“லெட்ஜர்ல வேலாயுதம் பேர் தான் இருக்கு.. ஆனா மதுரைன்னு இருக்கு அட்ரெஸ்ல.. ஹ்ம்ம் இருங்க சிசிடிவி எதுவும் விபரம் தெரியுதான்னு பாப்போம்.. ஒருவேளை அவங்க பதிவு எதாவது இருந்திருந்தா உங்களுக்கும் நல்லது தானே…” என்று கிருஷ்ணமூர்த்தி சொல்ல, ஈசனுக்கு உள்ளம் பரபரத்தது..
‘அவராகத்தான் இருந்திட வேண்டும்..’ என்று ஓயாமல் மனம் உருப்போட, கிருஷ்ணமூர்த்தியோடு சேர்ந்து அவனும் கணினி முன் அமர, அடுத்த அரை மணி நேரம் அவர்களுக்கு அதிலேயே கழிய, ஈசனுக்கு உபயோகமாய் எதுவும் தகவல் இல்லாமல் போனது..
“நான் தேடி வந்தது இவரில்லை…” என்றவனின் குரல் எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல் இருக்க,
“ஓ.. அவர் போட்டோ ஏதாவது இருந்தா எனக்கு கொடுத்திட்டு போங்க.. பர்சனலா நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட விசாரிக்கிறேன்…” என்றவரிடம், வேலாயுதம் புகைப்படத்தை மட்டும் கொடுத்துவிட்டு, வெளிவர,
“சார் நம்ம தேடி வந்தவங்க இல்லை சார்…” என்று நாராயணனும் சொல்ல,
“ம்ம்..”என்று மட்டும் தலையசைத்தவன்,
“உங்க உதவிக்கு ரொம்ப நன்றி…” என்று கிருஷ்ணமூர்த்திக்கு கை குலுக்கிவிட்டு, காரில் ஏறப்போக, அங்கே அந்த மேனேஜர் நின்று வேகமாய் கார் கதவை திறந்துவிட, ஈசனுக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட்டது..
நாராயணன் தயங்கி நிற்க, “நீங்க வாங்க.. நான் பஸ்ஸ்டாண்டுல டிராப் பண்றேன்…” என்றதும் அவனும் ஏறிக்கொள்ள, அடுத்து எங்கே போகவேண்டும், என்ன செய்யவேண்டும் என்று சொல்லியவனுக்கு மனதில் லேசாய் ஒரு ஏமாற்றம் பரவியது..
‘அய்யா அவர் தொழில்ல எத்தனை நேர்மையா இருந்திருந்தா இப்படி ஒவ்வொருத்தரும் அவரை பத்தி நல்லவிதமா நன்றியோட பேசுவாங்க.. ஆனா இந்த வேலு மாமா.. கூட இருந்தே இப்படி குழி பறிச்சிட்டாரே.. அவர் பண்ண வேலை எத்தனை பேருக்கு கஷ்டம்.. என் லஷ்மி… பாவம்.. அவளைக்கூட அவர் நினைச்சுப் பார்க்கலை.. நேர்ல கிடைக்கட்டும் அப்புறம் இருக்கு…’ என்று சொல்லிக்கொண்டவன், அடுத்து ஊர் வந்து சேர, அங்கே அவனுக்கென்று காத்திருக்கும் வேலைகள் எல்லாம் ஈசனை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வீடு போய் சேரவே இரவாகிவிட்டது..
வீட்டினுள்ளே நுழையும் போதே, கஜேந்திரன், மரகதம், லட்சுமி மூவரும் இவனுக்காக காத்திருக்க, அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன்,
“பத்தே நிமிஷம் லேசா குளிச்சிட்டு வந்திடுறேன்..” என்றுவிட்டு சென்றவன், சொன்னது போலவே அடுத்த பத்தாவது நிமிடத்தில் கீழே இருந்தவன்,
“அய்யா, மாத்திரை போட்டா தூங்கனும்.. அதைவிட்டு ஏன் இவ்வளோ நேரம் தூங்காம இருக்கீங்க…” என்றபடி சாப்பிட அமர, லட்சுமி தான் அவனுக்கு எடுத்துவைத்தாள்.
