அனைத்தும் சரியாகிவிட்டது என்று ஆசுவாசமாய் மூச்சு விடும் நேரத்தில், இந்த அனிதா வந்து குட்டையை குழப்ப, எதோ ஒரு வகையில் அவளின் வார்த்தைகள் லட்சுமியின் மனதை பாதிக்க, என்னதான் தைரியமாய் இருந்தாலும், அவள் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் மறக்கமுடியவில்லை.
‘ஈசன் உன்னை கூப்பிட்டானா???’ என்று அவள் தெரிந்து கேட்டாளோ, இல்லை தெரியாமல் கேட்டாளோ, ஆனால் அந்த நொடி லட்சுமிக்கு மனம் அத்தனை வலித்தது.,
அடுத்து வீட்டிற்கு வந்தவள், அமைதியாகவே இருக்க, முதலில் யாரும் அதை கண்டுகொள்ளவில்ல. மாலை வெங்காடசலத்தோடு சேர்ந்து, ஈசனும் லட்சுமியும் வக்கீலைப் பார்த்து வந்தபோதும் கூட சாதரணமாய் தான் இருந்தாள். ஆனால் அனைத்து வேலைகளும் முடிந்து, இரவு அறைக்கென்று சென்று அமர்கையில் அப்படியே தொய்ந்து போனாள்..
என்ன முயன்றும் அவளால் அந்த கேள்விக்கு தனக்குள்ளே கூட பதில் சொல்ல முடியவில்லை. காரணம் ஈசன் தான் அழைக்கவில்லையே.. அனிதா என்ன நினைத்து அதை சொன்னாளோ, அவள் சொன்னது நிஜமாய்த்தான் போனது.
அவள் தொய்வாய் இருப்பது கண்டு, “உடம்புக்கு எதுவும் செய்யுதா லஷ்மி..” என்று நெற்றியில் கை வைத்து கேட்க, ஈசனின கைகளை தன் முகத்தோடு அழுத்திக்கொண்டாள்.
அவன் திகைத்துப் பார்க்க, “இப்படி உட்காருங்க மாமா..” என்று சோஃபாவைக் காட்டியவள், அவன் அமரவும், அவன் மடியில் படுத்துக்கொள்ள,
“லஷ்மி ஏன் இப்படி பண்ற??” என, அவளோ பதில் சொல்லாமல் அவன் பனியனை பிடித்து திருக,
“கேட்கிறேன்ல.. உன்ன பார்க்கவே அவ்வளோ வீக்கா இருக்கு… அவக்கிட்ட அப்படி பேசிட்டு வந்து இங்க இப்படி பண்ற..” என, “ம்ம்… என் வீக்னஸ் எல்லாம் உங்கக்கிட்ட தான் காட்ட முடியும்..” என்றவள், அவனை நிமிர்ந்து பார்த்து, “நீங்க ஏன் மாமா என்னை கூப்பிடலை..” என்றாள் ஏக்கமாய்.
ஈசனுக்கு அனிதாவை எண்ணி அத்தனை கோவம், அது முகத்திலும் தெரிய, “அவள…” என்று பல்லைக் கடித்தவன், “அவளை ஏன் லஷ்மி சும்மா போக விட்ட….” என்றான் கோபமாய்..
“என்ன பண்ண சொல்றீங்க மாமா?? அவ பேசினதுக்கு அடிச்சிருக்கணுமா.. அவளை அந்த நிமிசத்துல இருந்து நம்ம வாழ்கையில முழுசா ஒதுக்கணும்னு நினைச்சு தான் பொறுமையா பேசினேன்.. அவளே பிரச்சனை பண்ணனும்னு வந்தா, அது நடக்கல, அப்புறம் உங்கள ஹர்ட் பண்ணனும்னு நினைச்சா அதுக்கு நான் இடம் கொடுக்கல, உங்களைப் பேசினா நான் ஹர்ட் ஆவேன்னு தெரிஞ்சிருக்கு, சோ அதை பண்ணிட்டு போயிட்டா..” என,
“தெரியுதுல.. தெரியுதுல டி. அவ எல்லாத்தையும் வேணும்னே பண்ணான்னு தெரியுதுல அப்புறம் ஏன் இப்படியிருக்க…” என்றவன் தன் மடியில் படுத்திருந்தவளை, எழுப்பி தன்னருகே அமர வைக்க,
“ஏன் இப்படி இருக்கக்கூடாதா.. அவ பேசின மத்த எதுவுமே எனக்கு ஒண்ணுமில்ல மாமா.. ஆனா நீங்க என்னை கூப்பிட்டிருக்க மாட்டீங்கன்னு தெரிஞ்ச மாதிரி சொன்னாளா அதான் எனக்கு கஷ்டமா போச்சு.. உண்மையும் அதுதானே..” என்றாள் சோர்வாய்..
