லட்சுமியை ஒரு பார்வை பார்த்தவர், தன் மனைவியிடம் என்னவென்பது போல் பார்க்க, “சாதாரணமா பேசிட்டு இருந்தோம்.. திடீர்னு அழ ஆரம்பிச்சிட்டா…” என்றார் ஒன்றும் புரியாமல்..
“இல்லத்தை.. நான்.. நான் பண்ணது தப்பு தான்.. முட்டாள் மாதிரி.. ரொம்ப சுயநலமா நினைச்சிட்டேன் அப்போ.. ஆனா யோசிக்கிறப்போ நான் பண்ணது எவ்வளோ பெரிய தப்புன்னு புரியுது..” என்று தேம்பிக்கொண்டே சொல்ல, இத்தனை நாள் மனதினுள் அமிழ்த்தி வைத்திருந்த பிடிவாதமெல்லாம் கண்ணீராய் கரையத் தொடங்கியது..
“லட்சுமி.. சரி எல்லாம் விடு.. இப்போதான் திரும்ப வந்திட்ட தான..” என்று மரகதம் அவளை சமாதானம் செய்ய, கஜேந்திரனோ “விடு மரகதம்.. லட்சுமி மனசுல இருக்கிறது எல்லாம் மொத்தமா வெளிய கொட்டிடட்டும்…” என்றார்..
லட்சுமிக்குமே அந்த நேரத்தில் ஒரு வேகம் எழுந்தது தான். இதுநாள் வரைக்கும் தன் அம்மாவிடம் கூட இதெல்லாம் சொன்னதில்லை.. ஆனால் இங்கே வந்ததும் என்னவோ அவளால் பழைய பிடிவாதத்தில் இருக்க முடியவில்லை..
“ஈ.. ஈஸ் மாமான்னா எனக்கு அவ்வளோ பிடிக்கும்.. ஆமா அவர ரொம்ப பிடிச்சு தான்.. மனசுக்குள்ளயே விரும்பித்தான் கல்யாணம் பண்ணேன். நானும் பெருசா எல்லாம் அவர்கிட்ட எதிர்பார்க்கல.. என்ன நான் கட்டற அன்பு அதேபோல எனக்கும் கிடைக்கும்னு நினைச்சேன்.. அது தப்பா அத்தை.. எந்த காரணத்துக்காகவும் ஈஸ் மாமா மனசுலயும் சரி, பார்வைலையும் சரி நான் மட்டமாவோ கீழாவோ தெரிய கூடாதுன்னு நினைச்சேன்.. அவங்க கோவத்துல தான் சொன்னாங்க.. இருந்தாலும் அதை இப்போ வரைக்கும் என்னால ஏத்துக்கவே முடியல…
ஆனா இப்போ என் வருத்தமெல்லாம் ஒண்ணுதான்.. இப்போவரைக்கும் ஈஸ் மாமா அவங்களுக்காகவோ, இல்ல எங்க வாழ்க்கைக்காகவோ என்னை ஒருதடவ கூட கூப்பிடல.. அது தப்பில்லையா.. அப்போ நான் இங்க இருந்தாலும் இல்லைன்னாலும் ஒண்ணுங்கிறது போலதானே அவங்களுக்கு.. அந்த வருத்தம் தான் எனக்கு..
சித்தப்பா செஞ்ச பிரச்சனை எனக்குமே அதிர்ச்சி தான்.. ஆனா எல்லாரும் என்னை வச்சுதான் அந்த பிரச்சனைய பார்த்தீங்க.. உங்க எல்லாரையும் போலத்தானே எனக்கும் கஷ்டமா இருந்திருக்கும்.. அப்போ என்னை யாருமே இன்னும் இந்த வீட்டு பொண்ணா நினைக்கலைன்னு தான அர்த்தம்…” என்று லட்சுமி மூச்சுவிடாமல் சொல்ல சொல்ல, இன்னும் அவளுக்கு கண்களில் நீர் கோர்த்து..
