“அய்யா… ப்ளீஸ்… அந்த பணம் அப்படியே இருக்கட்டும்.. மறுபடி அக்கவுண்ட்ல போட்டிடலாம்… முடிஞ்ச அளவு சீக்கிரம் வசூல் பண்ண பாப்போம்.. வெளியவும் தெரியக்கூடாது இல்லையா… அதுனால இப்போ எனக்கு பணம் வேணாம்..” என்றவன் மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு, கஜேந்திரன் கொடுத்த டைரியோடு வெளிவர அங்கே யாருமே இல்லை..
உள்ளே அவரவர் வேலையில் இருப்பது தெரிய, லட்சுமி அங்கேயில்லை எனவும் அறையில் இருப்பாள் என்று அங்கே போனான். என்னவோ இன்று வீட்டில் இருக்கவேண்டும் போல் ஓர் எண்ணம். வெகு நாட்களாய் விடை தேடிய ஒன்று இன்று எதிர்பாராவிதமாய் கைக்கு வரவும், மனதில் ஒரு ஆசுவாசம். ஆக அவனும் அறைக்குச் சென்றான்.
லட்சுமி நல்ல உறக்கத்தில் இருந்தாள்.. புறங்கையை நெற்றி மீது வைத்து லேசான முகச்சுளிப்புடன் படுத்திருந்தவளை காண அவனுக்கு பாவமாக இருந்தது. வழக்கத்திற்கு மாறாக ஒரு அழுத்தமும், சிந்தனையும் அவள் முகத்தில் இருப்பது போல் தோன்ற,
டைரியை பீரோவில் வைத்தவன், அவள் உறக்கம் கலையாதவாறு வந்தமர்ந்தவன், “சுளிச்சுக்கிட்டே தூங்குறா…” என்று சொல்லிக்கொண்டே, மெல்ல அவள் கையை எடுத்து தன் மடி மீது வைத்துவிட்டு, சுளித்திருக்கும் அவள் புருவங்களையும், நெற்றியையும் நீவி விட்டான்..
‘நம்ம ரொம்ப படுத்துறோமோ…’ என்று தோன்றிய அதே நொடி ‘யப்பா ஏன்னா பேச்சு பேசுறா…’ என்றும் தோன்றி அவனுக்கு ஒரு புன்னகை கொடுத்தது..
‘உங்களுக்குன்னு கொஞ்சமாது டைம் ஸ்பென்ட் பண்ணுங்க மாமா….’ நிறைய முறை லட்சுமி இதை கூறிவிட்டாள். அதெல்லாம் ஈசனுக்கு காதில் போட்டுக்கொள்ள கூட நேரமில்லாமல் சுற்றிக்கொண்டு இருந்தான். ஆனால் இன்று என்னவோ அவனுக்கும் மனதில் இங்கே இருக்கும் எண்ணம் வர, அதை சொன்னவளோ இவனிருப்பது அறியாது உறக்கத்தில் இருந்தாள்.
கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தவன், ‘சரி தூங்கட்டும்…’ என்று நினைத்து, மீண்டும் அந்த டைரியோடும், கணக்கு நோட்டுகளோடும் அமர, அடுத்து நேரம் போனது தெரியவில்லை..
கஜேந்திரன் கொடுத்தவைகளுக்கும், வேலாயுதம் எழுதி வைத்திருப்பதற்கும் பெரும் வித்தியாசம் இல்லையென்றாலும் வேலாயுதம் நிறைய கணக்குகளை மாற்றி இருக்கிறார் என்று நன்றாகவே புரிந்தது.
‘ச்சே என்ன மனுஷன்.. கூடவே இருந்து இப்படி பண்ணிருக்கார்… இங்க மட்டும் இருந்திருக்கணும் அப்போ தெரியும் ஈசன் யாருன்னு…’ என்று நினைக்கும் பொழுதே,
‘முதலில் இதைப் பார்த்து முடி..’ என்று அவன் மனம் கட்டளையிட, அடுத்து மனதை வேறெதிலும் செலுத்தாமல், கணக்கு நோட்டுகளில் இருப்பவைகளையும், கஜேந்திரன் கொடுத்த குறிப்புகளையும் வைத்து, தனக்கு புரியும்படி, தனியாய் எழுதிவைத்தவன், வேலையை முடித்து நிமிர்ந்து பார்க்க, லட்சுமி கையில் ஒரு காபி கப்போடு அறைக்குள் நுழைந்துகொண்டு இருந்தாள்.