“ரெஸ்ட்லையே இருக்க முடியுமா ஈசா.. கொஞ்சம் நம்மளை நம்மாலே மாத்திக்க வேண்டாமா, அதான் தோப்பு வரைக்கும் போயிட்டு வந்தேன்..” என்று கஜேந்திரன் சொல்லவும்
“பைக்லையா போனீங்க…” என்று ஈசன் கேட்டான்..
“இல்ல ஈசா.. கார்ல தான் போனேன்.. இனி அடிக்கடி போய் பார்க்கணும்.. நீயும் ஒருத்தனா எத்தனை பார்ப்ப…” என்று சொல்ல,
“ஈசா.. உங்கய்யா இப்போ எல்லாம் நாங்க சொல்றதை கேட்கிறதே இல்லை..” என்று மரகதம் ஒப்பிக்கவும், கஜேந்திரன் சிரிக்க, “என்னய்யா…??” என்று கேட்டான் மைந்தன்.
“இந்த பொம்பிளைங்க இப்படிதான் ஈசா.. ஒருவிசயம் கிடைச்சா போதும் நம்மளை அவங்க குழந்தையா மாத்தி.. அவங்க சொல்றதை எல்லாம் செய்யணும்னு நினைப்பாங்க.. ஓடியாடி வேலை செஞ்சவன்.. வீட்ல இருக்க முடியுமா…” என, அவர் சொன்னதும் சிரித்தபடி ஈசன் லட்சுமியை தான் பார்த்தான்..
அவளுக்கும் கஜேந்திரன் சொன்னதை கேட்டு லேசாய் ஒரு சிரிப்பு. ஆனாலும் அமைதியாய் இருக்க,
“நீ சாப்பிட்டியா..??” என்று ஈசன் கேட்டதும், ஆம் என்று தலையை மட்டும் உருட்டினாள்..
“உங்கய்யாவ கவனிக்கிறது ஒருப்பக்கம்னா உன் பொண்டாட்டிய கவனிக்கிறது இன்னொரு பக்கம்.. லட்சுமிய சாப்பிட வைக்கிறதுக்குள்ள…” என்று மரகதம் சொல்ல, லட்சுமியை லேசாய் முறைத்த ஈசன்,
“எல்லாரையும் சொல்றீங்க.. நீயேன் ம்மா இன்னும் தூங்காம இருக்க…” என்று வினவ,
“அதுவா.. காலையில கடை பையன் சாமான் எல்லாம் கொண்டு வந்தான்.. நீ எங்கன்னு கேட்டோம்… அண்ணே அவசரமா கிளம்பி வெளிய போனாரு.. முகமே டென்சனா இருந்திச்சுன்னு சொல்லிட்டு போனான்.. அடுத்து உனக்கு லட்சுமி போன் போட்டு பார்த்தா, லைன் கிடைக்கல.. அதான் நீ வரவும் என்னான்னு கேட்போம்னு இருக்கோம்..” என்றார்.
“அதுவாம்மா…” என்றவன், உணவருந்திக்கொண்டே நடந்த விசயங்களை சுருக்கமாய் சொல்ல, சில நொடிகள் அங்கே அமைதி..
யாருக்கும் சட்டென்று என்ன பதில் பேசுவது என்று தெரியவில்லை.. இந்த வேலாயுதம் மட்டும் இப்படி ஒரு பிரச்சனை செய்திடாவிடில் இந்நேரம் அனைவருமே மகிழ்வாய் அல்லவா இருந்திருப்பார்கள்.. ஆனால் ஏன் இப்படி செய்தார்??? இந்த கேள்வி அனைவரின் மனதினுள்ளும் தோன்ற,
மரகதம் மட்டும் முகத்தை சேலையில் துடைத்தபடி “ஹ்ம்ம் நம்ம என்ன இப்படியெல்லாம் நடக்கும்னு கண்டோமா… உங்க சித்தப்பா மட்டும் இப்படி…” என்று சொல்லி முடிக்கவில்லை..
ஈசன் “அம்மா…!!!!!” என்று அதட்டிவிட்டான்..
