“தம்பி நீங்க எங்க இங்க…” என்று சண்முகம் அதிர்ந்து கேட்க,
“இதே கேள்விய நானும் கேட்கலாமே…” என்றபடி சண்முகத்தை ஒரு பார்வை பார்த்தவன் ஈசனை பார்த்து புன்னகை புரிந்தான்..
ஈசனுக்கு வந்தவனைப் பார்த்ததும் இவங்க தான் இந்த இடத்தை விலைக்கு கேட்கிறாங்களோ என்றும் தோன்றியது.. ஏனெனில் எத்தனையோ முறை ஈசன் இங்கே வந்திருக்கிறான்.. அப்போதெல்லாம் அவனை கண்டதில்லை.. இன்று திடீரென்று வரவும், அவனுக்கும் சண்முகம் சொன்னதற்கும் எதுவும் சம்பந்தம் இருக்குமோ என்று ஈசனது மூளை சடுதியில் ஒரு கணக்கு போட,
“என்ன ஈசன்.. அப்படியே நின்னுட்டீங்க…. என்னை தெரியலையா??” என்று கேட்டுக் கொண்டே கண்ணாடியை கழட்டி சட்டையில் மாட்டினான்.
ஈசனும் ஒன்றும் சளைத்தவன் இல்லையே, நொடிபொழுதில் தன் சிந்தனைகளை ஓரம் கட்டியவன், அவனும் தன் கண்ணாடியை கழட்டியபடி,
“உங்களை தெரியாம இருக்குமா…” என்று சொல்லிக்கொண்டே எதிரே இருந்தவனுக்கு கை நீட்ட அவனும் புன்னகை மாறாமல் கரம் குலுக்கினான்..
இவர்கள் இருவரையும் பார்க்க அப்படியே அண்ணன் தம்பி போல் தான் இருந்தது.. நடை…. உடை… பாவனை… தோற்றம்… பேச்சு… என்று எல்லாமே அப்படியே அப்படியே ஒன்றுபோல் இருந்தது.. இருவரையும் மாறி மாறி பார்த்த சண்முகம் அதை அப்படியே இருவரிடமும் கூறிட, ஈசனும் சரி புதிதாய் வந்தவனும் சரி ஒருவர் மாற்றி ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்…
“அட சிரிப்பு கூட ஏறக்குறைய ஒரேமாதிரி இருக்குப்பா…” என்று சண்முகம் ஆச்சர்யிக்க, இன்னும் அவர்களது சிரிப்பு மலர்ந்தது..
“ஈசா… கதிரவா… போதும்… இப்படி ரெண்டு பேருமே சிரிச்சா எப்படி…” என்று சண்முகம் கேட்க,
“சண்டை போட்டாத்தானே தப்பு.. சிரிக்கிறது தப்பா…” என்று கதிரவன் கேட்கும் பொழுதே ‘சண்டையும் வருமோ…’ என்று தோன்றியது சண்முகத்திற்கு..
ஏனெனில் கதிரவன் இங்கே வந்ததன் காரணமும் அவர் அறிவாரே.. ஈசனும் பல நாட்களாய் இந்த இடத்தை வாங்க எண்ணம் கொண்டிருக்க, இதே இடம் கதிரவன் பார்வையிலுமா விழ வேண்டும் என்றிருந்தது அவருக்கு..
கதிரவன்….
‘மீண்டும் மீண்டும் உன் நினைவுகள்’ என்று வசுமதியின் நினைவுகளில் மூழ்கி அவளோடான வாழ்வில் தன்னை தானே மெருகேற்றிக் கொண்டவன்..
யாருமே அவனை இங்கே எதிர்பார்த்திருக்காத நேரத்தில், கதிரவன் வந்திறங்க, ஈசனுக்கும் சரி சண்முகத்திற்கும் சரி மனதில் லேசான ஒரு அதிர்வு தான்..
