மாலத்தீவுகள்… தேனிலவிற்கான சிறப்பு தண்ணீர் வீடுகள்( வாட்டர் வில்லா…)
சூரியனின் வெப்பம் மிதமாய் தேகத்தை தொட்டாலும், சுற்றியிருக்கும் கடல் அலைகளின் ஈரம், காற்றோடு கலந்து, ஒரு ஜில்லிப்பைப் கொடுக்க, இரண்டு தென்னை மரங்களின் நடுவே கட்டபட்டிருந்த வலையில், ஈசன் ஹாயாக படுத்திருக்க, அவன் மீது சாய்ந்து லட்சுமி படுத்திருந்தாள்.
சுற்றி ஆள் அரவமற்ற தனிமையும், அவ்விடத்தின் இயற்கையும் அது கொடுத்த இனிமையும், ஏற்கனவே காதல் மொழி மட்டும் பேசிக்கொண்டிருக்கும் ஈசனுக்கும் லட்சுமிக்கும் இன்னும் இன்னும் நெருக்கத்தை கொடுத்தது என்றால் அது ஆச்சர்யமில்லை..
கடற்கரையில் இருந்து சற்று கடல் நீரைத் தொட்டபடி கட்டப்பட்டிருந்த மர வீடுகளும், அதனை ஒட்டியிருந்த தென்னை மரங்களும், மெல்லிய காற்றும், கடல் அலையின் சப்தமும், சொர்கபுரியாய் தான் இருந்தது. வந்து இரண்டு நாட்கள் ஆனது.. எத்தனை நாள் இருந்தாலும் தெவிட்டாது என்று இருவருக்குமே தோன்ற, அழகாய் அந்த தேனிலவை அனுபவித்துக்கொண்டு இருந்தனர்.
ஈசன் தலைக்கு பின்னே கைகளை கட்டிக்கொண்டு படுத்திருக்க, அவன் மார்பில் தலை வைத்து லட்சுமி படுத்திருக்க, அந்த அமைதியை இருவருமே கண் மூடி ரசித்திருக்க, “மாம்ஸ்.. இன்னும் கொஞ்சம் அட்டுங்க..” என்றாள்.
“இதுக்குமேல ஆட்டினா ரெண்டுபேரும் கீழ தான் விழனும்…”
“பரவாயில்ல தண்ணி தான இருக்கு.. விழுந்தாலும் அடியெல்லாம் படாது…” என்று லட்சுமி சொல்லும்போதே,
“அப்படியா..” என்றவன், “இந்த போ..” என்று லட்சுமியை தள்ள, “அச்சோ மாம்ஸ்…” என்று கீழே தண்ணீரில் விழ, ஆழமும் இல்லாததால், தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்த வலையும் அத்தனை உயரத்தில் இல்லாததால் சொன்னதுபோலவே அடி எதுவும் படவில்லை.
தண்ணீரில் விழுந்தவள், “மாம்ஸ்..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு முறைக்க,
“ஹா ஹா நீதானே சொன்ன அடிபடாதுன்னு..” என்று ஈசன் மேலே படுத்தபடி சிரிக்க, “அதுக்கு இப்படியா..” என்றவள், தண்ணீரை அள்ளி அவன் மீது தெளிக்க,
“ஏய் லஷ்மி.. என்ன டி..” என்றவன் கீழே நின்றிருந்தவளின் கைகளை எட்டிப்பிடிக்க முயல, அவளோ இது தான் சாக்கென்று ஈசனையும் சேர்த்து இழுக்க, அடுத்த நொடி அவனும் தண்ணீரில் விழ, லட்சுமியையும் அவன் மீது இழுத்துக்கொண்டான்..
“ஷ்.. மாமா என்ன பண்றீங்க..” என்று எழப் போக, அவனோ விடாது நீருக்குள் அவளை அமிழ்த்த, “மாம்ஸ்…..” என்றவள் கொஞ்சம் எழுந்து சுற்றியும் பார்க்க,
“லூசு யாருமே இல்ல..” என்றவன் மீண்டும் அவளை இழுக்க, “என்ன லூசா..??” என்றவள் முறைத்து நிற்க,
“கடவுளே…” என்று இறைவனை அழைக்க, “அவரை ஏன் கூப்பிடுறீங்க..” என்றவள் அவனுக்கருகே பொத்தென்று வேண்டுமென்றே நீரில் விழ, “நீ இருக்கியே…” என்றவனுக்கு உல்லாசமாய் இருந்தது.