அத்தனை நேரம் நன்றாக பேசியவன் திடீரென்று முகமே மாறி, சப்தமிடவும் அனைவரும் திகைத்துப்பார்க்க,
“ம்மா.. என்ன பேச்சு இது… எனக்கும் சேர்த்து தான்.. வேலு மாமா லட்சுமிக்கு சித்தப்பா தான்.. ஆனா இதுல ஏன் அவளை வச்சு அவரை பார்க்கணும்.. லட்சுமிக்கு முன்னாடியே அவர் நமக்கு சொந்தம் தானே.. இல்ல இதுக்கு முன்னாடி நீங்க அவரை இப்படிதான் சொன்னீங்களா..??” என்றான் அழுத்தமாய்.
லட்சுமிக்கு திக்கென்றானது.. மரகதம் என்ன நினைப்பரோ என்று அவரை பார்க்க, மரகதமும் சரி, கஜேந்திரனும் சரி ஒருவரை ஒருவர் பார்துக்கொண்டவர்கள்,
“ஹ்ம்ம்… மனுஷ புத்தி.. கூறுகெட்ட தனமா நினைச்சிடுச்சு..” என்று மரகதம் சொல்ல,
“ஈசா… சாப்பிட்டு எல்லாம் போய் தூங்குங்க…” என்று கஜேந்திரன் சொல்லிச் செல்ல, அவர் சென்றதும், மரகதம் “லட்சுமி” என்றழைக்க, அவளோ சங்கடமாய் அவரை பார்த்தாள்..
“கிறுக்கச்சி.. இதுக்குத்தான் சாப்பிடாம கொள்ளாம உடம்பை கெடுத்திட்டு இருந்தியா… என்கிட்ட சொல்ல என்ன வந்துச்சு.. நான் என்னிக்காவது உன்னை வித்தியாசமா பார்த்திருக்கேனா?? அதைவிட்டு இவன் கிட்ட வருத்தபட்டியா…” என்று விசாரிக்க,
இட்லியை பிய்த்து வாயருகே கொண்டு போனவன், ‘எதுவுமே சொல்லலையா??? அடிப்பாவி… என்னைய கீழ தள்ளி ஏறி மிதிக்கலை.. அவ்வளோதான்.. மத்தபடி நல்லா வச்சு செஞ்சா…’ என்று அவளை பார்க்க, அவன் எண்ணம் உணர்ந்தவள்,
‘ஒழுங்கா சாப்பிடுங்க…’ என்பது போல் அவனை ஒருபார்வை பார்த்துவிட்டு மீண்டும் மரகதத்தை காண,
அவரோ “சரி சரி.. சீக்கிரம் போய் தூங்க பாருங்க…” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்
அவர் அந்தப்பக்கம் போகவும், “மாமா…” என்று லட்சுமி ஈசனை அரட்ட, அவனோ என்னவென்று பார்க்க, “இப்படித்தான் அத்தைக்கிட்ட பேசுவீங்களா..??” என்றாள் காட்டமாய்.
“வேறெப்படி லஷ்மி பேச சொல்ற???” என்றான் ஒன்றுமே தெரியாதவனாய்..
“ம்ம் நீங்க இருக்கீங்களே… சரி மேல போங்க.. நான் இதையெல்லாம் கழுவிட்டு பால் எடுத்திட்டு வர்றேன்…” என்றவள் அவன் உண்ட தட்டை எடுக்க,
“நானே எடுத்து போடுறேன்.. நீ கதவை சாத்திட்டு வா…” என்றவன், அவள் வருவதற்குள் அனைத்தையும் எடுத்து போட்டு சமையலறையில் நிற்க, “தள்ளுங்க நான் கழுவனும்…” என்று அவள் சொல்லியும் கூட அவன் நகராமல் நிற்க,
“மாமா தள்ளுங்க…” என அரட்ட,
“என்ன இவ்வளோ அரட்டர… சரி ஒருத்தியா வேலை செய்றாளேன்னு வந்தா ரொம்ப பண்ற போ டி…” என்று அவளை லேசாய் தள்ளியவன் அங்கேயே தான் நின்றான்.