அவளாக தான் கிளம்பிப் போனாள்.. அந்த நேரத்தில் அதெல்லாம் சரியானாதாகவே பட்டது.. ஈசன் பேசியதை மட்டுமே மனதில் வைத்து யோசித்தவளுக்கு, அதுவும் அவளோடு இருந்தால் அவன் நிம்மதி போகிறது என்றதும் யப்பா இங்கே இருக்கவே கூடாது என்ற முடிவிற்கு வேகமாய் வந்துவிட வைத்தது..
ஆனால் நாட்கள் ஆக, ஆக அவளும் கொஞ்சம் கொஞ்சம் மாறிக்கொண்டு தானே இருந்தாள்.. மரகதம், முத்தழகு பேச்சி பேசுவது எல்லாம் காதில் விழுந்துகொண்டு தானே இருந்தது.. அன்று பெரிதாய் நினைத்ததெல்லாம் இப்பொழுது அத்தனை பெரிதாய் இல்லையோ என்பது போல் தோன்றியது..
ஆனாலும் அவளது வருத்தமெல்லாம் ஈசன் அவளை அழைக்காதது.. மனம் விட்டு பேச முயலாதது.. அவளுக்கு தெரியாதா அவனது பிடிவாதம் எப்படியிருக்கும் என்று.. ஆனால் லட்சுமி மனதில் இருக்கும் எண்ணங்களை அறிய ஈசன் சிறு முயற்சிக்கூட செய்யாதது அவளுக்கு வருத்தமே..
லட்சுமி பேசியதை கேட்ட கஜேந்திரன், மரகதம் இருவருக்கும் மனம் சங்கடமாய் தான் இருந்தது.. இதற்கு அவர்கள் என்ன சொல்ல?? வேறெதுவும் பிரச்சனை என்றாலும் கூட பேசி தீர்க்கலாம்.. ஆனால் இது ஈசன் லட்சுமி இருவருக்குமான தனிப்பட்ட பிரச்னை அல்லவா.. ஒன்றும் சொல்ல முடியவில்லை..
“எல்லாம் கொஞ்ச நாள்ல சரியாகிடும் லட்சுமி.. அவனுக்கு இந்த பணப் பிரச்சனையே பெருசா போச்சு போல..” என்று மரகதம் லட்சுமியை சமாதானம் செய்ய,
“ஆமா அத்தை.. அதை தான் நானும் சொல்றேன்.. இவ்வளோ பிரச்சனை ஆச்சுல.. ஒருதடவ என்கிட்ட மனசு விட்டு பேசிருந்தா நான் புரிஞ்சிருக்க மாட்டேனா.. அப்படி என்ன பிடிவாதம்.. நான் கிளம்பி போனது தப்பு தான் ஒத்துக்கிறேன்.. ஆனா ஈஸ் மாமா பண்றது மட்டும் சரியா..” என்று கேட்டுக்கொண்டு இருக்கும் போதே ஈசனது புல்லட் சத்தம் கேட்க,
வேகமாய் முகத்தை அழுந்த துடைத்தவள், “நான் ரெடியாகிட்டு கடைக்கு கிளம்புறேன் அத்தை…” என்று சொல்லியபடி மேலே சென்றுவிட்டாள்.
இந்த நேரத்தில் ஈசனை கண்டால் அவளால் நிச்சயம் திடமாய் இருக்க முடியாது.. தன்னை எதற்குமே எதிர்பாராதவனிடம் தானாய் போய் ஆறுதல் தேடுவது என்பது அவளால் முடியாது.. ஈசன் உள்ளே நுழைவதற்குள், லட்சுமி மேலே சென்றிட, அவனுக்கு இங்கே நடந்தது எதுவும் தெரியவில்லை..
உள்ளே வந்து பொத்தென்று அமர்ந்தவன் முகத்தைப் பார்த்தே கஜேந்திரன் கண்டுகொண்டார் எதுவோ சரியில்லை என்று.. மரகதத்திடம் எதுவும் பேசாதே என்பது போல் சைகை செய்தவர், “என்ன ஈசா சோர்வா தெரியுற..” என்று கேட்டார்..
