பத்து நாட்கள்… கடினமான பத்து நாட்கள்.. மொத்தமாய் மாறுபட்ட சூழலில், அதிலும் மனத்தில் எண்ணிலடங்கா குழப்பத்தை சுமந்துகொண்டு மருத்துவமனை வாசம் என்பது யாருக்குமே மிக மிக கடினம் தான்..
எப்படியோ இந்த பத்து நாட்களும் கட கடவென்று கடந்துவிட்டது.. கஜேந்திரன் இன்று வீடு திரும்பும் நாள். இத்தனை நாள் அவருக்கு முழுக்க முழுக்க மருத்தவத்தில்கழிய, அவரை சுற்றி இருந்தவர்களுக்கோ வேறு விதமாய் இருந்தது..
முக்கியமாய் ஈசனுக்கும், லட்சுமிக்கும்..
ஈசன் சொன்னதுபோல் அன்று இரவு லட்சுமி பாலாவோடு வீட்டிற்கு வந்து பின் மறுநாள் தேவையானதை எடுத்துவைத்துக்கொண்டு மதுரை கிளம்ப, முத்தழகு கண்டிப்பாய் நானும் வருவேன் என்று அடம் பிடிக்க,
“பாட்டி, மாமாவ இன்னிக்கு தான் ரூமுக்கு மாத்துறாங்க.. ஈஸ் மாமா இங்க வருவாங்க.. நாளைக்கு நீங்க அம்மா எல்லாம் வாங்க…” என்று லட்சுமி சொல்ல, அவரோ கேட்பதாய் இல்லை..
பெற்ற மனம் அல்லவா??
“அங்க தான் ரூமு இருக்குல… நானும் வருவேன்…”
“சரி கிளம்பு.. ஆனா அங்க வந்து சத்தம் போட்டு அழக்கூடாது, வேற எதுவும் பேசக்கூடாது…” என்று பாலா சொல்லியே அவரை அழைத்துச் சென்றான்.. பேச்சி மட்டும் தனியே இருப்பதா என்றிருக்க,
“ம்மா வீட்ல பணம் இருக்கு மா.. பெரிய தொகை.. யாருமில்லைனா சங்கடம்…” என்று லட்சுமி சொல்ல,
“ம் அப்படியா லட்சுமி.. ஆனா நானா இருக்கவும் சங்கடமா இருக்கு.. ஆளுங்க வந்து வந்து விசாரிச்சிட்டு போறாங்க…” என்று பேச்சி தயங்க,
“கொஞ்ச நேரம் இரும்மா.. எப்படியும் ஈஸ் மாமா திரும்ப வருவார் இங்க…” என,
“சரி லட்சுமி நீ போயிட்டு வா..” என்றவர், மகளுடன் நடந்த படி,
“மனோஜ் அப்பா என்னடி இப்படி பண்றாரு.. போன் போட்டா எடுக்கவும் இல்லை.. விருதுநகருக்கும் போகலை.. பயமா இருக்கு லட்சுமி…” என்று கலங்கினார்.
“ம்மா.. எனக்கும் ஒன்னும் புரியலை.. முதல்ல மாமா நல்லபடியா வீடு வந்து சேரட்டும்.. அப்புறம் பார்த்துக்கலாம்…” என்றவள் கிளம்பிச் சென்றாள்.
பேச்சிக்கு சமாதானம் சொல்லிவிட்டாளே தவிர, அவள் மனதும் கலங்கியபடி தான் இருந்தது. என்ன நடந்தது என்று முழுதாய் எதுவும் யாருக்குமே தெரியாது.. ஒன்று வேலாயுதம் வந்து சொல்ல வேண்டும்.. இல்லையோ கஜேந்திரன் வாய் திறக்க வேண்டும்..
இரண்டுமே இப்போது நடக்காது என்று நன்றாகவே புரிந்தது.. வேலாயுதம் வரமாட்டார் என்ற எண்ணத்தை விட, கஜேந்திரன் முன் இதை பற்றி பேசவே முடியாதே.. நினைக்கவே தலை வலித்தது.