இதற்கு அவன் என்ன பதில் சொல்வான்.. தன்னால் பதில் சொல்ல முடியவில்லை என்பதிலேயே அவனுக்கு இன்னமும் கோபம் அதிகமாக, ஈசனின் உடல் இறுகுவதிலேயே லட்சுமிக்கு அவன் மனம் புரிய,
“ஷ்.. என்ன மாமா… இதை நான் உங்கக்கிட்ட சொல்லியே இருக்கக்கூடாது போல..” என, “சொல்லாம வேற இருந்திருப்பியா..” என்றான் அவள் முகத்தை இறுக பற்றினான் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல்.
“ம்ம்ச் இதென்ன இவ்வளோ முரட்டுத்தனம்.. உண்மையை சொன்னா ஏன் கோபம் வரணும் உங்களுக்கு.. இதோட இந்த பேச்சை விடுங்க..” என்று அவளும் அந்த நேரத்தில் தோன்றிய சிறு சலிப்புடன் எழ, அதுவே ஈசனுக்கு இன்னும் கோபத்தை அதிகரிக்க,
“எங்க போற..” என்று அவளை இழுத்து மீண்டும் தன்னருகே அமர வைக்க, லட்சுமி அவனை ஆராய்ச்சியாய்ப் பார்த்தாள்..
“என்ன டி??..”
“இப்போ என்னாச்சு உங்களுக்கு??”
“ஒண்ணுமில்ல.. அன்னிக்கு நான் கூப்பிடாதது தப்புதான்.. ஆனா நீ வேணாம்னு நினைச்சு எல்லாம் கூப்பிடாம இல்லை.. நமக்குள்ள சண்டை வரக்கூடாதுன்னு தான் கொஞ்சம் தள்ளி நின்னேன்.. அதுவுமில்லாம அப்போ நீயாதான போன, அப்போ நீயே தான் திரும்ப வரணும்னு நினைச்சேன். சும்மா அதையே திரும்ப திரும்ப கேட்டா என்கிட்ட பதில் இல்ல லஷ்மி..” என்றவனுக்கு எரிச்சலாய் இருந்தது.
இன்னும் எத்தனை முறை இந்த விசயத்திற்கு விளக்கம் கொடுப்பது என்று. திரும்ப திரும்ப அதையேகே கேட்டால் அவனும் தான் என்ன செய்வான். அதிலும் அனிதா சொன்னாள் என்று வந்து, லட்சுமியும் முகத்தை தூக்கி அமர்ந்திருக்க, எல்லாம் சேர்ந்து அவனை கடுப்படித்துவிட்டது.
இதை லட்சுமி யாரிடமும் சொல்லியே இருந்திருக்க மாட்டாள். ஆனால் உள்ளேயே வைத்திருந்தால் அவளை அல்லவா போட்டு படுத்தியிருக்கும். ஆக ஈசனிடமே அனைத்தையும் சொல்லிவிட, இப்போதோ ஏன்டா சொன்னோம் என்றிருந்தது.
ஈசனோ “இருக்கட்டும்.. நாளைக்கு போய் அவ அப்பாக்கிட்ட பேசிக்கிறேன்..” என, “அச்சோ.. மாமா..” என்றாள் பதற்றமாய்.
“எதுக்கு இப்போ டென்சன் ஆகுற… நம்ம இடத்துக்கு வந்து நம்மளை டென்சன் பண்ண நினைச்சால்ல, அவ வீட்டுக்கு நான் போய் பேசினா என்னாகும்னு தெரியவேணாமா…”
“தெரியவே வேணாம்.. இதோட இதை விடுங்க மாமா…” என்றாள் உறுதியாய்.
“அதெப்படி விட சொல்ற?? முடியாது.. நாளைக்கு பிளைட் தானே.. போறதுக்குள்ள அவளுக்கு இருக்கு..”
