“யுனிவர்சிட்டி ஸ்டாப்…” என்று தனக்கான டிக்கெட்டை வாங்கி மீண்டும் இருக்கையில் சாய்ந்து ஆமார்ந்த பொழுது லட்சுமிக்கு அப்பாடி என்றிருந்தது..
ஆம் லட்சுமி படிக்கிறாள்.. முதுகலைப்பட்டப் படிப்பு.. அதுவும் அவளுக்கு பிடித்த கணிதத் துறையில்..
ஐந்துமாதங்கள்.. நீண்ட நெடிய ஐந்து மாதங்கள்.. கிட்டத்தட்ட நூற்றி ஐம்பது நாட்கள். லட்சுமி ஈசனை விட்டு வந்து இத்தனை நாட்களுக்கும் மேலாய் ஆக, எந்த மாற்றமும் அவர்களுக்குள் நிகழவில்லை.
என்ன ஒரே நல்ல விஷயம் லட்சுமி மேற்படிப்பு படிக்கக் கிளம்பியது தான். அதையும் பிடிவாதமாகவே செய்தாள். இதோ அவள் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தும் மாதம் ஒன்றைக் கடந்திருந்தது.. ஒவ்வொரு நாளும் காலையில் பேருந்தில் ஏறி ஒருவழியாய் ஜன்னலோர இருக்கையை பிடித்து அமர்ந்ததும் எதுவோ பெரிய வேலையை செய்து முடித்து போல் தான் இருக்கும்.
ஆனால் அப்படி ஆசுவாசமாய் அமர்ந்ததும் அடுத்த நொடி அவள் மனம் பின்னோக்கி ஓடத் தொடங்கிடும்.. அன்றும் அப்படியே ஆக, அன்றொரு நாள் ஈசனோடு மருத்துவமனைக்கு சென்று வந்ததும் அதன் பின் நடந்தவைகளும் அப்படியே காட்சியை அவள் மனதில் விரியத் தொடங்கியது..
“ஈசா உனக்கு என்னாச்சு?? லட்சுமிக்கு தானே முடியலைன்னு ஆஸ்பத்திரி போயிட்டு வந்தீங்க…???” என்று கஜேந்திரன் கேட்க, ஈசனால் என்ன சொல்லிட முடியும்??
நான் எதையுமே சரியாக செய்யவில்லை என்று சொல்ல முடியுமா?? பிரச்சனை என்று தெரிந்தும் குடும்பத்தை சரிவர கவனிக்கவில்லை என்றோ, இல்லை என் மனைவியை நான் கவனிக்க தவறிவிட்டேன் என்றோ அவனால் சொல்லிட முடியுமா..
‘நான் செய்வது எப்போதுமே சரியாய் இருக்கும்…’ என்ற எண்ணம் கொண்ட ஒருவன், இதுவரைக்கும் தான் செய்த எதுவுமே சரியாக இல்லை என்று உணரும் பொழுது அவனது உணர்வுகள் எப்படியிருக்குமோ அப்படித்தான் இருந்தது ஈசனுக்கும்.
கஜேந்திரனுக்கு பதில் சொல்லாது ஒரு பார்வை பார்த்தவன் சட்டென்று தன் முக பாவனைகளை மாற்றிக்கொண்டான்..
“அய்யா வரச் சொன்னீங்களே…” என,
கஜேந்திரனுக்கு புரியாதா என்ன ஈசன் மனவுணர்வுகள் எல்லாம். மெல்ல சிரித்துக்கொண்டவர்,
“ஹ்ம்ம் நீயா இந்த விசயம் கேட்பன்னு நானும் வீட்டுக்கு வந்ததில இருந்து எதிர்பார்த்தேன்.. ஆனா நீ எதுவுமே என்கிட்ட கேட்கலை ஈசா…” என்றுப் பார்த்தவர், “இப்போ வரைக்கும் கூட ஏன் எனக்கு நெஞ்சுவலி வந்ததுன்னு தெரியாது தானே யாருக்கும்…” என,
“அய்யா… இப்போ ஏன் இந்த பேச்சு…” என்று ஈசன் பதற,
“ஈசா.. என்னிக்கு இருந்தாலும் இதை பேசித் தானே ஆகணும்.. உங்கம்மாக் கிட்ட இதெல்லாம் சொன்னா அவளுக்கு புரியுமான்னு தெரியாது. ஆனா உன்கிட்ட சொல்லணுமே…” என்றவர் குரலில் இன்று இதை பேசித்தான் ஆகவேண்டும் என்றிருக்க,
“சரிங்கய்யா.. சொல்லுங்க…” என்றான் அவரது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு..
