என்ன பேச்சிது.. என்னமாதிரியான தோரணையில் அமர்ந்திருக்கிறாள்.. என்னைப் பற்றி தெரியுமென்றால் கொஞ்சம் கூட சலனமேயில்லாது இருக்கிறாளே என்றெல்லாம் அவளை ஆராய்ந்துப் பார்த்தவள்,
“அப்.. அப்போ நான் யாருன்னு தெரியுமா???” என்றாள்.
“ம்ம்ச்.. அதெல்லாம் பழைய கதை அனிதா.. சொல்லுங்க இப்போ என்ன விசயமா வந்தீங்க…??” என்று மற்றதை எல்லாம் ஒன்றுமேயில்லாமல் ஒரே வரியில் லட்சுமி ஆக்கிவிட,
லட்சுமியின் செயல் கண்டு அவளைப் பெருமையாய் பார்த்தவன், “நானே சொல்றேன்…” என்று, அனிதா கேட்ட அந்த இடம் பற்றி சொல்ல, “ஓ…” என்று மட்டும் சொன்னாள் லட்சுமி.
அனிதாவிற்கோ ஒவ்வொரு விசயத்திலும் அவர்களின் நெருக்கமும், அன்யோன்யமும் கண்ணில் பட, மண்டைக் காய்ந்தது. தான் நினைத்து வந்தது எதுவுமே நடக்காது போலவே என்று தோன்ற, இப்படியே சும்மா போவதா என்ற எண்ணமும் எழ, லட்சுமி அடுத்து என்ன சொல்லப் போகிறாள் என்று காத்திருந்தாள்.
லட்சுமியோ கொஞ்ச நேர இருந்தவள், “இவங்க நம்மக்கிட்ட கேட்டது சந்தோசம் தான் மாமா.. ஆனா இப்போ நம்மனால கொடுக்க முடியாதே..” என்றாள் பாவனையாய்.
ஈசனுக்குத் தெரியும் லட்சுமி இதை தான் சொல்வாள் என்று. அவ்வளவு ஏன், அனிதாவிற்குமே தெரியும் சம்மதிக்க மாட்டார்கள் என்று. ஆனாலும் அதற்கு என்ன காரணம் சொல்கிறார்கள் என்று பார்ப்போமே என்று தோன்ற,
“ஏன்.. அந்த இடம் சும்மாதானே இருக்கு…” என்றாள்.
“இல்லையே சும்மயில்லையே.. கடைக்கு வர வண்டி எல்லாம் அங்க தான் பார்க் பண்றாங்க.. அதுவுமில்லாம இனி அந்த இடம் சும்மாயிருக்கப் போறதுமில்லை…” என்றவள் ஈசனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,
“இந்த கடையை எக்ஸ்டென்ட் பண்ணலாம்னு இருக்கோம்..” என, இந்த செய்தி ஈசனுக்கே புதிது அல்லவா, லேசாய் கண்களில் வியப்பைக் காட்டினான்.
“என்ன மாமா அப்படி பாக்குறீங்க?? நிஜமாதான்.. குடோன்ல ஸ்டாக் கூட இருக்கிறது போதும்னு சொல்லிட்டேன்.. துரைசாமி வேற கைல இருக்க மொத்த பணத்தையும் போட்டு கடை திறந்திருக்கார்.. நம்மனால அவருக்கேன் கஷ்டம் அதான் வேற ப்ளான்..” என,
ஈசனோ “இது உன்னோடது.. நீ எடுக்கிற முடிவுதான் இங்க எல்லாமே..” என்றிட,
ஆவலாய் பார்த்திருந்த அனிதாவிற்கு காந்தியது. நான் ஒருத்தி இருப்பதை மறந்து என்ன பேச்சு என்றிருக்க, “நீங்க ரெண்டு பெரும் அப்புறம் பேசுறீங்களா…” என்றாள் நடுவில்.
“ஓ.. சாரி நீங்க இன்னும் இருக்கீங்களா.. ரியலி சாரி மறந்திட்டேன்..” என்று போலியாய் பவ்யம் காட்டினாள் லஷ்மி..
அனிதாவிற்கு எப்படியான ஒரு அவமானம் இது.. சிரித்துக்கொண்டே ஒருவரை இப்படித்தான் உதாசீனம் செய்வதா என்றிருக்க,
“நீங்க வீட்டுக்கு வந்திருந்தா நாங்க விருந்தே வச்சிருப்போம்…” என்று லட்சுமியும் பேச, ஈசனுக்கு என்னவோ இதற்குமேல் தான் அங்கே இருப்பது சரியாய் இருக்காது என்று தோன்ற,
“சரி லஷ்மி பார்த்துக்கோ…” என்று எழுந்துவிட்டான்..
