என்னதான் பார்க்கவேண்டும் என்று சொல்லி வந்துவிட்டாளும் அனிதாவின் மனத்தில் ‘ஒருவேளை ஈசன் பொண்டாட்டி வந்தா என்ன செய்றது,..’ என்று தோன்ற, அவளுக்குத் தெரியாதே லட்சுமி எப்படிப்பட்டவள் என்று.. அனைத்தும் தெரிந்தே தான் ஈசனைத் திருமணம் செய்திருக்கிறாள் என்று. அதிலும் ஈசனை விரும்பித் திருமணம் செய்திருக்கிறாள் என்று.
‘எப்படியும் உண்மையை மறைச்சுத்தான் கல்யாணம் பண்ணிருப்பாங்க.. யார் வந்தா என்ன.. ஒருவழி பண்ணிட்டுத் தான் போகணும்..’ என்று முடிவெடுக்கும் போதே ஈசன் உள்ளே வந்துவிட்டான்.
யார் வருவார்கள் என்று தெரியாமல் அத்தனை நேரம் பார்க்கவேண்டும் என்று காத்திருந்தவளுக்கு, இப்போது இதயம் அடித்துக்கொள்ள தொடங்கியது. நேருக்கு நேராய் ஈசன் அமர்ந்திருக்க,
‘அனிதா தைரியம்.. தைரியமா இருக்கணும்.. உன்னை அப்போ உதாசீப்படுத்தினான்ல அதை மட்டும் மனசுல வச்சுக்கோ…’ என்றெண்ணியவள், இதழில் தானாகவே ஒரு புன்னகையை வரவழைத்துக் கொண்டு,
“ஹாய் ஈசன் எப்படி இருக்க…?? ஆளே மாறிட்ட…” என்று இலகுவாய் கேட்பது போல் கேட்டாள்.
ஈசனோ அவளை விட மிக மிக இயல்பாய் “வா அனிதா.. நான் ரொம்ப நல்லாருக்கேன்.. நீ??” என்று கேட்க, அவன் முகத்திலுமே புன்னகைதான்.
தன்னைப் பார்த்ததும் ஈசன் கொஞ்சம் தடுமாறுவான், பேசுவதற்கு வார்த்தைகளை தேடுவான், ஏதாவது ஒரு மாற்றமாவது இருக்கும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்தது அவள் யோசிக்கும்போதே,
“சொல்லு அனிதா என்ன விசயம்.. இவ்வளோ தூரம் என்னைத் தேடி வந்திருக்க??” என்று அடுத்த கேள்விக்கு ஈசன் போக, அவளுக்கோ அனைத்தும் மறந்து போனது.
“அது.. அது…” என்று வார்த்தைகளைத் தேடியவள், “ஹா அது.. எங்க வீட்ல சின்னதா ஒரு விருந்து ஏற்பாடு பண்ணிருக்கோம்.. என் ஹஸ்பன்ட் வீட்டு ஆளுங்க எல்லாம் வர்றாங்க.. உனக்கே தெரியும் அவங்க எல்லாம் எவ்வளோ ரிச் பீப்பில்ஸ்னு…” என்று இழுத்தவள், அவன் நம்பவேண்டுமே என்று பார்க்க,
“ம்ம் அப்படியா..” என்றான் முகத்தில் எதையும் காட்டாமல்.
ஈசன் முகத்தில் கதை கேட்கும் பாவனை. நீ என்னதான் சொல்கிறாய் நானும் பார்க்கிறேன் என்று அமர்ந்திருக்க, அவளுக்கோ உள்ளே கடுப்பாய் இருந்தது. அவள் கணவனைப் பற்றி பேச்சை எடுத்தால் நிச்சயம் அவன் முகத்தில் ஒரு சிறு மாற்றமாவது நிகழும் என்று பார்க்க, ம்ம்ஹும் அப்போதும் அங்கே எதுவும் இல்லை.
“சொல்லு அனிதா அப்புறம்..”
“அது.. அதான்.. கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும். அதான் வந்தேன்..”
அவள் பேசாமல் இருக்க “அனிதா..” என்று இறுகிய குரலில் அழைத்தான்..
