‘இவங்க நல்லதுக்கு தானே சொன்னேன்.. என்ன தப்பா சொல்லிட்டேன்… ஏன் எனக்கு கார் ஓட்ட தெரிஞ்சா நான் இவங்களை வச்சு ஓட்டிட்டு வர மாட்டேனா… இப்படி பேசுறாங்க..’ என்று மனதில் நொந்துகொள்ள மட்டும் தான் முடிந்தது.
ஈசனோ அடுத்து அவளிடம் எதுவும் பேசவில்லை.. அடுத்தடுத்து தொடர்ந்து அழைப்புகள், பேச்சுக்கள் இவைகளில் லட்சுமி அவனருகே அமர்ந்திருக்கிறாள் என்ற நினைப்பே அவனுக்கில்லை. வீட்டிற்கு வந்து அவளை இறக்கிவிட்டவன், குளித்து முடித்து கிளம்பிச் செல்ல,
“தம்பிய சாப்பிட்டிட்டு போக சொல்லு லட்சுமி…” என்று பேச்சி சொன்னதால்,
“மாமா சாப்பிட்டிட்டு போங்க…” என,
“அப்புறம் வர்றேன்…” என்றவன் தான் அடுத்து வரவேயில்லை..
லட்சுமியும் ஈசனுக்காக காத்திருந்தது தான் மிச்சம்.. ஏனோ மனம் மிகவும் சோர்வாய் இருந்தது அவளுக்கு.. வீட்டிற்கு ஆட்கள் போக வரவென்று இருந்தனர்.. இப்போதே இப்படியென்றால், கஜேந்திரன் வீட்டிற்கு வந்த பின் இன்னும் நிறைய வேலை இருக்கும். அனைத்தையும் இவள் தானே நின்று பொறுப்பாக பார்க்கக் வேண்டும். எப்படியும் இரண்டு நாட்களில் வீடு வந்துவிடுவார் என்று தெரியும். ஆகையால் வேலையாட்களை அழைத்து, இன்றே வீட்டை முழுக்க சுத்தம் செய்து முடிக்க, ஈசன் வந்த பின் சாப்பிடலாம் என்று உண்ணாமல் காத்திருந்தது வேறு எல்லாம் சேர்த்து அவளுக்கு இன்னும் சோர்வை கொடுத்தது.
“சாப்பிடு லட்சுமி.. இனி வேலை நிறைய இருக்கும்.. சாப்பிடாம இருந்தா எப்படி…” என்று பேச்சி அவளை பேசி பேசியே சாப்பிட வைத்தார்.
லட்சுமி வீட்டிலிருக்கிறாள் எனவும் ரேவதி வந்து பார்த்து பேசிவிட்டு போனாள். ரேவதி வந்து போனது கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாய் இருந்தது.
“ம்மா.. யாராவது வந்தா கூப்பிடு.. நான் ரூம்ல இருக்கேன்.. மாமா வந்தா கூப்பிடு…” என்றவள் மேலே அறைக்கு செல்ல, அவளுக்கோ ஏனோ நெஞ்சடைத்தது போல் இருந்தது..
‘இங்கே வந்தால் எல்லாம் சரியாகிவிடும்…’ என்று லட்சுமியும் சரி, ஈசனும் சரி நிறைய நிறைய நம்பினர்.
ஆனால் வந்து முழுதாய் ஒருநாள் கூட முடியவில்லை, என்னென்னவோ நடந்துவிட்டது. ஈசனுக்கு பிடிக்கவேண்டும் என்று அறையின் தோற்றத்தையே அவள் ஒரேநாளில் மாற்றியது எல்லாம் மனதில் தோன்ற, அறையில் நின்று பார்த்தவள், அங்கே அதற்குமேல் நிற்கமுடியவில்லை.. கதவை அடைத்துவிட்டு மீண்டும் கீழே இறங்கிவர, ஈசனும் அப்போது தான் வீட்டினுள் நுழைந்து கொண்டு இருந்தான்..
அவனை கண்டதும் சட்டேன்று மனதினில் ஒரு தெம்பு… சோர்வெல்லாம் நீங்கி ஒரு புத்துணர்ச்சி வந்தது போல் இருந்தது..
“மாமா… சாப்பிடுறீங்களா…” என்றபடி அவன் முன்னே போய் நிற்க,
“வேணாம் லஷ்மி… டீ வடை சாப்பிட்டேன்.. பசிக்கல…” என்றவன் அவள் முகத்தை எல்லாம் பார்க்கவில்லை, அப்படியே பேசிக்கொண்டே கஜேந்திரன் அறைக்குள் நுழைந்துவிட்டான். லட்சுமி தான் அப்படியே நின்றிருந்தாள்..
