“இல்ல எனக்கு தெரியும்… நான் பார்த்தேன்… ஒருநிமிஷம் உன் கண்ல கோவம் வந்து போச்சு… சொல்லு என்ன…??” என்று ஈசன் விடாமல் கேட்க,
“வந்து போச்சா… அது சரி… அதையே பிடிச்சு வச்சு கேட்க வேண்டியது தான.. அதை விட்டு என்னை கேட்டா எப்படி மாமா…??” என்றவள் அடுத்து தன் தட்டில் கவனம் செலுத்த, ஈசன் தான் உண்ணுவதை நிறுத்தியிருந்தான்..
ஈசனையும் தட்டையும் ஒரு பார்வை பார்த்தவள், “சாப்பிடுங்க மாமா…” என,
“எனக்கு சத்தியமா தெரியலை லஷ்மி… இன்னும் உன் மனசுல என்னயிருக்கு… நீ என்ன நினைக்கிற.. சத்தியமா தெரியலை…” என்றான் ஒருவித பாவத்தில்..
“என்ன வச்சிருக்கேன்… என் மனசில… ஒண்ணுமில்ல.. சாப்பிடுங்க மாமா…” என்றவள் மீண்டும் உண்ண, ஈசனோ அப்படியே அவளை பார்த்தே அமர்ந்திருக்க,
“சொல்றேன்ல சாப்பிடுங்க மாமா…” என்று அவள் இடக்கையால் அவன் வலக்கையை பிடித்து அவன் வாயருகே கொண்டு போக,
“ஒன்னும் வேணாம்.. நீயா எதுவும் சொல்ல மாட்ட.. நானே எல்லாம் கேட்கணும்… அப்படியே கேட்டாலும் எதுவும் சொல்லமாட்ட.. ஆனா என்னவோ வச்சிருக்க… சொல்ல மாட்ற…” என்றான்.
அவன் சொன்ன விதத்தில் அவளுக்கு லேசாய் சிரிப்பு வந்தது.. சிரித்தபடியே “என்ன வச்சிருக்கேன்… ஒண்ணுமில்ல என் மனசில…” என்றாள்.
“ஓ.. அப்போ நான் இல்லையா… என்னை வைக்கலையா உன் மனசில..”
“மாமா…” என்று விழிகள் விரித்தவள், எதோ ஜோக் கேட்டவள் போல் கலகலவென்று சிரித்தவள்.
ஏன் முறைத்தாள், இப்போது ஏன் சிரிக்கிறாள் என்று புரியாமல் பார்த்தான் ஈசன்.. சொல்லபோனால் லட்சுமியை நினைத்து அவனுக்கு இப்போது நிறையவே மனம் குழம்பியது..
‘என்ன பொண்ணுடா இவ…’ என்று ஆச்சர்ய பட வைத்தவள், ‘என்ன பொண்ணு இவ… புரிஞ்சுக்கவே முடியலை…’ என்று குழம்பவும் வைக்கிறாள்.. அவன் எண்ணத்தை கண்ணில் தேக்கி அவளை பார்க்க,
“என்ன மாமா… நீங்களா ஏதாவது கேட்கறீங்க… நான் என்ன செய்யட்டும்…” என,
“நீ ஒன்னும் பண்ண வேணாம்.. என்கிட்டே மனசு விட்டு பேசினா போதும்… எதுவா இருந்தாலும்… நமக்குள்ள லிமிட்ஸ் எதுவும் இல்லை.. அது புரிஞ்சுக்கோ…” என்று சொல்லும் போது லேசாய் கோவம் எட்டி பார்த்தது ஈசனுக்கு..
பின்னே எத்தனை முறை தான், எத்தனை விதத்தில் தான் ஒவ்வொன்றையும் என்ன என்ன என்று கேட்பது.. முன்பு கூட சரி, ஆனால் இப்போது, அவளும் அவனும் வேறல்லவே.. அவன் அப்படிதான் நினைக்கிறான்.. ஆனால் அவள் என்ன நினைக்கிறாள் என்றே அவனுக்கு தெரியமாட்டேன் என்கிறதே..