“அவ ஹஸ்பண்ட் கிட்ட பேசுவேன்னு மிரட்டித்தான் அனுப்பிருக்கேன்.. அவளுக்கும் மனசுல பயம் இருக்கும்ல.. ப்ளீஸ் எனக்காக இதை இதோட விடுங்க… எனக்காக மாமா” என, முதல் முறையாய் எனக்காக என்று கேட்கிறாள், அதுவும் அந்த அனிதாவிற்காக என்று தோன்ற,
“போ டி.. அவளுக்காக எல்லாம் கெஞ்சாத..” என்றவன், “இனிமே இந்த பேச்சே நமக்குள்ள இருக்கக்கூடாது லஷ்மி….” என்றான் தீர்க்கமாய்.
மனதிற்குள் இருக்கும் கோபம் அடங்க மறுக்க, எப்படித் தன்னை சமன் செய்துகொள்ள வென்று தெரியாமல் திணறினான். முகத்தை உர்ரென்று வைத்து, அமர்ந்திருக்க, இவனை எப்படி சமாதானம் செய்வது என்பதுபோல் லட்சுமி பார்க்க, நேரம் கடந்துகொண்டே இருந்தது.
“மாமா விடுங்க.. இதுவும் நல்லதுக்குன்னு நினைப்போம்.. அவ என்னவோ பண்ணனும்னு நினைச்சா, ஆனா அது நமக்குள்ள இன்னும் அண்டர்ஸ்டாண்டிங்க தான் கொடுத்திருக்கு….” என,
“எல்லாம் புரியுது.. ஆனா இப்படி நீங்க இருக்கிறது தான் பிடிக்கல..” என்றாள்.
“அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி நீ மட்டும் எப்படியிருந்த..”
“ஓ.. அப்போ பதிலுக்கு பதிலா..”
“ஆமா அப்படித்தான்..”
“அப்போ நான் என்ன செஞ்சாலும் நீங்களும் செய்வீங்களா??”
“ஆமா…”
“நிஜமா.. வார்த்தையை விடக்கூடாது..” என்று லட்சுமி கிண்டல் குரலில் கேட்க,
“ஏன்.. என்னால பண்ண முடியாதா??” என்று அவனும் ஒரு வேகத்தில் சொல்ல,
“எங்க இப்படிப் பண்ணுங்க பாப்போம்…” என்றவள் அன்றுபோல் இன்றும் முனிவர் கொண்டைப் போட்டுக் காட்ட, ஈசனுக்கு அவன் மனதில் இருந்த கோவம் எரிச்சல் எல்லாம் மறந்து, ‘என்ன செய்றா இவ..’ என்று பார்க்க,
“என்ன மாமா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பொங்குனீங்க.. இப்போ என்ன.. ம்ம் இது மாதிரி போடுங்க…” என்று வேண்டுமென்றே அவனை சீண்ட, “ஏய் வேணாம் என்னை சீண்டாத…” என்றான் செல்ல மிரட்டலாய்..
“ஏன் என்ன செய்வீங்களாம்…” என்று அவள் வேண்டுமென்றே நைட்டியை மடக்கிக் கட்டுவது போல் தூக்கிக் காட்டிக்கொண்டு வர, அவளது கோலத்தை கண்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
கொஞ்ச நேரத்திற்கு முன்னே சீறிக்கொண்டு இருந்தவன், இப்போது சிரித்துகொண்டு இருக்கிறான்.. அனைத்தும் அவளால்..
“என்ன சிரிப்பு..??” என்று கேட்டவளுக்கும் இப்போது நிம்மதியாய் இருந்தது, ஈசனின் புன்னகை முகம் பார்த்து.
“நான் சிரிச்சா உனக்கென்ன..”
“தனியா அப்படி பார்த்து சிரிங்க.. என்னை ஏன் பார்த்து சிரிக்கணும்..”
“பின்ன இப்படியிருந்தா..” என்றவன், அவளை நகட்டிக்கொண்டு கண்ணாடி முன்னே நிற்க, உச்சியில் போட்ட முனிவர் கொண்டையுமாய், தூக்கிக் கட்டிய நைட்டியுமாய் அவளை பார்க்க, ‘அச்சோ இப்படியா நின்னோம்..’ என்று தோன்ற, லேசாய் வெக்கம் மேலிட,
“ச்சு போங்க மாமா..” என்று ஈசன் நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக்கொண்டாள்..