கஜேந்திரன் நல்ல முறையில் வீடு வந்து சேர்ந்துவிட்டார்.. மருத்துவமும், குடும்பத்தினரின் கவனிப்பும், அவரைச் சீக்கிரமே குணமடைய வைத்துக்கொண்டு இருந்தது. என்ன மனதில் கவலைகள் அப்படியே இருந்தாலும்,
‘என் குடும்பத்திற்கு நான் தேவை…’ என்ற எண்ணம் அவரை வேறெதுவும் சிந்திக்க விடாது தேறி வர வைத்தது..
ஆனாலும் ஈசன் முகத்தில் இருக்கும் ஒரு யோசனை, எதையோ சிந்தித்தபடியே இருக்கும் பாவனை எல்லாம் கண்டு ஈசனிடம் ஓரிரு முறை பேச விளைந்தார்.
ஆனால் அவனோ, “அய்யா.. இப்போ எதுவும் பேச வேணாம்.. நான் பார்த்துக்கிறேன்.. நீங்க கவலையில்லாம உடம்பை மட்டும் பாருங்க.. கொஞ்ச நாள் போகட்டும்.. பேசுவோம்..” என்று உறுதியாய் சொல்ல,
மரகதமும் “இப்போதானே வீட்டுக்கு வந்திருக்கீங்க.. நீங்க இனி ஓய்வா இருந்தா போதும்.. எல்லாம் பெரியவன் பார்த்துப்பான்..” என்றுவிட, ஓய்வு எடுப்பது மட்டுமே அவருக்கு வேலையாய் இருந்தது.
பாலா வீட்டிற்கு வந்தவன், ஈசனோடு சேர்ந்து வேலைகளை கவனிக்க, ஈசனோ பிடிவாதமாய் அவனை சென்னைக்கு அனுப்பிவிட்டான்..
“நான் இருக்கேண்ணா…” என,
“அதெல்லாம் வேணாம்டா.. நீ கிளம்பு.. அடுத்து லீவ் கிடைக்கும் போது வா..” என்று இருவரும் சகஜமாய் பேச பேசிக்கொண்டிருக்க,
“ண்ணா சொல்ல மறந்துட்டேன்.. அங்க நிறைய பிரண்ட்ஸ் கிடைச்சு இருக்காங்க.. ஷார்ட் ப்லிம் எல்லாம் எடுக்கிறோம் ப்ரீ டைம்ல…” என்றான் சின்னவன் மகிழ்வாய்.
“வாவ்.. வீடியோ இருக்கா…” என்று ஈசன் ஆவலாகவே கேட்க,
“இல்லண்ணா… பைனல் ஸ்டேஜ்ல இருந்தது.. நான் தான் இங்க வந்திட்டேனே… அங்க போயிட்டு அனுப்புறேன்…” என,
“நிறைய நிறைய கத்துக்க… பிடிச்சதை படிக்கும் போது இன்னும் இன்னும் நிறைய கத்துக்கலாம். எதையும் மனசார பண்ணினா அதுக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.. நீ இங்க இருக்கிற எதை பத்தியும் கவலை பாடாத பாலா..” என்றான் ஒரு அண்ணனாய்.
அண்ணன் தம்பி இருவரும் அமர்ந்து சாதாரணமாய் பேசுவது கண்டு லட்சுமியும் அங்கே வந்தாள்..
“பாலா நாளைக்கு நீ கிளம்பனுமா???”,
“ஆமா லச்சு.. ஏன்…” என்று பாலா கேட்க, ஈசன் சாதாரணமாக தான் இவர்கள் இருவரும் பேசட்டும் என்று வேலையை கவனிக்க எழுந்து செல்ல கிளம்ப, அப்படியே லட்சுமியின் முகம் விழுந்து விட்டது..
அவனை பொருத்தமட்டில் பாலாவோடு பேசவேண்டியது முடிந்துவிட்டது, இனி லட்சுமியும் அவனும் பேசட்டும் என்ற எண்ணத்தில் கிளம்பினான், ஆனால் லட்சுமியோ தான் வந்து அமர்ந்ததினால் தான் ஈசன் எழுகிறான் என்று எண்ணினாள்.
“இல்ல ஒண்ணுமில்ல நீங்க பேசுங்க…” என்று ஈசன் செல்வதற்குள் இவள் எழுந்து சென்றுவிட்டாள்..