இன்னொரு பக்கம் ஈசன். அவன் மனதில் என்ன நினைக்கிறான், இனி என்ன செய்யப்போகிறான் இதெல்லாம் அவளுக்கு தெரியவில்லை.. இந்த பண விசயங்களை வேறு தானே பார்க்க போவதாய் சொன்னதும் அதிர்ச்சியாய் இருந்தது.. அவள் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் ஆனால் எதற்குமே இப்போது விடை தெரியவில்லை.
மருத்துவமனைக்கு சென்றதுமே பாலா செய்த முதல் வேலை, ஈசனிடம் மன்னிப்புக் கேட்டது தான்..
“அண்ணா… சாரிண்ணா… நான்.. நேத்து.. ச்சே… முட்டாள் மாதிரி பேசிட்டேன்..” என, லட்சுமி இதெல்லாம் எதையும் கவனிக்காதவள் போல அவள் மரகதத்திடம் எதையோ சொல்லிக்கொண்டு இருந்தாள்.
ஆனால் ஈசனுக்கு புரியாதா..?? அவன் பார்வை லட்சுமியை தொட்டு மீள, பாலாவோ இன்னும் பரிதாபமாய் முகத்தை வைத்து தன் அண்ணனை பார்த்தான்..
“அண்ணா…!!!!”
“ம்ம்ச் விடுடா.. நான் எதுவும் நினைக்கல…”
“இல்லண்ணா.. தப்பு.. நான் அப்படி பேசியிருக்க கூடாது…”
இதையெல்லாம் கவனித மரகதம் “பாலா..” என்றழைத்து,
“இந்த பேச்சு இனிமே இங்க வேண்டாம்.. அவர் முன்னாடி யாரும் எதுவும் பேசக்கூடாது…” என்று கூறிட, அதன் பின் யாருமே எதுவும் இப்பிரச்சனை பற்றி பேசவில்லை.
சற்று நேரத்தில் கஜேந்திரனை தனியறைக்கு மாற்றிவிட, நர்ஸ் வந்தவர்,
“இப்படி மொத்தமா போகாதீங்க… கூட ஒருத்தர் மட்டும் இருங்க… அவருக்கு தூங்க இன்ஜெக்ஸன் போட்டிக்கு.. சோ அவர் முழிக்க நேரமாகும்…” என்று சொல்லிச் செல்ல, மரகதமும் சரி, முத்தழகும் சரி ஒரு பாட்டு புலம்பித் தீர்த்தனர்.
ஈசனும், லட்சுமியும் சென்று மருத்துவரை பார்த்துவிட்டு வரும் வழியில்,
“லஷ்மி வீட்ல யார் இருக்கா???” என,
“அம்மா இருக்காங்க மாமா…” என்றவள், “நைட் கொஞ்சம் கூட தூங்கலையா மாமா ?? முகமே ரொம்ப ஒரு மாதிரி இருக்கு..” என்றாள் அவன் முகத்தையே பார்த்து.
“எங்க தூங்க அதைவிடு.. பாலாவை எதுவும் சொன்னியா…??”
“நான் ஒன்னும் சொல்லலை….” என்றாள் பட்டென்று..
“பொய் சொல்லாத லஷ்மி…”
“மாமா.,.. அவன் என் பிரண்ட்.. அவன்கிட்ட பேச சண்டை போட, எனக்கு உரிமை இருக்கு.. அதே நேரம் என் புருஷனை தேவையில்லாம யாரும் பேசக்கூடாது…” என்றவள் நடக்கத் தொடங்க,
“ம்ம்…. இன்னும் கொஞ்ச நேரத்துல நான்வீட்டுக்கு போகணும் லஷ்மி.. சண்முகம் அண்ணனுக்கு பணம் எடுத்து கொடுக்கணும்…” என்றான்.
“மாமா நான் சொல்றேன்னு தப்பா நினைக்கவேணாம்.. பெரிய மாமா நல்லாகி வரவும், சித்தப்பாவ கூப்பிட்டு வச்சு இந்த கணக்கு வழக்கெல்லாம் பார்த்து, முடிங்க… நேத்து நீங்க தான் இதெல்லாம் பார்த்துக்க போறேன்னு சொன்னதும் எனக்கு திக்குன்னு ஆச்சு
“ஏன் நான் பார்த்தா என்ன???” என்றான் ஒருமாதிரி குரலில்.
