா புருசனும் பொண்டாட்டியும்.. அதுசரி மத்ததெல்லாம் இருக்கட்டும் வீட்டுக்கு போகவும் என் பேரனுக்கு சுத்தி போடு…”
“அ… உன் பேரன நானும்.. என்னை உன் பேரனும் சுத்திக்கிட்டா போதும்.. தனியா எல்லாம் சுத்தி போடணும்னு இல்லை…” என்று முத்தழகோடு அடுத்த வம்பிற்கு தயாரானாள்.
மதிய உணவும் தென்னந் தோப்பிற்கே கொண்டு வந்திருக்க, அனைவருக்கும் அன்றைய பொழுது, அங்கேதான் கழிந்தது. ஈசனும் சகஜமாய் சந்தோசமாய் அனைவரோடும் பேசிக்கொண்டிருக்க, லட்சுமியும் அனைவரோடும் பேசியபடி இருக்க, கஜேந்திரன் மட்டும் அமைதியாகவே இருந்தார்.
மாடுகளை பார்த்ததும் என்ன எவ்வளோ என்று விவரம் கேட்டார். அடுத்து ‘பார்த்து செய்..’ என்றுவிட அதற்குமேல் ஈசனும் ஒன்றும் பேசவில்லை அவரிடம். ஆனால் அவர் அமைதியாய் இருப்பது ஈசனுக்கு எப்படியோ வித்தியாசமாய் பட,
“அய்யா என்ன ஒருமாதிரி இருக்கீங்க…” என்று அமைதியாக கேட்டான்..
“ஒண்ணுமில்ல ஈசா…”
“இல்ல எதுவும் பிரச்சனைய…?”
“அட.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. கொஞ்சம் கணக்கு விட்டு போச்சு.. சரி பண்ணிடலாம்….” என்ற கஜேந்திரன் முகம் சரியில்லை என்றே தோன்றியது ஈசனுக்கு.
அவனையும் அறியாது “நா… நான் எதுவும் செய்யனுமா…??” என்று கேட்க, மகனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர், பின் மெல்ல சிரித்தபடி,
“நீ இப்படி கேட்டதே சந்தோசம் தான்… நான் பார்த்துப்பேன்…” என்று பேச்சை முடித்துவிட்டார்.
ஆனால் ஈசன், நான் எதுவும் செய்யனுமா என்று கேட்டதோடு இல்லாமல், ‘நான் என்ன செய்ய முடியும்…’ என்று அப்போதே அவன் காட்டியிருந்தால் நன்றாய் இருக்குமோ என்று சிந்திக்கும் நாள் வரும் என்று ஈசனுக்கும் கஜேந்திரனுக்குமே மனதில் தோன்றவில்லை.
மாலை வரை பொழுது அங்கேயே கழிய, ஒருவழியாய் அனைவரும் வீடு வந்த சேர, “நைட் இங்கனயே சாப்பிட்டு போங்க…” என்று மரகதம் சொல்லிவிட, ஈசனும் லட்சுமியும் பெரிய வீட்டிற்கு தான் வந்தனர்.
வீட்டிற்கு வந்ததும், சிறிது நேரத்திலேயே, “கடைக்கும், கேபிளுக்கும் போய்ட்டு வரேன்…” என்று ஈசன் கிளம்ப ஒன்றும் சொல்லாமல் தான் லட்சுமி பார்த்திருந்தாள்..
“ஈசா.. போ.. போயி உன் ரூம்ல கொஞ்சம் படுத்து தூங்கு.. நாளைக்கு போகலாம்…” என்று மரகதம் சொல்ல,
“இல்லம்மா….” என்று மறுத்தவன், பின் லட்சுமி ஒன்றும் சொல்லாமல் நிற்பதை கண்டு, மேலே தன் அறைக்கு சென்றான்.
நிறைய நாளுக்கு பிறகான அவனது அறைக்கு வருகிறான்.. அதுவே மனதிற்கு ஒரு இதம் தருவதாய் இருந்தது. என்னதான் தனி வீட்டில் அவனும் லட்சுமியும் மட்டும் இருந்தாலும், அது அவனது முடிவாகவே இருந்தாலும், இது அவனது அறை என்ற உணர்வே வேறாய் இருந்தது.
விவரம் தெரிந்த நாளில் இருந்து இது அவன் மட்டுமே உபயோகித்த அறை, இன்று லட்சுமி இந்த ஐந்து நாட்களில் அங்கே தான் தங்கினாள் என்பதற்கு அடையாளமாய் அவளது பொருட்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்க, அவள் வரும் அரவமும் கேட்டது.
கையில் காப்பி டம்ப்ளரோடு வந்தவள், “இந்தாங்க மாமா…” என்று நீட்ட,
“உனக்கு… நீ குடிச்சியா…” என,
“ம்ம்…” என்று அவன் முகத்தை பார்த்தவள், “ஏன் எனக்கு வேணும்னு சொன்னா இதில் இருந்து குடுக்கமாட்டீங்களா…??” என்று அவன் கையிலிருந்த டம்ப்ளரை காட்டி கேட்க,
அவளை ஆச்சர்யமாய் பார்த்தவன், “நீயே முதல்ல குடி…” என்று நீட்டினான்..
“இல்ல பரவாயில்ல.. சும்மா தான் சொன்னேன்..”