பாலாவிற்கு என்னவோ மனதில் லட்சுமியின் பார்வையும் பேச்சும் வித்தியாசமாய் பட,
“ண்ணா.. லட்சுமிக்கு உடம்பு எதுவும் சரியில்லையா…” என்று வினவினான்..
ஈசனோ “இல்லையே.. நல்லாதானே இருக்கா. வேலை நிறைய இல்லையா.. அதான் டல் போல.. என்னவோ உன்கிட்ட பேச வந்தா, கிளம்பிட்டா.. மறக்காம லஷ்மிக்கிட்ட பேசிட்டு போ.. இல்லாட்டி வருத்தப்படுவா..” என்று தம்பிக்கு எடுத்துச் சொன்னவன், தான் அதுபோல் இருக்கிறோமா என்று நினைக்க மறந்து போனான்.
ஆனால் பாலா அப்படியில்லை, அண்ணன் சொன்னதற்காக என்றில்லாமல் அவனுக்கே லட்சுமி தோழி தானே.. நேரம் பார்த்து அவனே அவளிடம் பேசினான்..
“என்ன லச்சு.. நான் ஊருக்கு போறப்போ டாலடிச்ச.. இப்போ என்ன டல்லடிக்கிற…” என்று கேட்டபடி சமையலறை மேடையில் அமர்ந்தான்.
லட்சுமியும், பேச்சியும் நின்று சமையல் வேலை பார்த்துகொண்டு இருந்தனர், பாலா வந்து இப்படி கேட்கவுமே, பேச்சி என்ன என்பது போல் மகள் முகம் பார்க்க, அவளோ இவன் கேட்ட விதத்தில் லேசாய் சிரிப்பு வந்தாலும்,
‘இவனுக்கு தெரிஞ்சது கூட ஈஸ் மாமாக்கு தெரியலையா…’ என்ற எண்ணம் அடுத்தநொடி வந்து அவளை மேலும் சோர்வுற செய்தது..
“ஓய் லச்சு.. என்ன அமைதியா இருக்க..” என்றவன் பதிலுக்காக அவள் முகம் பார்க்க,
“லட்சுமி இது ரெண்டு விசில் வரவும் இறக்கிடு.. நான் வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன்…” என்று பேச்சி கிளம்பவும்,
“சரிம்மா..” என்றவள்,
“ம்ம் சொல்லு பாலா” என்றாள்..
“என்ன சொல்லு பாலா.. அப்போயிருந்து கேட்கிறேன்.. ஏன் டல்லா இருக்கன்னு.. பதிலே இல்லை…”
“வேலை நிறைய இல்லையா.. அதுனாலயா இருக்கும்…”
“ம்ம்…. அதெப்புடி புருஷன் பொண்டாட்டி ரெண்டு பெரும் ஒரே மாதிரி பேசுறீங்க…” என, லட்சுமி டக்கென்று திரும்பி அவன் முகம் பார்த்தாள்.
“எதுக்குமா இப்போ இப்படி ஒரு ஷாக் ரியாக்சன்..?” என்றவன்,
“ம்ம் லட்சுமி கேட்க மறந்திட்டேன்.. உன் சித்தப்பா எங்க ஆளவே காணோம்.. எதாவது போன் பண்ணாரா..??” என்று விசாரிக்க, அத்தனை நேரம் நண்பனோடு பேசுகிறோமே என்று கொஞ்சம் நன்றாக இருந்த மனம் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிட்டது.. பாலா கேட்டதற்கு லட்சுமி எதுவுமே பதில் சொல்லாமல் வேலையை பார்க்க,
“லட்சுமி உன்னை தான் கேக்குறேன்…” என்றான்.
“ம்ம்ச்.. என்ன கேட்கிற.. எனக்கு பேசிருந்தா நான் வீட்ல சொல்லிருக்க மாட்டேனா..” என்று எரிந்து விழுந்தாள்.
“சரி சரி.. கூல் கூல்.. நீ வேலை பாரு.. நான் போய் ரேவதிய பார்த்திட்டு, அப்படியே பசங்களை பார்த்திட்டு வர்றேன்..” என்று கிளம்பிச் சென்றவன் அடுத்து ஊருக்கும் கிளம்பி சென்றுவிட்டான்.