“ஹா..” என்று நிமிர்ந்து பார்த்தவள், அவன் முகத்தில் தெரிந்த இறுக்கம் கண்டு ஏன்டா வந்தோம் என்று தோன்ற ஆரம்பிக்க, ஆனாலும் முகத்தில் எதையும் காட்டாமல்
“என்ன ஈசன்.. இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கேன்.. ஏன் வந்த அப்படிங்கிற போல பேசுற..” என்றாள் பாவமாய்.
“ஓ.. அப்போ இவ்வளோ நேரம் நீ சொன்ன கதை சும்மாவா??”
“இல்ல.. அது..”
“ம்ம்.. போதும் அனிதா.. எனக்கு இப்படி உட்கார்ந்து கதை கேட்கிற நேரமும் இல்லை.. எங்க இடத்துக்கு எங்களைத் தேடி வந்திருக்க அப்படிங்கிற ஒரே காரணத்துக்காக தான் நான் வந்து பேசிட்டிருக்கேன்..”
“அட நிஜமாதான்.. திங்க்ஸ் வாங்க மட்டுமில்லை. அப்படியே உன்னைப் பார்த்து எப்படி இருக்க உன்னோட லைஃப் எப்படியிருக்குன்னு விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்…”
“ஓ.. அப்போ முழுசா விசாரிச்சிட்டு இங்க வரலையா..” என்று அவளைப் பார்க்க, “நோ நோ.. நான் இன்னொரு விஷயம் கேட்கனும்னு வந்தேன்..” என்று அடுத்த தூண்டிலைப் போட்டாள்.
அவனுக்கோ என்ன பெண்ணிவள்.. திருமணமாகிவிட்டது அடுத்து அவள் வாழ்வு என்று இருப்பதை விட்டு இதென்ன இன்னொருவர் வாழ்வில் மூக்கை நுழைப்பது என்று தோன்ற, அவள் சாதாரணமாக வந்திருந்தால் கூட நல்முறையில் பேசிருப்பானோ என்னவோ ஆனால் அவள் வந்த நோக்கமே அவனுக்கு சரியாய் படவில்லை. ஆக, நீ என்ன என்ன சொல்வாயோ சொல் என்பதுபோல் அசட்டையாய் இருந்துவிட்டான்.
“இந்த கடைக்கு சைட்ல ஒரு காலி இடமிருக்குல.. அது உன்னோடதா..??” என்றாள் மெல்ல.
“ஆமா..”
“அது.. எங்கப்பா இந்தபக்கம் கடை மாத்தலாம்னு இருக்கார். அந்த காலி இடத்துக்கு அந்தப்பக்கம் ஒரு கடை இருக்குல அதை தான் பேசுறாங்க.. சோ இந்த இடமும் எங்களுக்கு கிடைச்சா கொஞ்சம் பெரிசாவே வைக்கலாம்னு அப்பாக்கு ஒரு எண்ணம்…” என்று சொல்லும்போதே,
“அதுக்கு என்கிட்ட பேசிட்டு வர சொன்னாரா??” என்றான் பட்டென்று..
ஈசன் கேட்கவும், அனிதாவிற்கு ஒருமாதிரி ஆகிட, “என்.. என்ன சொல்ற??” என்றாள் வேகமாய்..
“அது.. அதுவந்து.. என்கிட்ட சாதாரணமா சொன்னார்.. நானா தான் உன்கிட்ட கேட்கிறேன்..”
“ஓஹோ.. அப்புறம்..”
“என்ன ஈசன்.. நீ இவ்வளோ அசட்டையா கேட்கிற.. அந்த இடம் எங்களுக்கு விலைக்கு கொடுத்தா ரொம்ப சந்தோசமா இருக்கும்.. இதுக்கூட செய்யக்கூடாதா…” என்று உரிமையாய் கேட்பது போல் கேட்க,
“ஹா ஹா..” என்று சிரித்தவன், “வெரி சாரி.. இதுல நான் எதுவுமே செய்ய முடியாதே..” என்று கைகளை விரித்தான்..
“ஏன்.. ஏன் ஏன் முடியாது.. இந்த கடை, அந்த இடமெல்லாம் உன்னோடு தான.. ”
ஈசன் அனிதாவிடம் இதை சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சரியாய் லட்சுமியும் அங்கே வந்தாள். கடைக்குள் நுழைந்தவள், வேலை செய்யும் பெண்களோடு என்னவோ பேசியபடி இருக்க,
ஈசன், மேஜையில் இருந்த கணினி வழியாய் அவள் வந்ததைக் கண்டதும், அவனையும் அறியாது இதழில் ஒரு மென்னகை வந்து ஒட்டிக்கொள்ள, அவன் பார்வை எல்லாம் கணினியில் இருக்க,
‘யாரைப் பார்க்கிறான்..’ என்று அனிதாவும் கணினியை லேசாய் எட்டிப் பார்க்க, அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை..