“லஷ்மி… நீ எப்போ முழிச்ச…???” என்று ஆச்சர்யமாய் கேட்க,
‘இதில ஆச்சர்யப்பட என்ன இருக்கு…’ என்ற பாவனையில் ஒரு பார்வை பார்த்து,
“கொஞ்ச நேரம் முன்னாடி…” என்றுமட்டும் சொன்னவள், காபியை அவனிடம் நீட்ட, அவனும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டான்.. அடுத்து லட்சுமியாக எந்த பேச்சும் பேசவில்லை,
‘என்ன வீட்ல இருக்கீங்க…’
‘வேலை இல்லையா…’
‘இவ்வளோ நேரம் என்ன பண்ணீங்க…’
இதெல்லாம் கேட்பாள் என்று பார்த்திருக்க, மற்ற நாளாக இருந்திருந்தால் லட்சுமி கேட்டிருப்பாளோ என்னவோ, இன்றோ அவனொருவன் அறையில் இருப்பது போலவே அவள் நடந்துகொள்ளவில்லை.. ஈசன் அவளை பார்ப்பது தெரியும்.. இருந்தாலும் அவனை கண்டுகொள்ளாமல், மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு குளிக்க சென்றுவிட்டாள்..
‘ஷப்பா… செம அழுத்தம்.. ஒவ்வொரு நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்கா.. எப்போ எப்படி இருப்பான்னு அவக்கிட்டயே எழுதி வாங்கணும்…’ என்றெண்ணியவன் தலையை உலுக்கிக்கொண்டான்..
கேபிளுக்கும், சூப்பர் மார்க்கெட்டிற்கும் அழைத்து என்ன ஏதென்று விசாரித்துவிட்டு, தான் நாளை வந்து பார்ப்பதாக சொல்லி முடிக்க, லட்சுமியும் குளித்து வந்துவிட்டாள்..
ஈசனுக்கு மனதில் திடீரென்று ஓர் எண்ணம்.. எப்படியும் வீட்டிலிருப்பதாக முடிவு, அதை லட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியே சென்றால் என்ன என்று தோன்ற, “லஷ்மி…” என்றழைத்தான்.
என்ன என்று கேட்காமல், பேசாமல் திரும்பி மட்டும் பார்த்தவள், மீண்டும் கண்ணாடி முன்னே நின்று தலைவாரத் தொடங்க,
‘இவ திமிர் இருக்கே…’ என்று புத்தி போக, ‘வேணாம் ஈசா.. காலையில தானே ஒரு காட்டு காட்டினா.. கொஞ்சம் நீதான் அடங்கி போயேன்…’ என்று தனக்கு தானே அறிவுரை சொல்லியவன்,
“லஷ்மி…” என்று மீண்டும் அழைக்க,
“ம்ம்…” என்ற சத்தம் மட்டும் தான் வந்தது அவளிடம்.
“டயர்ட்டா இருக்க…???”
“ம்ம்ஹும்…”
‘வாய் திறந்து பேசமாட்டாளோ…’ என்று சுளிப்பு அவனிடம் தோன்ற, அதெல்லாம் அவள் கண்டுகொள்ளவே இல்லை. தலைவாரி, நெற்றியில் பொட்டும் குங்குமமும் இட்டவள், அவன் குடித்து வைத்திருந்த கப்பை எடுத்துக்கொண்டு கீழே போக விழைய,
“லஷ்மி…” என்று அவளை பிடித்து நிறுத்தினான்..
‘நீயும் லஷ்மி லஷ்மின்னு தான் ராகம் பாடுற ஆனா ஒண்ணும் வேலைக்காகலையே…’ என்பது போல் இருந்தது லட்சுமி பார்த்த பார்வை..
“பேசிட்டு இருக்கேன்ல…” என,
“ஓ… இதான் பேசுறதா…” என்று தலைசரித்து லட்சுமி கேட்க, அவள் செய்த பாவனையில் அவனுக்கு லேசாக ஓர் சிரிப்பு..
