ஆண்டிபட்டியில் இருந்து பெரியகுளத்தை எத்தனை வேகத்தில் சென்றடைய முடியுமோ அத்தனை வேகத்தில் சென்றடைந்தான் ஈசன். காரின் வேகத்தை விட ஈசனது எண்ணங்களின் வேகம் இன்னும் ஜாஸ்தியாய் இருந்தது.. கண்களிலும் முகத்திலும் ஒரு தீவிர பாவனை. இது நடந்துவிட வேண்டுமே என்ற எண்ணம் அவனை இன்னும் இன்னும் வேகம் கொள்ளச் செய்ய, பெரியகுளத்தின் உள்ளே நுழைந்தவன், தனக்கு அழைத்த எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்டு,
எதிர்பக்கம் இருந்து பதில் வரவும், “சரி அஞ்சு நிமிசத்தில இருப்பேன்..” என்றவன், சரியாய் அந்த லாட்ஜ் முன் தன் காரை நிறுத்துகையில், மூன்று நிமிடங்களே கடந்திருந்தது..
வேகமாய் இறங்கியவன், அங்கே இவனுக்காகவே காத்திருந்த நபரை கண்டு “ஹலோ நாராயணன்… உள்ள தான் இருக்காங்களா… நல்லா தெரியுமா???”என்று கை குலுக்கியபடி விசாரிக்க,
“சார் நீங்க அனுப்பின போட்டோ, விபரம் எல்லாம் வச்சு நான் விசாரிச்ச அளவுல, அவங்க இங்க இருக்கிறதா தான் தகவல் வந்தது.. உள்ள லாட்ஜ்ல நேம் ரெஜிஸ்ட்டர் செக் பண்ணப்போ வேலாயுதம் பேர்ல கிட்டத்தட்ட ஒரு வாரமா ரூம் புக் ஆகிருக்கு…” என,
“சரி உள்ள போய் பார்ப்போம்…” என்றான் வேகமாய்.
“அதில தான் சார் சிக்கல்…” என்று நாராயணன் தயங்க,
“ஏன் என்னாச்சு..??” என்று ஈசன் கேட்க,
“நான் இங்க வந்து விசாரிக்கிறதுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடி தான் அவங்க கிளம்பி போனாங்களாம்.. விசாரிச்சு பார்த்த அளவுல, அது நீங்க சொன்ன ஆளுங்க போலத்தான் இருக்கு…” என,
“போட்டோஸ் காட்டி கேட்டீங்களா…” என்றபடி ஈசன் அந்த லாட்ஜினுள் நுழைய, நாராயணனும் அவனோடு சேர்ந்தே உள்ளே நுழைந்தான்..
ஈசன் கிட்டத்தட்ட தென் மாவட்டங்கள் முழுவதுமே ஆள் வைத்திருந்தான்.. எப்படியாவது, எந்த வகையிலாவது வேலாயுதம் குடும்பத்தை கண்டுபிடித்திட வேண்டும் என்று தனக்கு மிக மிக நம்பிக்கையானவர்களின் உதவியுடன், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்களை நியமித்திருந்தான்..
‘எங்களை ஒருவர் ஏமாற்றி போவது.. நாங்களும் அப்படியே விடுவதா…’ என்ற எண்ணமே அவனை தேடுதல் வேட்டையில் வேகமும் கவனமும் செலுத்த வைத்தது..
அப்படியாக நியமித்தவர்களில் இந்த நாராயணனும் ஒருவன்.. தேனி மாவட்டம், வேலாயுதம் குடும்பத்தை தேடுவது இவர் வேலை.. அனைத்திற்கும் பணம் தான்.. எத்தனை ஆட்கள்.. எத்தனை நாட்கள்.. எவ்வளவு பணம் செலவானாலும் சரி, என்னவாக இருந்தாலும் சரி முடிவில் ஈசன் கண் முன்னே வேலாயுதமும் அவர் குடும்பமும் வந்து நிற்க வேண்டும் அவ்வளவே..
லாட்ஜ் ரிசப்சனில் இருந்த நபரிடம் சென்று விசாரிக்க, அவரோ மீண்டும் லெட்ஜரை எடுத்து பார்த்து,
“சார் நீங்க சொல்ற பேர்ல ஒருவாரமா ஒரு பேமிலி இங்கதான் தங்கிருக்காங்க.. வேலாயுதம்னு தான் பேர் போட்டிருக்கு, ஆனா அந்தம்மா அந்த பையன் பேரு என்னான்னு தெரியாது..” என,
“இவங்கதானா பாருங்க…” என்று தன் அலைபேசியில் இருக்கும் அவர்கள் புகைப்படத்தை காட்டி கேட்க, அதனை பார்த்தவனோ,
“சார் நான் வேலைக்கு சேர்ந்து ரெண்டு நாள் தான் ஆகுது.. எனக்கு சரியா அடையாளம் தெரியலை…” என,
“பின்ன எப்படி ஒருவாரமா இங்க இருக்காங்கன்னு சொன்னீங்க…” என்றான் ஈசன்..
