ஈசனுக்கு லட்சுமி இன்றுவரைக்கும் ஒரு புதிர் தான்.. கண் முன்னே இருந்தாலும் அவளை புரிந்துகொண்டோம் என்று நினைக்கும் வேலையில் புரியாத புதிராகவே இருக்கிறாள்.. அவள் சிந்தனைகள் இன்றுவரை எப்படி பயணிக்கும் என்று அவனுக்கும் புரிபடவில்லை.. அவன் ஒன்று நினைக்க, அவன் நினைத்துக்கூட பார்க்காத ஒன்றை அவள் நினைக்கிறாள்..
லட்சுமி ஈசன் முன் ஆங்கார ரூபிணியை தான் நின்றிருந்தாள்.. அவள் மாற்றம் கண்டு திகைத்து நின்ற ஈசனோ “லஷ்மி……” என்பதை தவிர வேறெதுவும் சொல்ல தோன்றாமல் நின்றிருந்தான்..
“போதும்… போதும் மாமா… இது என் வீடு… என் குடும்பம்.. நீங்க எல்லாம் என் மனுசங்க… நான் இந்த வீட்டு பொண்ணு.. அப்படின்னு ரொம்ப ரொம்ப பெருமையா இருந்தேன்.. ஆனா நீங்க.. ஒரு பிரச்னைன்னு வந்ததும் அதெல்லாம் அப்படியில்ல நீ வேலாயுதம் அண்ணன் பொண்ணு தான்னு சொல்லாம சொல்லி, என்னை ஒதுக்கிட்டீங்க..” என
“வேற எப்படி??? ஹா வேற எப்படின்னு கேக்குறேன்.. எனக்கென்ன கண்ணு குருடா, இல்ல நடக்கிற எதையும் புரிஞ்சுக்க முடியாத முட்டாளா??… கல்யாணம் ஆகி அடுத்தநாளே தனிக்குடித்தனம் போகணும் சொன்னீங்க, அதுக்கு சரின்னு தான் வந்தேன்.. அப்புறம் திடீர்னு உங்களுக்கு இங்க போகலாம்னு சொன்னீங்க.. அதுக்கும் சரின்னுதான் சொன்னேன்.. இந்த ரெண்டு விசயத்துக்கும் நான் முடியாதுன்னு பிடிவாதம் பண்ணிருந்தா நீங்க என்ன செஞ்சிருப்பீங்க மாமா??
எனக்கு உங்களை எவ்வளோ பிடிக்குமோ, அதே போல தான் இந்த குடும்பத்துல இருக்கவங்களையும் பிடிக்கும்.. ஆனா நீங்க எல்லாம்.. ஒரு பிரச்சனைன்னு வரவும் என்னை தள்ளி வச்சு, என் மூலமா இந்த பிரச்சனைய பார்க்க ஆரம்பிச்சிட்டீங்க.. அப்படிதான…???” என்று கண்களை விரித்து, மூச்சுகளை வேகமாய் எடுத்துவிட்டு கேள்வி கேட்டு நிற்கும் லட்சுமிக்கு என்ன பதில் கூற முடியும் ஈசனால்..
“லஷ்மி… ப்ளீஸ் டி.. நா..நான்… இது இப்படியெல்லாம் யோசிக்கலை…”
“ஏன் யோசிக்கல???? அய்யா, அம்மா, தம்பி, பாட்டின்னு இவங்க எல்லார பத்தியும் யோசிக்க தெரியுதுல்ல, அப்போ ஏன் என்னை பத்தி யோசிக்கல… யோசிச்சு இருக்கணும்….” என்றாள் தீர்க்கமாய்..
உண்மை தான்… யோசித்து இருக்கவேண்டும் தான்.. ஆனால் லட்சுமி தன்னை புரிந்துகொள்வாள் என்ற எண்ணத்திலேயே அவன் அவளை புரியாமல் விட்டது தான் ஈசன் செய்த தவறோ??