“ம்ம் சரி மாமா.. லாயர் சாயங்காலம் எழு மணிக்கு வர சொல்லிருக்கார்.. வெங்காடசலம் சார் கிட்டயும் நானே பேசிட்டேன்.. போயிட்டு வந்திடலாம்…” என,
“சரி லஷ்மி..” என்றவன் கண்ணிலேயே, அனிதாவை சீக்கிரம் பேசி அனுப்பு என்றவன், “ஓகே அனிதா பேசிக்கோங்க…” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.
ஈசன் கிளம்பியதுமே, லட்சுமியின் முகம் அப்படியே மாறிவிட்டது. அத்தனை நேரம் சிரித்துக்கொண்டு இருந்தவளின் முகத்தில் இப்போது ஒரு கடினம் வந்திருக்க, “அனிதா…” என்ற அழைப்பிலேயே, அனிதா திடுக்கிட்டுப் பார்த்தாள்.
“நிஜமா இந்த இடம் பத்தி கேட்கத்தான் வந்தீங்களா…??”
“இல்ல.. அது.. ஆமா.. அப்படியே எல்லாரையும் பார்த்துட்டு…” என்று அனிதா இழுக்க, “எல்லாரையும்னா யாரை??” என்று அடுத்த கேள்விக்குப் போனாள் லட்சுமி..
“அப்புறம்.. அப்புறம் ஒண்ணுமில்ல…” என்று திணறிய அனிதாவிற்கு மனதில் சட்டென்று ஒரு விஷயம் நியாபகம் வர, கொஞ்சம் திடமாய் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவள்,
“நான் வேணாம்னு சொல்லிட்டு போன ஒருத்தன் எப்படி இருக்கான்னு பார்க்கணும்னு ஒரு எண்ணம்.. அதான்.. அப்புறம் இங்க வந்த அப்புறம் தான் தெரிஞ்சது உனக்கும் ஈசனுக்கும் நடுவில என்னவோ பிரச்சனையாமே.. நீ கூட உங்கம்மா வீட்டுக்கு போயிட்டயாமே…” என்று துக்கம் விசாரிப்பது போல் கேட்க,
‘இது உனக்கு தேவையில்லாத விஷயம்..’ என்று பார்த்தாள் லட்சுமி.
“என்னம்மா.. அமைதியா இருக்க.. அப்போ பிரச்னைதான் இல்லையா.. எனக்குக்கூட இதைக் கேட்கவும் கஷ்டமா போச்சு.. ச்சே என்னடான்னு.. அப்புறம் தான் தெரிஞ்சது.. நீ மறுபடியும் வந்துட்டன்னு.. ஆனா எனக்கு இது தான் ஆச்சர்யமே… எப்படி ஈசன் உன்னை கூப்பிட்டானா…??? இருக்காதே.. அவன் அப்படியெல்லாம் யார்கிட்டயும் இறங்கி போய் எல்லாம் பேசமாட்டானே.. போனா போ அப்படிங்கிறது போல தானே இருப்பான்.. பின்ன எப்படி நீயாவே வந்துட்டியா…??” என்று பேசிக்கொண்டே போக,
அவளின் ஒவ்வொரு வார்த்தைகளும் லட்சுமிக்கு மனதினுள்ளே எப்படியான உணர்வுகளை எழுப்பிவிட்டிருக்கும் என்று சொல்லவேண்டியதே இல்லை.. அவளின் அமைதி கண்டு, அனிதா பேசிக்கொண்டே போக,
ஒரு நிலையில் லட்சுமி தன் பொறுமையை கை விட்டு, “ஜஸ்ட் ஷட் அப்..” என்று கத்தியேவிட்டாள்..
“இதுக்குமேல நீ ஒருவார்த்தை பேசின.. என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது.. ஆனா கண்டிப்பா எதவாது செஞ்சிடுவேன்.. எங்க வந்து யார்கிட்ட யாரைப் பத்தி பேசுற.. என் முன்னாடின்னு மட்டுமில்ல, இனி எங்கயும், ஈஸ் மாமாவ அவன் இவன்னு பேசின.. தொலைச்சுக் கட்டிடுவேன். முதல்ல அவரைப் பத்தி நீ ஏன் பேசுற.. நீ யாரு…??” என்றே கேள்வியே மிரட்டலாய் தான் வந்தது.
