மதுரையின் மிக பெரிய பல்துறை மருத்துவமனை… அதன் தோற்றமும், பிரம்மாண்டமும், மருத்துவ வசதிகளும், இங்கே வந்தால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை கொடுத்தாலும், மனதில் ஒரு பயத்தையும் சேர்த்தே கொடுத்தது..
கஜேந்திரன், இதய நோய் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.
யாருமே எதிர் பார்க்காத ஒன்று.. கனவில் கூட இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் நினைத்து பார்த்ததில்லை.. நினைக்க அப்படி ஒன்றும் தோன்றவில்லை..
எல்லாமே சீராய் போகிறது என்று அனைவரும் நினைத்திருந்த வேலையில், அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று கூறும் விதமாக, அதுவும் அனைத்தின் உச்சகட்டமாய் கஜேந்திரன் தன் நெஞ்சை பிடித்து சரிந்த போது, ஈசனது குடும்பம் மொத்தமுமே அவரோடு சேர்ந்து சரிந்து தான் போனது…
அவர் அப்பா காலத்தில் இருந்து ஆரம்பித்த வட்டி லேவாதேவி, கஜேந்திரன் காலத்தில் இன்னும் மெருகேறி, மதுரை, தேனி, விருதுநகர் என்று தென் மாவட்ட முக்கிய பிரமுகர்கள் கூட, தங்களது தேவைக்கு என்று பணம் வாங்கி, இல்லை தங்களிடம் இருக்கும் பணத்தை பெருக்குவதற்காக நம்பி கொடுத்து என்று கஜேந்திரன் அவரது தொழிலுக்கும், அவருக்கும் என்று உருவாக்கிய ஒரு பெயர், இன்று வேலாயுதம் ரூபத்தில் அடியோடு ஆட்டம் கண்டுவிட்டது..
என்னதான் சொத்து பத்துகள் நிலம் நீச்சுகள் நிறைய இருந்தாலும், கஜேந்திரனுக்கு இப்படி பணத்தை பெருக்குவதில் ஒரு தனி மோகம் உண்டு. அதற்கென்று யாரிடமும் அடித்து பிடுங்கியது இல்லை.. அநியாயமாய் நடந்துகொண்டது இல்லை..
நிஜமாகவே வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு தன்னிலத்திலேயே வேலையும் கூட கொடுத்திருக்கிறார்.. அது போல் வாங்கிய அசலுக்கு மேலாய் கூடுதலாய் வட்டி கொடுத்தவர்களிடம், அதாவது மத்திய தர குடும்பத்து ஆட்கள் நிறைய பேரிடம் பாதி அளவு அசல் கூட வாங்கியிருக்கிறார்..
இது ஒரு பக்கம் என்றால் தொழில் தொடங்க என்று பெரிய பெரிய ஆட்கள் கூட இவரிடம் பணம் வாங்கியதுண்டு..
இப்படி அனைத்துமே சரியாய் முறையாய், கணக்கிடப்பட்டு, ஒரு முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டு இருக்கையில், பணத்துக்கு பணமும் பெருகியது, தங்களிடம் பணம் கொடுத்தவர்களுக்கும் சரியான நேரத்தில் உரிய முறையில் திருப்பி கொடுத்து, கடன் வாங்குபவர்களிடமும் நல்ல முறையில் பெயர் எடுத்து என்று அனைத்துமே சிறப்பாய் சென்றுகொண்டு இருந்தது..
பணம் சம்பாரிப்பதை விட, அந்த பெயர்… ஈசன் எந்த பெயருக்காய் இப்படி ஓடி ஓடி ஒவ்வொரு தொழிலும் கால் பதிக்கிறானோ அதுபோலவே அன்று கஜேந்திரனும்.. பணத்தை தாண்டிய பெயருக்காகவே இந்த தொழில் மீது இன்னும் மோகம் அவருக்கு.. ஆனால் அவருக்கு பலத்த இழப்பு என்பது சக்திவேல் மரணம்..