“ம்ம்…” என்று கண்கள் திறந்தவன், “ஒண்ணுமில்லைங்கய்யா…” என, கஜேந்திரன் நம்பாமல் பார்த்தார்.
“அந்த தேனி இடத்தை இப்போ வேற ஒருத்தரும் விலைக்கு பேசிருக்காங்க..” என்று ஆரம்பித்து விபரம் முழுவதும் சொல்ல,
கஜேந்திரன் சிறிது யோசித்தவர் “லோன் அப்ளை பண்ண முடியாதா ஈசா??” என்றார்.
“இல்லைங்கய்யா… இடம் சொந்த பணத்துல வாங்கிட்டா, அடுத்து மாடு வாங்க, அங்க பில்டிங் கட்ட எல்லாம் லோன்ல பார்த்துக்கலாம்னு நினைச்சேன்… இப்போ லோன் போட்டா இடம் வாங்க மட்டும் தான சரியா போகும்..” என்றான் ஒருவித சலிப்பாய்..
ஈசனுக்கும் சரி கஜேந்திரனுக்கும் சரி வாழ்வில் இப்படி ஒரு சறுக்கல் சந்தித்ததில்லை.. ஒவ்வொரு அடியும் சறுக்கும் போதெல்லாம் ஈசனுக்கு வேலாயுதம் மீது அத்தனை ஆத்திரம் வந்தது.. நம்பிக்கை துரோகம் செய்து ஏமாற்றியதும் இல்லாமல் இப்படி ஒருநிலைக்கு எங்களை கொண்டு வந்து நிருத்திவிட்டாரே என்று அவரை போட்டு ஒரு வழி செய்திடும் ஆத்திரம் எழும் அவனுள்..
“ஈசா அம்மா சொல்றேன்னு தப்பா நினைக்காத… என் நகை பாட்டி நகை எல்லாம் அப்படியே தான இருக்கு..” என்று சொல்லி, முடிக்கவில்லை, “அம்மா…” என்று கத்திவிட்டான்..
“என்ன பேச்சும்மா.. இதென்ன புதுசா இப்படி ஒரு பேச்சு..”
“இல்ல ஈசா… நாங்க என்ன எல்லா நகையும் போட்டுட்டா இருக்கோம்.. சும்மாதானே இருக்கு…”
“அதெல்லாம் எதுவும் வேணாம்…” என்றவன், “எல்லாம் இந்த வேலு மாமானால வந்தது.. ச்சே.. சிக்க மாட்டேங்கிறாரே… அவரை தேடவே லச்ச கணக்குல செலவு ஆகுது… போலீஸ் கம்ப்ளைன்ட்டும் கொடுக்க முடியாம போச்சு…” என்று ஈசன் சொல்லி நிறுத்தும் போது,
“ஏன் கம்ப்ளைன்ட் கொடுக்க என்ன வந்துச்சு..” என்ற லட்சுமியின் குரலில் அனைவரும் திரும்பி அவளை பார்த்தனர்..
ஈசனை ஒருபார்வை பார்த்தவள், கஜேந்திரனிடம் திரும்பி, “மாமா நான் கம்பளைன்ட் கொடுக்கலாம்ல… இப்போ என்ன என்னையும் அம்மாவையும் விசாரிப்பாங்க அவ்வளோதானே…” என்றாள், சிம்பிளாய்..
லட்சுமி இதை பெரிது படுத்தாமல் போலீஸா அதுவா இதுவா என்று அலட்டாமல் பேசியது அவனுக்கு ஆச்சர்யமாய் தான் இருந்தது.. ஆனாலும் மனதிற்குள் தன்னிடம் சொல்லாமல் கஜேந்திரனிடம் சொல்கிறாளே என்றிருக்க, அவன் ஒன்றும் பேசவில்லை..
மரகதத்திற்கு லட்சுமி சொன்னது பாதி புரியவில்லை, கஜேந்திரன் முகம் பார்த்து அவரும் நிற்க, கஜேந்திரனோ திண்ணமாய் மறுத்தார்..
