“எனக்கு இந்த இடம் தான் பிடிச்சிருக்கு தனுஸ்கோடி… இதையே முடிக்கலாம்…” என்று ஈசன் முடிவாய் சொல்ல.
தனுஸ்கோடியோ, என்னடா செய்வது என்பது போல் முழித்து நின்றிருந்தான்.. நில தரகர்.. அவன் தான் அழைத்திருந்தான் ஈசனை..
ஈசன் கேட்பது போல் தோதாய் வந்த இடங்களில் மூன்று இடங்களை காட்ட, எதிலுமே ஈசனுக்கு ஒரு திருப்தியில்லை. மூன்றாவதாய் பார்த்த இடத்தில் நின்று கொண்டு. சுத்தி பார்வையை செலுத்த, அவர்கள் நின்றிருந்த சாலைக்கு எதிர்புறம், இருந்த இடம் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது..
இயற்கை சூழலோடு கூடிய பண்ணை வைக்கவேண்டுமென்பது அவனுக்கு வெகுநாளைய ஆசை. அதிலும் இப்போது ஈசன் பார்வையில் பட்டிருக்கும் இடமோ அது போல தான் இருந்தது.. தேனிக்கு வெளியே கொஞ்சம் தள்ளி.. விவசாய நிலம் தான்.. சற்று தள்ளி ஒரு பொட்டல் மேடும் இருக்க, அதையும் தாண்டி கொஞ்ச தூரம் போனால், மலை குன்றுகள் இருந்தன.. பார்த்ததுமே அவனுக்கு இவ்விடம் தான் வேண்டும் என்று தோன்றியது.
“என்ன தனுஸ்கோடி அமைதியா இருந்தா எப்படி…???”
“இல்ல இந்த இடம்.. பெரிய கையோடது… அவங்க விக்கிற நிலைல இல்லை.. கேட்டாலும் குடுப்பாங்களான்னு தெரியாது..” என்று தயங்க,
“யாருன்னு சொல்லு… நான் போய் பேசுறேன்…” என்றான் ஈசன்..
எப்போதும் இருக்கும் துணிவு… நினைத்ததை முடிக்கவேண்டும்.. அதுவும் கண்ணில் நேரே கண்டபிறகோ விடவே கூடாது என்று தோன்றியது..
“நம்ம போய் பேசுனாலும் அவங்க சம்மதிப்பாங்களா தெரியாதே…” என்று மீண்டும் தனுஸ்கோடி தயங்க,
“இங்க பாரு தனுஸ்கோடி, இந்த ஏரியா லேண்ட் வேல்யு என்னன்னு எனக்கும் தெரியும்… மேற்கொண்டு கூடுதலா கூட குடுக்கிறேன்… ஒரு சி கேட்டாலும் பரவாயில்லை… ஆனா இதை பேசி முடி…” என்று பணத்தை முன் வைத்து தனுஸ்கோடிக்கு ஆசையை தூண்டி விட்டான்..
“ஒரு கோடி….” கேட்கும் போதே தனுஸ்கோடிக்கு கண்கள் விரிந்தது.. இதுநாள் வரைக்கும் அத்தனை பெரிய தொகைக்கு எல்லாம் அவன் நலம் பேசி முடித்ததில்லை..
நிலத்தையும், ஈசனையும் மாறி மாறி பார்த்தபடி நின்றிருந்தான் தனுஸ்கோடி.. இதை மட்டும் முடித்து கொடுத்தால், அவனுக்கு ப்ரோக்கர் கமிசனே லச்சதில் கிடைக்கும்.. இதெல்லாம் மனதில் வந்து போக, இத்தனை நேரம் இருந்த தயக்கம் போய், எப்படியாவது இதை பேசி முடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தது..
ஈசனும் தனுஸ்கோடி முகத்தையே பார்த்திருக்க, “சரி நான் பேசிட்டு வந்து சொல்றேன்…” என,
“பேசிட்டு வந்து நல்ல முடிவா சொல்லு.. இந்த பிடி..” என்று அவன் கைகளில் ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாளை திணித்தான் ஈசன்..
தனுஸ்கோடி கிளம்பவும், ஈசன் அங்கேயே தான் நின்றிருந்தான்.. அந்நிலத்தின் முன் நிற்பதே என்னவோ அது தனக்கு சொந்தமானது என்ற எண்ணம் கொடுக்க, நிஜமாகவே அது தனக்கு சொந்தமாக வேண்டும் என்று விரும்பினான்.