‘நான் ஒருத்தி முன்ன உட்காந்து பேசிட்டிருக்கேன்.. அதைவிட்டு யாரப் பார்த்து இப்படி ஒரு ரியாக்சன் கொடுக்கிறான்..’ என்று கடிந்தபடி ஈசனைப் பார்க்க,
அவனோ “நான் சொன்னேன்ல ஓனர் நானில்லைன்னு.. அவங்களே வர்றாங்க கேட்டுகோ.. அவங்க சரின்னு சொன்னா எனக்கு எதுவும் பிரச்சனையில்லை..” எனும்போதே லட்சுமி அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள்
“ரொம்ப லேட் பண்ணிட்டேனா மாமா..” என்று சிரித்தபடி..
‘இவளா…’ என்று அனிதா லட்சுமியைப் பார்க்க, அன்று அனிதா முதன்முதலில் இங்கே வந்தபோது லட்சுமி அவளிடம் கேள்வி கேட்டுவிட்டு அப்படியே திரும்பிப் போனது நினைவில் வர, ‘புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேருக்குமே எவ்வளோ அலட்சியம்.. இருக்கட்டும்..’ என்று நினைக்க, ஈசன் அவன் இருக்கையில் இருந்து எழுந்திருந்தான்.
“நீ உட்கார் லஷ்மி..” என்றவன், சற்று தள்ளியிருந்த மற்றொரு இருக்கையை இழுத்துபோட்டு லட்சுமியருகே அமர, அனிதாவிற்கு இது அடுத்த அதிர்ச்சி.
ஈசன்.. ஒருத்திக்கு எழுந்து நின்று மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், வேறு இருக்கைக்கு வேறு போவதா, அதுவும் அவன் அமர்ந்திருந்த முதலாளி இருக்கையை விட்டு சாதாரண இருக்கைக்கு என்று பார்த்திருக்க, லட்சுமி ஈசனைப் பார்த்து சிரிப்பது தெரிந்தது..
அனிதாவிற்கு உள்ளூர ஒரு வலி.. தோன்றி மறைய, ‘இப்போ இவன் பொண்டாட்டிக்கு கொடுக்கிற மரியாதைல கொஞ்சமாவது அன்னிக்கு எனக்கு கொடுத்தானா எவ்வளோ திமிரா இருப்பான். அப்போ நான் என்ன சும்மாவா..’ என்று தோன்ற, கணவன் மனைவி இருவரையும் ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தாள்.
ஈசன், அனிதாவிடம் திரும்பியவன், “இதோ இவங்கதான் இங்க ஓனர்.. இங்கன்னு இல்லை.. என்னோட எல்லாத்துக்குமே.. சோ நீ எதுவாயிருந்தாலும் லஷ்மிக்கிட்ட தான் கேட்கணும்..” என, லட்சுமியோ ஈசனை பார்த்தவள், அடுத்து அனிதாவை பார்த்தவள்,
“சொல்லுங்க அனிதா.. என்ன விஷயம்..” என்று நேராய் விசயத்திற்கு வர,
அனிதாவோ ‘என்னதிது ரெண்டு பேரும் ஒரேமாதிரி பேசுறாங்க..’ என்று எண்ணியவள், மனதில் ஒரு திடத்தை கொண்டுவந்து,
“நான் வந்தது இருக்கட்டும்.. என்னை யாருன்னு தெரியுமா???” என்றாள் நக்கலாய்.
“தெரியாமையா பேசிட்டிருக்கோம்…” என்று லட்சுமி அதற்கும் சிரிக்க,
“ஓ.. அப்போ என்னைப் பத்தி சொல்லிருக்கியா…” என்று அனிதா ஈசனைப் பார்க்க,
“எங்களுக்குள்ள சொல்லாத விசயம்னு வேற இருக்கா என்ன??” என்று லட்சுமியின் கேள்வியில் அனிதா கொஞ்சம் ஆடித்தான் போனாள்.