அனிதா பதில் சொல்ல தோன்றாமல், அதிர்ந்து போய் பார்க்க, “என்ன பாக்குற.. இவ்வளோ நேரம் அமைதியா இருந்திட்டு இப்போ பேசுறாளேன்னா.. இந்த மரியாதைக் கூட நீ எங்க இடத்துக்கு வந்ததுனாலதான்.. அதை காப்பாத்திக்கிட்டு கிளம்பு..” என்று வெளியே போ என்பதுபோல் கையை காட்ட,
அனிதாவிற்கு லட்சுமியின் பேச்சு, கோபத்தைக் கொடுத்தாலும், ஏதோவொரு வகையில் தன் பேச்சு அவள் மனதை பாதித்திருக்கிறது, அதனால் தான் இத்தனை கோபமாய் பேசுகிறாள் என்று தோன்ற, மனத்தில் லேசானதொரு நிம்மதி தோன்றியது.
‘அப்போ.. என்னவோ நடந்திருக்கு.. நான் நினைச்சது சரிதான்..’ என்று தோன்ற,
“அட உண்மையை கேட்டா இப்படியா பேசுறது.. அன்னிக்கு நான் போனப்போவும் ஈசன் அப்படித்தான் இருந்தான்.. சாரி சாரி இருந்தாங்க. ஆனா உனக்கொன்னு தெரியுமா, அப்போ நானாதான் வேணாம்னு போனேன்.. திரும்பி வந்திருந்தா கண்டிப்பா ஈசனுக்கும் எனக்கும் கல்யாணம் நடந்திருக்கும்..” எனும் போதே,
“அட இதுக்கூட நல்லாருக்கே.. இப்பவும் ஒண்ணுமில்ல, உங்க ஹஸ்பண்ட் கிட்ட டைவர்ஸ் வாங்கிட்டு வாங்களேன்.. என்ன நீங்க பேசுறீங்களா இல்ல நடந்த எல்லாத்தையும் சொல்லி உங்க ஹஸ்பண்ட் கிட்ட நானேபேசவா..??” என்று லட்சுமி இரண்டு புருவத்தையும் நக்கலாய் தூக்கி கேட்ட விதத்தில்,
உன் கணவனிடம் அனைத்தையும் சொல்லவா என்ற மறைமுக மிரட்டல் தெரிய, அனிதா மூச்சு விடவும் மறந்து தான் போனாள்.
“இல்ல.. அது.. அதுவந்து..” என்று அனிதா மீண்டும் திக்க,
“அவ்வளோதான்.. இதோட கிளம்பு. இதுக்கு மேல ஏதாவது பேசின.. இப்போ சொன்னதை அப்படியே செய்வேன்.. ” என்று அடுத்த நிமிடம் லட்சுமி சீர,
உன் கணவனிடம் பேசவா என்ற கேள்வியிலேயே அனிதாவிற்கு சர்வமும் ஆடிவிட்டது. அவனுக்கு இதெல்லாம் தெரியாதே.. தெரிந்தால் அவ்வளவுதான். முழு வாழ்க்கையும் அதோகதி தான் என்று மனத்தில் கலக்கம் சூழ,
எதையும் வெளிக்காட்டாது, “நான் ஜஸ்ட் பார்த்திட்டு போகலாம்னு தான் வந்தேன்.. அப்புறம் எனக்கொண்ணும் இங்க அடிக்கடி வரணும்னு அவசியமே இல்லை.. எனக்குத் தேவையும் இல்லை..” என,
“ரொம்ப நல்லது கிளம்புங்க..” என்று லட்சுமி வாசலைப் பார்த்து கை காட்ட,
“ரொம்ப கவலைப் படாத, எனக்கு நாளைக்கு பிளைட்டு.. உங்களை எல்லாம் தேடி வந்து பேசினேன் பார்.. மரியாதை தெரியாத ஆளுங்க..” என்று கடைசியில் அவர்கள் பக்கமே திருப்பிவிட்டு, அனிதா என்னவோ ரொம்ப நல்லவள் போல் கிளம்பிச் சென்றுவிட, லட்சுமிக்கு அப்போது தான் அப்பாடி என்று இருந்தது..
இருக்கையில் பொத்தென்று அமர்ந்தவள், சில பல மூச்சுக்களை ஆழ்ந்து எடுத்துவிட, என்னவோ இதயம் படபடவென்று அடிப்பது போல் இருந்தது..
‘ச்சே என்ன மனுசி இவ…’ என்று நினைக்க, ‘ஈசன் உன்னைக் கூப்பிட்டானா…’ என்று அனிதா கேட்டதும் நினைவில் வர, கண்களை இறுக மூடிக்கொண்டாள் லட்சுமி..