“சரி செய்யனும்னு ட்ரை பண்றாங்களோ…” என்ற எண்ணமும் முளைக்க,
“செய்யட்டும் செய்யட்டும்… பண்றது எல்லாம் பண்ணிடறது… அப்புறம் உன்னை புரிஞ்சுக்கவே முடியலைன்னு புலம்புறது… ஹ்ம்ம்…” என்று தனக்கு தானே முணுமுணுத்தபடி சல்வாரில் இருந்து சேலைக்கு மாறி, காத்திருக்க, குளித்து வந்த ஈசனுக்கு இதுவொரு இன்ப ஆச்சர்யம்..
“ஒண்ணுமில்லையே… இப்படிதான் ஒருத்தன் ட்ரெஸ் பண்ணும் போது நிக்கிறதா…” என்று வேண்டுமென்றே வம்பிழுக்க,
“என்னது…” என்று கண்களை விரித்து, அப்போது தான் ஈசனை கவனிக்க, அவனோ உடைகள் மாற்றிக்கொண்டு இருக்க, “ச்சி.. உங்களுக்கு வெக்கமே இல்லே..” என்று முகம் சுளித்தவள், திரும்பி நின்றுகொள்ள,
“ஆமாமா.. ரொம்பத்தான்… போடி..” என்றவன் விசில் அடித்தபடியே தயாராக, வெகு நாளைக்கு பிறகான இருவருக்குமான இயல்பான பேச்சு, அருகாமை இருவர் மனதையும் கொஞ்சம் கொஞ்சம் குளிர்வித்துக்கொண்டு இருந்தது..
அதிலும் லட்சுமிக்கு, இதெல்லாம் காலையில் நடந்த சண்டையினால் என்று தெரிந்தாலும், மனம் அந்த நேரத்தில் கொஞ்சம் அமைதியாய் உணர்ந்தது.. அவன் ஒரு முயற்சி எடுக்கிறான்.. அதில் நான் எதுவும் குழப்பம் செய்யக் கூடாது என்று நினைத்திருக்க,
“லஷ்மி போலாமா….” என்று ஈசன் கேட்க,
“ம்ம் போலாம்…” என்று இருவருமே ஒன்றாய் கீழிறங்கி வந்து, வீட்டினரிடம், “தோப்பு வரைக்கும் போறோம்…” என்று ஈசன் சொல்ல,
“அவளுக்கு முடியலடா…” என்று மரகதம் சொல்ல,
“இல்லத்தை… இப்.. இப்போ கொஞ்சம் நல்லாருக்கு…” என்று லட்சுமி வேகமாய் சொல்ல,
“வீட்டிலேயே இருக்கால்லம்மா வெளிய போனா கொஞ்சம் நல்லாருக்கும்…” என்று ஈசனும் சொல்ல,
“மரகதம் விடு அவங்க கிளம்பட்டும்.. ரொம்ப நேரம் செய்யாம திரும்பிடுங்க..” என்று கஜேந்திரன் சொல்லவும், சரி என்று தலையை உருட்டிவிட்டு இருவரும் கிளம்பிச் செல்ல, ஈசன் புல்லெட் எடுப்பான் என்று லட்சுமி எதிர்பார்க்கவே இல்லை..
அவளது ரொம்ப வருட ஆசை.. அவனோடு புல்லட்டில் அமர்ந்து செல்லவேண்டும் என்று.. அவள் எதிர்பார்த்த ஒரு நேரத்தில் அவன் அதில் அழைத்துசெல்லவில்லை.. இப்போது அவள் கேட்காமலேயே “ஏறு…லஷ்மி..” என, மனதிற்குள் சின்னதாய் ஒரு உற்சாக ஊற்று.
இதழில் தோன்றும் முறுவலை அவனுக்கு காட்ட மறைத்து, ஏறி அமர்ந்தவளின் கரங்கள் ஈசனது இடுப்பை வளைத்துக்கொள்ள, ஈசனுக்கு மனம் இன்னும் திருப்தியாய் இருந்தது.. இப்போது அவன் மனத்தில் அவளும் அவனும் மட்டுமே.. வீடு…. பிரச்சனை… பணம்…. வேலாயுதம்… தொழில்… என்று எதுவுமே இப்போது அவன் எண்ணத்தில் இல்லை.