அடுத்த சில நொடியில் ஒரு வெள்ளை நிற ஸ்கார்பியோ வந்து நின்றது ஈசனருகில். சரட்டென்று கார் வந்த சத்தத்தில் திரும்பி பார்க்க, அதிலிருந்து முகமெல்லாம் புன்னகையாய் ஒருவர் இறங்கினார்..
“ஈசன் தம்பி… என்ன இந்த பக்கம்…” என்ற கேள்வியோடு..
யாரது என்பது போல் பார்த்தவன் பின் உடனே “சண்முகம் அண்ணா வாங்க வாங்க…” என்று ஈசன் கை குலுக்க, காரில் வந்தவரும் அவனது கைகளை பற்றி குலுக்கி,
“ஈசா எப்படியிருக்க… அய்யா எப்படி இருக்கார்?? உன்னை கல்யாணத்துல பார்த்தது… வாழ்க்கை எப்படி போகுது…” என்று குசலம் விசாரித்தார்..
“எல்லாரும் நல்லாயிருக்கோம் வாழ்க்கை நல்லபடியா போகுது..” என்று ஈசனும் சிரித்த முகமாய் சொல்ல,
“சந்தோசம் தம்பி… என்ன இந்த பக்கம்…” என்றார்.
“ஒரு இடம் வாங்கணும்… அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…”
யோசனையாய் மாறிய அவர் முகம், “இந்த இடமா…” என்று ஈசன் விரும்பிய இடத்தை பார்த்து கை காட்ட,
அவனோ “வேற இடம் தான் பார்க்க வந்தேன்… ஆனா எனக்கு இந்த இடம்தான் பிடிச்சிருக்கு…” என்று சொல்ல,
“ஓ…” என்றார் அவர் இன்னும் யோசனையாய்..
அவர் முகம் மாறியது கண்டு, “என்னண்ணா யோசிக்கிறீங்க…” என்று கேட்க,
“அது ஒண்ணுமில்ல ஈசா.. இது என் வீடம்மாவோட அண்ணன் நிலம் தான்… ஆனா அவங்க குடுக்கிற மாதிரி இல்லையே…” என்றார்..
வந்திருப்பவர், மதுரையில் பெரும்புள்ளி.. அவருக்கும் கஜேந்திரனுக்கும் நல்ல பழக்கம் உண்டு.. ஈசன் மீது இம்மனிதருக்கு தனி மதிப்பே உண்டு.. அது தான் இப்படி அவரை இறங்கி வந்து பேசவும் வைக்கிறது..
“ஓ… ஆனா.. இந்த இடம் பண்ணை ஆரம்பிக்க பொருத்தமா இருக்கும்.. அதான்.. அதுவுமில்லாம எனக்கு ரொம்ப பிடிச்சு வேற இருக்கு…”
“அட என்னப்பா நீ… என்கிட்ட சொல்லிட்டல.. கவலைய விடு.. என் மச்சான்கிட்ட நானே பேசுறேன்… போதுமா… சந்தோசமா வீட்டுக்கு போ.. நீ கேட்டு ஒன்னு நான் செய்யாம இருக்க முடியுமா ஈசா..” என்று அடுத்த நொடி அவர் நம்பிக்கையாய் சொல்ல, ஈசன் முகம் சட்டென்று மலர்ந்து விட்டது..
“ரொம்ப தேங்க்ஸ்ணா …”
“அட என்னப்பா பெரிய வார்த்தை எல்லாம்.. உங்கய்யா எனக்கு செய்யாத உதவியா…” என்றவர், “ஈசா, நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்னு சொல்லிருன்தேன்.. ஆனா நாளைக்கு முடியாது… போன் பண்ணி பார்த்தேன் அண்ணன் போன் எடுக்கலை.. உன்னை பார்க்கவும், உன்கிட்ட சொல்றேன்.. தப்பா நினைக்காத பார்த்த இடத்துல சொல்றேன்னு… ” என,
‘விஷயமில்லாம அய்யாவ பார்க்க வரமாட்டாரே…’ என்று யோசனை பிறந்தாலும்,
“ம்ம் சரிங்கண்ணா.. தப்பா நினைக்க என்ன இருக்கு.. அய்யாக்கிட்ட சொல்றேன்… அப்புறம் இந்த இடம்..” என்று இழுக்க,
“இந்த இடம் உனக்கு தான் கவலையே படாத…” என்று மீண்டும் ஒருமுறை ஈசனிடம் கை குலுக்கி சென்றார்..