ஈசனை கண்டதும் மறைந்துபோன சோம்பல், இப்போது இரண்டு மடங்காய் திரும்பி வந்திருந்தது..
‘நான் இதுக்கு ஹாஸ்பிட்டல்லையே இருந்திருக்கலாம்…’ என்று நொந்தவள், பேசாமல் அப்படியே நிற்க, உள்ளிருந்து
“லஷ்மி…” என்று ஈசன் குரல் கேட்டு, பதிலே பேசாமல் அங்கே சென்றாள்.
“என்ன மாமா???”
“இங்க இருந்த கணக்கு நோட்டெல்லாம் எங்க…??” என,
“நான் தான் மாமா கிளீன் பண்ணேன்…” என்று அவள் பேசி முடிக்கவில்லை,
“கணக்கு நோட் எங்கன்னு தானே லஷ்மி கேட்டேன்.. அதுக்கேன் கதை சொல்ற…” என்று அவனே மீண்டும் தேட, அவளுக்கு எப்படியோ ஆனது..
பதில் ஒன்றும் சொல்லாது, கணக்கு நோட்டுகள் அடங்கிய பையை எடுத்து அவனிடம் நீட்ட, அதை வாங்கியவன், அப்படியே மேலே அறைக்குச் செல்ல, லட்சுமிக்கு ஒவ்வொரு நொடியும் மனதில் கனம் கூடிக்கொண்டே போனது.. அவளுக்கும் தெரியும், இது சாதாரண சூழல் இல்லை என்று.. ஆனால் ஒரு சில சாதாரண பேச்சுக்களும், பார்வையும் கூட இல்லாது போகவேண்டுமா??
அத்தனை ஏன் மருத்துவமனையில் படுத்துக்கிடக்கும் கஜேந்திரன் கூட அவ்வப்போது கண் முழிக்கும் நேரம், மரகதத்திடம் சாதாரணமாகத் தானே பேசுகிறார்.. அப்படியிருக்க இவனுக்கு என்ன என்று தோன்றியது லட்சுமிக்கு..
சூழல் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம்.. சுற்றி இருப்பவர் ஆயிரம் பேசலாம்.. ஆனால் அதெல்லாம் மனதின் கோட்பாடுகளுக்குள் அடங்காது. தான் என்ன நினைக்கிறதோ அதே நடந்திட வேண்டும்.. அதிலும் ஒருவர் மீது அதீத அன்பு வைக்கும் போது, எதற்குமே அவர்தான் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி போன பிறகு மிக மிக கஷ்டம்.. லட்சுமிக்கு இப்போது அப்படிதான் இருந்தது..
என்னதான் குடும்பத்தின் நிலை இப்படி என்றாலும், ஒரு வார்த்தை நின்று பேச கூடவா பஞ்சம் என்று நினைக்க, இங்கே வந்தே இருக்க கூடாதோ.. ஒருவேளை தனியாக இருந்திருந்தால் இதெல்லாம் நடந்தே இருந்திருக்காதோ என்றெல்லாம் கூட தோன்றியது..
இத்தனை நாட்களில் ஊருக்குள் விஷயம் பரவத் தொடங்கியிருந்தது.. வேலாயுதம் கஜேந்திரனை ஏமாற்றி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டதாகவும், அதனாலே அதிர்ச்சியில் கஜேந்திரனுக்கு நெஞ்சு வலி வந்ததாகவும் விஷயம் பரவியிருக்க, ஈசனுக்கு இதை சமாளிக்கவே கஷ்டமாய் போனது..
ஏமாற்றம்….. அது உண்மைதானா என்று தெரியாது..
ஆனால் ஏமாந்து போனோம் என்ற சொல் அவனை பொருத்தமட்டில் கௌரவ குறைச்சல். ஈசனின் தந்தையை.. ஈசனின் குடும்பத்தை.. அதுவும் அவன் இருக்கும் போதே ஒருவர் ஏமாற்றி செல்வதா.
நாங்கள்… நாங்கள் ஒருவரிடம் ஏமாந்து போவதா?? அப்படி சொல்ல முடியுமா?? அப்படி சொல்லும் தைரியம் தான் யாருக்கும் இருந்திட முடியுமா?? இத்தனை வருசமாய் இதே ஊரில் பேர் பெற்று வாழ்ந்த குடும்பம்.. இனியும் அதற்கு எவ்வித குறையும் இருக்க போவதில்லை ஆனால் இந்த சிறு தடுமாற்றம் கூட அவர்கள் சம்பாதித்து வைத்த பெயருக்கு இறக்கமாய் போகுமல்லவா??
