முதலில் பேச்சு, கஜேந்திரன் உடல்நிலை, வைத்தியம், மருத்துவமனை என்று இருக்க, பின் தன்னைப்போல் எதனால் இப்படியானது என்று பேச்சு வரவுமே மரகதம், லட்சுமி, ஈசன் மூவருக்குமே முகம் சட்டென்று வாடிவிட்டது..
“என்ன அண்ணி.. நாங்களும் ஓரளவு கேள்விப்பட்டோம்… சும்மா சொல்லுங்க…..” என்று வந்திருந்த பெண்மணி ஒருவர் மரகதத்திடம் வினவ,
“இப்படியெல்லாம் நடக்கும்னு நாங்க மட்டும் எதுவும் எதிர்பார்த்தோமா?? இப்போவரைக்கும் கூட இவருக்கு ஏன் இப்படி ஆச்சுன்னு எங்களுக்கு விளங்கல அண்ணி… ஒன்னு இவர் சொல்லணும்.. இல்ல லட்சுமி சித்தப்பா வந்து சொல்லணும்… இவருக்கிட்ட இதை பத்தி பேசவே கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. லட்சுமியோட சித்தப்பா எங்க இருக்கார்னே தெரியலை..” என்று மரகதம் தன் மனதில் இருப்பதை சொல்ல,
“ஏன்மா லட்சுமி, உனக்கு கூட உங்க சித்தப்பா எங்க இருக்கார்னு தெரியாதா..??” என்று கேள்வி லட்சுமி பக்கம் போனது..
ஏற்கனவே மரகதம் ‘லட்சுமியோட சித்தப்பா…’ என்றதில் மனம் சுருக்கென்று இருக்க அதிலும் அவளிடமே வேறு கேள்வி வர, பொறுமையை இழுத்து பிடித்தே பதில் சொன்னாள்..
“எனக்கெப்படி தெரியும்…”
“அதெப்புடிம்மா… உனக்கு அப்பா ஸ்தானத்துல இருந்து எல்லாம் செஞ்சாரு.. அவரைப்பத்தி உனக்கு உனக்கு தெரியாதா… எங்க போயிருப்பாங்கன்னு ஒரு யூகம் கூட இல்லையா…”
ஏதோ வேலாயுதம் செய்த அனைத்தும் லட்சுமியை கேட்டுக்கொண்டு செய்தது போலவும், அவர் இருக்குமிடம் அவளுக்கு தெரிந்திருந்தும் அவள் மறைப்பது போலவும் அப்பெண்மணி பேச, இதற்கு நான் என்ன பதில் சொல்ல என்பது போல் ஈசனை லட்சுமி பார்த்தாள். ஆனால் அவனோ, அவன் மாமா என்று அழைத்தவரோடு எதையோ தீவிரமாக பேசிக்கொண்டிருக்க, லட்சுமிக்கு என்னவோ போல் ஆனது..
‘இங்க என்னை குற்றவாளியாக்கி இவங்க பேசிட்டு இருக்காங்க.. அதுகூட தெரியாம அப்படி என்ன பேச்சு…’ என்று நினைத்தவள், பதில் சொல்லாமல் அப்படியே அமர்ந்திருக்க,
“என்ன லட்சுமி.. நான் உன்னை கேட்டா நீ உன் புருஷனை பார்க்கிற…” என்று மீண்டும் ஆரம்பித்தார் அவர்..
ஈசன் அப்போது தான் என்னவென்பது போல் பார்க்க, லட்சுமியோ தன் உணர்வுகளை அடக்கி,
“எனக்கு அப்பா ஸ்தானத்துல இருந்து எல்லாம் செஞ்சார் தான். ஆனா எனக்கு அவரை பத்தி அவ்வளோ தெரியாது…” என்றாள் மிக மிக பொறுமையாய்..
“அட.. இதென்ன கதை.. அவரை பத்தி தெரியாதுன்னு சொல்ற.. ஈசா என்ன உன் பொண்டாட்டி இப்படி சொல்றா… நாளைக்கு பின்ன உன்னையவே தெரியாதுன்னு சொல்ல போறா…” என்று எதுவோ ஜோக் போல சொல்ல, அங்கிருப்பவர்களும் சிரித்து வைக்க, ஈசனும் கூட லேசாய் நகைத்தான்..