‘உன் சித்தப்பா…’
இந்த இரண்டு வார்த்தைகள் அவள் மன நிம்மதியை பாதி தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருந்தது.. யாராவது இப்படிக் கூறினாலே அத்தனை ஆத்திரம் மனத்தினுள் மூண்டது. ஆனாலும் யாரிடம் வெளிக்காட்டுவது.. முதலில் என்னவென்று வெளிக்காட்டுவது.. எத்தனை நேரம் தான் தனக்குள்ளேயே லட்சுமி முடங்கி போவது..?? அனைத்தையும் தனக்குள்ளே போட்டு ஜீரணிக்கத்தான் அவளும் முயன்றுகொண்டு இருக்கிறாள்.. முடியுமா என்றுதான் தெரியவில்லை.
கஜேந்திரன் வீட்டிற்கு திரும்ப வந்ததும், வீடு நிறைய ஆட்கள் இருந்துகொண்டே தான் இருந்தனர்.. சொந்தம், பந்தம், பழகியவர், தெரிந்தவர், நட்புவட்டம், தொழில் முறை பழக்கம் என்று அவரை வந்து பார்த்து நலம் விசாரித்து தான் சென்றனர்..
வீட்டு வேலைக்கு என்று ஆட்கள் போட்டாலும், வீட்டு மனிதர்கள் இருந்து கவனிப்பது போல் வருமா என்ன??
மரகதம், முத்தழகு இருவரும் வருபவர்களுடன் பேசவும் செய்யவும், கஜேந்திரன் அருகில் யாரவது மாறி மாறி இருக்கவுமே நேரம் சரியாய் இருந்தது.. வீட்டின் மொத்த பொறுப்பும் லட்சுமியிடம் வந்திருக்க, ஓய்வு ஒழிச்சலே இல்லாது வேலை இருந்தது அவளுக்கு.. நல்லவேளை அவளுக்கு துணையாக பேச்சி வந்து உடன் இருந்தார்.
பாலாவும் கிளம்பி போய்விட்டான். ரேவதிக்கு வேலையே சரியாய் இருந்தது.. அப்படியே இங்கு வந்தாலும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவாள், இப்படி அவரவர் வாழ்வில் அவரவர் கவனம் இருக்க, லட்சுமிக்கென்று அவளை கவனிக்க தான் ஆள் இல்லை.
ஈசனுக்கு இப்போது அவன் தலையை தின்னும் விசயமே வேலாயுதம் குடும்பத்துடன் எங்கு போனார் என்பது தான். அலைபேசியில் தொடர்புகொள்ளவே முடியவில்லை.. அவரது நட்புவட்டம், தொழில் பழக்கம், முத்தரசியின் சொந்த பந்தம் என்று எல்லா இடங்களிலும் விசாரித்தாகிவிட்டது. ஆனால் எங்குமே அவர்களை பற்றிய தகவல் தெரியவில்லை என்றே வந்தது..
காணமல் போனவர்களை கூட கண்டுபிடித்துவிடலாம், ஒளிந்துகொண்டு இருப்பவர்களை எங்கே சென்று தேட. அவர்களாய் வெளிவந்தால் தான் ஆனது..
இதெல்லாம் விட பெரிய விஷயம் ஊருக்குள் பரவியிருக்கும் பேச்சு.. வேலாயுதத்திடம் கஜேந்திரன் ஏமாந்து விட்டார்.. நிறைய பணம் சுருட்டப்பட்டு விட்டது.. இதை சமாளிக்கத் தான் பெரும்பாடாய் போனது.. அதிலும் கஜேந்திரனிடம் பணம் கொடுத்திருந்தவர்கள் இதை பற்றி விசாரிக்கும் போது ஈசனுக்கு மனம் ஒருநிலையில் இல்லை.. இப்போதைக்கு கொடுத்து முடிக்கவேண்டியது சண்முகத்திற்கு மட்டுமே. அவருக்கும் கொடுத்தாகிவிட்டது.
ஆனால் இப்படியொரு செய்தி பரவினால், பணம் கொடுத்தவர்கள் நெருக்குவார்கள், பணம் வாங்கியவர்களுக்கு பயம் போய்விடும்.. இவையிரண்டையும் சமாளிக்க வேண்டும்.. ஆனால் கையில் எவ்வளவு பணம் இருந்தது, கணக்குகள் என்ன, இப்போது எத்தனை இருக்கிறது என்றெல்லாம் கஜேந்திரன் தானே அறிவார்..
என்னதான் ஈசன் அந்த கணக்கு நோட்டுகளை எல்லாம் எடுத்து வைத்து பார்த்தாலும் அவனுக்கு அதில் எதுவுமே புரியவில்லை முதலில். அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே அவைகளை பார்க்க நேரம் கிடைப்பதால், பெரும்பாலான பொழுதுகள் அந்த கணக்கு நோட்டுகளுடனே ஈசன் கழிய, லட்சுமிக்கு தூங்கா இரவுகளாய் கழியும்..
