அவளை பொருத்தமட்டில் கடையை பார்ப்பது என்பது ஈசன் இருக்கிறான் என்ற தைரியத்தில் தான்.. ஆனால் அவனோ எதிலும் நான் தலையிட மாட்டேன் என்பது போல் சொல்ல, தன்னால் இதெல்லாம் முடியுமா என்று தோன்றியது.. இரவில் இதே கேள்வியை ஈசனிடமும் கேட்டாள்..
“மாமா… நான் ஒன்னு சொல்லவா…” என்றதும்,
“என்ன லஷ்மி..” என்றான் அவனும் சாதாரணமாய்..
“ஹ்ம்ம் நான்.. இந்த ப்ராஜெக்ட் எல்லாம் முடியவும் கடைக்கு வரவா..??” என, அவளை ஒரு ஆராய்ச்சி பார்வை தான் பார்த்தவன், “என்ன திடீர்னு…???” என்றான்.
“இல்ல மாமா.. அது.. இப்போதான் பெரிய மாமாவும் வெளிய போறாங்க.. சோ உங்களுக்கும் கொஞ்சம் ஃப்ரீ இருக்கும் தான.. அதுவுமில்லாம ப்ராஜெக்ட் முடிச்சிட்டா நானும் புல் ஃப்ரீ ஆகிடுவேன் இல்லையா…” என்று லட்சுமி இழுக்க,
“அதுக்கு..???” என்று அவன் கேட்ட விதமும், பார்த்த பார்வையும் லட்சுமிக்கு லேசாய் ஒரு பயம் கொடுத்தது..
ஆனாலும் இவன் என் கணவன் தானே என்ற எண்ணம் தலை தூக்க, “அதான் மாமா.. நான் ப்ராஜெக்ட் எல்லாம் முடியாவும் வர்றேன்…” என்றதும்,
“என்ன விளையாடுறியா..???” என்று ஈசன் கத்தியே விட்டான்..
அரண்டு போய் லட்சுமி பார்க்க,
“என்ன முழிக்கிற..??? நினைச்சா வர்றதுக்கும் போறதுக்கும் அது என்ன சும்மா பொழுது போக்குற இடமா லஷ்மி… நம்ம பண்ற தொழில் தான் நமக்கு கடவுள். அதுக்கான மரியாதையை சரியா நம்ம செய்யணும்.. இல்லை எல்லாமே நம்ம கை விட்டு போயிடும்.. நீயா வர்றேன்னு சொன்ன.. சரி நீ பார்த்துப்பன்னு நான் எனக்கான டைமிங்க்ஸ் மாத்தி ஓடிட்டு இருக்கேன்… இப்போ என்ன வந்தது உனக்கு..” என்று கோவமாகவே ஈசன் கேட்க, லட்சுமி ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
“சொல்லு டி அங்க என்ன பிரச்சனை உனக்கு.” என்று ஈசன் அவளை விடாது கேட்க,
அவனுக்கோ இவளுக்கு ஒவ்வொன்றையும் குழந்தைக்கு சொல்வது போல் எடுத்துச் சொல்ல வேண்டுமா என்றிருந்தது. ஒரு சாதாரண விஷயத்தை கூட புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி என்றிருந்தது..
லட்சுமி, ஒரு சுலபமான சூழலிலேயே வளர்ந்துவிட்டாள்.. அதை தாண்டி அவள் யோசிப்பதுமில்லை.. முயற்சி செய்வதுமில்லை.. அவளை பொறுத்த மாட்டில், திருமணதிற்கு முன் எப்படி அவளுக்குத் தேவையானது எல்லாம் கிடைத்ததோ அது போலவே திருமணத்திற்கு பின்னும் கிடைத்துவிட, படிப்பு பற்றிய பெரிய எண்ணம் இல்லாமல் போனது..
அடுத்து குடும்பம்.. புதிய மனிதர்கள் இல்லை.. அனைவரும் இவளை தலையில் வைத்து கொண்டாடும் ஆட்கள். அடுத்தது கணவனாக வந்தவனோ.. அவள் விரும்பியவன்.. என்ன அவனது மன மாற்றத்திற்கு தான் கொஞ்ச நாளானது.. இப்போது அதுவும் நடந்தேறி விட்டது.. ஆக வாழ்வில் இது போதும் என்ற எண்ணம்..