லட்சுமியும் பேச்சியும் சக்திவேல் மரணத்தில் எத்தனை துவண்டு போயினரோ அத்தனை துவண்டு போனார் கஜேந்திரன்.. மாமன் மச்சான் என்ற உறவுக்கும் மேலாய், உற்ற நண்பர், நம்பிக்கைக்கு பாத்திரமானவர், அவர் இருந்ததினாலேயே இத்தனை சம்பாரிக்க முடிந்தது என்ற எண்ணம் திண்ணமாய் இருந்தது..
ஆனால் அவர் மறைவிற்கு பின்னால், சக்திவேலின் தம்பி என்ற ஒரே ஒரு காரணத்தினாலேயே வேலாயுதத்தை கஜேந்திரன் ஏற்றுகொண்டார்.
ஆனால் இன்று???? அனைத்தும் அடியோடு மாறிவிட்டது..
பேச்சி வீடு வந்து, லட்சுமி ஈசனிடம், வேலாயுதம் பற்றி சொல்லி சென்ற பிறகும் கூட லட்சுமி அதை பெரிதாய் நினைக்கவில்லை..
“என்னவோ மாமா… இதெல்லாம் சித்தப்பா காதுக்கு போனா அவர் எவ்வளோ வருத்தபடுவார்..” என,
“ஏன் அவர் காதுக்கு போக போகுது.. எதுவும் போகாது… நான் வெளிய தான் விசாரிக்க போறேன்…” என்றான் அவனும்.
“வெளிய யாரும் சொல்லாம இருப்பாங்களா..??”
“சொன்னா என்ன லஷ்மி… நான் என் பொண்டாட்டிக்கு என்ன இருக்கு?? எங்க இருக்குனு விசாரிச்சேன்னு சொல்வேன்…”
“அ..” என்று வாய் பிளந்தாள்..
“என்ன லஷ்மி…”
“இப்படியேவா சொல்வாங்க…???”
“பின்ன வேறெப்படி சொல்ல சொல்ற.. இல்லை நேராவே போய் கேட்கவா??? லஷ்மிக்கு அவங்க அப்பா சேர்த்து வச்சது, அதுமூலமா வந்த வருமானம், இன்னும் இருக்க நிலம் அது இதெல்லாம் இப்போவே அவளுக்கு கொடுங்கன்னு கேட்கவா…???” என.
“அய்யா சாமி… நீங்க வெளியவே விசாரிங்க…” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டாள்..
“ம்ம் இது சரி…” என்று கும்பிட்ட அவள் இரு கரங்களையும் ஒருசேரவே பிடித்து,
“இங்க பார் லஷ்மி, அத்தைக்கும் நம்மை விட்டா வேற யாருன்னு… அவங்க சொன்னதுக்காகவாது நான் இதை பார்க்கணும்…” என்று இலகிய குரலில் சொல்ல, அந்த குரல் கொடுத்த மாற்றத்தில் லட்சுமி சரியென்று தலை மட்டும் தான் ஆட்ட முடிந்தது..
இவர்கள் நினைப்பு இதில் இருக்க, மரகதமோ எத்தனை வேகத்தில் இவர்களை இங்கே கொண்டு வருவது என்று யோசித்திருப்பார் போல, உடனே அழைத்துவிட்டார்.
“லட்சுமி… நாளைக்கு காலைல ஆறரை மணிக்கு நல்ல நேரம், நீயும் ஈசனும் இங்க வந்திடுங்க.. பொருள் எல்லாம் அப்புறம் ஆள் விட்டு எடுக்க சொல்லிடுவோம்…” என,
“சரிங்கத்தை வர்றோம்…” என்று வைத்துவிட்டு ஈசனிடம் சொல்ல, அவனோ பலமாய் சிரித்தான்.
“இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க மாமா…” என்று அவன் முதுகில் தட்ட,
“ஹ்ம்ம் தைரியம் கூடி போச்சு… இந்த ஊர்லையே.. அவ்வளோ ஏன் இந்த உலகத்துலேயே என்னை அடிக்கிற தைரியம் உனக்குத்தான் போ…” என்று மீண்டும் அவளை வம்பிழுக்க,
“ஆமாமா இவரு பெரிய இவரு…” என்று அவளும் நொடிக்க,
“ஓ.. அப்போ நான் பெரிய ஆள் இல்லையா… எங்க சொல்லு சொல்லு… நான் பெரிய ஆள் இல்லையா..” என்று அவளை நோக்கி முன்னேறி வர,
“இப்ப எதுக்கு மாமா இப்படி வர்றீங்க…” என்று கேட்டவளும் பின்னே நகர்ந்தாள்..
“நீதான சொன்ன.. நான் பெரிய இவரான்னு.. அப்போ என்னை சமாளிச்சு பாரேன்…” என்று மீண்டும் முன்னேற, பின்னே நகர்ந்தவளோ பொத்தென்று சோபா இடித்து அதிலேயே விழ, இதை எதிர்பார்த்தே இருந்தவன் போல் அவனும் அவளருகே விழ,
“மாமா… இதெல்லாம் வில்லத்தனம்…” என்று லட்சுமி சொல்ல,
“அடிப்பாவி சட்டுன்னு வில்லன் ஆக்கிட்ட…” என்று கேட்டவனும், வில்லத்தனமும், விஷமத்தனமும் தான் செய்தான்…
லட்சுமிக்கு சிலிர்ப்பாக இருந்தாலும், சிணுங்கினாலும் விலகவெல்லாம் இல்லை… எப்போதுமே அவள் ஈசனின் அருகாமையில் இருந்து விலகியதில்லை.. விலக எண்ணியதும் இல்லை..
‘லஷ்மி…’ என்று இறுக அணைத்திருந்தவன், அவள் கழுத்தில் முகம் அழுத்தியிருக்க, அப்படியே இருந்தபடி தான் பேசினான்..
“அங்கபோனா இப்படியெல்லாம் கொஞ்ச முடியாது…”
“ஏன்…???” என்று கேட்டவளுக்கு குரலும் எழும்பவில்லை, அந்நேரம் வேறு எந்த யோசனையும் இல்லை..
“ஏன்னா… ஹல்லா வச்சு இப்படி கொஞ்ச முடியுமா…???” என்று ஈசன் கேட்டபோது, லேசாய் அவன் உடல் குலுங்க, சிரிக்கிறான் என்று உணர முடிந்தது..
ஈசனை அணைத்திருந்த அவள் கரங்களோ, மீண்டும் பட்டென்று ஒரு அடி போட, அவனோ இன்னும் அணைப்பை இறுக்கினான்.. முரட்டு அணைப்பு… இந்த சுதந்திரம் இனி கிடைக்காதே என்ற எண்ணத்தில் வந்த முரட்டு அணைப்பு..
இந்த நொடியை இப்போதே அனுபவித்துவிட வேண்டும் என்ற வேகமும், என்னவோ இனிமேல் அவனுக்கும் லட்சுமிக்கும் இப்படியொரு இனிய தருணம் வாய்க்காது என்ற எண்ணம் தோன்றியதோ என்னவோ,, இத்தனை நாளில் இல்லாத ஒரு வேகமும், ஆவலும், ஆசையும் ஈசனிடம் தோன்ற, தன்னுணர்வுகளை அவளும் உணரச் செய்தான்.. லட்சுமியை விட்டு விலகவேயில்லை.. அவளையும் தள்ளி போக விடவில்லை..