“அப்புறம்.. நீங்க எங்க இங்க..??” என்று அவர்கள் இருவரையும் பார்த்து கதிரவன் கேட்க,
ஈசனுக்கு மனதில் என்ன தோன்றியதோ, “இந்த இடம் நான் விலைக்கு பேசிருக்கேன்.. அதான் பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்..” என்றான் உறுதியாய்..
சற்றுமுன் இருந்த புன்னகை அவனிடம் இப்போதில்லை. இத்தனை நாள் எப்படி வாங்குவது என்று அவன் தயங்கிக்கொண்டு இருக்க, இன்றோ எப்படியாவது வாங்கியே ஆகவேண்டும் என்ற எண்ணம் அவனுள் உறுதியாய் எழுந்தது..
ஆனால் எதிரே வந்து நிற்பவனும் சாதாரணம் அல்லவே.. “ஓ…” என்று நெற்றியை சுருக்கியவன்,
“நானுமே கூட இந்த இடத்தை விலைக்கு தான் பேசிருக்கேன்…” என்றான் ஈசன் குரலில் என்ன உறுதி இருந்ததோ அதே உறுதியுடன்..
சண்முகத்திற்கு தான் இவர்கள் இருவரையும் பார்த்து மனம் பதைத்துக்கொண்டது.. இருவருக்குமே கோவம் சட்டென்று வந்துவிடும்.. எதையும் செய்யும் தாட்டியமும் படைத்தவர்கள். ஒரு முடிவெடுத்துவிட்டால் பிறகு வேறெதுவும் யோசனை இருக்காது..
‘கடவுளே நேரம் காலம் தெரியாம வந்திட்டோமோ…’ என்று தோன்ற, இருவரையும் மாறி மாறி பார்த்தார்..
“நான் சண்முகம் அண்ணன்கிட்ட சொல்லி ரொம்ப நாளாச்சு… கொஞ்ச நாள்ல பத்திரப் பதிவு பண்ணிடலாம்னு இருக்கேன்…” என்று ஈசன் என்னவோ கையில் தயாராய் பணம் வைத்திருப்பவன் போலவும், உடனே எல்லாம் செய்யப் போகிறான் என்பது போலவும் பேச, சண்முகத்திற்கே கூட ஒருவேளை அனைத்திற்கும் தயாராய் தான் ஈசன் இங்கே வந்திருக்கிறானோ என்று தோன்றியது..
ஆனால் ஈசன் இப்படி சொன்னதும் கதிரவன் புன்னகை இன்னும் விரிய, “ஆனா இந்த லேண்ட் ஓனர் வேற ஒருத்தரே.. நான் அவர்கிட்டயே பேசிட்டேன்.. எனக்குமே கூட இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு…” என்றான் கதிரவன் கண்களால் எதிரே பறந்து விரிந்திருக்கும் அந்த பசுமை நிலத்தை பார்த்து..
ஈசனுக்கு உள்ளே பொங்கிக்கொண்டு வந்தது.. இதேது இந்த இடத்தில் வேறு யாராவது வந்து பேசியிருந்தால் நடப்பதே வேறு.. ஆனால் கதிரவன் குடும்பத்தை கஜேந்திரனுக்கு முன்பே தெரியும்.. ஓரளவு நல்ல பழக்கமும் கூட.. அந்த மரியாதைக்காகவாவது இப்போது வாய் மூடி நிற்கும் நிலை..
சண்முகத்திற்கோ ஆண்டிபட்டியில் எப்படி ஈசனோ அதுபோல தான் போடிநாயக்கனூரில் கதிரவன்.. ஒருவருக்காக மற்றவரை பகைத்துக்கொள்ள முடியாது.. இப்படியா இருவரும் ஒரே நேரத்தில் வந்து நிற்க வேண்டும் என்று இருக்க,
“தம்பிங்களா.. ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா பேசி முடிவெடுக்கலாமே…” என்று சண்முகம் தன்மையாய் சொல்ல,
“இப்போ அமைதியா தானே பேசிட்டு இருக்கோம்…” என்றனர் இருவரும் ஒருபோல..