கஜேந்திரனும் மருத்துவமனையில் இருந்தே ஈசனது மாற்றத்தை ஓரளவு கவனித்துக்கொண்டு தான் இருந்தார்.. ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதுபோல், இத்தனை நாள் அந்த வீட்டின் எஜமானராய் இருந்தவர், இன்று உடல்நிலை சரியில்லை என்ற ஒரே காரணத்திற்காக எதையும் கவனிக்காது இருக்க முடியுமா என்ன??
அமைதியாய் மகனது முகத்தினையே பார்த்திருந்தவர், “அந்த ஷெல்ப்ல ஒரு டைரி இருக்கு எடு…” என, ஈசனும் அவர் சொன்ன டைரியை எடுத்து கொடுக்க,
ஈசனும் டைரியை திறந்து பார்க்க, உள்ளே, கடந்த சில வருடங்களின் வட்டி கணக்கு வழக்குகள் சுருக்கமாய் எழுதியிருந்தது.. சுலபமாய் புரியும் வகையில் இருந்தது. ஈசன் கிட்டத்தட்ட இருபது நாட்களாய் இவைகளை தான் புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டு இருந்தான்.. ஆனால் சட்டென்று எதுவும் புரிபடவில்லை.
அவனுக்கு பிடிக்கவே பிடிக்காத ஒன்று… சிறிதும் இதுநாள் வரை எட்டிக்கூட பார்க்காத ஒன்று.. இதெல்லாம் தன்னிடம் வந்து சேரும் என்று ஈசன் கனவிலும் நினைத்துப்பார்த்திடாத ஒன்று, ஆனால் அவனே மனமுவந்து ஏற்கும் நிலை வர, சிறிது திண்டாடித்தான் போனான். ஆனால் ஈசனின் தேவை அறிந்து கஜேந்திரன் மகனிடம் இதனை கொடுக்க,
“அய்யா….” என்று ஆச்சர்யமாய் பார்த்தான்..
“பதிலேதும் சொல்லாது சிரித்தவர், “இதுக்குத் தானே நீ இத்தனை நாளா தலையை போட்டு உருட்டிட்டு இருந்த…” என, லேசாய் அசடு வழிந்து ஒரு சிரிப்புதான் அவனால் கொடுக்க முடிந்தது..
“என் நியாபகத்துல இருக்கிறதை வச்சு, இதை எழுதினேன்.. கணக்கு நோட்ல இருக்கிறதும் இதும் சரியா இருக்கான்னு பாரு.. இல்லையா என்கிட்டே கேளு நான் சொல்றேன்…” என்றவர்,
“சண்முகத்துக்கு நீதானே பணம் கொடுத்த, நாளைக்கு அதை நான் உனக்கு குடுத்திடுறேன்…” என,
“அய்யா.. அதெல்லாம் வேணாம்.. இதிலென்ன இருக்கு.. நீங்க குடுத்தா என்ன நான் குடுத்தா என்ன…” என்று ஈசன் மறுத்தான்..
“இல்ல ஈசா.. கணக்குல தப்பு வந்திடும்.. நீ வாங்கிக்கோ.. அந்த பணம் சம்பாரிக்க நீ எவ்வளோ உழைக்கிறன்னு தெரியும்..”
“அதில்லைங்கய்யா…”
“நீ எதுவும் சொல்ல வேணாம்.. சண்முகம் சொன்னான்.. நீ தேனில இடம் வாங்க பேசியிருந்தன்னு…”
“அதுக்கென்னய்யா.. இடம் எப்போவேனா வாங்கிக்கலாம்..”
“இல்லல்ல… தப்பு.. நம்ம எப்போவேனா என்னவேனா செய்யலாம்னு நினைக்கிறது ரொம்ப தப்பு.. இனிமே இப்படி நினைக்காத ஈசா.. எதுக்குமே நேரம் கூடி வரணும்..” என்றவர், “ஈசா இப்போ நான் சொல்றது நமக்குள்ளே இருக்கட்டும்.. வீட்ல தெரியவேணாம்..” என்றவர், அடுத்து தணிந்த குரலிலேயே பேச ஆரம்பித்தார்..
“நம்மக்கிட்ட உனக்கு கொடுக்கவேண்டிய ஒரு கோடி போக, கைல இருக்க வேண்டியது நெருக்கி பத்து கோடி.. ஆனா இப்போ கணக்குப்படி பார்த்தா வெறும் மூணு கோடி தான் இருக்கு..” என்றவர் முகத்தில் இத்தனை ஆண்டுகள் எத்தனை அனுபவங்கள் இருந்தாலும், அதெல்லாம் தாண்டி தான் நம்பி ஏமாந்து போன வடு அப்படியே தெரிந்தது..