“ம்ம் இந்தாங்க பிடிங்க…” என்று அவனிடம் பால் டம்ப்ளரை நீட்டியவள், பாத்திரம் கழுவ சின்க்கில் நிற்க,
“நீ குடிக்கல…” என்றவனுக்கு, கழுவிட்டு குடிக்கணும் என்று சொல்ல,
“கழுவிக்கிட்டே கூட குடிக்கலாம்…” என்றவனை புரியாமல் பார்த்தாள்..
“என்ன பாக்குற…” என்றவன் அவனுக்கு கொடுத்த பாலை அவள் வாயருகே நீட்ட,
“ச்சி.. எச்சி…” என்று முகத்தை சுருக்கியவலை பார்த்து “வேணாம் நான் எதாவது சொல்லிடுவேன்…” என்று மிரட்டவும், அவள் ஒருவாய் பருக, பின் அவன் ஒருவாய் பருக என்று மாறி மாறி பருகி இரண்டு டம்பளர் பாலையும் காலி செய்து, வேலையை முடித்து மேலே செல்ல, இருவருக்குமே அந்த நேரம் மனம் சற்று நிம்மதியாய் தான் இருந்தது..
ஆயிரம் பிரச்சனைகள், விடை தெரியா கேள்விகள் எல்லாம் இருக்கிறது தான்.. ஆனாலும் இந்த நேரத்தின் சுகந்தத்தை அனுபவிக்க தவறவில்லை..
கைகளை தனக்கு பின்னே கட்டி, காலை ஆட்டியபடி படுத்திருந்தவனை பார்த்து சிரித்தவள், மெல்ல எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட,
“ம்ம்ச்.. இதெல்லாம் கொசுறு…” என்று முகத்தை சுளித்து கன்னத்தை தடவிக்கொண்டான்..
“ஹ்ம்ம் எங்கம்மாவ எதிர்த்து பேசினா இப்படியெல்லாம் மேடம் கவனிப்பீங்களா…” என்றபடி அவளை தன்பக்கம் திருப்ப,
“இது அத்தையை எதிர்த்து பேசினீங்கன்னு இல்லை.. நீங்க உங்க கருத்தை சொன்னீங்க.. அது எப்படி எதிர்த்து பேசினது ஆகும்.. அப்படி நம்ம கருத்தை சொல்றது எல்லாம் எதிர்த்து பேசுறது ஆகும்னா யாரும் யாருகிட்டையும் பேச முடியாது…” என்று அவனுக்கு விளக்கமளித்தாள்..
“தெரியாம சொல்லிட்டேன்.. தப்புதான்…” என்று வேண்டுமென்றே அவன் கன்னத்தில் போட்டுக்கொள்ள, மீண்டும் அவனது இன்னொரு கன்னத்தில் முத்தமிட்டவள், “இது நீங்க எனக்காக பேசினதுக்காக மாமா…” என்று காதருகே சொல்ல,
“சரி அப்போ அடிக்கடி நிறைய பேசுறேன்…” என்று சொல்லி சிரித்தவனை, முத்தமிட்ட கன்னத்திலேயே அடித்தாள் லட்சுமி..
“அடிப்பாவி அடிக்கிற…” என்று ஈசன் அவள் கைகளை இறுக்கி முறுக்க,
“ஷ்… வலிக்குது மாமா….” என்று வேண்டுமென்றே அவள் கத்த, கையை விட்டுவிட்டான்..
“ம்ம் அது…” என்றவள், “மாமா.. நான் நாளைக்கு இருந்து கடைக்கு வரவா…” என,
“இதென்ன லஷ்மி.. அது உன் கடை.. நீ என்கிட்ட கேட்கணும்னு இல்லை…” என்று ஈசன் சொல்ல,
“இல்ல.. நடுவுல வர முடியலை இல்லையா.. இப்போ ஃப்ரீயா தானே இருக்கேன்…” என்று லட்சுமி சொல்ல,
“லஷ்மி… இப்பவும் சொல்றேன்.. அந்த கடை உன்னோடது.. நீ தான் அங்க முதலாளியம்மா… நீ எப்போவேனா வரலாம்…” என்று முடிவாய் ஈசன் சொல்ல, லட்சுமியும் நிம்மதியாய் உறங்கினாள்.