“அதான் எல்லாருக்கும் கொஞ்சம்.. பணம் போடலாம்னு.. எல்லாரும் ஓரளவு ஏற்பாடு பண்ணிட்டாங்க.. எனக்குத்தான் என்ன செய்யன்னு தெரியலை..” என,
அவளோ “பாலா…” என்று முறைத்தாள்
“நீ நினைக்கிறது புரியுது லச்சு.. ஆனா அண்ணன் என்னோட வயசுல தான் தனியா எல்லாத்தையும் பண்ணான்.. வீட்ல யாரையும் எதிர்பார்க்கல.. அவனே பேங்க்ல லோன் போட்டான்.. நானும் போடலாம்தான் ஆனா, தனியா பண்ற வேலைன்னா போடலாம்.. இது க்ரூப்பா பண்றோம்.. எப்படி லோன் வாங்கி எனக்குன்னு வர்ற ஷேர் வச்சு அதை கட்டிமுடிக்கன்னு தெரியலை…”
“நீ ஏன் லோன் வாங்கணும் மாமாக்கிட்ட பேசு..”
“ம்ம் அய்யாக்கு ஏற்கனவே தெரியும். அண்ணனுக்கு வீட்ல இருந்து எதுவும் பண்ணல.. அப்படியிருக்கிறப்போ உனக்கு மட்டும் எப்படி கொடுக்க முடியும்னு கேட்கிறார். அவர் சொல்றதும் சரிதான…” என, லட்சுமி அமைதியாய் இருந்தாள்.
அவளுக்கு நன்றாகவே புரிந்தது. கஜேந்திரன் எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என்று. ஆனாலும் பாலாவையும் பார்க்கவேண்டுமே.
“சரி இது ஈஸ் மாமாக்கு தெரியுமா???”
“ம்ம்ஹும்.. இப்போதான் எல்லாம் கொஞ்சம் சரியாகி வருது லச்சு. அதுனால அண்ணன் கிட்ட இப்போ இதை சொல்ல வேணாமே.. நான் கேட்டா அண்ணன் கொடுப்பான்தான் ஆனா இப்போ வேணாமே ப்ளீஸ்..”
“என்னடா நீ.. ஏது சொன்னாலும் வேணாம் சொல்ற.. சரி எவ்வளோ பணம் தேவைப்படும்…”
“அது.. பதினைஞ்சு லச்சம் வேணும்..”
“ம்ம் பாலா இப்பவும் சொல்றேன் ஈஸ் மாமாக்கிட்ட சொல்லாம இருக்காத.. நீயே சொல்றது தான் சரி…” என்றவள், “நீ ஊருக்கு கிளம்புறதுக்குள்ள என்ன செய்றதுன்னு பாக்கலாம்.. பணத்தை பத்தி கவலைப் படாத..” என்று தைரியம் சொல்ல, என்னவோ பாலாவிற்கு ஈசனிடம் போய் நிற்க மனமில்லை.
ஈசன் தனக்குத் தானே எல்லாம் செய்துகொண்டான், அப்படியொருவனின் தம்பியாய் இருந்துகொண்டு, இப்படி ஒன்றும் செய்ய முடியாது இருப்பது அவனுக்கே கஷ்டமாய் இருந்தது.
ஆனால் லட்சுமியிடம் பேசியபிறகு கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. அந்த நேரத்தில் அண்ணின் மனைவியாய் தெரியவில்லை, தன்னோடு சிறு வயதில் இருந்து பழகிய தோழியாய்த் தான் தெரிந்தாள். லட்சுமிக்கோ அந்த நேரத்தில் பாலா, தன் நண்பன் என்பதெல்லாம் தாண்டி, ஈசனின் தம்பியாகத்தான் தெரிந்தான்.. அண்ணன் தம்பிக்குள் இருக்கும் நெருக்கும் அவளறிவாள்.
பாலா எப்படியும் ஈசனிடம் பேசிவிடுவான், அவன் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும் என்று எண்ணினாள். என்ன இருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் மனதில் நினைத்ததை சொல்லியிருக்கலாம்.. ஆனால் அந்த நேரத்தில் அதை சொல்லத் தோன்றவில்லை.