“உங்க ரெண்டுபேரையும் எனக்கு நல்லா தெரியும்.. அதான் சொல்றேன்.. பொறுமையா பேசிக்கலாம்னு…. இடமும் எங்கயும் போயிடாது.. நீங்களும் எங்கயும் போயிடபோறது இல்லை.. உங்கள்ள யார் வாங்கினாலும் எனக்கு சந்தோசம் தான்.. ஆனா அது பிரச்சனை இல்லாம இருக்கணும்…” என்று சண்முகம் பேசுகையில் சற்று பதற்றமாகவே பேசினார் என்பது மற்ற இருவருக்கும் புரிய,
கதிரவன் ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் தலையை மட்டும் அசைத்துவிட்டு நிற்க, ஈசனோ,
“அண்ணா… எங்களை பொருத்து நீங்க எந்த கவலையும் படவேணாம்… யார் முன்னாடி பணம் கொடுத்து வாங்குறோமோ அவங்களுக்கு தான் இடம்… நீங்க எதுவும் வருந்திக்க வேண்டாம்…” என்றவன், நான் கிளம்புகிறேன் என்பது போல் தலையை கதிரவனை நோக்கியும் அசைத்துவிட்டு, புல்லட்டில் ஏற,
கதிரவனோ, “அப்போ நானும் கிளம்புறேன்…” என்று சொல்லியபடி அவனும் தன் புல்லட்டில் ஏற, இருவரது புல்லட்டும் ஒரு வட்டம் அடித்து அவரவர் திசையில் பறந்தது..
ஈசனும் கதிரவனும் கிளம்பிச் சென்றபிறகு தான் சண்முகத்திற்கு மூச்சே இயல்பாய் விட முடிந்தது..
‘என்னாக போகுதோ…’ என்று புலம்பியபடி அவரும் தன் காரில் ஏறி பயணித்தார்..
ஈசனது மன நிலையை சொல்லவும் வேண்டுமா??? இதுவரைக்கும் கூட அத்தனை வேகம் மனதினில் வந்ததில்லை.. ஆனால் தான் ஆசைப்பட்ட ஒன்றிற்கு போட்டியாய் இன்னொருத்தன் வருகிறான் என்றதும் ஆசையும் வேகமும் கூடுவது மனித இயல்பு தானே..
என்ன செய்வது??? என்ன செய்வது?? என்று மனதில் கேள்வி எழ, தன் சிந்தனையில் மூழ்கியவன் வீடு நோக்கி பயணித்தான்..
அங்கே வீட்டிலோ, மரகதமும் லட்சுமியும் வேலை பார்த்துகொண்டிருக்க, என்னதான் மரகதத்திற்கு லட்சுமி வீடு வந்துவிட்டாள் என்ற நிம்மதி இருந்தாலும் அவள் அப்படி கிளம்பிச் சென்றது மனத்தில் அவள்மீது வருத்தமும் இருந்தது.
ஊரில் கேட்பவர்களை சமாளிக்கவே எத்தனை பாடாய் இருந்தது என்று அவருக்கு தெரியுமே.. அவரது எண்ணப்படி விட்டிருந்தால் நேராய் பேச்சியின் வீட்டிற்கு சென்று ஒன்றில் இரண்டு பார்த்துவிட்டு தான் வந்திருப்பார். ஆனால் ஈசனோ இதை பற்றி பேசிடவே கூடாது என்றுவிட்டான்.. அவனது பேச்சை தாண்டி எதையும் செய்யவும் முடியவில்லை.
லட்சுமி அவருக்கு மருமகள் மட்டுமல்லவே, அவர் பார்த்து வளர்ந்த பெண் வேறு.. சற்று உரிமையும் அன்பும் கூடுதலாகவே இருந்தது. இன்றும் கூட அவள் வந்துவிட்டாள் தான் ஆனாலும் அந்த வருத்தம் அவருக்கு இன்னும் போகவில்லை. லட்சுமி அமைதியாய் இருந்த மரகதம் முகத்தை பார்க்க, அவரோ எதுவோ சிந்தனையில் இருந்தார்..