“என்ன அமைதியா நிக்கிறீங்க..?? இதுவரைக்கும் நீங்க பண்ண எதையுமே நான் மறுத்ததில்லை. உங்கள யார் முன்னாடியும் விட்டுக்கொடுத்ததில்லை.. ஆனா நீங்க, மத்தவங்க பேசுறதை வேடிக்கை தான் பார்த்தீங்க… ஏன் மாமா?? ஒருவார்த்தை லஷ்மிக்கு என்ன தெரியும்?? அவ என்ன செய்வான்னு ஏன் மாமா ஒருவார்த்தை எனக்கு சார்பா பேச முடியலை..???” என்று கோவமாகவே கேட்க ஆரம்பித்தவளுக்கு இறுதியில் குரல் தளுதளுத்தது..
இதற்குமேலும் தன்னால் நிற்க முடியாது போல் கால்கள் துவள, மீண்டும் அப்படியே மெத்தையில் அமர்ந்தவள், தன் இரு கைகளால் முகத்தை மூடியிருக்கொள்ள, உடல் மட்டும் குலுங்கியது அழுகையில்..
“லஷ்மி… அழாத… இப்படி மூச்சடக்கி அழுதா…” என்று அவன் சொல்லி முடிக்கும்முன்னே, பட்டென்று திரும்பியவள்,
“அழுதா?? அழுதா என்ன?? செத்து போயிடுவேனா???” என,
“லஷ்மி…!!!!” என்று ஈசன் கத்தியே விட்டான்..
“ஏன் ஏன் கத்துறீங்க??? நான் நீங்க எல்லாரும் என்னோட மனுசங்கன்னு நான் நினைச்சிட்டு இருக்கும் போது, எல்லாரும் சேர்ந்து நீ தனி தான்னு எனக்கு ரொம்ப அழகாவே புரிய வச்சுட்டீங்க…” என்று லட்சுமியின் பேச்சு இன்னும் இன்னும் ஈசனை அதிர தான் வைத்தது..
“ம்ம்ச் லஷ்மி… அப்படியில்லைன்னு சொல்றேன்ல… திரும்ப திரும்ப நீ அதையே சொன்னா எப்படி டி… இங்க யாரும் அப்படியெல்லாம் யோசிக்கல.. அதேபோல இந்த விஷயத்தை நீ இப்படி யோசிப்பன்னும் யோசிக்கலை…” என்றான் ஒரு இயலாமையோடு..
இயலாமை…. ஈசன் முதல் முறை சந்திக்கும் ஒரு உணர்வு..
என்னால் முடியாத ஒன்றா??? நான் செய்ய முடியாத ஒன்றா??? இதென்ன என் கால் தூசுக்கு சமானம் என்று எதையுமே ஒரு அலட்சியம் கொண்டு இறுமாந்து இருந்தவனுக்கு இன்று தன் மனைவியின் முன் ஒரு இயலாமையோடு அமர்ந்திருப்பது பெரும் கஷ்டமாய் இருந்தது..
“ஏன் யோசிக்கலை… அப்போ என்னை இங்க யாரும் ஒரு பொருட்டாவே மதிக்கல… அப்படிதானே…??”
இது அடுத்த தாக்குதல்..
லட்சுமிக்கு ஈசன் என்ன சொன்னாலும் மனம் சமாதானம் ஆகவில்லை.. தான் பெரிதாய் நினைத்த இக்குடும்பம் தன்னை அப்படி நினைக்கவில்லை என்ற எண்ணம் வந்ததும், அவளுக்கு பிடிவாதமும் வேகமும் எழ, சமாதானம் என்ற ஒன்றிற்கு அவள் தயாராகவே இல்லை.
“லஷ்மி.. அழாத… சொன்னா கேளு…” என்று ஆதரவாய் அவள் முதுகை தடவ, அவளோ பதிலே பேசவில்லை..
ஈசனுக்கு மிக மிக சங்கடமாய் போனது.. இத்தனை வருத்தங்களை மனதினுள் வைத்திருக்கிறாளா??? என்று தோன்ற,
“லஷ்மி… நீ வா முதல்ல சாப்பிடு.. எதுவா இருந்தாலும் சாப்பிட்ட பேசிக்கலாம்…” என,
“எனக்கு வேணாம்.. எனக்கு எதுவும் வேணாம்…” என்றாள் முகத்தை மூடியபடி
“நீ வந்து தான் ஆகணும்.. சாப்பிட்டு தான் ஆகணும்..”