லஷ்மி லஷ்மி லஷ்மி மட்டும் தான்.. அப்படியே காற்றில் பறப்பது போல் இருந்தது.. வண்டியும் அவன் எண்ணத்திற்கு ஈடு கொடுத்து பறக்க, அடுத்த கால்மணி நேரத்தில் தோப்பு வந்துவிட, தென்னந்தோப்பிலிருக்கும் சிறு வீட்டின் முன் வண்டியை நிறுத்தியவன், லட்சுமி இறங்கவும் இறங்கினான்.
“பரவாயில்லண்ணா.. சாவி கொடுத்திட்டு நீங்க கிளம்புங்க.. நான் போன் பண்றேன் அப்போ வாங்க…” என்றவன், அவர் கையில் சில நூறு ருபாய் தாள்களை கொடுத்து அனுப்பி வைத்தான்..
அவர் சென்றதும், “அவர எதுக்கு மாமா போக சொன்னீங்க..???” என்றாள் லட்சுமி..
“ஹப்பா… இப்போதான் சொல்லிருக்க…” என்று ஈசன் சொல்ல,
“என்ன மாமா???” என,
“மாமான்னு.. வீட்ல இந்த வார்த்தை வரவேயில்ல…” என,
“ம்ம்…” என்று மட்டும் சொன்னவள், அப்படியே சுற்றி பார்வையை ஓடவிட்டாள்..
‘பதில் சொல்ல பிடிக்காட்டி இப்படி திரும்பிக்கிறது…’ என்று ஈசன் முணுமுணுப்பது அவள் காதில் விழுந்ததுதான்.. ஆனாலும் ஒன்றும் பதில் சொல்லிக்கொள்ளவில்லை. அவனும் அடுத்து அது இதென்று கேட்காமல்
“கொஞ்சம் நடப்போம்…” என, அவளும் அவனோடு சேர்ந்து நடக்க, அப்போது தான் நீர் பாய்ச்சி இருப்பார்கள் போல, தன்னை மரங்களை சுற்றி இருந்த வாய்க்காலில் நீர் நிரம்பியிருந்தது,
“ஸ்லிப்பர் வேணாம் லஷ்மி.. தண்ணியா இருக்குல்ல.. வலிக்கிடும்..” என, இருவருமே கால்களில் இருந்த செருப்பை கழற்றிவிட்டு நடக்க, அந்த மண் தரையோடு சேர்த்து இருவரின் மனமும் கொஞ்சம் கொஞ்சமாய் ஜில்லிட்டுக் கொண்டு இருந்தது.
சற்று தள்ளி காங்கேயம் காளைகளும், பசுக்களும், கன்றுகளும் கட்டப்பட்டு இருக்க, “லஷ்மி வா அங்க போகலாம்..” என,
“நான் மாட்டேன் ப்பா…” என்று வேகமாய் தலையை உலுக்கினாள்..
“ஏன்..??”
“ம்ம்ஹும்… நீங்க போய் பார்த்திட்டு வாங்க உங்க செல்லங்கள.. நான் மாட்டேன்.. பார்த்தாலே பயமா இருக்கு…” என்று படபடவென பேச, இயல்பான லட்சுமியாய் பேசுகிறாள் என்று ஈசனுக்கு புரிந்தது.
இனி தினமும் இவளோடு கொஞ்சம் நேரம் கழிக்க வேண்டும் என்று அந்நேரத்தில் ஒரு முடிவெடுத்து, “சும்மா வா டி…” என்று இழுத்து சென்றான்.
“மாமா பயமா இருக்கு சொல்றேன்ல…”
“நான் தான் இருக்கேன்ல…”
“ம்ம்ஹும் இதுக்கு நம்ம சினிமாக்கு கூட போயிருக்கலாம்…”
“அதுசரி… தனியா போகணும்னு கிளம்பினா.. நீ கூட்டமான இடம் சொல்ற…” என்றவன், ஒருவழியாய் லட்சுமியின் கரங்களை பிடித்து, கன்றுகுட்டியை தடவி பார்க்க வைக்க,
“ஐயோ.. மாட்டேன் மாட்டேன்…” என்று குதித்தவள், பின் ஒருவாறு பழகி அவளே இன்னொரு கன்றையும் தடவிப்பார்க்க,
“எங்க இதை தோடு…” என்று காளையை காட்டி ஈசன் கேட்க, அவன் கிண்டலடிக்கிறான் என்பது புரிந்தாலும் சிரித்தபடி முறைத்தாள்..