குரலில் அவனையும் மீறிய ஒரு கடுப்பு, வேகம் எல்லாம் எட்டிப்பார்க்க, அவன் தொனியிலும், பார்வையிலும், அவன் தோற்றத்திலும் லேசாய் அரண்ட அந்த மனிதர், “சார் நான் லெட்ஜர் பார்த்துத்தான் சொன்னேன்… எனக்கு வேற எதுவும் தெரியாது… வேணும்னா மேனேஜர் கிட்ட கேளுங்க…” என்றுவிட்டான்.
‘ம்ம்ச்…’ என்று ஈசன் தன் நெற்றியை தடவ, “சார் கொஞ்சம் மெதுவா கேட்போம்.. வந்த இடத்தில தேவையில்லாத பிரச்சனை வேண்டாமே…” என்று நாராயணன் சொல்ல,
“ம்ம் …” என்று தலையாட்டியவன்,
“சரி உங்க மேனேஜர் எங்க..??” என்று வினவ,
“அவர்… அவர்….” என்று இழுத்தவன், “அவருக்கே போன் போடுறேன்…” என்று சொல்லிவிட்டு, மேனேஜரை அழைக்க, அடுத்த சில நொடிகள் மேனேஜர் வந்து என்னவென்று வினவ,
“சார் நாங்க ஒருத்தர் விபரம் கேட்டு வந்திருக்கோம்..” என்று நாராயணன் தன்மையாக எடுத்துச் சொல்ல, இவர் யார் என்பது போல மேனேஜர் ஈசனை காண,
“இவருக்காக தான் விசாரிக்கிறோம்…” என்று அதற்கும் நாராயணன் சொல்ல, அந்த நேரத்தில் அந்த மேனேஜருக்கு என்ன தோன்றியதோ, இல்லை யாருக்கு நேரம் சரியில்லையோ தெரியவில்லை,
“ஏன் அதை சார் கேட்க மாட்டாராமா..” என்று மேனேஜர் சிறிது நக்கலாக வினவ, அவ்வளவுதான் ஈசன் பொறுமை இன்னும் அவனிடம் இருக்குமா என்ன..??
அவன் குணத்திற்கு, இத்தனை நேரம் நின்று பேசியதே பெரிது. விஷயம் வெளியே தெரியாமல் இருக்கவேண்டும் என்று தான் ஆள் வைத்திருப்பது.. இல்லாவிட்டால் இந்நேரம் ஈசன் இந்த லாட்ஜின் முதலாளியை அல்லவா பார்த்திருப்பான்.. அது தெரியாமல், அவன் யாரென்று தெரியாமல் அந்த மேனேஜர் ‘நீ கேட்டால் நான் சொல்லிட வேண்டுமா’ என்பது போல் பார்வை காட்டி வார்த்தையை விட,
“உன்கிட்ட பேசணும்னு அவசியமே இல்லை.. லாட்ஜ் ஓனரை கூப்பிடு…” என்று ஈசன் முறுக்கி நிற்க, அவன் தோற்றம் அங்கிருக்கும் மூவருக்குமே ஒரு பயத்தையும், அதிர்ச்சியையும் தான் கொடுத்தது..
தன் வேலை முடியவேண்டும் என்று இத்தனை நேரம் கொஞ்சம் நிதானமாய் இருந்தவன், அவன் தன்மானம் சீண்டப்படவும் ‘நான் எத்தனை பெரிது…’ என்று காட்டும் அவனது பழைய தோரணை வந்துவிட்டது..