ஒரு கூட்டமுமே வந்தாலும் தனித்து எதிர்த்து நிற்கும், தைரியமும், வல்லமையும் கொண்டவன், அவன் மனைவி மனதில் இருப்பது எது என்று புரியவில்லை தெரியவில்லை என்றால் அது கஷ்டமல்லவா..
‘இவளிடம் நான் அத்தனை பலவீனமா??? இல்லை லஷ்மி அத்தனை கடினமா???’ இது இரண்டில் எது இருவருக்குள்ளும் நடக்கிறது என்று புரியவில்லை அவனுக்கு.. மண்டைக்குள் இவையனைத்தும் வண்டாய் குடைந்துகொண்டு இருக்க, உணவு எங்கே உள்ளே இறங்கபோகிறது, எப்போதுமே உணவை வீண் செய்ய கூடாது என்று அனைவருக்கும் சொல்லும் ஈசன், அன்று பாதியில் எழுந்தான்..
“மாமா….” என்று அவன் கைகளை பிடிக்க,
“விடு லஷ்மி…” என்றான்.
“முடியாது… சாப்பிடுங்க… என் புருசனுக்கு சாப்பிடும் போது இப்படி எழுந்தா பிடிக்காது…” என்று கடினக்குரலில் சொல்ல,
“அப்படியா யாரந்த பெரிய மனுஷன்…” என்று ஈசன் நின்றபடி கேட்க,
“ஹ்ம்ம் யாருன்னு சொல்றேன்… இப்போ நீங்க சாப்பிட்டு தான் ஆகணும்…” என்றாள்.
“ம்ம்ச்…” என்று ஒரு சலிப்போடு அவனும் உண்ண அமர்ந்தான்.
லட்சுமியின் சிறு சிறு முக மாற்றங்களும், பாவங்களும் கூட ஈசனுக்கு பெரும் யோசனைகளை கொடுத்தது.. எப்போதும் அவளையே சிந்தித்திருக்க சாத்தியமாகுமா??அவளை பற்றிய நினைவுகளில் மூழ்க மூழ்க அவனுக்கு அவனே பாரமாகி அல்லவா போகிறான்.. மீண்டும் ஒரு சலிப்பு.. என்னடா இது?? நானா இப்படி?? என்று..
“சாப்பிடும் போது இப்படி சலிப்பா சாப்பிட கூடாது…”
“இது யார் சொன்னது..???”
“இதுவும் என் புருஷன் தான்..”
“அவ்வளோ பெரிய ஆளா…???”
“பெரிய ஆளோ சின்ன ஆளோ…. எனக்கு புருஷன் அவ்வளோ தான்…”
“அவ்வளோ தானா…???”
“வேறென்ன மாமா…???” என்று அவள் நிமிர்ந்து பார்க்க,
“ம்ம் ஒண்ணுமில்ல…” என்றான்..
“சரி சாப்பிடுங்க…”
“நான் ஒண்ணுமில்ல சொன்னா நீ அடுத்து என்னன்னு கேட்கமாட்டியா…”
“ம்ம்ஹும் மாட்டேன்…”
“ஏன்..???”
“ஏன்னா… நானும் அப்படிதானே இருக்கேன்.. அதுனால கேட்க மாட்டேன்…” என்று லட்சுமி லேசாய் சிரித்து சொல்ல, சுத்தம் ஈசனுக்கு பைத்தியமே பிடித்துவிடும் போல் இருந்தது..
“தெரியுதுல்ல, நீ அப்படிதான் இருக்கன்னு… கொஞ்சம் புரிஞ்சுகோ லஷ்மி…”
“இப்போ என்ன மாமா உங்களுக்கு பிரச்சனை… நான் உங்களை ஏதாவது தொல்லை செய்றேனா?? இல்லையே…” என்றவள் பார்வை, இத்தோடு இந்த பேச்சை நிறுத்து என்பது போல் இருக்க,
லட்சுமி கண்களை தான் பார்த்தான்… எப்போதும் தெரியும் அந்த வெற்று பார்வை இப்போது தெரிகிறதா என்று.. ஆனால் அது தெரியவில்லை.. மாறாக வேறொன்று, என்னவென்று புரிந்துகொள்ள முடியாத பார்வை.. பேச்சில் காட்டும் நெருக்கம் பார்வையில் இல்லை..