ஒருமுறை அவள் தூங்காமல் இருப்பதை கண்டு, “நீ தூங்கு லஷ்மி… எனக்கு நேரமாகும்…” என, அவள் பதிலே பேசாமல் படுத்திருப்பது கண்டு,
“என்ன லஷ்மி…” என்று திரும்பி பார்த்தான்..
கட்டிலில் படுத்திருந்தவள், அவனையே பார்த்திருக்க, ஈசனுக்கு என்ன தோன்றியதோ எழுந்து வந்து, “என்ன லஷ்மி…” என்று அவளிடம் நின்று வினவ, அவளோ ஒன்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டினாள்..
என்னவோ அவளது முகம் மிக மிக சோர்வாய் தெரிய, அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க, லட்சுமியின் கண்கள் தானாக மூடிக்கொண்டது..
“காய்ச்சலும் இல்லை.. ஏன் டல்லா இருக்க…” என,
“உடம்பு சரியில்லேன்னா தான் டல்லா இருக்கனுமா மாமா…”
“ஏன் லஷ்மி.. என்னாச்சு..” என்றவன் அப்படியே அவளிடமே அமர, என்னவோ லட்சுமிக்கு தொண்டை அடைத்தது.. கண்களில் இருந்து நீர் கசிய தொடங்கியது.
‘என்னாச்சு… எனக்கு என்னாச்சு… நான் ஏன் இவ்வளோ பலவீனமா ஏன் இருக்கேன்…’ என்று அவளே அவளிடம் பல முறை கேட்டுவிட்டாள். ஆனால் பதில் தானே இல்லை..
ஈசன்.. அவள் பலமும் அவனே.. அவள் பலவீனமும் அவனே…
அவனை கொண்டே அவள் வாழ்வை அவள் வரைந்துகொண்டு இருக்கிறாள். சுவரில்லாது சித்திரம் எப்படி இல்லையோ.. அதுபோலவே ஈசனில்லாது லட்சுமி இல்லை.. அவனது சிறு சிறு ஒதுக்கமும் அவளை படுத்த, சின்ன சின்ன அருகாமை கூட மனதை வெகுவாய் உணர்ச்சிவசப் படவைத்தது…
ஆனால் இது போல் எல்லாம் ஈசனுக்கு தோன்றுமா?? அவனும் அவளை போலவே தனக்கான சகலமும் நீயே என்று எண்ணுவானா?? இந்தக் கேள்விகளும் அவள் மனதினுள் இப்போது..
“பதில் சொல்லு லஷ்மி.. என்னாச்சு…” என,
“ஒண்ணுமில்ல மாமா.. நீ.. நீங்க போய் வேலை பாருங்க…” என்றாள் அப்போது கண்களை திறவாமலே..
“ம்ம்ச் என்னை பாரு..” என்று ஈசன் சொல்ல, என்னவோ அவளுக்கு பிடிவாதம் பிடிக்கவே தோன்றியது. அவன் இப்படி நின்று தன் பார்வைக்காக கெஞ்சுவதும் பிடித்தது.. அவனை பார்க்காமல் முகத்தை தலையணையில் புதைத்து படுத்துக்கொள்ள,
“ஏய் இங்க பாரு டி…” என்று அவன் அவளை திருப்ப முயன்றான்..
“ம்ம்ஹும் நீங்க போய் கணக்கு பாருங்க…” என்றாள் திரும்பாமல்.
“உனக்கு ரொம்ப கொழுப்புடி…” என்றவனுக்கு என்ன தோன்றியதோ, படுத்திருக்கும் அவள் தோள்களை பிடித்து லேசாய் உலுக்கிவிட்டு சென்றான்.
ஈசன் சென்று மீண்டும் பழைய நிலையில் அமர,
“சித்தப்பா பத்தி எதுவும் தெரிஞ்சதா??” என்றாள் அப்போதும் முகத்தை அவன்பக்கம் திருப்பாமல்.
அமர்ந்திருந்தவன் மீண்டும் திரும்பி அவள் பக்கம் பார்க்க, அவள் திரும்பாமலே பேசிக்கொண்டு இருப்பது கண்டு, அவனும் அவளை காணாது பதில் சொன்னான்..