வேலாயுதம் செய்த பிரச்சனை சிறிது அவளது நிம்மதியை ஆட்டம் காண வைத்தது தான். ஆனால் அதுவும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை வந்திட, இதற்குமேல் வாழ்வில் ஏன் மெனக்கெட வேண்டும் என்ற எண்ணம்..
ஆனால் ஈசன் அப்படியல்லவே.. அவனாகவே ஒவ்வொரு தொழிலும் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாய் தன்னை தானே உயர்த்திக்கொண்டவன்.. அப்படியிருக்க அவன் செய்யும் தொழிலில் விளையாட்டு போல் வருவதும் போவதுமாய் லட்சுமி செய்வது அவனுக்கு கோபத்தையே கொடுத்தது..
எதிலும் ஒரு சிரத்தை வேண்டும்.. தொழில் பார்க்கிறேன் என்றால் அதில் சும்மா வந்து போவது என்றளவில் இல்லாமல் தன் மனைவி அதில் சகலமும் கற்றுகொள்ள வேண்டும் என்று எண்ணினான்.. நானே இல்லையென்றாலும் அவள் என் இடத்தில் இருந்து அனைத்தையும் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு.. அவனால் முடிந்த அளவு லட்சுமிக்கு சொல்லியும் கொடுத்தான் தான்..
ஆனால் அவளோ மீண்டும் மீண்டும் தன் கூட்டுக்குள்ளே அடங்க முயற்சிப்பது சத்தியமாய் அவனுக்கு எரிச்சலை தான் கொடுத்தது..
“இங்க பார் லஷ்மி.. ஒரு விஷயம் பண்ணா அதுல முழு மனசா செய்யணும்.. கஷ்டம் எதுல தான் இல்லை.. அந்த கடையை ஆரம்பிக்க நான் எவ்வளோ அலைஞ்சேன்னு எனக்குத்தான் தெரியும்… நீ வந்து பார்த்துக்கிறது எனக்கு அவ்வளோ சந்தோசமா இருந்தது.. சரி உனக்கும் எல்லாம் தெரியனும்னு நினைச்சேன்.. ஆனா நீ இப்படி எல்லாத்துக்கும் வேணாம் வேணாம் சொன்னா எப்படி..??” என்று தன் கோபத்தை எரிச்சலை எல்லாம் அடக்கி தான் கேட்டான்..
“ம்ம்ம்ம்ம்ம்ம்…” என்று பதில் சொல்லாமல் இழுத்தவளை அவள் தோள் பிடித்து எழுப்பியவன், அவளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அவனும் அமர்ந்தவன், அவளையும் அமரச் சொல்லி,
“சொல்லு லஷ்மி.. எதுக்கு இப்படி மாத்தி மாத்தி யோசிக்கிற…” என, அவளுக்கு நிஜமாகவே பதில் சொல்லத் தெரியவில்லை..
ஆனால் மனதில் என்னவோ போட்டு படுத்தியது.. இதை சரியான விதத்தில் எடுப்பதாய் இருந்தால் லட்சுமி அதனை எடுத்திருக்கலாம்.. ஈசன் ஒன்றும் அவளுக்கு கெடுதலாய் எதையும் சொல்லிட போவதில்லை.. ஆனால் என்னவோ அன்று பாலா சொன்னது ரேவதி சொன்னது எல்லாம் நினைவில் வர,
“ஏன் மாமா என்னை எல்லாரும் இப்படியே சொல்றீங்க…” என்றாள் ஒருமாதிரி.