ஈசன் எப்போதும் லஷ்மி பத்தி நினைக்க ஆரம்பித்தால், அவனுக்கு தோன்றும் உணர்வுகள் இரண்டு..
சித்தன் போக்கு சிவன் போக்கு என்று எதுவுமே வேண்டாம் என்று துறந்து செல்லும் நிலைக்கும் கொண்டு போகிறாள்.. இல்லையேல் அவள் மேல் பித்தம் கொள்ள செய்து, இவன் சித்தம் கலங்க வைக்கிறாள்..
ஏதாவது ஒரு உணர்வு தானே அவனால் கையாள முடியும்..??? இரண்டையும் எப்படி அவனால் வாழ்வில் எடுத்து செல்ல முடியும்..
“பைத்தியம் ஆக்குற டி நீ…” என்றான் அவளை பார்த்து..
“ஒரு நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க… அதை முழுசா என்ஜாய் பண்ண விடாம பேசிட்டே இருக்கீங்க மாமா..?? வீட்டுக்கு வர்றோம்னு அத்தை மாமா கிட்ட சொல்ல வேணாமா..??” என்று அழகாய் பேச்சை மாற்றினாள்.
அவள் மறுத்து மறுத்து பேச ஈசனுக்கு இன்னும் மனதினுள் கோவமும் வேகமும் வந்ததுதான். ஆனால் இப்போது தான் அனைத்துமே ஒருநிலையில் வந்து சேர்வது போல் இருந்தது.. இப்போது மறுபடியும் சண்டையிடும் எண்ணமெல்லாம் இல்லை.. சரி ஏதுவாக இருந்தாலும் பெரிய வீட்டிற்கு போனபிறகு பார்த்துகொள்வோம் என்றுவிட்டு விட்டான்.
“அங்க போயிட்டுத்தான் வந்தேன் லஷ்மி… ஆனா எதுவும் சொல்லலை.. உங்கிட்ட பேசிட்டு சொல்லலாம்னு வந்திட்டேன்.. ஆனா இப்போ நானே சொன்னா சரியா இருக்காது.. இவ்வளோ நேரம் இங்க தானே இருந்தான் சொல்லலைனு நினைப்பாங்க…” என்று சொல்லியபடி கை கழுவினான்.
“என்கிட்ட கேட்கனும்னா…” என்று தட்டை எடுத்தபடி அவளும் கேட்க,
“ம்ம்… கேட்டிட்டு தானே முடிவு பண்ண முடியும் லஷ்மி…” என,
“ஹ்ம்ம்…” என்று அவளாய் சிரித்து கொண்டவள்,
“உங்க கவுன்ட்டிங்ல இன்னொன்னு சேர்த்துக்கோங்க…” என்று சொல்லி, அவன் மற்றொரு கன்னத்தில் இதழ் பதிக்க,
“ஆகா… என்னதிது…” என்று ஈசன் ஆச்சர்யமாய் கேட்டான்.
“ஹ்ம்ம் என்ன இது… யோசிங்க மாமா…” என்றபடி சென்றுவிட்டாள்..
ஹப்பா….. தலையை உலுக்கிக்கொண்டான்.. ஆனாலும் அவளிட்ட முத்தம் ஒரு இதத்தை கொடுத்தது தான்.. அடுத்தடுத்து வேலை முடிந்து ஈசன் கிளம்ப, லட்சுமி கடையில் இருக்கிறேன் என்று சொல்ல,
“சரி போலாம்…” என்று இருவரும் அங்கே செல்ல, கஜேந்திரன் வீட்டில் இல்லை. மரகதமும், முத்தழகும் டிவி பார்த்துகொண்டிருக்க, ஈசனும் லட்சுமியும் உள்ளே வருவது பார்த்து, இதழ்கள் புன்னகைத்தாலும், என்ன என்று தோன்றாமலும் இல்லை..