“இல்ல லஷ்மி… ஒண்ணுமே தெரியலை இதுவரைக்கும்…”
“ம்ம்… ஏன் மாமா.. அவர் எனக்கு சித்தப்பான்னா உங்களுக்கு யாரு…??” என்று லட்சுமி அடுத்த கேள்விக்கு போக, இவள் ஏன் இப்படி கேட்கிறாள் என்றெல்லாம் சிந்திக்காது,
“லூசாடி நீ.. உனக்கு சித்தப்பான்னா எனக்கு மாமா…” என்றவன் அடுத்து அப்படியே பார்த்துகொண்டிருந்த வேலையில் மூழ்கிட, அவன் கூறிய பதிலில் கண்கள் திறந்தவள், மீண்டும் அவனை பார்த்தபடி தன் எண்ணங்களில் மூழ்கிவிட்டாள்.
ஈசன் அப்போதாவது உணர்ந்திருக்கலாம், ஏன் இப்படி கேட்கிறாள் என்று…. லட்சுமி எப்போதும் போல் வீட்டில் இருக்கிறாள், வேலைகள் நிறைய என்பதால் சோர்வாய் இருக்கிறாள், இந்த சூழல் மாறிவிட்டால் எல்லாம் சரியாகி போகும்.. இந்த அளவு மட்டுமே ஈசன் எண்ணியது.. ஆனால் லட்சுமிக்கு என்ன தேவை என்பது அவனுக்கு தெரியாமலே போனது..
நாட்கள் இப்படியே செல்ல, மாதம் கூட ஒன்றை கடந்திருந்தது.. கஜேந்திரன் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டிருந்தது.. ஆனாலும் அவரை பெரும்பாலும் ஓய்வில் தான் இருக்க வைத்திருந்தனர்..
அன்று மரகதத்தின் வகையில் உறவென்று சிலர் கஜேந்திரனை பார்க்க வந்திருந்தனர்.. லட்சுமி அவர்களை வரவேற்று பேசி, மரகதம் சொன்னதை செய்துகொண்டிருக்க,
“லட்சுமி ஈசனுக்கு கூப்பிடு மா…” என்று மரகதம் சொல்லவும், சரி என்று சொல்லி அவனுக்கு அழைத்தாள்..
“மாமா எங்க இருக்கீங்க…” என,
“நான் கடைல சாப்பிட்டேன்.. வீட்டுக்கு இப்போ வர முடியாது…” என்றான், அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே கவனிக்காது.. லட்சுமி தனக்கேற்பட்ட கடுப்பை கண்கள் மூடித் திறந்து மறைக்க,
“ம்ம்ச்.. நான் கூப்பிடல.. அத்தை தான் உங்களை வரச் சொன்னாங்க.. கெஸ்ட் வந்திருக்காங்க…” என,
“யாரு???” என்று விசாரித்தவனுக்கு, பதிலை சொல்லி வைத்துவிட்டாள்..
அடுத்த பத்தாவது நிமிடம் ஈசன் வீட்டில் இருந்தான்..
“வாங்க மாமா.. அத்தை வாங்க.. சித்தி வாங்க வாங்க.. எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு…” என்று வந்திருந்தவர்களை அவன் வரவேற்று பேசியபடி ஹாலில் அமர்வது உள்ளே லட்சுமிக்கு நன்றாகவே தெரிந்தது..
வந்திருந்தவர்களும் இரண்டொரு நொடி கஜேந்திரனிடம் நலம் விசாரித்துவிட்டு பின் வரவேற்பறையில் வந்தமர்ந்து ஈசனோடு பேசிக்கொண்டு இருக்க, மரகதம் சமையலறை வந்தவர்,
“லட்சுமி ஜூஸ் போட்டு கொண்டுவா,.. மதியம் விருந்து சாப்பாடு மாதிரி செய்யணும்.. இவங்களாம் எப்போவாது தான் வருவாங்க… அதுனால ஆள் விட்டு செஞ்சுக்கலாம்.. நீயும் வந்து அங்க உட்காந்து பேசு.. இல்லாட்டி எதாவது நினைச்சுப்பாங்க…” என்றவர் சென்றுவிட,
அவளும் அவர் சொன்னது போல், வேலையாட்களிடம் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு, அனைவருக்கும் பருகவென்று ஜூஸ் போட்டவள், அதனை கொண்டு வந்து கொடுத்து மரகதம் சொன்னதுபோல் அங்கேயே அமர்ந்தாள்.