அவனுக்கோ மறுபடியும் இவளை யார் என்ன சொன்னது என்று நினைத்து, “என்ன..?? என்னாச்சு..?? யார் என்ன சொன்னா..??” என்று பதற்றமாய் கேட்க,
“ம்ம்ச் விடுங்க மாமா..” என்றவளை, “லஷ்மி…”என்று அதட்டியவன், “இப்போதானே சொன்னேன் எது செஞ்சாலும் அதை முழுசா முடிக்காம விடக்கூடாதுன்னு…” என்று சொல்ல,
“பின்ன என்ன மாமா… பாலா ரேவதி எல்லாம் என்னவோ நான் உருப்படாத கேஸ் மாதிரியே பேசுறாங்க.. நீங்களும் இப்போ என்னை அப்படித்தான் பேசுறீங்க.. எனக்கு பிடிக்கலைன்னா விடவேண்டியது தானே…” என்று குரலை உயரத்த,
“ம்ம்… உன் வயசுல இருக்க பொண்ணுங்க எல்லாம் எப்படியிருக்காங்க… நான் உன்னை உலக சாதனை செய்ய சொல்லலை கொஞ்சம் உன் வட்டத்துல இருந்து வெளிய வான்னு தான் சொல்றேன்.. உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு.. புதுசா எதையாவது கத்துக்கோ.. நீ எப்படியிருக்கியோ அதை வைச்சு தான் நாளைக்கு நம்ம பசங்களும் இருப்பாங்க.. அதைவிட்டு நீ இப்படி எல்லா விசயத்துக்கும் பிடிவாதம் செஞ்சா நல்லவா இருக்கு…” என்றான் பொறுமையாய்.
என்னவோ லட்சுமிக்கு ஈசன் இப்படி சொல்லியது, அவளை எல்லாருமே ஒன்றுக்கும் ஆகாதவள் என்று நினைத்திருப்பது போல் தோன்ற “ஏன் எனக்கென்ன நான் நல்லாதானே இருக்கேன்…” என்றாள் சுளித்து.
‘ஷ்…. எவ்வளோ சொன்னாலும் புரிஞ்சுக்காம பேசுறா…’ என்று கடுப்பாக இருந்தது ஈசனுக்கு..
“நீ நல்லா தான் இருக்க.. சரி இப்போ இதுக்கு சொல்லு, நமக்கு கல்யாணமே ஆகலை.. வேலு மாமா இப்படி போயிட்டார்.. நீயும் அத்தையும் எப்படி சமாளிச்சு இருப்பீங்க… சொல்லு லஷ்மி… அத்தை உன்னை நம்பி இருப்பாங்க.. ஆனா நீ எப்படி எல்லாத்தையும் சமாளிச்சு இருப்ப???” என்று கேட்க,
லட்சுமிக்கும் எரிச்சலாய் வந்தது.. நடக்காத ஒன்றை ஏன் இப்படி யோசிக்கவேண்டும் என்று நினைக்க,
“அது தான் அப்படி நடக்கலையே மாமா.. நமக்கு தான் கல்யாணம் ஆச்சே…” என்றாள்.
“ம்ம்ச்… உனக்கு எப்படி சொன்னா தான்டி புரியும்.. நானும் அப்போயிருந்து சொல்லிட்டு இருக்கேன்.. நீ புரிஞ்சுக்கவே மாட்டேன்னு இருந்தா என்னதான் சொல்றது.. வாழ்க்கைல வாய்ப்பு கிடைக்கும் போது கத்துக்கணும்.. அதைவிட்டு இது அப்படி அது இப்படின்னு சொல்லிட்டு இருக்கிறது முட்டாள் தனம்.. உனக்கு சொல்லி என்னால புரியவைக்க முடியலம்மா… நீ என்னவோ செய்.. கடைக்கு வா, வராம இரு.. என்னவோ பண்ணு.. எனக்கு தலைவலி தான் மிச்சம்..” என்றவன் இதற்குமேல் தான் அங்கிருந்தால் இன்னும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பும் என்று நினைத்து எழுந்து சென்றுவிட்டான்..
லட்சுமிக்கோ இப்படி ஈசன் பாதியில் அதுவும் அவளை முட்டாள் என்று சொல்லாமல் சொல்லிச் சென்றது அதிர்ச்சியாய் இருந்தது.. அவன் போவதையே பார்த்தவள் வெகு நேரம் அப்படியே தான் அமர்ந்திருந்தாள்..