அதன் பின் இருவருக்குமே உறக்கம் என்பது சிறிதும் இல்லை.. இருவருமே உறங்கவில்லை என்பது இருவரும் அறிந்த ஒன்றுதான் ஆனாலும் பேசிக்கொள்ளவில்லை.. ஒரு மோன நிலை… தலையணையில் தலைவைத்திருந்தவள், மெல்ல நகர்ந்து ஈசன் நெஞ்சில் முகம் வைத்து படுத்து,
“தூக்கம் வரலையா…”என,
“ம்ம்ஹும்…” என்றவனோ இன்னும் அவளை தன்மேல் அழுத்திக்கொள்ள,
ஈசன் நெஞ்சில், லட்சுமி தன் நாடி வைத்து அழுத்தி, மெல்ல முகம் மட்டும் நிமிர்த்தி, அவன் முகம் பார்க்க, அவனோ கண்கள் மூடியிருந்தான்.. அவள் நிமிர்ந்து பார்ப்பது உணர்ந்தும் அவன் கண்கள் திறக்காமல் இருக்க, இன்னும் தன் நாடியை அழுத்தினாள் லட்சுமி..
“ஏய் வலிக்குது டி…” என்று ஈசன் வேண்டுமென்றே அப்போதும் கண் திறவாமல் சொல்ல,
‘ம்ம் இது வேலைக்கு ஆகாது…’ என்றெண்ணியவள் “போயா…” என்று சொல்லிவிட்டு மீண்டும் பழையபடி படுத்துக்கொள்ள,
“என்னது போயாவா???!!!!” என்று ஆச்சர்யமாய் கண்கள் திறந்து ஈசன் கேட்க,
“போடா சொல்ல தான் தோணிச்சு. ஆனா நீங்க தான் பெரிய இவரு ஆச்சே… அதான் கொஞ்சம் மரியாதையா போயா சொன்னேன்…” என்று சொல்லி சிரித்தவள்,
மீண்டும் “போயா…” என்று சொல்ல, அப்போதும் ஈசன் ஒன்றுமே சொல்லாமல் அவளை காண, “ஏன் மாமா பிடிக்கலையா???” என்றாள்.
“நீ என்ன சொன்னாலும் பிடிக்கும்… பிடிக்காதுன்னு சொல்ல முடியுமா..??” என்று ஈசன் கேட்டாலும், அவள் முகத்தையே ஆச்சர்யமாகவும், ஆனந்தமாகவும், ஆசையாகவும் பார்க்க,
“என்ன அப்படி ஒரு பார்வை..??” என்றாள்.
“ஹ்ம்ம்… இந்த நிமிஷம்… இப்போ என் கண் முன்னாடி இருக்க லஷ்மி ரொம்ப புதுசா தெரியுறா.. அதான் பார்த்தேன்…”என, அதற்கும் அவள் கலகலவென்று சிரித்தாளே தவிர வேறெதுவும் சொல்லவில்லை..
அடுத்து ஈசனும் கூட ஒன்றும் பேசவில்லை.. மீண்டும் ஒரு மோன நிலை.. இருவருக்குமே அது பிடித்திருக்க, அப்படியே உறங்கியும் போயினர்.
விடிந்ததும் இருவரும் தயாராகி கிளம்பி அங்கே செல்ல, அந்நேரத்திலேயே கஜேந்திரன், முத்தழகு, எல்லாம் இவர்களுக்காய் எதிர்பார்த்து நிற்க, இருவருக்குமே ஒரு நிறைவு மனதினுள். விளக்கேற்றி சாமி கும்பிட்டு என்று நேரம் செல்ல, ஈசன் மேலே அவனறையில் இருக்க, லட்சுமியும் அங்கே வர,
“வா லஷ்மி… திங்க்ஸ் எல்லாம் எடுக்கும் சொல்லு லஷ்மி வரேன்… இப்போ பண்ணைக்கு போகணும்… ஒரு பதினோரு மணிப்போல வந்து கடைக்கு கூட்டிட்டு போறேன்.. இல்ல இன்னிக்கு வர்றியா இல்லை நாளைக்கு வர்றியா…” என்று அவனே கேட்க, ஒன்றுமே சொல்லாமல் கைகளை கட்டி அவனை முறைத்தாள் லட்சுமி..
“ஹே என்னடி…??!!”
“வந்த உடனே எங்க ஓடுறீங்க..??”
“அதுசரி.. இதென்ன விருந்தாடியா வந்திருக்கோம்.. நம்ம வீடு தானே…”
“ஆனா வந்து கொஞ்ச நேரம் கூட ஆகலை.. உடனே கிளம்புறீங்க..” என்று குறைபட்டாள்..