‘இப்படியெல்லாம் நடக்கும் வரை நீ என்ன செய்தாய்…’ என்று கேட்டால் அவன் என்ன பதில் சொல்வான்.. சொல்லபோனால் அதே கேள்வி தானே அவனுள்ளும் இப்போது வரைக்கும்
ஆகையால் ஈசனிடம் யார் என்ன கேட்டாலும், “வேலு மாமாவா… ஹாஸ்பிட்டல் வந்து பார்த்தாரே.. மனோஜ் படிப்புக்காக வேற ஊர் போறாங்க…” இதே தான் சொன்னான்..
வீட்டினரிடமும் இதையே தான் சொல்லச் சொன்னான்.. ஆனால் என்னதான் நாம் பூசி மொழுகினாலும், உண்மை ஒருநாள் வெளிவரும் தானே.. என்னதான் சமாளிப்பாய் பதில்கள் சொன்னாலும் அவரவர் அவர்கள் இஷ்டத்திற்கு ஏற்ப தான் பேசினர்..
அன்று இரவே ஈசனோடு லட்சுமி மீண்டும் மருத்துவமனைக்குச் செல்ல, என்னவோ அப்போது தான் மரகதம் ஈசனிடம் கொஞ்சம் நன்றாய் பேசினார்.
“நாளன்னைக்கு வியாழக்கிழமை.. நல்ல நாள் வேற.. அன்னிக்கு வீட்டுக்கு போகலாமா…” என,
“டாக்டர் வந்து எதுவும் சொன்னாங்களாம்மா…” என்றான் இவனும்.
“அவர் வந்து நாளைக்கு கூட போகலாம்னு தான் சொன்னார்.. ஆனா நல்ல நாள்ல போகணும்…”
“ம்ம் சரிம்மா…” என்றவன் அடுத்து பாலாவை பார்த்து,
“நீ எப்போடா ஊருக்கு…” என கேட்க,
“நான்…” என்று முழித்தவன், “அய்யா வீட்டுக்கு போகவும் ரெண்டு நாள் இருந்திட்டு போறேனே…” என,
அடுத்து நம்மிடமும் எதாவது கேட்பானோ என்று லட்சுமி ஆவலாய் பார்க்க, அவனோ, “சரி எல்லாம் போய் தூங்குங்க..” என்று அவர்களை அறைக்கு அனுப்பியவன், கஜேந்திரனோடு இந்த அறையில் இருந்துகொண்டான்..
லட்சுமி, மனம் வலிக்கத் தொடங்கியது.. அம்மா, தம்பி, அவன் படிப்பு அதெல்லாம் கேட்க தெரிகிறது.. ஆனால் அவள்… அவளும் தானே இன்னும் படிப்பு முடிக்கவில்லை.. அதுகூட வேண்டாம்.. வேறு எதாவது கூட பேச முடியாதா அவனுக்கு.. திரும்பி திரும்பி பார்த்தபடி லட்சுமி மரகதத்தோடு சென்றாள்.
அடுத்து வந்த இரண்டு நாட்கள் அவளும் ஒன்றும் ஈசனிடம் பேசவேயில்லை.. இதோ வீட்டிற்கு கிளம்பும் நேரம். அப்போதும் கூட அவள் எதுவும் ஈசனிடம் பேசவில்லை..
“லஷ்மி.. திங்க்ஸ் எல்லாம் எடுத்தாச்சா..” என்று ஈசன் கேட்க, தலையை மட்டும் ஆட்டினாளே தவிர வேறொன்றும் சொல்லவில்லை..
“ம்மா டாக்டர் சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குல்ல, அய்யாக்கு கொஞ்ச நாள் பத்திய சாப்பாடு தான்.. மருந்து மாத்திரை எல்லாம் சரியா நேரத்துக்கு கொடுக்கணும்.. லஷ்மி நீ தான் இதெல்லாம் கவனமா பார்த்துக்கணும்…” என்று அவன் அம்மாவிடம் ஆரம்பித்து, இவளிடம் முடிக்க, அதுக்கும் சரி என்று தலையை மட்டும் தான் உருட்டினாள்.
அவளது குணம் மெல்ல மெல்ல தலை தூக்கி எட்டிப்பார்த்து..