“வேணாம்மா.. கம்பளைன்ட் கொடுக்கணும்னா எப்போவோ கொடுக்கணும்.. இது ரொம்ப லேட்…”
“ஏன் மாமா.. இப்படியே எத்தனை நாளைக்கு இருக்கிறது.. நீங்க கொடுத்தா தானே எங்களை எல்லாம் விசாரிக்க வருவாங்கன்னு சங்கடப்படுறீங்க.. நானே கொடுத்தா என்னாகும்.. என் சித்தப்பா எங்களை ஏமாத்தி பணத்தோட எங்க போனார்னு தெரியலை.. குடும்பத்தோட காணோம்.. தேடி கொடுங்கன்னு கம்ப்ளைன்ட் கொடுத்தா சரிதானே…” என்றாள் மிக மிக தெளிவாய்..
லட்சுமி இதுநாள் வரைக்கும் கஜேந்திரனிடம் இத்தனை சரளமாய் எல்லாம் பேசியதே இல்லை.. அவர் இங்கே வந்தால் எங்காவது ஒடிவிடுவாள். ஆனால் இப்போது பேச்சு தங்கு தடையின்றி ஒரு தெளிவோடு வந்தது அவளுக்கு.. என்னவோ கஜேந்திரனுக்கு மனம் ஒப்பவேயில்லை.. இத்தனை ஆண்டுகளில் போலீஸ் கேஸ் அது இதென்று எதுவும் அவர் போனதில்லை.. எந்தவொரு பிரச்சனை என்றாலும் அவரே பார்த்துவிடுவார்..
“இல்ல லட்சுமி.. இது சரிபடாது…” என,
“ஏன் மாமா.. கொஞ்சம் யோசிங்க.. தேனி எஸ்.பி நமக்கு தெரிஞ்சவங்க தானே.. பேசி பாப்போமே..” என்றாள் உறுதி மாறாது..
ஈசனுக்கும் லட்சுமி சொல்வது சரியாய் தான் பட்டது.. எத்தனை நாள் ஊர் ஊருக்கு ஆள் போட்டு தேட முடியும்.. பணம் அதற்கே நிறைய நிறைய செலவாகிறது.. காவல் துறையினர் என்றால் அவர்கள் விசாரிக்கும் முறையே வேறாக இருக்குமே.. கஜேந்திரன் யோசிப்பது போல் தோன்ற, லட்சுமி அவரை பேசி பேசி கரைத்துக்கொண்டு இருந்தாள்..
‘இவ்வளோ பேச்சு பேசுறா.. இத்தனை நாள் இதெல்லாம் எங்க ஒளிச்சு வச்சிருந்தா.. ஒருவேளை நமக்கு தான் இன்னும் லஷ்மி பத்தி சரியா தெரியலையா…’ என்று அவனது பார்வை லட்சுமி மீது படிந்திருக்க, லட்சுமிக்கும் அது உணர்ந்து தான் இருந்தது..
‘இப்ப என்னத்துக்கு இப்படி பாக்குறாங்க…’ என்றெண்ணியவள், அவன் பக்கம் அடுத்து திரும்பவே இல்லை..
ஈசனுக்கு என்னவோ லட்சுமியை பார்க்க பார்க்க, மனதிற்குள் இருக்கும் கஷ்டங்கள் எல்லாம் காணமல் மறைவது போல் ஒரு மாயை.. இனி எல்லாமே சரியாகும் என்ற உணர்வு மெல்ல மெல்ல மேல் எழும்புவது போல் தோன்ற, அவள் மீதிருக்கும் தன் பார்வையை அகற்றவே முடியவில்லை,,
எதிரில் தன் அப்பா அம்மா இருக்கிறார்கள் என்றெல்லாம் இல்லை.. பழையபடி என் பொண்டாட்டி நான் பார்கிறேன் என்ற எண்ணம் பிடிவாதமாய் அவனுள் வந்து ஒட்டிக்கொள்ள, என்ன பேசுகிறார்கள் என்றெல்லாம் அவனுக்கு கேட்கவில்லை. லட்சுமி கஜேந்திரனிடம் தலையை உருட்டி உருட்டி பேசுவது தான் அவனுக்கு தெரிந்தது.. மாமனாரும் மருமகளும் என்ன பேசினார்களோ இறுதியில்,
“என்ன ஈசா.. இது சரியா வரும்னு தோணுது… லட்சுமி சொல்றபடி செய்யலாமா…” என்று கஜேந்திரன் கேட்க, அவனிடம் பதிலே இல்லை.