“இதெல்லாம் தேவையா மாமா.. இருக்கிறது பத்தாதா???”
“இது பணத்துக்காக மட்டுமில்லை. உனக்கு சொன்னா புரியாது லஷ்மி.. முதல்ல அய்யா நல்லாகி வரட்டும்…”என்றவன் குரலில் என்ன இருந்தது என்று லட்சுமிக்கு புரியவே இல்லை.
மீண்டும் நர்ஸ் வந்து கண்டிப்பாய் யாராவது ஒருவர் தான் மட்டும் இருக்கவேண்டும் என்று சொல்லிச் செல்ல,
“நான் இப்போ கொஞ்ச நேரத்தில கிளம்பனும்.. நான் இருந்திட்டு போயிடுறேன்…” என்று ஈசன் சொல்ல, மற்றவர்கள் எல்லாம், பழைய அறைக்கு சென்றனர்.
கொஞ்ச நேரம் என்ற ஈசன், வெகு நேரம் கஜேந்திரனை பார்த்து அமர்ந்திருந்தான். இரண்டே நாளில் இத்தனை துவண்டு விட முடியுமா?? நேற்று காலை வரை எப்படி இருந்தவர், இப்போ எப்படி படுத்துக்கிடக்கிறார்.. அவனது அய்யா.. அவன் அறிந்த வரையில் காய்ச்சல் தலைவலி என்றுகூட படுக்காதவர்.
ஆனால் இன்று???
எதனால் இப்படி என்று தெரியாமல் அவனுக்கு மனம் அடங்குவதாய் இல்லை. பாலா மன்னிப்பு கேட்டதற்கு., ஒன்றுமில்லை என்று அவனை சமாதானம் செய்துவிட்டானே தவிர, ஈசன் இன்னும் அதிலிருந்து வெளிவரவில்லை.
‘அய்யா என்ன பிரச்சனைன்னு நான் கேட்டப்போ ஏன் சொல்லலை…’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது ஈசனுக்கு..
ஆனால் இப்படி எதுவுமே செய்ய முடியாத ஒரு நிலையில் அவன் இருப்பது அவனுக்கே பிடித்தமாய் இல்லை. கண்களை இறுக மூடி, திறந்தவனுக்கு, அவனுக்கான தனிப்பட்ட உணர்வுகள் அனைத்தும் மூடிக்கொண்டன.
“எது எப்படி இருந்தாலும் சரிங்கய்யா.. யார் மேல தப்பிருந்தாலும் சரிங்கய்யா.. இதை நான் பார்த்துக்கிறேன் இனிமேல்.. நான் இருக்கேன்.. நான் பார்த்துப்பேன்…” என்று சொல்லிக்கொண்டவனுக்கு அடுத்து ஓட்டம் ஓட்டம் ஓட்டம் மட்டுமே..
வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு, முத்தழகை அழைத்துக்கொண்டு ஆண்டிபட்டி வந்தவன், முதல் வேலையாக சண்முகத்துக்கு பணத்தை கொடுத்து முடித்தான். கஜேந்திரன் எங்கே பணம் வைத்திருக்கிறார் என்றெல்லாம் பார்க்கவில்லை. தான் நிலம் வாங்கவென்று வைத்திருந்ததை எடுத்துகொடுத்து விட்டான்.
“இப்போ என்ன ஈசா… இவ்வளோ அவசரம்…” என்று அப்போதும் சண்முகம் சொல்ல, அதற்கு ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாய் கொடுத்தானே தவிர வேறொன்றும் சொல்லவில்லை.
அடுத்து பண்ணைக்கு சென்று பார்த்து, கேபிளுக்கு சென்று, என்ன வேலைகள் என்று பார்த்து, பின் சூப்பர் மார்கெட் போய் அங்கே கவனித்து, பின் தோட்டத்திற்குச் சென்று அங்கு நடக்கும் வேலைகளை பார்த்து, போதாத குறைக்கு காங்கேயம் வேறு அல்லவா வாங்கி வைத்திருக்கிறான், அதனையும் சென்று பார்த்து, இன்னும் கஜேந்திரன் என்னென்ன வேலைகளை தனதாக்கி வைத்திருந்தாரோ அதெல்லாம் இப்போது ஈசன் தோளில் அல்லவா அமர்ந்தேறி இருக்கிறது அதனை எல்லாம் பார்த்து வர, ஈசனுக்கு இரவு வரை நேரம் சரியாய் இருந்தது.