கெஞ்சலும், கொஞ்சலும் இருந்தாலும் சில நேரத்தில் மிஞ்சலும் தேவைப்பட்டது.. அது ஈசனாக இருந்தாலும் சரி, லட்சுமியாக இருந்தாலும் சரி.. ஈசன் குரலின் மாற்றத்தை உணர்ந்து அவனை பார்த்தவள், “நீங்க கூட என்னைய விட்டுட்டீங்களே மாமா…” என்றாள் ஆற்றமையாய்..
அவள் என்ன நினைத்து இப்படி சொன்னாளோ, ஆனால் ஈசனுக்கு நிஜமாக இந்த வார்த்தைகள் மனதை அத்தனை வதைத்தது.. எதையுமே விட்டுவிட கூடாது, எதுவுமே தங்களை விட்டு போய்விடக்கூடாது என்றல்லவா அவன் இத்தனை பாடுபடுவது,
அப்படியிருக்க அவன் மனைவி, ‘கடைசியில் என்னை விட்டுவிட்டாயே…’ என்று கேட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்..
“லஷ்மி…..” என்று அதிர்ந்து பார்த்தவன் முகத்திலும், கண்களிலில் வேதனையின் சாயல் அப்பட்டமாய் வெளிப்பட, லட்சுமியின் முகத்தை இறுக பற்றி தன் பக்கம் திருப்பியவன்,
“உன்னை என்னைக்குமே விடனும்னு நான் நினைச்சதில்ல, அப்படியே விடுறதுக்காக உன்னை நான் கல்யாணம் பண்ணல… புரியுதா டி…” என்றவன் குரல் சற்றும் கூட அவன் வேதனை படிந்த முகத்திற்கு பொருத்தமாய் இல்லை..
குரலில் இருந்த அழுத்தம், அவன் பிடியிலும் இருக்க, அவன் பற்றியிருந்த இடமோ வலிக்கதொடங்கியது.. வலியில் முகம் சுளித்தாலும், அவள் எழுவதாய் தெரியவில்லை.. அவள் மனம் வேறேதற்குமே இடம் கொடுக்கவில்லை..
எத்தனையோ வருடங்களாய் கட்டப்படும் நம்பிக்கை கோட்டையானது, சில நொடிகளில் அவநம்பிக்கை கொண்டுவிடுகிறது.. அவநம்பிக்கை யாரும் விரும்பி மனதில் ஏற்பதில்லை. ஆனால் சிலநேரம் திணிக்கப்படுகிறது.. இப்போது லட்சுமிக்கு அப்படியே.
‘இதென்ன பெருசா’ என்று கேட்பவர் நினைக்கலாம்.. ஆனால் அவளை பொருத்தமட்டில் இது பெரிது தான்.. தன்னிலை இங்கே என்ன என்ற கேள்வி வந்ததுமே அவள் மனதில் தான் இங்கே தனியானோமா என்ற கேள்வியும் வந்து பாடாய் படுத்தத் தொடங்கிவிட்டது..
எதுவுமே பேசாது லட்சுமி அமைதியாய் இருக்க, ஈசன் தான், “முகம் கழுவிட்டு எந்திரிச்சு வா லஷ்மி.. முதல்ல சாப்பிடு.. உடம்பு கெட்டுபோகும்…” என,
லட்சுமிக்கு அதற்கும் பதிலுக்கு பதில் சூடாக கொடுக்கவேண்டும் என்று தான் இருந்தது. ஆனால் என்னவோ சட்டென்று ஒரு சலிப்பு.. என்ன சொல்லி என்ன பேசி என்ன ஆக போகிறதென்று..
“ம்ம்ச்…” என்று தலையை உலுக்கி சலிக்க,
“என்ன டி.. எந்திரிச்சு வர்றியா இல்லையா….” என்று ஒரு அரட்டல் போட, அது கொஞ்சமேனும் வேலை செய்தது.
“நீங்க போங்க… போய் உங்க வேலை பாருங்க.. நான் அப்புறம் சாப்பிடுறேன்…” என்றாள்.
“நீ முதல்ல வந்து சாப்பிடு.. அப்புறம் போறேன்…” என்றான் அவனோ பிடிவாதமாய்..