“என்னய்யா ஈசா… அப்போ நீ வந்திட்டு போன, இப்போ உன் பொண்டாட்டி கூட வர்ற…” என்று முத்தழகு கேட்க, ஈசன் பதில் சொல்வதற்கு முன்னேயே,
“ஏன் பாட்டி, என் புருஷன் என்கூட வராமா யார் கூட வருவார்…?” என்று லட்சுமி கேட்க,
“அதுசரி… இந்நேரம் வந்து இருக்கீங்களே அதான் என்னான்னு பார்த்தேன்…” என,
ஈசனோ நீயே சொல் என்பது போல் பார்க்க, ‘ம்ம்ஹும் நீங்க தான் சொல்லணும்…’ என்று லட்சுமி ஜாடை காட்ட, ‘முடியாது நீதான்…’ என்று அவனும் சொல்ல,
“அட ரெண்டு பெரும் வந்ததில இருந்து இப்படி ஜாடை காட்டினா எப்படி..??” என்று மீண்டும் முத்தழகும் வாய் திறக்க,
மரகதமோ “என்ன லட்சுமி… என்ன விசயம்???” என்றார்.
“அது அத்தை… நாங்க இங்கவே வந்திடலாம்னு…” என்று சொல்லி முடிக்கவில்லை, மரகதம் மகன் முகத்தை பார்த்தவர், மருமகள் கையை பிடித்துக்கொண்டார்.. “நிஜமாவா…” என்று..
“ம்ம்… ஆமா அத்தை.. மாமா சொல்லுங்க…” என்று ஈசனையும் பேச்சில் இழுக்க,
“எல்லாம் நல்லதே நடக்கும்.. பார்த்தியா நான் சொன்னேன்ல… லட்சுமி இதே நல்ல சேதியோட இன்னொரு நல்ல சேதியும் சீக்கிரமே சொல்லு…” என்று முத்தழகு சொல்ல,
என்ன நல்ல சேதி என்று அங்கிருப்பவர்களுக்கு புரியாதா என்ன…??
குழந்தை…
இன்னும் லட்சுமி அதை பற்றி நினைக்க கூட இல்லை.. வேண்டாம் என்றெல்லாம் இல்லை.. ஆனால் இன்னும் தங்கள் வாழ்வே சீராக செல்ல தொடங்கவில்லை என்ற நினைப்பு அவளுக்கு இருக்கையில், அதன் அடுத்த கட்டமாய் குழந்தை பற்றிய எண்ணமெல்லாம் இல்லவே இல்லை..
ஈசன் அமைதியாய் அனைவரையும் பார்த்தவன் அவனும் ஒன்றும் பேசவில்லை.. என்னவோ அவனுக்கு லட்சுமி ஒன்றும் சொல்லாமல் இருப்பது எப்படியோ இருந்தது. ஆக பேச்சை மாற்றிவிட்டான். நேரம் போனது தெரியவில்லை.. மரகதம் இருவரையும் இங்கேயே உண்ண சொல்ல,
“இல்லம்மா கசகசன்னு இருக்கு.. குளிக்கணும்… எல்லாம் எடுத்து வைக்கணும் வேலை இருக்குல.. அய்யா வந்ததும் சொல்லிடுங்க…” என்று சொல்லி ஈசன் எழ, லட்சுமியும் அவனோடு எழுந்து, கிளம்பி சென்றாள்..
அங்கே சென்றால், அப்போதுதான் பேச்சி அங்கு வந்து, வீடு பூட்டிருக்கவும், திரும்பிக்கொண்டு இருந்தார்..
அவரை கண்டதும், “ம்மா…” என்றழைத்த லட்சுமி, “என்னமா வீட்டுக்கு வந்தியா…” என,
“ஆமா லட்சுமி…. கதவு பூட்டியிருந்துச்சு..” என்று பேச்சி சொல்ல, அதற்குள் கதவை திறந்திருந்த ஈசன், “அத்தை உள்ள வாங்க…” என்றழைக்க,
“ஆமா மா.. கடைக்கு போயிருந்தோம்…” என்று தன் அம்மாவோடு பேசியபடி லட்சுமியும் உள்ளே நுழைந்தாள்..