“ஈசா…” என்று மீண்டும் கஜேந்திரன் அழைக்க, “ஹா.. என்னங்கய்யா…” என்றான் கொஞ்சம் அசடு வழிந்து, லட்சுமி கவனித்தாலும் கவனிக்காதது போல் இருக்க,
“லட்சுமி சொல்றது போல செய்யலாமா…” என்றார் கஜேந்திரன்..
அவனுக்கு சுத்தம் என்ன பேசினார்கள், என்று தெரியாதே அதை வெளியே சொல்லவும் அவன் கெத்து இடம் கொடுக்காமல் போக, “அது…” என்று யோசிப்பவன் போல் பாவனை செய்து,
“ம்ம் எனக்கும் சரின்னு தான் படுத்து…” என்றான் இரண்டொரு நொடி கழித்து..
‘இவன் பகுமானத்துக்கு ஒரு அளவேயில்ல..’ என்று நினைத்தது வேறு யாருமில்லை மரகதம் தான்.. லட்சுமியும் கஜேந்திரனும் பேசிக்கொண்டிருக்க, மரகதம் இவன் என்ன சொல்ல போகிறானோ என்று கலக்கமாய் ஈசன் முகம் பார்க்க, அவனோ லட்சுமி மீதே பார்வை பதித்திருக்க, பெற்றவருக்கு புரியாதா என்ன. ஆனாலும் ஈசன் சமாளிப்பாய் பேசுவது பார்த்து சிரிப்பும் வந்துவிட்டது..
“என்ன மரகதம் நீயா சிரிக்கிற??” என்று கஜேந்திரன் கேட்க,
“ஒண்ணுமில்லைங்க.. லட்சுமி.. நீ சாப்பிட்டு கடைக்குப் போ.. ஈசா நீயும் சாப்பிட வா…” என்று பேச்சை மாற்ற,
“அத்தை.. எனக்கு பசிக்கல… நான் அம்மா வீடு வரைக்கும் போறேன்..” என்றபடி லட்சுமி எழ,
“மறுபடியுமா…” என்பது போல் அனைவரின் பார்வையும் அவளை நோக்க,
“போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்திடுவேன்…” என்று சொன்னவளுக்கும் லேசாய் புன்னகை எட்டி பார்த்தது..
“அதானே பார்த்தேன்..” என்று லட்சுமியை விரல் நீட்டி மரகதம் விளையாட்டாய் மிரட்ட, அவளும் அவரை பார்த்து சிரித்துவிட்டு போனாள்.
ஈசனுக்கு என்னவோ மனதிற்குள் ஏக்கமாய் இருந்தது.. தான் வீட்டில் இருந்தால் மாமா மாமா என்று அவனையே தான் சுற்றி வருவாள்.. சில நேரம் ‘என்ன இவ’ என்று அவனுக்கு கூட சலிப்பாய் இருக்கும், ஆனால் இன்று, அவள் பக்கத்திலேயே இருந்தாலும் கூட லட்சுமி அவனை கண்டுகொள்ளாது இருப்பதும், எதுவுமே அவனிடம் பகிராமல் இருப்பதும் என்னவோ செய்தது..
‘இப்போ என்ன புதுசா மாமனார் மாமியார் மேல பாசம் பொங்குது…’ என்று மனதிற்குள் முறுக்கிக்கொள்ள, லட்சுமி மீண்டும் அவனிடம் பழையபடி இருக்க வேண்டும் என்ற ஆசை முளைத்தது..