“அய்யா….!!!!!” என்று கண்களை விரித்தவனுக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை..
“ஆமா ஈசா…. அதான் எனக்கு அன்னிக்கு கணக்கு நோட்டு பார்த்து ஒருநிமிஷம்…” என்றவருக்கு அடுத்து பேசமுடியவில்லை. லேசாய் மூச்சு திணறல் ஏற்பட,
“அய்யா..” என்று ஈசன் பதறி அவர் கையை பற்ற, சில நொடிகள் தன்னை ஆசுவாசப்படுத்தி கண்களை மூடித்திறந்தார்.
“ஒண்ணுமில்ல… விடு.. அது… இதெல்லாம் நம்ம நினைச்சுக்கூட பார்க்கலையா.. அதான்…” என்றவர் முகத்தில் இன்னும் அந்த வேதனையின் சாயல்.. ஏமாறும் வயதா இது??
அதுவும் நெருங்கிய உறவில், ஒரே குடும்பமாய் வேறு ஆகிவிட்ட ஆட்களிடம் நம்பி ஏமாந்து போனதன் வலி அவருக்கு மறக்கமுடியவில்லை. ஆனாலும் ஒரு திடம்.. என் குடும்பம்… நான் இங்கே முக்கியம்.. இந்த எண்ணமே அவரை திடம் பெறச் செய்ய, அடுத்து எப்படியாவது சமாளிக்கலாம் என்ற தைரியமும் நம்பிக்கையுமே அவரை தேறி எழ வைத்தது..
இன்னுமொன்று ஈசன்..
வெளியே காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவன் மீது அன்பையும் தாண்டிய ஒரு மரியாதை இருந்தது அவருக்கு.. காரணம் தன் பெயரை போலவே சுயமாய் முன்னேறியவன்.. ஆக எதையும் சமாளிக்கும் வல்லமை அவனிடம் இருக்கும் என்ற நம்பிக்கை அவரை இன்னும் இன்னும் தன் உடல் பிணியில் இருந்து வெளிவரச் செய்தது..
கஜேந்திரன் முகத்தினையே வேதனையோடு பார்த்து ஈசன் அமர்ந்திருக்க,
“ஈசா.. இப்போதைக்கு நம்ம யாருக்கும் பணம் கொடுக்கவேண்டியது இல்லை.. ஆனா வெளிய கிட்டத்தட்ட ரெண்டு கோடிக்கு மேல பணம் வசூலாக்காம இருக்கு… நம்ம நிறைய பணம் விட்டுட்டோம்னு தெரிஞ்சா வாங்கினவனும் நிமிந்துப்பான்.. கொடுத்தவங்க எல்லாம் நெருக்குவாங்க.. அதுனால பார்த்து தான் நடக்கணும்..
விஷயம் எதுவும் வெளிய போகக்கூடாது, ஆனா நம்ம காரியமும் நடக்கணும்.. வேலாயுதத்தை எவ்வளோ சீக்கிரம் கண்டுபிடிக்கனுமோ அவ்வளோ சீக்கிரம் செய்யணும் ஈசா..” என்றார்.
ஈசனுக்கு இதெல்லாம் கேட்கும் போதே மலைப்பாய் இருந்தது.. இத்தனை பணம் கோடி கோடியாய்… எத்தனை முறை சொல்லியிருப்பேன் இதெல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று.. ஆனால் இப்போது என்று நினைக்கையில். சரி நடந்தவைகளை மாற்றமுடியாது… இனி நடக்கப்போவது நம் எண்ணமாக இருக்கவேண்டும் அதற்கான முயற்சிகள் செய்திட வேண்டும் அவ்வளவே என்று மனதில் ஒரு தெளிவு பிறக்க,
“அய்யா.. நீங்க எதுவும் நினைக்காதீங்க.. பார்த்துக்கலாம்.. இப்போவரைக்கும் வேலு மாமா மனோஜ் படிப்பு விஷயமா தான் வேற ஊருக்கு போயிருக்கார்னு சொல்லிருக்கோம்.. நம்புறவங்க நம்பட்டும்.. இல்லாட்டி இருக்கட்டும்..
நம்ம என்ன செய்யணுமோ அதை மட்டும் செஞ்சிட்டு இருப்போம்.. அப்புறம் அய்யா.. எனக்கு இப்போ பணம் வேணாம்.. ப்ளீஸ்.. மறுக்காதீங்க… கைல இருக்க மூணுகோடி கூட, இந்த பணமும் போட்டு, வெளியில நிக்கிற பணமும் வந்தா கொஞ்சம் நமக்கு நல்லாருக்கும்.. அதுனால இப்போ வேணாம்…” என்று திடமாய் மறுத்துவிட்டான்..