“ஓனரா…??!!! அவரை எதுக்கு நீங்க பார்க்கணும்… என்ன வந்து கலாட்டா பண்றீங்களா..?? போலீஸ் கூப்பிடவா…” என்று அந்த மேனேஜர் வேகமாய் தன் பலத்தை காட்ட முயல,
“சார் சார் ப்ளீஸ் ரெண்டுபேருமே கொஞ்சம் அமைதியா இருங்க..” என்று நாராயணன் சமாதனம் செய்ய முயல,
“போலீஸ் தானே.. நீ என்ன கூப்பிடுறது.. நானே கூப்பிடவா.. அதுக்கு முன்னாடி உன் ஓனர கூப்பிடு…” என்று கட்டளை போல் ஈசன் சொல்ல,
“சார்…” என்று நாராயணன் ஈசனை பார்த்து ஒரு கெஞ்சல் பார்வை விட, கண்களை இறுக மூடித் திறந்தவன், “பேசிட்டு வாங்க…” என்று வெளியேற,
“ஹலோ என்ன… வந்தீங்க… சத்தம் போட்டீங்க… இப்போ போறீங்க…” என்று அந்த மேனேஜர் குரலை உயர்த்த, வெளிய செல்ல கிளம்பிய ஈசன் திரும்பி அவனை முறைத்தபடி,
“இங்க பார் நான் நினைச்சா இந்த லாட்ஜை இன்னிக்கே வாங்க முடியும்.. அப்புறம் நீ என்கிட்டே கை கட்டி தான் வேலை பார்க்கணும்.. அதுவுமே நான் மனசு வச்சாதான்..” என்று சொல்ல, நாராயணன் மட்டுமில்லை அந்த மேனேஜர் கூட அதிர்ந்து தான் பார்த்தான்.
அதற்குள் அங்கே ரிசப்சனில் இருந்தவன் ஓனருக்கு அழைத்திருக்க, ஈசன் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த லாட்ஜின் உரிமையாளரும் உள்ளே வந்துவிட, யாரது என்று ஈசன் திரும்பிப் பார்க்க,
“வாங்க வாங்க ஈசன் நீங்களா..” என்றபடி அவனிடம் கை குலுக்க தன் கரத்தினை முன்னே நீட்டியபடி வர, அவர் உடல் மொழியும், குரலிலும் அத்தனை மரியாதை தெரிந்தது.. ஆனால் ஈசனுக்கோ அவரை யாரென்று தெரியவில்லை, ஈசனும் சம்பிரதாயமாய் கை குலுக்க,
“என்ன ஈசன் உங்களுக்கு என்னை தெரியலையா…” என்றவர், “நிக்க வச்சிட்டே பேசினீங்களா…” என்று மேனேஜரை முறைக்க, ஈசனோ அலட்சியமாய் ஒரு பார்வை பார்த்தான்..
“இல்ல சார் இவங்க தான்…” என்று மேனேஜர் எதுவோ கூற வர,
“என்ன கேட்டாலும் கதை மட்டும் சொல்லுங்க…” என்று கடிந்தபடி,
“சாரி ஈசன்.. நீங்க வர்றீங்கன்னு ஒருவார்த்தை எனக்கு சொல்லியிருந்தா நானே வந்திருப்பேனே.. உள்ள வாங்க… உள்ள போய் பேசலாம்…” என்று அவர் அறைக்கு அழைக்க,
நாராயணனை இங்கேயே இருக்குமாரு கண் ஜாடை காட்டிவிட்டு செல்ல, மேனேஜரோ, வந்திருப்பவன் பெரியாள் போல் என்றுணர்ந்து, உள்ளே போய் எதுவும் சொல்லி விட்டால் அவ்வளவு தான் வேலை போகும் என்றெண்ணியபடி வேகமாய் அவர்களின் பின்னேயே சென்றான்.
அந்த லாட்ஜின் உரிமையாளரோ, அவர் இருக்கையில் அமர, ஈசன் அவரெதிரே அமர, மேனேஜர் அப்படியே அங்கே நிற்க,
“ஈசன்.. உங்களுக்கு என்னை தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை.. ஆனா எனக்கு நீங்க.. உங்க பேமிலி நல்லா தெரியும்.. உங்க அப்பா.. அவரை என்னால மறக்கவே முடியாது..” என, ஈசனோ லேசாய் கண்களை சுருக்கிப் பார்த்தான்.
“இந்த லாட்ஜ் என் அப்பாவோட கனவு.. ஆனா இதை கட்டத் தொடங்கும் போது திடீர்னு ஃபைனான்சியல் ப்ராப்ளம்.. பாதிலேயே நின்னுடுச்சு.. அப்போ எங்கப்பா பிரண்ட் ஒருத்தர் தான் உங்கப்பாவ அறிமுகம் செஞ்சு வச்சார்.. நாங்க அவர்க்கு புதுசு தான்.. ஆனா எங்க சூழ்நிலை உணர்ந்து எந்தக் கண்டிசனும் போடாம உங்கப்பா எங்களுக்கு பணம் கொடுத்து உதவி செஞ்சார்….” என்று அப்போதும் நன்றியோடு செல்ல,
‘பார்த்தாயா…’ என்று ஒரு ஏளன பார்வையை அந்த மேனேஜர் மீது வீசியவன்,
“அதிலென்ன இருக்கு..” என்று இழுக்க,
“என் பேர் கிருஷ்ணமூர்த்தி…” என்றார் ஓனர்.