ஆனால் லட்சுமிக்கோ எரிச்சலாய் வந்தது.. இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது. எனக்கு என்ன தெரியுமோ அதைத் தானே சொல்ல முடியும்.. அதற்கேன் இந்த பேச்சு என்று தோன்ற, இறுகி போய் அமர்ந்திருந்தாள்.
இவைகளை சாதாரணமாய் எடுத்திருக்கலாம்.. ஆனால் அப்படி எடுத்துக்கொள்ளவோ, அதனை கடந்து செல்லவோ முடியவில்லை. ஒருவேளை ஈசனின் அனுசரணை கிடைத்திருந்தால் மனதில் ஒரு நிமிர்வு வந்திருக்குமோ என்னவோ.. அதிலும் வருபவர்கள் எல்லாம் சொல்லி வைத்தது போல்,
‘உன் சித்தப்பா இப்படி பண்ணிருக்க கூடாது…’
‘உன்னை கூட நினைச்சு பார்க்கலை பாரேன் உன் சித்தப்பா..’
‘உனக்கு நிஜமாவே உன் சித்தப்பா எங்க போயிருக்கார்னு தெரியாதா ???’
என்று இன்னும் இன்னும் எத்தனையோ பேச்சுக்கள், அதனை எல்லாம் அவளால் சுத்தமாக சாதாரணமாக எடுத்துகொள்ளவே முடியவில்லை.
அதிலும் இன்று வந்தவர்களோ இந்த பேச்சை விடாது பேசிக்கொண்டு இருக்கவும், அவளால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.. அவளுக்காக என்று அங்கே ஈசனும் சரி, மரகதமும் சரி யாருமே வாய் திறக்கவேயில்லை.. மரகதத்தை கூட அவள் அப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஈசன் தனக்காக ஒருவார்த்தையாவது பேசவேண்டும் என்று நிறையவே எதிர்பார்த்தாள்..
‘அவளுக்கென்ன தெரியும்.. எங்களை போலத்தான் லஷ்மிக்கும் இது ஷாக்…’ என்று அவன் ஒருமுறை சொல்லியிருந்தால் கூட லட்சுமியின் மனம் சமாதானம் ஆகியிருக்கும், ஆனால் அவனோ வந்தவர்களிடம் பேசுவதில் தான் இருந்தான்.
பொறுத்து பொறுத்துப் பார்த்தவள், முடியாமல் எழுந்து அவர்கள் அறைக்கு சென்றுவிட்டாள். இதற்குமேல் அங்கிருந்தால் நிச்சயம் லட்சுமி ஏதாவது பேசியிருப்பாள்..
லட்சுமி பாதியில் எழுந்து போகவும், வந்திருப்பவர்கள் என்னதிது என்பது போல் பார்க்க, மரகதமும் அதே பார்வையை மகனிடம் வீச, அவனுமே லட்சுமி இப்படி எழுந்து செல்வாள் என்று எதிர்பார்க்கவில்லை..
“அது.. ரெண்டு நாளா லஷ்மிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல…” என்று சமாளிப்பாய் கூறியவன், அடுத்து ஒரு ஐந்து நிமிடத்தில் மேலே அறைக்கு வந்தான்..
“லஷ்மி.. என்னதிது…” என்று கேட்டபடி உள்ளே வர, அவளோ குப்புற படுத்து அழுகையில் குலுங்கிக்கொண்டு இருந்தாள்..
எதாவது செய்துகொண்டு இருப்பாள் என்று வந்தவனுக்கு இது அடுத்த அதிர்ச்சி.. அழுகை… காரணம் என்ன?? அவனுக்கு தெரியாதே..
“லஷ்மி.. இப்போ எதுக்கு அழற…” என்றவன் அவளை திருப்ப முயல, தோள்களை சிலுப்பி அவன் கையை தட்டிவிட்டாள்.
“ம்ம்ச்… வீட்ல ஆள் வந்திருக்கும் போது இதென்ன லஷ்மி…” என்று கடிய, அவளோ நீ என்னவோ கத்திவிட்டு போ நான் இப்படிதான் என்று படுத்திருந்தாள்.. என்ன முயன்றும் அவளுக்கு அழுகை மட்டும் நின்றபாடில்லை..
“இப்போ என்னாச்சுன்னு இப்படி பண்ற லஷ்மி…” என்று குரலை உயர்த்த, விலுக்கென்று திரும்பியவள் அழுகையினூடே அவனை முறைத்தாள்..