“இருக்கேன் இருக்கேன்.. மாம்ஸ்…” என்று அவன் காதருகே கத்த, “ஏய் தள்ளிப் போ டி….” என்று வேண்டுமென்றே அவளைத் தள்ளிவிட,
“தள்ளிப் போகவா.. இல்ல உங்களை தள்ளிட்டு போகவா மாம்ஸ்..” என்று லட்சுமி சொல்லி சிரிக்க, ‘ஆ.’ என்றுதான் ஈசன் பார்த்தான்..
நிஜம்தான் இங்கே அவன் பார்க்கும் லட்சுமி முற்றிலும் வேறு. உனக்கும் எனக்கும் இடையில், இடைவெளிகளோ, தயக்கங்களோ தடைகளோ இல்லை.. நீ நான் வேறில்லை.. மறுக்கவும் மறைக்கவும் எதுவுமில்லை.. காதல் காதல் காதல் மட்டுமே நமக்கிடையே என்று அவளிருக்க, ஈசன் இன்னும் இன்னும் அவள்பால் சொக்கித் தான் போனான்..
லட்சுமி ஈசனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத் திட்டமிட, ஈசனோ அவன் தனியாக ஒன்றை யோசித்திருக்க, இருவருக்குமே இருவர் செய்வதும் தெரியாது. ஆனால் இருவர் செய்யப்போவதும் குடும்பத்தினருக்குத் தெரியும்..
“ஈஸ் மாமாக்கு தெரியக்கூடாது…” என்று அவளும், “லஷ்மிக்கு இப்போ தெரியவேணாம்..” என்று அவனும், ஒருவர் மாற்றி ஒருவர் சொல்லியிருந்தனர்.
“அவனுக்கு ஏத்த பொண்டாட்டி…” என்று முத்தழகு, லட்சுமியைப் பற்றி பேச்சியிடம் சொல்ல, பேச்சியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
வேலாயுதம் பிரச்சனை அப்படியே இருந்தாலும், இப்போது அதன் வடு மட்டுமே இருக்க, என்றிருந்தாலும் ஒருநாள் கிடைக்காமலா போவார், அதிலும் காவல்துறையும் அவர்கள் வேலையை சரியாய் செய்துகொண்டு இருக்க, வேலாயுதம் சொத்துக்களின் மீது ஸ்டேவும் வாங்கிவிட, அனைவரின் மனதிலும் நிம்மதி நிம்மதி நிம்மதி மட்டுமே..
சொன்னதுபோலவே பாலா வீட்டிற்கு வந்திட,“வீட்டுக்கு வந்துட்டேன்..” என்று லட்சுமிக்கு அழைத்துப் பேச, அவளும் வீட்டிற்கு கிளம்பினாள்.
வீட்டிற்கு போன பிறகு அனைவரோடும் பேசிவிட்டு, வேலைகளை கவனித்துவிட்டு, ஒருமுறை சென்று பேச்சியைப் பார்த்துவிட்டு வேறு வந்தாள். பேச்சிக்கு மகளைப் பார்த்து பெருமை தாங்கவில்லை..
மகளைப் பார்த்தவர், அவள் நெற்றி தடவி திரிஷ்டி கழிக்க, அவள் பார்த்த பார்வையில், “உனக்கு தெரியாதுடி, எத்தனை பேர் எப்படி எப்படி பேசினாங்கன்னு.. அடுத்து நீயும் தம்பியும் சேரமாட்டீங்க, அப்படி இப்படின்னு நிறையா.. ஆனா பாரு அதெல்லாம் இப்போ ஒண்ணுமேயில்லங்கிற போல ரெண்டு பெரும் இருக்கிறப்போ எவ்வளோ சந்தோசமா இருக்குத் தெரியுமா…” என்று இப்போதும் கூட லேசான கவலையோடு செல்ல,
“ம்ம்ம்…” என்று மட்டும் சொன்னாளே தவிர வேறெதுவும் சொல்லவில்லை லட்சுமி.