‘போங்களேன்… என்னை ஏன் இப்படி படுத்துறீங்க.. எனக்கு இப்போ சாப்பிட பிடிக்கலை…’ என்று கத்த தோன்றிய மனதை அடக்கியவள்,
“ம்ம்..” என்று மட்டும் சொல்லி, முகம் கழுவி வர, ஈசனோடு இறங்கி கீழே போனாள்.
அத்தனை நேரம் மரகதமும் இருவருக்காக காத்திருக்க, “என்னம்மா சாப்பிட்டாச்சா..??” என்று ஈசன் வினவ, அவரோ அவனுக்கு பதில் சொல்லாது,
“ம்மா முதல்ல அவ சாப்பிடட்டும்…”என்ற ஈசன் குரல் மரகதத்தை அமைதி காக்க வைத்தது..
அத்தனை நேரம் உள்ளே படுத்திருந்த கஜேந்திரன் எழுந்து வெளி வர, மரகதம் அவரை கவனிக்கச் செல்ல, ஈசன் தான் லட்சுமிக்கு பரிமாறினான்.
“வேணாம் நானே போட்டுப்பேன்…” என்று மறுக்க,
“ரொம்ப அடம் பிடிக்காம சாப்பிடு…” என்றவன் அவளருகேயே அமர, அவளுக்கோ அது இன்னும் சங்கடமாய் போனது..
“நீங்க போங்க மாமா.. நானே சாப்பிட்டுக்கிறேன்…” என,
“ம்ம்ஹும்.. நீ சாப்பிடு… நான் பிடுங்கிக்க மாட்டேன்…” என்றவன் சொன்னவன் பாவத்தில் லட்சுமிக்கு லேசாய் ஒரு சிரிப்பு கூட வந்தது..
லட்சுமி முகத்தில் தோன்றிய சிறு புன்னகை கண்டு ஈசனுக்கு அத்தனை நேரமிருந்த மன கலக்கம் லேசாய் மட்டுப்பட, ஆனால் அது அந்த நேரத்திற்கு மட்டுமே வந்த புன்னகை என்று அவனுக்கு தெரியவில்லை..
அவளுக்கோ, இந்த கவனிப்பும், இந்த பொறுமையும், அக்கறையும் இத்தனை நேரம் தான் சண்டையிட்டதால் வந்தது என்று தெரியாதா என்ன.. எதுவுமே சொல்லி வரக்கூடாது, தானாக வர வேண்டும்.. எத்தனை காலம் என்னை கவனி என்னை கவனி என்று அவள் கூற முடியும்.. இதெல்லாம் தோன்ற, வாயில் வைத்த உணவு உள்ளே செல்லவில்லை, போதாத குறைக்கு அப்போது பார்த்து புரைவேறு போக, எல்லாம் சேர்ந்து லட்சுமிக்கு ஓங்கரிப்பு வந்துவிட்டது..
, வேகமாய் வாஸ் பேசின் போய், வாந்தி எடுப்பது போல் இருக்க,
“என்னாச்சு லஷ்மி…” என்று ஈசனும் வர,
அவர்கள் சத்தம் கேட்டு மரகதம்,“என்னாச்சு…” என்று வர,
கஜேந்திரன் கூட மெதுவாய் நடந்து வந்தார், “என்னாச்சும்மா..” என்று..
“சாப்பிட்டிட்டு இருந்தா.. திடீர்னு வாந்தி எடுக்கிறா…” என்று ஈசன் சொல்லும் போதே, பேச்சியும், முத்தழகும் வந்துவிட, அவ்வளோதான் அனைவரும் லட்சுமியை சூழ்ந்து நின்றிருந்தனர்..
உள்ளத்தில் இருந்த அசதி உடலையும் தாக்க, இத்தனை நேரம் அழுதது தலை கனமாய் இருப்பது போல் இருக்க, வாந்தி எடுத்தது வேறு சோர்வு கொடுக்க, லட்சுமிக்கு நிற்க முடியவில்லை.. ஈசன் தன் மீது அவளை சாய்த்து பிடித்திருக்க, மரகதம் நீர் பருக கொடுத்தார்..