“இல்ல… இல்ல… நீ குடி.. அப்புறம் எனக்கு குடு…” என்று ஈசன் பிடிவாதமாய் சொல்ல,
“அட மாமா.. கீழ நான் குடிச்சிட்டு தான் உங்களுக்கு எடுத்திட்டு வந்தேன்…” என,
“பரவாயில்ல… இப்போ எனக்கு தோணுது.. நீ குடிச்சிட்டு குடு, நீ கேட்டதுக்காக இல்ல.. எனக்காக..” என்று சொல்ல,
“ஹப்பா பேசியே ஒருவழி பண்ணுங்க…” என்றவள், இரண்டு மடக்கு குடித்தே கொடுத்தாள்.
“சொன்னதுமே கேட்டா என்ன…” என்று அவனும் சிரித்தபடியே காப்பியை பருகியவனின் கண்களோ தன் மனைவியை பருகியது..
“என்ன லஷ்மி.. சேலை கட்டிருக்க…??”
“ஏன்.. கட்ட கூடாதா..???”
“அட திடீர்னு கட்டிருக்கியேன்னு தான் கேட்டேன்…”
“ஹ்ம்ம் கட்டலைனா ஏன் கட்டல சொல்றது.. கட்டினா ஏன் கட்டிருக்க சொல்றது.. நீங்க தானே மாமா அன்னிக்கு சொன்னீங்க ஏன் சேலையே கட்றதில்லைன்னு”
“என்னிக்கு…??” என்று தெரிந்துகொண்டே கேட்டான்.
அவன் முகத்தை பார்த்தவளோ, அவன் கண்களில் தெரியும் குறும்பு புரிய,
“ஹ்ம்ம் அது மட்டுமா சொன்னேன்… நிறைய சொன்னேன்…” என்றபடி அப்படியே அவள் மடியில் தலை வைத்தான்..
அவன் கேசத்தில் கரம் கொடுத்து கோத, கோதிய கரங்களை பிடித்தவன், தன் இதழ் மீது வைத்து அழுத்திக்கொண்டான்.. கண்கள் மூடியிருக்க, அவளது அருகாமையை உணர்ந்து ஈசன் மனக்கண் திறந்து லட்சுமியை ரசிக்க தொடங்கியது. லட்சுமிக்கோ, ஈசன் இப்படி செய்யவும், அவன் ஊருக்கு கிளம்பிய தினம் நடந்தது நினைவில் வந்தது.
ஈசன் காங்கேயம், கிளம்புவதாய் இருந்த அன்று, மதியம் வழக்கமாய் வரும் நேரத்திற்கு முன்பே வீட்டிற்கு வந்துவிட்டான்.
“சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மாமா… எல்லாம் எடுத்து வச்சாச்சான்னு பார்த்துகோங்க…” என்றவள் அவனோடே அமர்ந்து தானும் உண்டவள், ஈசன் அறைக்கு சென்றதும் மீதமிருந்த வேலைகளை முடித்துக்கொண்டு, வீட்டை சுத்தம் செய்யலாம் என்று நினைத்து ஒட்டடை அடிக்க தொடங்கினாள்.
வீட்டில் இருக்கும் நேரம் பெரும்பாலும் நைட்டி அல்லது சுடிதார் தான். திருமணமான பிறகு இரண்டொரு முறை மட்டுமே சேலை கட்டியிருந்தாள். வேறெங்கிலும் செல்வதுமில்லை என்பதால் இவ்வுடையே வசதியாய் போனது. அன்றும் அப்படிதான், நைட்டியை மேலே லேசாய் தூக்கி கட்டி, ஒரு ஸ்டூல் மீது ஏறி நின்று ஒட்டடை அடிக்க, ஈசன் உறக்கம் களைந்து விடக்கூடாது என்று மெதுவாகவே ஸ்டூலை நகர்த்தி போட்டு, சுத்தம் செய்துகொண்டு இருந்தாள்.
அறைக்குள் சுத்தம் செய்யும் போது இவள் ஸ்டூலை இழுக்கும் ஓசை ஈசனுக்கு நன்றாகவே கேட்க, அந்த சத்தத்தில் கண் விழித்தவனுக்கு, லட்சுமி ஸ்டூல் மீது ஏறி நின்று ஒட்டடை அடிப்பதே தெரிந்தது. கூடவே சிரிப்பும் வந்தது.
ஒட்டடை குச்சி அத்தனை உயரமாய் இருப்பதே, கீழே நின்றே நன்றாய் மேல் பகுதியை சுத்தம் செய்ய தான். ஆனால் இவளோ ஸ்டூல் மீது ஏறி நிற்க,
“லஷ்மி… என்ன பண்ற…” என்றான்.. சிரிப்பை அடக்கி..
தூங்குகிறான் என்று நினைத்தவள், அவன் குரல் கேட்டதுமே லேசாய் திடுக்கிட்டு திரும்ப, அவன் சிரிப்பை அடக்க பெரும்பாடு படுவதை பார்த்து,
“ஹா… பரதநாட்டியம் ஆடுறேன்…” என்று சொல்லியபடி தன் வேலை பார்த்து கொண்டு இருந்தாள். அப்போது தான் கவனித்தான், அவள் நைட்டி கட்டியிருக்கும் விதத்தை…