இருவரும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குச் சென்றிட, லட்சுமியோ ஈசனுக்கு அடிக்கடி அழைத்து பத்து மணிக்கு வந்திடுவீங்களா என்று கேட்க,
“என்ன பத்து மணி பத்து மணின்னு சொல்லிட்டு இருக்க… ஓய் லஷ்மி.. எதுவும் பிளான் பண்ணிட்டு இருக்கியா???” என்றான் வேகமாய்.
“இல்லையே.. சாயங்காலம் எல்லாரும் வீரபாண்டி போலாம்னு இருக்கோம் மாமா.. அதான் நீங்க வர டைம் கேட்கலாம்னு.” என, “ஓ.. வீரபாண்டிக்கு போய்ட்டு வர உங்களுக்கு அவ்வளோ நேரமாகுமா.. சொல்ல முடியாது நான் சீக்கிரமே வந்தாலும் வருவேன்… ” என்றான் அவனும் வேண்டுமென்றே.
“ம்ம்ச் நீங்க மெதுவாவே வாங்க..” என்றவள், மேற்கொண்டு ஈசனைப் பேச விடாது வைத்துவிட்டாள்.
ஈசன் சொன்ன நேரத்தையும் கடந்து, பதினொரு வாக்கில் தான் வீட்டிற்கு வந்தான். ஆனால் வீட்டில் தான் ஒருத்தரும் இல்லை.. பூட்டிய வீடு தான் காட்சியளிக்க, யோசனையோடே, அவனிடம் இருக்கும் சாவி கொண்டு உள்ளே போனவன், வாங்கி வந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு, லட்சுமிக்கு அழைத்தான்.
அவளோ “மாமா.. நல்ல வேலை நீங்க வந்தீங்க…” என்று வேகமாய் சொல்ல,
“லஷ்மி.. என்னாச்சு..” என்றான் அதே வேகத்தில்.
“நாங்க அப்போவே வந்திருப்போம், கார் ரிப்பேர் ஆகிடுச்சு.. மெக்கானிக் வந்து பார்த்திட்டு சரி பண்ண ரெண்டு நாள் ஆகும்னு சொல்லிட்டார்.. அங்க எதுவோ மீட்டிங் போல, நம்ம ஊர் பக்கம் வர வண்டி எதுவும் இந்தப்பக்கம் அடுத்து வரல…” என்று கதை சொல்ல,
“எங்க இருக்கீங்கன்னு சொல்லு” என்றபடி காரை செலுத்த, லட்சுமி பேசிய விதத்திலும், அனைவரும் சீக்கிரம் வீடு வந்து சேரவேண்டுமே என்ற எண்ணத்திலும், அவள் எந்த இடத்தை சொல்கிறாள் என்று புத்தியில் பதியவில்லை..
லட்சுமி சொன்ன வழியை வைத்து அங்கே செல்ல, சுற்றிலும் கும்மிருட்டு.. ஆட்கள் யாரும் இருப்பதற்கான அடையாளமே அங்கில்லை.. மீண்டும் லட்சுமிக்கு அழைக்க, “மாமா அப்படியே சைட்ல திருப்பி உள்ள வாங்க..” என்று மட்டும் சொல்லி வைத்துவிட்டாள்.
‘என்ன உள்ள வரவா.. வீடுக்குள்ள கூப்பிடுறது போல கூப்பிடுறா..’ என்று யோசித்தபடி, காரைக் கிளப்பிக்கொண்டு உள்ளே செல்ல, அப்போது தான் கவனித்தான் அங்கே பெரிய கேட் ஒன்று திறந்திருந்தது, கொஞ்சம் உள்ளே தள்ளி அவன் வீட்டினர் அனைவரும் நிற்பது, காரின் வெளிச்சத்தில் தெரிய,
‘இங்க என்ன பண்றாங்க..’ என்று யோசித்தபடி, ஈசன் இறங்க, அவன் இறங்கிய அடுத்த நொடி, பளீச் பளீச் என்று மின் விளக்குகள் சுற்றிலும் எரிய,
‘ஈசன் பால் பண்ணை…’ என்று கொட்டை எழுத்துக்கள் தாங்கிய பெரிய பலகை பளீரிட, ஈசனுக்கு இதெல்லாம் என்ன என்று ஆச்சர்யமானது.