“ஹ்ம்ம் கொஞ்சம் சீக்கிரம் வேலை முடிச்சா உன்னை தேனிக்கு கூட்டிட்டு போலாம்னு இருந்தேன் லஷ்மி…”
“தேனிக்கா…??!!!” என்று ஆச்சர்யமாய் தான் கேட்டாள்..
“நேத்து ஒரு இடம் பார்த்தேன்ல. அதான் உன்னையும் கூட்டிட்டு போய் காட்டலாம்னு…”
“சரி போவோம்.. அப்போ இப்போ நான் கிளம்பலாம மகாராணி.. உங்க உத்தரவு கிடைக்குமா…” என்று கிண்டல் போல் கேட்க,
“மாமா…!!!!!” என்று சிணுங்கியவள், “பொழச்சு போங்க…” என்று அவன் கிளம்ப அனுமதி தந்தாள்..
அவன் சென்றதும் அறையில் நின்று சுற்றி பார்த்தாள்.. ஈசனின் அறை மிக பெரியது.. ஆனால் அங்கே இருக்கும் பொருட்களோ மிக மிக கம்மி.. கட்டில், அதை ஒட்டி சிறு மேஜை, அதனருகே ஒரு நாற்காலி.. பின் அவனது பீரோ.. இவை மட்டுமே அங்கே.. மற்றொரு பக்கத்தில் குளியலறை..
அளவான பொருட்களே அவ்வறையை இன்னும் பெரியதாய் காட்ட, சுற்றி தன் விழிகளை ஓட்டியவளுக்கு முதல் நாள் இரவு ஈசன் சொன்னது நினைவில் வந்தது..
‘அங்க போனா இப்படி இருக்க முடியாது…’ என்று சோபாவில் அவளை அணைத்தபடி ஈசன் சொன்னது நினைவில் வர, அடுத்து இந்த அறையில் என்ன மாற்ற வேண்டும் என்று கணக்கு போட்டாள்.
பின் சிறிது நேரத்திலயே தோட்டத்தில் வேலை செய்யும் ஆட்கள் வந்துவிட, அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே அந்த வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் இங்கே வந்து வைத்தாயிற்று..
எப்போதுமே இரவு வந்தபின் ஈசன் சோபாவில் அமர்ந்து டீபாயின் மேல் கால் நீட்டி டிவி பார்ப்பான்.. இங்கே அறையிலும் அது போலவே அவள் செய்திருந்தாள். கட்டிலை சற்று தள்ளி போட சொல்லி என்று சிறிது மாற்றம் செய்து, அனைத்தும் செய்து முடிக்கையில் அந்த அறையே வித்தியாசமாய் பட, ‘ஈஸ் மாமா வந்து பார்க்கணும்…’ என்று அவளே சொல்லி சிரித்துக்கொண்டாள்..
அப்படி அடுத்து அடுத்து நேரம் செல்ல லட்சுமியோ நொடிக்கொரு முறை கடிகாரம் பார்த்தாள்.
“என்ன லட்சுமி… கடிகாரத்தையே பார்க்கிற…”
“அது அத்தை.. ஈஸ் மாமா வந்து கடைக்கு கூட்டிட்டு போறேன் சொன்னார்…”
“ஏன் எதுவும் வாங்கனுமா???”
“இல்ல அத்தை நம்ம சூப்பர் மார்கெட் தான்… அங்க கொஞ்சம் நின்னு பார்க்க சொன்னாங்க.. அதான்…”
“ம்ம் சரி போன் போடு.. இதெல்லாம் இப்போ இருந்தே பழகிட்டா நல்லது… நாங்க பாரு வீடு தான் உலகம்னு இருக்கோம்…”
“சரி..” என்று லட்சுமி சொல்லிகொண்டிருக்கும் போதே, வேலாயுதம் வந்தார்..