அனைவருக்குமே நாங்கள் இப்படித்தான் வாழ்கிறோம் என்று விளக்க முடியாது. அவரவர் வாழ்வில் ஆயிரம் இருக்கும். அதுவும் கணவன் மனைவிக்கிடையில் எத்தனையோ இருக்கும். எல்லாத்தையும் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருக்கவும் முடியாது, பிறரின் யூகங்களுக்கு எல்லாம் பதிலும் சொல்ல முடியாது.
ஆனாலும் பெற்றவர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் வாழ்வைப் பற்றி பிறர் பேசுகையில் வருத்தம் எழாமல் இருக்குமா என்ன.. அதே வருத்தம் தான் பேச்சிக்கு.
“என்ன லட்சுமி பேசாம இருக்க??”
“இதுக்கு என்னம்மா பதில் சொல்ல.. அப்போ அப்படி சூழ்நிலை.. ஆனா இப்போ அப்படியில்லை.. எல்லாத்தையும் எல்லாருக்கும் விளக்கிட்டு இருக்க முடியாதும்மா..”
“அதெல்லாம் சரிதான் டி..ஆனா” எனும்போதே,
“ம்மா ப்ளீஸ்.. வேற பேசு.. நாங்க அதெல்லாம் தாண்டி வந்தாச்சும்மா.. இனி எங்களுக்குள்ள எப்பவும் பிரிவு வராது அவ்வளோதான்..” என்று லட்சுமி முடிவாய் சொல்ல, பேசிக்கும் அதற்குமேல் இதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இருப்பதாய் தெரியவில்லை.
அம்மாவும் மகளுமாய் கொஞ்சம் நேரம் சாதாரணமாய் பேசிக்கொள்ள, அடுத்து அங்கே `பாலா வந்து சேர்ந்தான்.. லட்சுமிக்கு என்னவோ அவன் முகத்தில் ஒரு யோசனை இருப்பதாகவே பட்டது. பேச்சில் இருக்கும் துள்ளல் முகத்திலும் பார்வையிலும் இருப்பதாய் தெரியவில்லை.
பாலா பேச்சியிடம் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தவள், பேச்சி உள்ளே செல்லவும், “என்ன பாலா பிரச்சனை??” என்றாள் நேரடியாகவே.
“டேய்.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா.. சொல்லு என்ன விசயம்..??”
“ம்ம்.. அது…” என்று பாலா இழுக்க, “ஊருக்கு வான்னு சொன்னதுமே என்ன எதுன்னு கேட்காம அது இதுன்னு சொல்லாம டக்குனு வர்றேன்னு சொல்லும் போதே நினைச்சேன்.. என்னவோ இருக்குனு…” என்று லட்சுமி அவள் யூகத்தை சொல்ல,
“ம்ம் வர வர நீ அண்ணன் போல மாறிட்ட..” என்று பாலா சிரிக்க,
“பேச்சை மாத்தாத பாலா.. என்னாச்சு.. சென்னைல எதுவும் பிரச்சனையா??” என்றாள் அக்கறையாய்.
“பிரச்சனை எல்லாமில்ல லச்சு.. கொஞ்சம் பணம் வேணும் அதான்.. ஸ்டூடியோ கொஞ்சம் எக்ஸ்ட்டன்ட் பண்ணலாம்னு பசங்க சொல்றாங்க.. இப்போ எடுத்த ஷார்ட் பிலிம் எங்களது பைனல் ரவுண்டுக்கு செலக்ட் ஆகிருக்கு.. அது ரிசல்ட் வந்தா இன்னும் வேலைகள் ஜாஸ்தியாகும். நிறைய ப்ராஜக்ட்ஸ் வரும்.” என்று அவன் வேலையைப் பற்றி சொல்ல,
“ம்ம்..” என்று லட்சுமி பொறுமையாகவே கேட்டுக்கொண்டாள்.