கண்ணெதிரே காண்பதை ஏற்க முடியாமல், திகைத்து சுற்றிலும் பார்க்க, அப்போது தான் அவனுக்கு உரைத்தது, இப்போது ஈசன் நிற்கும் இடம், அவன் வாங்கவேண்டும் என்று ஆசை ஆசையாய் எண்ணியிருந்த இடம்.. வாங்கமுடியாமல் போனதே என்று வருந்திய இடம்..
“சரி சரி நீங்க ரெண்டு பெரும் அப்புறம் பேசிக்கோங்க.. இப்போ கேக் வெட்டலாம்..” என்று பாலா ஒரு கேக்கை கொண்டு வந்து காரின் மீது வைக்க, அப்போது தான் ஈசன் கவனித்தான் மணி சரியாய் பண்ணிரண்டு..
“திருமண நாள் வாழ்த்துக்கள் எப்போவும் இதே போல ரெண்டு பெரும் சந்தோசமா ஒத்துமையா வாழணும்..” என்று பெரியவர்கள் அனைவரும் ஒன்று போல் வாழ்த்த, லட்சுமி அவனருகே சிரித்தபடி இருக்க, ஈசனுக்கு சத்தியமாய் தான் என்ன உணர்கிறோம் என்றே தெரியவில்லை.
“மாமா கேக் கட் பண்ணலாம்..” என்று லட்சுமி சொல்ல, இருவருமே அடுத்து ஒன்றாய் இணைத்து கேக்கை வெட்ட, அனைவரும் மீண்டும் வாழ்த்த, அந்த நொடி அழகாய் ஒளிர்ந்தது..
பாலாவின் கேமரா ஒரு ஒரு தருணத்தையும் அழகாய் படமெடுக்க, ஈசனுக்கும் சரி, லட்சுமிக்கும் சரி அந்த நேரமும் அந்த சூழலும் மறக்கமுடியா தருணமாய் போனது.. கொஞ்ச நேரத்தில் அனைவரும் வீட்டிற்கு கிளம்ப,
“நம்ம இங்கதான்..” என்று லட்சுமி மெல்ல ஈசனது காதில் சொல்ல, “ம்ம்.. பயங்கரமான ஆளுதான் டி நீ…” என்றான்.
பாலா காரைக் கிளப்ப, அனைவரும் நூறு முறை பத்திரம் சொல்லிக் கிளம்பிச் சென்றனர்..
சற்று தள்ளி, ஹாலோ ப்ளாக் கற்களால் ஆனா ஒரு அறையும், அதனையொட்டி குளியலறையும் இருக்க, “இதெல்லாம் எப்போ நடந்துச்சு…” என்று கேட்டபடி ஈசன் அங்கே செல்ல, “நீங்கதான் இந்தபக்கம் வரவேயில்லையே மாமா..” என்றவள், “திருமண நாள் வாழ்த்துக்கள் ஈஸ் மாமா…” என்று அணைத்துக் கூற,
“ஹா ஹா.. லஷ்மி என்னோட வாழ்த்துக்களும்..” என்றவன் ஒருமுறை இறுக அணைத்தவன், பின் அவளைத் தள்ளி நிறுத்தி கேள்வியாய்ப் பார்க்க,
“ஹ்ம்ம் நீங்க என்ன கேட்கப் போறீங்கன்னு புரியுது சோ நானே சொல்லிடுறேன்..” என்றவள், அங்கு ஓரத்தில் இருந்த பாயை விரித்து விட, ஈசனும் சாய்ந்து அமர்ந்து காலை நீட்ட, லட்சுமியும் அவன் முகத்தைப் பார்த்து அமர்ந்தவள், “மதுரைல இடம் வித்தோம்ல மாமா… ” எனும்போதே, அவன் முறைக்க,
“ம்ம்ச் மாமா.. நான் முழுசா சொல்லிக்கிறேன்..” என்றவள், “அந்த பணம் தான்.. ஆனா வேற மாதிரி வாங்கினேன்..” என்றாள்.
“எப்படி கதிர் அண்ணாக்கிட்ட போய் எங்களுக்கு கொடுங்கன்னு கேட்டியா??”