அவர் போன பின்னும் சில நேரம் ஈசன் அங்கே தான் நின்றிருந்தான்.. ஏனோ அங்கிருந்து செல்லவே மனமில்லை.. பசுமையாய் கண்ணுக்கு குளிர்ச்சியாய் பார்க்கவே ரம்யமாய் இருந்தது..
சற்று தள்ளி இருந்த பொட்டல் நிலத்தில் பண்ணைக்கான கட்டிடம் கட்டிவிட்டால், அது இது என்று லேசாய் மராமத்து வேலை இருக்கும் அவ்வளவு தான், அவன் நினைத்து வைத்திருந்தது போலவே பண்ணை தயாராகி விடும்..
ஈசன் கையில் இருக்கும் மொத்த பணத்தையும் இதில் தான் போட போகிறான்.. ரிஸ்க் தான் என்று தெரியும்.. ஆனாலும் வேறு வழியில்லை.. சில விசயங்களை முடிவெடுத்த உடனே செய்தால் தான் சரி.. இல்லையெனில் அதை எப்பொழுதுமே செய்ய முடியாது.
அப்படியே நின்றிருந்தவனுக்கு அப்போது தான் நினைவில் வந்தது, லட்சுமியை சூப்பர் மார்க்கெட்டில் விட்டு வந்தது.. ‘ஓ.. மறந்தே போயிட்டேன்… என்ன செய்றாளோ…’ என்று அவளுக்கு அழைத்தான்..
லட்சுமிக்கு முதலில் கொஞ்சம் கூச்சமாய் இருந்தாலும் நேரம் போக போக சரியாய் போனது.. மாதத்தின் முதல் வாரம் வேறு, கூட்டம் நிறையவே வந்தது.. ரசீது பார்த்து பணம் வாங்கி போட்டு, மீதம் இருப்பவருக்கு தக்க பணம் கொடுத்து, கேட்டு வருபவர்களுக்கு சற்றே திணறினாலும் அதற்கு ஏற்ப பதில் சொல்லி என்று அவளுக்கு வேலையை சரியாய் இருந்தது.. ஆனாலும் அத்தனை எளிதில் செய்ய முடியவில்லை.
கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது சும்மா அமர்ந்திருக்க, ‘மாடில, கீழ எல்லாம் ரவுண்ட்ஸ் போகணும்…’ என்று ஈசன் சொன்னது நினைவு வர,
“அட இது மறந்துட்டோமே…” என்று மூன்று தளங்களுக்கும் ஏறி இறங்கினாள்.
என்னதான் கேமாரா வைத்து ஒவ்வொரு இடமும் கண்காணிப்பில் இருந்தாலும், நேரில் நின்று பார்ப்பது போல் இருக்குமா என்ன?? அனைத்தும் சுத்தி பார்த்து மீண்டும் கல்லா வரும் போது தான் அவளது அலைபேசி சினுங்கியாது..
“ஈஸ் மாமா…” என்று சற்று சத்தமாகவே அழைத்துவிட்டாள்..
சற்று தள்ளி வேலைக்கு என்று இருந்த பெண்கள் எல்லாம் திரும்பி பார்க்க, ‘ஷ்…’ என்று நாக்கை கடித்தவள்,
“மாமா சத்தமாவே உங்களை சொல்லிட்டேன்… எல்லாம் பார்க்கிறாங்க..” என்று லேசாய் அசடு வழிய,
“ஹா ஹா… பார்த்தா பார்க்கட்டும் நீ ஏன் அவங்களை பார்க்கிற…??” என்று சிரிக்க, அவன் சிரித்ததே லட்சுமிக்கு மனதிற்கு நிம்மதியாய் இருந்தது..