“பின்ன பே பேன்னு ஆக்சன் செஞ்சுக்காட்டவா..???” என,
“நீங்க என்னவோ பண்ணுங்க.. கீழ வேலை இருக்கு…” என்று நகரப்போக,
“ம்ம்ச்.. பேசிட்டு இருக்கேன்ல டி…” என்றவன் அவளை அழுத்தமாகவே பிடித்து நிறுத்திவைத்தான்..
‘என்ன இன்னிக்கு புதுசா…’ என்று புருவம் சுளித்து, அவனை ஒரு ஆராய்ச்சி பார்வை பார்க்க, “டயர்டா இருக்கா??” என்றான் மீண்டும்..
“ஷ்… எத்தனை தடவை கேட்பீங்க…” என்று சலித்தவள், “இல்லை…” என்று சொல்ல,
ஈசனுக்கு நிஜமாகவே மனதில் அந்த நேரம் ஒரு பரபரப்பு இருந்தது தான்.. முதல் முறையாக அவளை தனியே செல்லவென்று வெளியே அழைத்து செல்ல கேட்கிறான்.. வருவாளோ மாட்டாளோ என்ற தயக்கம் வேறு இருந்தது..
கல்லூரிக்கு அழைத்துச் சென்றிருக்கிறான்.. அதுக்கே ஒரு தனி பஞ்சாயத்து நடந்து அவன் காலில் ரத்தம் வந்தது தான் மிச்சம்.. இப்போது அழைத்திருக்கிறான் என்ன சொல்வாளோ என்று ஒரு படபடப்பு, அதே உணர்வுகளோடு அவளை காண, லட்சுமி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள்..
“போலாமா…???” என்று கேட்டவன் முகம், அவன் குரலும் அவளுக்கு என்ன சொல்லியதோ, வேறெதுவும் கேட்காமல்,
“எங்க…??” என்று மட்டும் கேட்க வைக்க,
“ம்ம் நீ சொல்லு.. எங்க போலாம்…??” என்றான் வேகமாக..
“ஓ…” என்றவள் அதற்குமேல் எதுவும் சொல்லாமல் அமைதியாய் நிற்க,
“சொல்லு லஷ்மி…”
“எனக்கும் தெரியலையே…??” என்று உதடு பிதுக்க,
‘என்னடா இது சோதனையா இருக்கு… அவனவன் லவ் பண்ற பொண்ண கூட எங்கவேணா கூட்டிட்டு சுத்துறான்.. நான் என் பொண்டாட்டிய கூட்டிட்டு போக எங்க போகன்னு தெரியாம நிக்கிறேன்..’ என்று ஈசன் நொந்துகொள்ள,
“தோப்புக்கு போலாமா…” என்றாள் மெல்ல,
“தோப்புக்கா…” என்று புருவம் உயர்த்தியவன், “கொஞ்ச நேரத்தில இருட்டிருமே…” என,
“சரி அப்போ இன்னொரு நாள் பார்ப்போம்…” என்று அவள் நகர,
“இல்லல்ல… தோப்புக்கே போகலாம்… அங்க வீடிருக்குல..” என்றவனின் பரபரப்பும், துடிதுடிப்பும் லட்சுமிக்கு வித்தியாசமாக தெரிந்தது.. ஏன் அந்த நிமிடம் ஈசனுக்கே தன்னை நினைத்து ஒரு ஆச்சர்யம் தான்..
“ம்ம் சரி போலாம்…” என்றவள், “ரெடியாகிட்டு வாங்க.. கீழ இருக்கேன்..” என,
“நீ இப்படியே வரப்போறியா???” என்றான்,
“ஏன் ??”
“சேலை கட்டேன்…”
“எனக்கு இது தான் கம்பர்டபில்…” என,
“ஹ்ம்ம்…. சரி.. நான் குளிச்சிட்டு வந்திடுறேன்…” என்றவன் அவனும் குளிக்க செல்ல, என்னவோ கேட்டது கிடைக்காமல் முகம் திருப்பி செல்லும் குழந்தை போல அவளுக்கு ஈசன் செல்வது இருந்தது..