முகம் சிவந்து, கண்களும் சிவந்து, முடியெல்லாம் கலைந்து, கண்ணீர் நிற்காமல் வழிய, அவனுக்கு என்ன தோன்றியதோ,
“என்ன டி…” என்றபடி அவளருகே அமர, அவளோ அவனை பிடித்து தள்ளினாள்..
அவள் முகம் பார்த்து மனம் இலகினாலும், அவளது செய்கை கண்டு கோவம் வர, “ம்ம்ச் இப்போ என்ன உன் பிரச்சனை லஷ்மி.. ஏன் இப்படி வந்து படுத்து அழுதிட்டு இருக்க, கீழ ஆளுங்க வந்திருக்காங்க.. இதெல்லாம் புரியாதா உனக்கு…” என,
“எனக்கு எதுவும் புரியவேணாம்..” என்றாள் பட்டென்று..
‘இதென்ன பழக்கம்…’ என்பது போல் ஈசன் முறைக்க, அவளும் சளைக்காமல் தான் அவனை பார்த்தாள்.. இது வேலைக்காகாது, கீழே அவர்களை வைத்துகொண்டு இப்படி தானும் வந்திருப்பது சரியல்ல என்று தோன்ற,
“சரி நீ இப்படியே இரு…” என்றவன் கீழே சென்றுவிட்டான்..
ஈசன் போனது இன்னும் அழுகையை கூட்டியது அவளுக்கு..
‘நான் இங்க அழுதிட்டு இருக்கேன் கொஞ்சம் கூட அதைபத்தி கவலையில்லாம இப்படி போறாங்க… அப்போ நான் இவங்களுக்கு முக்கியமே இல்லையா…’என்றவளுக்கு இன்னும் அழுகை முட்டியது.. ஆனால் கீழே ஈசனோ,
“லஷ்மிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை.. அதான் படுத்திருக்கா..” என்றான் சமாளிப்பாய்..
வந்தவர்கள் வேண்டுமானால் இதை நம்பலாம் ஆனால் மரகதம் நம்புவாரா??. மகன் முகத்தை உற்று பார்க்க, அவனோ இதைப்பற்றி எதுவும் பேசவேண்டாம் என்பது போல் தலையை ஆட்டவும், என்னவோ அமைதியாய் இருந்துவிட்டார்.
வந்தவர்கள் பேசி கலைத்து, பின் விருந்துணவும் உண்டு முடித்து கிளம்புகையில் மதியம் இரண்டு மணிக்குமேல் ஆகிவிட்டது. அவர்கள் கிளம்பி செல்லும் வரையில் கூட லட்சுமி கீழே வரவில்லை..
அவர்கள் சென்றதுமே மரகதம், “இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல ஈசா.. என்னாச்சு இவளுக்கு…” என்று மகனை கடிய,
“நான் பார்த்துக்கிறேன் ம்மா… நீங்க சாப்பிடுங்க…” என்றவன், அத்தை பாட்டியெல்லாம் எங்க என்று அப்போது தான் அவர்கள் இல்லாததை கவனித்து கேட்டான்..
“ஒரு வளைகாப்பு வீடு.. நான் தான் அனுப்பி வைச்சேன்…” என்றவர்,
“லட்சுமிய வந்து சாப்பிட சொல்லு…” என,
“நான் பேசிக்கிறேன் ம்மா..” என்றவன், மாடியேறினான்.
‘என்னதான் நினைச்சிட்டு இருக்கா.. நானும் எதுவும் பிரச்சனை வரக்கூடாதுன்னு பார்த்து பார்த்து பண்ணிட்டு இருக்கேன்.. இப்படி பண்ணிட்டிருக்கா…’ என்று எண்ணியபடி உள்ளே செல்ல, அப்போதும் லட்சுமி படுத்து தான் இருந்தாள்.
ஆனால் உறங்கவில்லை..
“லஷ்மி…” என்று அதட்ட, என்னவென்பது போல் பார்வையை மட்டும் திருப்பினாள்..
“எந்திரி.. என்ன பழக்கம் இது…”
“எது???”