எங்கே எதையும் மனதில் வைத்துகொள்வானோ என்று இன்னமும் கூட அவளுக்கு சஞ்சலம் இருக்க, அப்படியெல்லாம் எதுவுமேயில்லை என்பது போல் ஈசன் பேச, ‘ச்சே நான் ஒரு லூசு…’ என்று தன்னை தானே கடிந்து கொண்டவள்,
மீண்டும் “மாமா…” என,
“சொல்லுங்க முதலாளிம்மா…” என்றான் அவன் இன்னும் கிண்டலாய்..
“கிண்டல் பண்றீங்களா…”
“ச்சே ச்சே… இல்லை… எனக்கே ஓனர் நீதான்..”
“ஆகா இப்போ எதுக்கு இந்த பிட்…”
“ஹா மனசு சந்தோசமா இருக்கு.. அதான்…”
“என்ன விசயம் மாமா..??” என்றாள் அவளும் அவன் சந்தோசத்தை அறிந்துகொள்ளும் ஆவலில்..
“ஒரு இடம் ரொம்ப பிடிச்சிருக்கு லஷ்மி… எப்படியும் நமக்கு வந்திடும்…” என்று நடந்ததை சொல்ல, அவளுக்குமே அது ஈசனுக்கு கிடைத்திட வேண்டும் என்று தான் தோன்றியது..
பெரிய தொகை, சொல்ல போனால் இத்தனை நாள் சம்பாரித்த மொத்தமும் அதில் தான் முதலீடு செய்ய போகிறான். அது அவனுக்கு பிடித்த இடத்தில் என்றால் இன்னும் நல்லது தானே..
“அது கண்டிப்பா உங்களுக்கு தான் மாமா…” என,
“ம்ம்ச் நமக்குன்னு சொல்லு…” என்றான் பட்டென்று..
“ஹா.. சரி சரி நமக்கு…”
“இனி எதுவுமே உனக்கு எனக்குன்னு தனி இல்லை புரியுதா…” என்றவன் குரலில் லேசாய் கடினம் தெரிய,
‘ஐயோ நான் ஏன் சொதப்புறேன்…’ என்று தன்னை நொந்துகொண்டவள், “சரி சரி சரி மாமா..” என்றாள் சமாதானமாய்..
“சரி நீ என்ன பண்ற..??” என்றான்.
அவளோ வந்ததில் இருந்து கடையில் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்ல தொடங்க, ஈசனுக்கு மனம் கொஞ்சம் நிம்மதியானது.. என்னதான் அவசரத்தில் லட்சுமியை அங்கே அமர்த்தி வந்தாலும், அது சரிதானா என்று மனம் உறுத்திக்கொண்டே தான் இருந்தது.. அவளால் முடியுமா என்று இல்லை… வேறெதுவும் பிரச்சனை வரக்கூடாதே என்று..
“மாமா…. மாமா… லைன்ல இருக்கீங்களா…??? நான் வைக்கட்டுமா..??? ஆள் வந்திட்டாங்க…” என,
“அ.. சரி லஷ்மி…” என்று வைத்துவிட்டு நேராக வீட்டிற்கு தான் சென்றான்.. அவன் அப்பா அம்மா இருக்கும் வீட்டிற்கு..
“ம்மா…” என்று அழைத்துக்கொண்டே உள்ளே நுழைய, மரகதமோ மகன் குரல் கேட்டு வேகமாய் வந்தார்..
“ஏன்மா இவ்வளோ வேகம்…” என்று அவரை பிடித்து நிறுத்தினான்..
“இல்ல இந்த நேரத்துல வந்திருக்கியா..?? அதான் என்னவோன்னு…”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல… அய்யா எங்க???”
“அவர்தானே… காலையில சாப்பிட்டிட்டு ரூமுக்கு போனவர்.. இன்னும் வரலை.. எதோ கணக்கு பார்த்திட்டு இருக்கார் போல.. வேலு அண்ணன் இப்போதான் வந்திட்டு போனார்…”
“ஓ.. சரிம்மா… நான் பார்த்துக்கிறேன்…” என்று சொல்லி கஜேந்திரனை காண செல்ல, அவரோ முகம்மெல்லாம் கருத்து போய் எதோ யோசனையில் அமர்ந்திருந்தார்.. எப்போதுமே தெரியும் கம்பீரத்துடன் ஒரு குழப்பமும் சேர்ந்தே இருந்தது..
‘என்ன அய்யா இப்படி உட்கார்ந்திருக்கார்…’ என்று யோசனையாய் பார்த்தவன்,