இனி தினமும் இது தான்.. இனி வாழ்வு இப்படிதான் செல்லும் என்று அவன் மனதிற்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. ஆக சட்டென்று அவன் மனம் அதில் ஒட்டிவிட்டது.. அவனுக்கு அவனே இது இப்படிதான் இனி என்று மனதில் பதித்துக்கொண்டான். இப்படியான எண்ணங்கள் படையெடுக்க தன் சுகம் எல்லாம் மறந்து போனது.
லட்சுமி இரண்டொரு முறை அழைத்து “சாப்பிட்டீங்களா…???” என்று விசாரிக்க, முதலில் பொறுமையாக பதில் சொல்ல, அடுத்து கோவமாய்.
“ஏய் பேசாம இரு டி…” என்று வைத்துவிட்டான்..
பிரபுவை கேபிளை பார்க்க சொல்லிவிட்டு, ரேவதியை சூப்பர் மார்க்கெட்டில் இருக்கச் சொல்லி, ஆட்களுக்கு வேலைகளை பிரித்துக்கொடுத்து, தெரிந்த ஒருவரிடம் வேலாயுதம் பற்றி தகவல்களை விசாரிக்கச் சொல்லிவிட்டு மீண்டும் இரவே மருத்துவமனைக்குச் சென்றான். உடலும் சரி, மனதும் சரி அசதியாய் இருந்தது.. ஆனால் அதெல்லாம் அவன் கவனத்தில் ஏற்கவேயில்லை.
இது போலவே தான் தினமும்.. காலை மருத்துவமனையில் இருந்து கிளம்பி, ஆண்டிபட்டி வருவான், அங்கிருக்கும் வேலைகளை எல்லாம் முடித்து இரவு மருத்துவமனைக்கு சென்றால், அவன் தான் கஜேந்திரனோடு தங்குவான்..
கஜேந்திரன் கண் விழித்தவரோ, மனைவி மக்களிடம் வேறெதுவும் பேசவில்லை.
“எனக்கெதுவும் இல்லை.. நல்லா தான் இருக்கேன்..” என்று மட்டும் கூறியவர், அதே எண்ணத்தை தன் மனத்திலும் பதித்து, படிப்படியாய் தேரியும் வர, மரகதம் கொஞ்சம் நிம்மதியடைய, லட்சுமிக்கு தான் மனம் சுத்தமாய் ஒருநிலையில் இல்லை.
அவளும் மாறி மாறி மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் அலைந்துகொண்டு தான் இருந்தாள். மரகதம் பார்த்த அனைத்தும் இப்போது அவள் பொறுப்பாகி இருக்க, இரண்டு இடத்திற்கும் அலைவது சிரமமாய் இருந்தது..
கஜேந்திரன் உடல் நிலை தெரி வரவுமே அனைவரின் மனமும், அடுத்து வேலாயுதம் பற்றி சிந்திக்க, கஜேந்திரன் அறியாதபடி ஒருவருக்கொருவர் இதை பற்றி பேசியபடி இருந்தனர்.. அது வேறு அவளுக்கு மனத்தில் அழுத்தம் கொடுத்துகொண்டே இருந்தது..
‘எங்க போனாங்க எல்லாம்.. ச்சே.. ஏன் இப்படி பண்றாங்க…’ என்று அவளும் உள்ளே குழம்பி யாருக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் வீட்டினர் அவரை பற்றி பேசும் போது மௌனித்து நிற்கும் நிலை..
அதிலும் மரகதம் நேரம் கிடைக்கும் போதெல்லாம் “உன் சித்தப்பா.. உன் சித்தப்பா…” என்று எதாவது சொல்லி பேச, அவளுக்கோ தலை வெடித்தது..
சரி ஈசனிடம் கொஞ்சம் பேசினாலாவது மனம் சற்று அமைதியடையும் என்று பார்த்தால், அவனோ கண்ணில் படுவதே இல்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் நின்று நிதானமாய் பேச எல்லாம் அவனுக்கு நேரமே இல்லை.. மருத்துவமனைக்கு இரவு வரும் போதும் சரி, ஆண்டிபட்டியிலும் சரி உடன் இருந்தாலும் கூட அவன் லட்சுமியிடம் சௌஜன்யமாய் பேச முடியவில்லை..