“முதல்ல கீழ வா.. இப்போ எதுக்கு நீ இப்படி படுத்திருக்க. கீழவா…”
ஈசன் என்ன பேசினாலும் சரி.. அவளும் இன்று விடுவதாய் இல்லை.. எதுவானாலும் சரி.. இதுக்கெல்லாம் ஒருமுடிவு தெரியாமல் விடப்போவது இல்லை என்பது போல் தான் அவளும் பதிலுக்கு பதில் பேசினாள்..
“ஏய் என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரி போகுது… உன் சித்தப்பா பண்ண…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,
“போதும் நிறுத்துங்க…” என்று கத்தியே விட்டாள்..
அவள் கத்திய கத்தில், ஈசனே அதிர்ந்து பார்க்க, “போதும் நிறுத்துங்க…” என்று கைகளை உயர்த்தி சொன்னவள், வேகமாய் எழுந்து நின்று,
“என்ன சொன்னீங்க.. என் சித்தப்பாவா??? என் சித்தப்பாவா…” என்று கண்களை சுருக்கி கேட்டு, பின் நிமிர்ந்து நின்று,
“ஆமா என் சித்தப்பா தான்.. யார் இல்லைன்னு சொன்னா…” என்றாள் ஒருவித நிமிர்வுடன்..
அவளது மாற்றத்தில் கண்கள் விரித்து “லஷ்மி….” என்று ஈசனது இதழ்கள் முணுமுணுக்க,
“பேசக்கூடாது…” என்று விரலை நீட்டியவள்,
“நான் தெரியாமத்தான் கேக்குறேன்… என்னவோ எனக்கு சித்தப்பாவா இருக்கிறதுனால மட்டும் தான் அவர் இப்படி பண்ணாரா?? சொல்லுங்க.. இல்லை உலகத்துல அவர் எனக்கு மட்டும் தான் உறவா??? நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே உங்களுக்கு அவர் சொந்தம் தான?? இல்லை நான் தான் பெரிய மாமாவ இவரை தொழில்ல கூட்டு சேர்த்துக்க சொன்னேனா?? இல்லைல.. இப்போ மட்டும் ஏன் எல்லாரும் என்னைச் சொல்றீங்க..??
இத்தனை நாள் உங்களுக்கு, பாலாக்கு வேலு மாமா.. அத்தைக்கு வேலு அண்ணா, மாமாக்கு வேலா… ஆனா இப்போ மட்டும் என் சித்தப்பாவா??? சொல்லுங்க இதில நான் எங்க இருந்து வந்தேன்.. என்னை கேட்டு தான் எல்லாம் நடக்குதா இங்க…” என்று ஈசன் சட்டையை பிடித்து உலுக்கினாள்..
ஈசன் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. லட்சுமி அனைத்தையும் இப்படி ஒரு விதத்தில் யோசிப்பாள் என்று அவன் கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை.. ஆனால் அவள் சொல்வது அனைத்தும் சரி தானே.. அவளை கொண்டு தானா இங்கே எல்லாம் நடந்தது?? இல்லையே.. அவளை கேட்டுத்தானா எல்லாம் நடந்துகொண்டு இருக்கிறது அதுவும் இல்லையே… ஆனால் அனைவரின் பேச்சும் மட்டும் ஏன் அவளிடம்??
அவள் கேட்ட கேள்விகள் அவன் மனதை தைத்தது.. அவள் எங்கே வந்தாள் இதில்.. அவளுக்கு இதிலென்ன பங்கிருக்கிறது.. ஆனால் இப்போது அனைவரும் என்னவோ அவளுக்கும் இதில் பங்கிருக்கு என்பது போல் பேச, அவள் என்ன செய்வாள்??
ஈசனுக்கு இன்னும் அதிர்ச்சி, அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று தெரியாமல் அப்படியே நிற்க,
“சொல்லுங்க மாமா.. நான் எங்க வந்தேன் இதில… வார்த்தைக்கு வார்த்தை எப்போ பார் உன் சித்தப்பா உன் சித்தப்பான்னு சொல்லி சொல்லி என்னை எல்லாரும் தனி ஆக்கிட்டீங்க..” என்று சொல்லும் போதே மீண்டும் அவளுக்கு அழுகை முட்டியது..
“ஏ லஷ்மி.. அப்படியெல்லாம் இல்ல டி…” என்று பதறி சொன்னவன், அவள் கரங்களை பற்ற,
“அப்படிதான்… அப்படியேதான்…” என்று கைகளை உதறி இன்னும் குரலை உயர்த்தினாள்..