“இல்லையே சண்முகம் அண்ணன கூட்டிட்டு போய், நானும் மாமாவும் தான் முதல்ல பணம் கொடுத்து இந்த இடத்தை வாங்கினோம்….” என, அப்போது தான் ஈசனுக்கு கதிரவன் சொன்னதன் அர்த்தம் முழுதாய் புரிந்தது..
‘யார் முதல்ல பணம் கொடுக்கிறாங்களோ அவங்களுக்குத் தானே இடம்.. இப்பவும் அதுதானே நடந்திருக்கு..’ என்றுதான் கதிரவன் சொன்னானே தவிர, ‘நான் வாங்கினேன்..’ என்று சொல்லவில்லை..
“அப்.. அப்போ” என்று ஈசன் அடுத்து கேட்க வர, அவன் வாயை மூடியவள், “அவங்கக்கிட்ட இந்த இடம் நாங்க வாங்கிட்டோம்.. ஆனா நீங்க இது தெரிஞ்ச மாதிரி மட்டும் காட்டிக்க வேணாம்னு மட்டும் தான் சொன்னோம்..” என்றவள்,
“அப்புறம் உங்களுக்கு இது அம்மா கொடுத்த பணத்துல வாங்கினா பிடிக்காதுன்னு தெரியும் மாமா.. அதுனால நம்ம கல்யாணத்தப்போ மாமா என் பேர்ல ஒரு வீடு எழுதி வச்சார்ல, அதை ஈடு மாதிரி அம்மாக்கு எழுதி கொடுத்திட்டு தான் பணம் வாங்கினேன்.. இந்த இடம் கூட என் பேர்ல தான் வாங்கினோம் மாமா.. பெரிய மாமாவும் அப்படித்தான் செய்யனும்னு சொல்லிட்டார்.. இடம் என் பேர்ல இருக்கு.. ஆனா இதுக்கு ஓனர் நீங்கதான்…” என்று சொல்ல, இவள் தன்னை எத்தனைப் புரிந்து, எவ்வளவு யோசித்து இதெல்லாம் செய்திருக்கிறாள் என்று தோன்றியது ஈசனுக்கு..
இப்போது இந்த இடம் அவனிடமே வந்தது பெரிதாய் படாது, லட்சுமி அவனுக்காக யோசித்து, அவன் மனதை சரியாய் புரிந்து எல்லாம் யூகித்து இத்தனையும் செய்ய, அவளை பிரம்மிப்பாய் தான் பார்த்தான்..
“மாமா உங்களுக்கு கோவம் எதுவும் இல்லையே…” என்று லட்சுமி தயக்கமாய் கேட்க, “ம்ம்ஹும்..” என்றவன், அவளை இறுக அணைத்துக்கொள்ள, “அப்பாடி.. எங்கடா ஏதாவது சொல்வீங்களோன்னு நினைச்சேன்…” என்றாள் ஆசுவாசமாய்..
“அதான் எதுவுமே சொல்ல முடியாதபடி பண்ணிருக்கியே..” என்றவன், “சரி சரி சீக்கிரம் குடு…” என்று சொல்ல, “என்ன என்ன கொடுக்கணும்..” என்றாள்.
“அட இவ்வளோ நேரம் நீ நினைக்கவேயில்லையா..” என்றவன், அவள் இதழில் தானாகவே அவன் கன்னம் பதிக்க,
“அயே இதை நினைக்கலை.. ஆனா இப்படி நினைச்சேன்…” என்றவள், அவளாகவே அவனது இதழை தன் இதழால் அணைக்க, ‘லஷ்மி..’ என்று அவன் மனம் ஆச்சர்யத்தில் கூவ, அடுத்து இருவருக்கும் பேச்சுத்தான் இல்லை..
பொழுது விடிந்த பிறகு தான் அந்த இடத்தின் முழு அழகும் கண்ணிற்கு விருந்தாய் அமைய, இருவரும் ஒருவரை ஒருவர் ஒட்டி உரசியபடி சுத்திப்பர்த்துவிட்டு வர, மரகதம் அழைத்தவர் “அங்கேயே குளிச்சிட்டு கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு சீக்கிரம் வாங்க…” என, அவர்களும் அதுபோலவே செய்தனர்.