சூழல் அப்படி..
ஆனால் மனம் கேட்குமா?? அதிலும் லட்சுமிக்கு அனைத்திற்குமே ஈசனை எதிர்பார்க்கும் மனம்.. இப்போது ரொம்பவே அவனை எதிர்பார்த்தது..
‘என்னடா அய்யா எதுவும் பேசினாரா…’ என்று பாலாவிடம் கேட்பான்,
‘ம்மா நீங்க கொஞ்சம் ரெஸ்ட்ல இருங்க…’ என்று மரகதத்திடம் சொல்வான்,
கஜேந்திரன் கண் விழித்திருந்தால், அவரிடம் எதாவது பேசுவான்.. ஆனால் லட்சமி… அவளும் அங்கே தான் இருப்பாள்.. ஒரே ஒரு பார்வை மட்டும் தான் அவனிடம் அவளுக்கு கிடைக்கும்.
அவளை காணும் போதெல்லாம், ‘லஷ்மிய முன்னிறுத்தி நான் இதை கவனிக்கலையா…???’ இந்த கேள்வியே அவனுள் தோன்ற, அவனுக்கு அவன் மனதை சமாதானம் செய்யவும் இதை பற்றி சிந்திக்கவும் கூட நேரமில்லை.
லட்சுமிக்கோ அவனை தவிர வேறு எந்த விசயத்திலும் கவனம் போகவில்லை.. சரி இவனோடு கிளம்பி வீடு போனாலாவாது எதாவது பேசுவான் என்று ஒருநாள் காலையில் அவள் கிளம்பி வர,
“ஏன் நீ இங்க இருக்க வேண்டியது தானே…” என்றான்.
“இல்ல மாமா அது.. வந்திட்டு உங்க கூட திரும்ப நைட்டுக்கு வர்றேனே…” என்று தயங்க, அவளை யோசனையாய் பார்த்தவன்,
“ம்ம் சரி…” என்றவிட்டு அடுத்து ஒருவார்த்தை கூட காரில் வரும்போது பேசவில்லை.
அவள் தான் பேசிக்கொண்டே இருந்தாள். அவனிடம் “ம்ம்.. சரி… ஓ…” இப்படியான பதில்களே வர, அவனை திரும்பிப் பார்த்தவள், பின் மௌனமாகி விட்டாள்.
பேசிக்கொண்டே வந்தவள், அமைதியாய் வருவதெல்லாம் அவனுக்கு புத்தியில் எட்டவில்லை. தொடர்ந்து போன் கால்கள் வந்தபடி இருந்தன. அனைத்தும் வேலைகள் பற்றி தான்.. மழை விழுந்ததில் கேபிளில் வேறு எதோ பிரச்சனை போல.. ஒருகையால் ஸ்டியரிங்கை பிடித்தபடி மற்றொரு கரத்தில் போனை வைத்து யாரின் எண்ணையோ தேடிக்கொண்டு இருந்தான்.
லட்சுமியோ அவன் டென்சனாய் இருப்பது கண்டு, “மாமா டிரைவ் பண்ணும் போது போன் பேசாதீங்க.. ஏற்கனவே டென்சனா இருக்கீங்க…” என,
அப்போ நீ டிரைவ் பண்றியா…” என்று எரிந்து விழுந்தான்.
அவனது பார்வையே இது உனக்கு தெரியாதல்லவா ஆக வாயை மூடிக்கொண்டு இரு என்று சொல்லாமல் சொல்ல, லட்சுமிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இதுவரை ஈசன் இப்படி பேசியதில்லை. கோவமாய் பேசியிருக்கிறான் தான் ஆனால் இப்படி பேசியதில்லை. அவன் முகத்தை திகைத்து பார்த்தவள் கண்களில் சட்டென்று நீர் கட்டிவிட்டது.. ஒன்றும் பேசாமல் அப்படியே ஜன்னல் பக்கம் திரும்பிவிட்டாள். ஆனால் மனம் அடங்க மறுத்தது.