அதற்குள் ஈசன் அறைக்குள் சென்றிருக்க, லட்சுமி உள்ளே வரவும் “லஷ்மி…” என்றழைக்க, “இரும்மா வந்திடுறேன்…” என்றுவிட்டு உள்ளே சென்றாள்..
“ம்ம்ச் இதெல்லாம் செய்யணும்..” என்றவன் மீண்டும் வெளியே கிளம்பி சென்றான்..
அவன் சென்றதும் பேச்சியிடம் வழக்கம் போல் பேசியவள், “ம்மா… நாங்க பெரிய வீட்டுக்கே போக போறோம்…” என்று சொல்ல, பேச்சிக்கு சந்தோசம் ஒருபக்கம் என்றாலும், இதெப்படி சாத்தியமானது என்று மகளை பார்க்க,
“மாமாவா சொன்னாங்க…” என்றாள் மகிழ்வாய்..
“சந்தோசம் டி லட்சுமி.. நானும் ஒரு முக்கியமான விஷயம் பேசதான் லட்சுமி வந்தேன்…” என்று ரகசியம் போல் சொல்ல,
“என்னமா…??? என்ன..” என்றாள் வியப்பாய்.
“இரு டி.. தம்பியும் வந்திடட்டும்… பேசிக்கலாம்…”
“ஏன் என்கிட்ட சொல்ல மாட்டியா…”
“உன்கிட்ட சொல்லாம என்ன… எல்லாம் மனோஜ் அப்பா பத்தி தான்…” என்று பேசும் பொழுதே ஈசன் வந்துவிட்டான்..
“லஷ்மி அத்தைக்கு வச்சு குடு…” என்று வாங்கி வந்த பார்சலை நீட்ட,
அவளும் பேச்சிக்கு வைத்தவள், ஈசனுக்கு வைத்து கொடுக்க, “நீ…” என்பது போல் பார்த்தனர் இருவரும்..
“நானும் தான் சாப்பிடுவேன்…” என்றவளும் அமர,
“தம்பி… கொஞ்சம் பேசணும்…” என்று பேச்சி ஆரம்பித்தார்..
லட்சுமியும் ஈசனும் என்ன என்பது போல் அவர் முகம் பார்க்க,
“எனக்கென்னவோ நடக்கிறது எதுவும் சரியா படலை தம்பி.. மனோஜ் அப்பா என்னவோ செய்றார்.. என்னான்னு தெரியலை.. லட்சுமி பேருக்கு இந்த கொஞ்ச மாசமாவே எந்த பணமும் போடலை… அதுவுமில்லாம என்கிட்ட இருக்கிறதுக்கு என்னவோ பவர் வேணும்னு கேட்கிறார்.. என்ன எதுன்னு ஒன்னும் விவரம் புரியலை…” என
“ம்மா… இதெல்லாம் பெரிய விசயமா.. சித்தப்பா ஏதாவது செய்வாரா இருக்கும்…” என்றாள் லட்சுமி பட்டென்று.
“லஷ்மி… அத்தை சொல்லட்டும்…”
“இல்ல லட்சுமி, அவங்க பேச்சு எதுவும் சரியில்லை… முத்தரசி வேற கொஞ்ச நாளா, நாங்க தனியா போனாலும் போவோம் அப்படினு சொல்றா.. கேட்டா மனோஜ் படிப்ப காரணம் காட்டுறாங்க..