“ம்ம்..” என்று லேசாய் சிரித்தவன் “இதிலென்ன இருக்கு Mr. கிருஷ்னமூர்த்தி.. அப்பா பண்றது ஃபைனான்ஸ்.. சோ அவர் கொடுத்து தானே ஆகணும்..”
“சரிதான் ஈசன்.. ஆனா ஃபைனான்ஸ் பண்ற எல்லாருமே உங்கப்பா போல இருக்க மாட்டாங்களே…” என, ஈசனுக்கு தன் தந்தையின் மீதிருந்த மதிப்பு அந்நேரத்தில் இன்னும் அதிகரித்தது..
‘இதெல்லாம் நமக்கு தேவையா….’ என்று ஈசன் எத்தனையோ முறைகள் சொல்லியிருக்கிறான்.
ஆனால் கஜேந்திரனுக்கு தான் செய்யும் தொழில் மீது எத்தனை பக்தியும், அதில் அவர் எத்தனை உண்மையாகவும் இருந்திருந்தால் அவருக்கு இத்தனை வருடம் கடந்தும் இப்படியான ஒரு நற்பெயர் நிலைத்திருக்கும் என்று தோன்ற, இப்படியான ஒரு மனிதரை ஏமாற்றி செல்ல அதுவும் உடன் இருந்தே துரோகம் செய்து செல்ல எப்படி வேலாயுதத்திற்கு மனம் வந்தது என்றும் தோன்றி, அத்தனை நேரம் இளகியிருந்த மனம் மீண்டும் இறுகியது..
ஈசனது பதிலுக்காக அவன் முகத்தையே பார்த்திருந்த கிருஷ்ணமூர்த்தி, “என்ன ஈசன்.. எதுவும் பிரச்சனையா?? சட்டுன்னு உங்க முகமே மாறிடுச்சு…” என்று விசாரிக்க,
அங்கேயிருந்த மேனேஜரோ ஒருநொடி நடுங்கித்தான் போனான்.. எங்கே எதுவும் தான் நடந்துகொண்ட விதம் பற்றி சொல்லி தன் சீட்டை கிழித்துவிடுவானோ என்று.. ஆனால் ஈசனோ அவனை சிறிதும் கண்டுகொள்ளாது,
“ஹ்ம்ம் எனக்கு ஒருத்தர் விபரம் தெரியனும்… அவர் இங்க இருக்கிறதா தகவல் வந்தது…”என்றான்..
“லெட்ஜர ஆபிஸ் பையன் கிட்ட கொடுத்துவிடுங்க, அப்படியே ரெண்டு ஜூஸ்.. வெளிய இருக்கிறவருக்கு என்ன வேணுமோ அதை கேட்டு கொடுங்க..” என்று மேனேஜரை வெளியே அனுப்பிய கிருஷ்ணமூர்த்தி,
“யார் பத்தி ஈசன்.. கொஞ்சம் டீடெயிலா சொன்னா, எனக்கு தெரிஞ்ச வரைக்கும் நானும் விசாரிப்பேனே…” என்றார்.
ஈசனுக்கோ தாங்களை ஏமாற்றி ஒருவர் ஓடிவிட்டார் என்று சொல்ல மனம் வரவில்லை. ஆகையால் பண விஷயம் விட்டுவிட்டு, மற்றதை மட்டும் கூறினான்..
“வேலாயுதம்…” என்று நெற்றியை சுருக்கி யோசித்த கிருஷ்ணமூர்த்தி, “நீங்க சொல்றபடி பார்த்தா அவர் உங்க வொய்ப்போட சித்தப்பா இல்லையா…” என்றதும், சடுதியில் ஈசனுக்கு அன்று லட்சுமி கண்ணீரும் கோபமுமாய் அவன் முன்னே நின்ற கோலம் தான் மனதில் வந்து போனது..
“எங்களுக்கு கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே அவர் எங்களுக்கு சொந்தம் தான்…” என்றவன், அவரைப்பற்றி மற்ற சில விசயங்களையும் சொல்ல, அடுத்து அங்கே லெட்ஜரும் ஜூசும் வந்து சேர்ந்தது.