லட்சுமியின் சிரிப்பு அவள் சமாதானம் ஆகிவிட்டாள் என்றெல்லாம் ஈசனுக்கு உணர்த்தவில்லை.. இது இந்த நேரத்தின் ஏகந்தத்தால் வந்தது என்று அவனுக்கும் புரிந்தே இருந்தது.. கொஞ்சம் கொஞ்சமாய் அனைத்தையும் சரி செய்திட வேண்டும் என்றே எண்ணினான். இப்படியே எதாவது கதையளந்தபடி இருவரும் பேசி சிரித்து, தோப்பை சுற்றிவர, மெல்ல மெல்ல இருட்டவும் தொடங்கியது..
“இருட்டுது மாமா… கிளம்பலாமா…” என,
“இப்போவேவா…” என்றவன் குரலில் இன்னும் கொஞ்சம் இருப்போமே என்று சொல்லாமல் சொல்ல,
“ம்ம் இருப்போமே…” என்று அவளும் சம்மதம் போல் சொல்லி சிரிக்க, அங்கே தென்னந்தொப்பில், ஒரு மரம் மட்டும் வளைந்து வளர்ந்திருக்க,
“ம்ம் இப்படி உட்காரலாம்…” என்று ஈசன் ஒரே தாவில் ஏறி அமர்ந்துவிட, லட்சுமிக்கு அது முடியவில்லை..
இரண்டு முறை முயற்சித்தவள், “ம்ம்ஹும்.. இது என்னை மட்டும் ஏத்திக்க மாட்டேங்குது…” என்று மரத்தை அவனிடம் புகார் செய்ய,
“அட எவ்வளோ தைரியம் பாரேன்.. என் முன்னாடி என் பொண்டாட்டிய ஏத்திக்கலைன்னா எப்படி” என்று சொல்லி சிரித்தவன்,
“நீதான் இருக்கியேடா.. அப்புறம் நான் என்ன ஏத்துறதுன்னு மரம் என்கிட்டே சொல்லுது லஷ்மி….” என்று சொல்லியபடியே இறங்கியவன், அவள் சுதாரிக்கும் முன்னே அவள் இடையில் கரம் கொடுத்து அப்படியே தூக்கி மரத்தில் அமர்த்த, தானும் அதே வேகத்தில் அவளை ஒட்டி அமர்ந்துகொண்டான்..
நிலவின் வருகையால், மேகம் கறுத்துவிட, பசுமையாய் தெரிந்த இடம் இப்போது கரிய நிறம் பூன, அதெல்லாம் அவர்கள் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை..
லட்சுமியை ஒட்டி அமர்ந்தவன், அவளை தன் மீது சாய்த்துக்கொள்ள, அவளும் பிகு எல்லாம் செய்யவில்லை.. மனதில் வருத்தம் கவலை எல்லாம் இருக்கிறது தான். ஆனால் அந்த நேரத்தில் அதைக் காட்ட விரும்பவில்லை.. சூழலின் இனிமை.. ரம்யம் இருவருக்கும் மனதில் ஒரு வித மயக்கத்தை தான் கொடுத்திருந்தது..
“லஷ்மி…” என்றவனின் குரலில் இருந்த மாற்றம் புரிய, “ம்ம்..” என்று மட்டும் சொன்னாள் நிமிர்ந்து பாராது..
“எதாவது கேளேன்…” என,
‘என்ன கேட்க…??’ என்று பதில் கேள்வியும் கேட்கவில்லை, யோசிக்கவும் இல்லை அடுத்த நொடி பட்டென்று “மோட்டார் எப்போ போடுவாங்க..??” என,
“நான் என்ன கேக்குறேன்.. நீ என்ன டி கேட்கிற…” என்பது போல் ஈசன் பார்க்க, அந்த இருட்டில் ஈசனது பார்வை எல்லாம் அவளுக்கு தெரியவில்லை.. அலைபேசியில் இருந்த டார்ச்சை ஒளிர விட்டவன், அவளை பார்க்க,
“சொல்லுங்க மாமா மோட்டார் எப்போ போடுவாங்க…” என,
“மோட்டார் போட்டுத்தானே தண்ணி பாய்ச்சிருக்கு.. இனி நாளைக்கு தான்…” என,