மதுரைல உன் பேர்ல ஒரு இடம் இருக்கு.. உங்கப்பா இருக்கும் போது வாங்கி போட்டது… இப்போ கோடி கணக்குல போகும்.. சும்மாதானே கிடக்கு, அதை வித்துட்டு இங்க ஊருக்குள்ள நாலைஞ்சு வீடு கட்டினா மாசா மாசாம் வாடகை வரும், மிச்சத பேங்கில போடலாம்னு நினைச்சு, மனோஜ் அப்பாக்கிட்ட பேசினா, அப்படி ஒரு இடமே இல்லைன்னு சொல்றார்.. ” என்று குழப்பமாய் பேச,
ஈசனுக்கோ மனதில் ஆணித்தரமாய் நடப்பது எதுவுமே சரியில்லை என்று பட்டது.. அவனுக்கு தெரியும், சக்திவேல் இருக்கும் போது அவர் மகள் மனைவிக்கென்று எத்தனை சேர்த்துவைத்தார் என்று.. இந்த இடம் அவனும் கேள்விபட்டிருக்கிறான்.. முன்னொரு முறை சக்திவேலோடு மதுரை சென்ற பொழுது அவனும் அவ்விடத்தை பார்த்திருக்கிறான்..
“ம்மா… நீயா எதுவும் குழம்பாத…” என்று லட்சுமி சொல்ல,
“லஷ்மி அத்தையை பேச விடு…” என்ற ஈசனின் குரலில் அப்பட்டமாய் கடினம் தெரிந்தது… அவ்வளவு தான்.. அவளும் வாய் மூடிக்கொண்டாள்..
ஆனால் லட்சுமியின் மனமோ, பேச்சி ஏதாவது சொல்லி, அதைகொண்டு ஈசன் ஏதாவது வேலாயுதத்திடம் கேட்டு வீண் பிரச்சனை எதுவும் வந்துவிடக்கூடாதே என்று நினைத்தது..
“அத்தை நீங்க சொல்லுங்க…”
“அதான் தம்பி… இந்த கொஞ்ச நாளாவே, வாடகை பணம், குத்தகை பணம், அப்புறம் அவங்க அப்பா இருக்கும் போது வட்டிக்குன்னு விட்டது, இப்போ அதுவே பெரிய தொகையா இருக்கும்.. அதுக்கெல்லாம் ஒரு கணக்குமே வரலை.. முதல்ல நானும் கண்டுக்கலை.. ஆனா இப்போ நாள் ஆக ஆக ஒருமாதிரி சங்கடமா இருக்கு.. எதுவும் சொல்றதில்லை. மனோஜ அவங்க மாமா வீட்டுக்கு அனுப்பி விட்டாங்க…. அதான் கொஞ்சம் நீங்க என்ன எதுன்னு விசாரிச்சா நல்லாருக்கும்…”
“வேலு மாமா கிட்டவே பேசவா அத்தை…” என,
பேச்சிக்கு முந்தி லட்சுமி “வேணாம் மாமா…” என்று பதில் சொல்லிவிட்டாள்.
ஏன் என்று மற்ற இருவரும் பார்க்க, “இல்.. இல்லை மாமா.. பண விஷயம்.. நேருக்கு நேரா பேசினா ஏதாவது பிரச்சனை ஆகிட்டா…” என்றாள் தயக்கமாய்.
“ஒன்னும் ஆகாது நான் பார்த்துக்கிறேன்… அத்தை நீங்க கவலை பட வேணாம்.. வேலு மாமா கிட்ட பேசுறதுக்கு முன்னாடி நான் வெளிய என்ன எதுன்னு விசாரிச்சு பார்க்கிறேன்… நாளைக்கு நாங்க பெரிய வீட்டுக்கு போயிடுவோம்.. அதுக்கு அப்புறம் என்னன்னு பார்க்கிறேன்…” என்று ஈசன் தைரியம் சொல்ல,
“ம்ம் சரிங்க தம்பி…” என்றார் பேச்சியும்.
அடுத்து மேலும் சில விவரங்கள் கேட்டறிந்தவன், “இருந்து சாப்பிட்டு போங்கத்தை..” என்றுவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்..
மனம் அடித்துகொண்டது.. திண்ணமாய் என்னவோ இருக்கிறது, என்னவோ நடக்கிறது என்று தோன்றியது.. எதுவானாலும் சரி, பெரியாதாய் எதுவும் அசம்பாவிதம் நடக்குமுன்னே இந்த வேலாயுதம் என்ன செய்கிறார் என்று கண்டறிய மனம் பரபரத்தது..