“சித்தப்பா, வாங்க…” என்று லட்சுமி வரவேற்க, மற்ற இரு பெண்களும் அவரை வரவேற்க தவறவில்லை. லட்சுமியை அங்கே அவர் எதிர்பார்க்கவில்லை போல.. லேசாய் அவளை கண்டு அதிர்ந்தவர், அனைவருக்கும் பொதுவாய் தலையசைத்துவிட்டு,
“மாமா இல்லையா..” என்று கஜேந்திரனை கேட்க,
“உட்காருங்கண்ணா.. தோப்புக்கு போயிருக்கார்.. வர சொல்லவா..” என்று மரகதம் கேட்க,
“இல்ல இல்ல.. வேணாம் அப்புறம்… இந்த பை.. மாமா வந்தா கொடுத்திடும்மா… நான் அவர்கிட்ட போன்ல சொல்லிக்கிறேன்…” என்று அவர் பேசுகையிலேயே ஒரு ஒரு பதற்றம் தென்பட்டது அவரிடம்..
லட்சுமி அவரை பார்த்தவள், “ சித்தப்பா, உடம்பு எதுவும் சரியில்லையா…”என,
முகத்தில் அரும்பியிருந்த வியர்வையை துடைத்து, “இல்லமா அதெல்லாம் இல்ல… ஆமா நீ என்ன இங்க..??” என்றார்.
“நானும் மாமாவும் இங்கவே வந்திட்டோம்…” என, லட்சுமி சொன்னது கேட்டு இன்னும் அதிர்ச்சி தான் அவருக்கு. ஆனாலும் வெளியே ஒன்றும் காட்டாமல்,
“ஓ.. நல்லது.. சரி நான் கிளம்புறேன்.. வேலை இருக்கு…”என்று கிளம்ப,
சரி என்று பெண்கள் தலையாட்டினாலும், வேலாயுதம் பேச்சிலும், நடவடிக்கையில் பெரும் மாற்றம் இருப்பது அப்பட்டமாய் தெரிந்தது..
“என்ன இப்படி ஓடுறார்…” என்று மரகதம் சொல்ல,
“அதென்ன அவசரமோ…” என்று முத்தழகு சொல்லியபடி உள்ளே செல்ல,
லட்சுமிக்கு மனதில் ஒருமாதிரி இருந்தது.. என்னவோ நடக்கபோகிறது என்பது போல் தோன்ற, அவர் கொடுத்த பை பார்க்க, அதுவோ கனமாய் இருப்பது போல் தெரிந்தது.. தூக்கி பார்த்தாள்.. கனமாய் இருந்தது.. திறந்து பார்த்தாள்.. உள்ளே வெறும் கணக்கு நோட்டுக்கள்..
‘இவ்வளோ கணக்கு நோட்டா… அதையேன் சித்தப்பா இங்க கொண்டு வந்து கொடுத்தார்..’ என்று யோசனையோடு இருக்க,
“லட்சுமி ஒருகை பிடி… இதை உள்ள வைக்கலாம்…” என்று மரகதம் சொல்ல,
“இல்லத்தை நானே தூக்கிடுறேன்…” என்று சிரமப் பட்டே அந்த பையை தூக்கி கொண்டு போய் கஜேந்திரன் அறையில் வைத்தாள்.
அந்த பையின் கனம் போலவே லட்சுமியின் மனதிலும் கனம் கூட, சட்டென்று மனத்தில் ஒரு எண்ணம், அங்கே அவள் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று.
வெளியே வந்தவள் மரகதத்திடம், “அத்தை ஈஸ் மாமா வந்தா சொல்லிடுங்க… நான் அம்மா வீடு வரைக்கும் போய்ட்டு வரேன்…” என,
‘என்னடா இது இப்போது தான் வந்திருக்கிறாள்…’ என்று எண்ணம் தோன்றினாலும் அவள் முகம் எப்படியோ இருப்பது பார்த்து, மரகதம் சரி என்று தலையாட்டினார்.
“கொஞ்ச நேரத்தில வந்திடுவேன் அத்தை…” என்று சொல்லிச் சென்றாள்.