“அத்தை… என்ன ??? அமைதியா இருக்கீங்க…??”
“ஆ…” என்று திரும்பியவர், “என்.. என்ன லட்சுமி… நீ காலேஜ் கிளம்பல..??” என்றார் கேள்வியாய்.
“இந்த ஒருவாரம் மதியம் தான் அத்தை காலேஜ்.. பன்னிரண்டு மணிக்கு கிளம்பினா போதும்.. சாப்பிட்டுட்டு கடைக்கு போய் ஒரு பார்வை பார்த்திட்டு ரெடியாகி போகணும் அத்தை..” என,
“ஹ்ம்ம் சரி.. பஸ்ல போக போறியா..” என்றார்..
“ஆமாத்தை… தினமும் அதுல தானே போறேன்..” என,
“தினமும் போற சரிதான்.. இன்னிக்கு ஈசன கார்ல கொண்டு வந்து விட சொல்றேன்…” என்றார் அவளையே பார்த்து..
லட்சுமிக்கு புரிந்தது.. மரகதம் எதற்காக முயல்கிறார் என்று.. அவரை பார்க்கவும் அவளுக்கு பாவமாய் தான் இருந்தது.. என்ன நினைத்தாளோ, “அத்தை இங்க வாங்க…” என்று கையோடு அழைத்துச் சென்று தானும் அவரருகே அமர்ந்து,
“ஹா… அதுசரி.. நான்.. அது அன்னிக்கு கிளம்பி போனேன்ல.. அதுக்கு…”
“கோவமில்ல லட்சுமி.. வருத்தம் தான்.. நான் படிக்காதவ, ரொம்ப எல்லாம் புரிஞ்சுக்க தெரியாது.. கண்ணுல என்ன பார்க்கிறேனோ அதான் மண்டைல போகும்.. என் பையன் உன்மேல பாசமா இருக்கான் தான்.. இல்லைங்கள.. ஆனா கல்யாணமாகி வர்ற பொண்ணு என்னென்ன ஆசை எதிர்பார்ப்பு எல்லாம் இருக்கும்னு எனக்கும் தெரியும்.. ஈசன் அதெல்லாம் புரியலைன்னு எனக்கு இப்போதான் புரிஞ்சது..
நீயும் அதெல்லாம் பெருசு பண்ணாம தான் இருந்த.. ஆனா என்னவோ உங்களுக்குள்ள ஒரு மனகசப்பு.. இதை நீ என்கிட்டே சொல்லிருக்கலாம். ஆனா நீ பாட்டுக்கு கிளம்பி போயிட்ட…” என்று மரகதமும் அவர் மனத்தில் இருப்பதை மறைக்காமல் சொல்ல,
“ம்ம்…” என்றவள் கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்தாள்..
“என்ன லட்சுமி நான் தப்பா எதுவும் சொல்லிட்டேனா…??” என்று மரகதம் லட்சுமியின் முகத்தை நிமிர்த்த, அவளோ கண்கள் கலங்கி பார்த்தாள்..
“ஏ.. லட்சுமி.. இப்ப என்னத்துக்கு அழற…” என்று மரகதம் பதற,
அவரின் இரு கரங்களையும் பிடித்துக்கொண்டவள், “என்னைய மன்னிச்சிடுங்க அத்தை…” என்று கொஞ்சம் சத்தமாவே அழுதுவிட்டாள்..
முத்தழகு, பேச்சி மட்டும் இருப்பார் என்று அங்கே சென்றிருக்க, கஜேந்திரன் இவர்கள் சத்தம் கேட்டு “லட்சுமி.. என்னம்மா..” என்று கேட்டுகொண்டே வந்துவிட்டார்..
அவரை பார்த்ததும் கண்களை துடைத்தபடி எழுந்து நின்றவள், “மாமா நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க..” என்றாள் கசங்கிய குரலில்..