மாலத்தீவில் இருந்து கிளம்பி ஒருவழியாய் வீடு வந்து அலுப்புத் தீர ஓய்வும் எடுத்தால், அடுத்தடுத்து வேலைகள் வரிசைக்கட்டி நின்றன.
ஊருக்கு வந்த அடுத்த நாளே ஈசன் முதல் வேலையாய் வெங்காடசலத்தை சென்று பார்த்துவிட்டு வர, அவரோ, அடுத்து வரும் நல்ல நாளில் கட்டிடம் கட்ட ஆரம்பித்துவிடலாம் என்றார்..
அதன்பின் வீட்டிற்கு வந்தவன் லட்சுமி வேலையாய் இருப்பது பார்த்து அறைக்கு சென்றிட, பின் மேலே வந்தவளிடம் “ரெண்டு நாள்ல காலேஜ்ல. சோ கடைக்கு எல்லாம் வேணாம் லஷ்மி.. ரெஸ்ட் எடு..” என,
“இதுல என்ன மாமா ரெஸ்ட்..” என்றவள் அப்போது தான் பார்த்தாள், அவளது அலைபேசி அவனிடம் இருந்தது.
“என்ன செய்றீங்க..” என்று எட்டிப் பார்க்க, “இந்த போட்டோஸ் மட்டும் காட்டு…” என்று ஈசன் தனியாக சில புகைப்படங்களை அவளது அலைபேசியில் ஏற்றிவைத்திருந்ததை அவளிடம் காட்ட, அவன் ஏன் சொல்கிறான் என்று புரிந்து, “ம்ம் ம்ம் ரைட்..” என்று சலுகையாய் சொல்லி, உறங்க அடுத்தநாள் காலை பொழுது அழகாய் விடிந்தது..
ஈசன் சொன்னது போலவே, லட்சுமி அவன் கொடுத்த புகைப்படங்களை மட்டும் காட்ட,வீட்டினரோ ஈசனிடமும் லட்சுமியிடமும் ஆயிரம் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தனர்.
அனைத்தும் பார்த்து, பேசி முடிக்க, கஜேந்திரன் ஈசனிடம், “ஈசா.. லட்சுமி சூப்பர் மார்கெட்ட பெரிசு பண்ணனும்னு சொல்லுச்சே.. அது என்னன்னு பார்த்து முடிவு பண்ணுங்க..” என,
ஈசனுக்கும் அப்போது தான் அது நினைவில் வந்தது. அன்று அனிதா வந்தபோது லட்சுமி சொன்னாள் இல்லையா.. அது என்னவோ அந்த நேரத்தில் அனிதாவை சமாளிக்க அப்படி சொன்னதாய் நினைத்திருந்தான்.. ஆனால் நிஜமாகவே தான் சொல்லியிருக்கிறாள் என்று இப்போது புரிய, ஈசன் லட்சுமியைக் காண,
“ஆமா மாமா.. சும்மா அந்த துரைசாமிக்கிட்ட சண்டை போட முடியுமா..?? அதான் வேற ஏற்பாடு பண்ணலாம்னு…” என்கையில், “அப்போ கடையை எடுக்கணுமா??” என்று கேட்ட ஈசனது குரலில் என்ன இருந்ததோ,
“இல்ல இல்ல.. ஆனா கொஞ்சம் அல்ட்டர் பண்ணலாம் ” என்றிட, சரி தன்னிடம் தனியே இதைப் பற்றி பேச நினைக்கிறாள் என்று ஈசனுக்கும் புரிந்தது..
“ம்ம் சரி..” என்றவன், “அய்யா ரெண்டு பேரும் பேசிட்டு ஒரு முடிவு சொல்றோம்..” என,
“நல்லதுப்பா.. துரைசாமி சும்மா சும்மா ஏதாவது வம்பிழுக்குறான்.. பதிலுக்கு நம்ம பண்ணா ரொம்ப பிரச்சனையாகும்..” என்றார்.
“ஏன்.. என்னாச்சு….” என்று ஈசன் கேட்க, லட்சுமியும் அதேபோல் பார்த்தாள்.
வேறொன்றுமில்லை, பிரபுவும் பாலாவும் கடைக்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருக்க, துரைசாமியோ, அவன் கடைக்கு வரும் ஆட்களை இவர்கள் நின்று கலைக்கிறார்கள் என்று எடாசு பேச, அது கொஞ்சம் பிரச்சனையாகி விட்டது.
“அய்யா இது இன்னிக்கி நேத்து இல்ல, அவன் அங்க கடை வச்சதுல இருந்து நடக்குது.. பண்றதெல்லாம் அவன்.. ஆனா சொல்றது நம்மளை…” என்று ஈசன் சொல்ல,
“அதுக்கு பதிலுக்கு போய் மல்லுக்கு நின்னா சரியாபோச்சா.. நமக்கு செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கு ஈசா.. அதை மட்டும் பாப்போம்..” என்றார் கஜேந்திரன்.
“மாமா கைல இருக்க மொத்த பணத்தையும் போட்டு தான் இந்த கடை ஆரம்பிச்சிருக்கேன்னு துரைசாமி சொன்னாங்கள்ல.. அடுத்து நம்ம என்ன செஞ்சாலும் அவங்கனால எதுவும் செய்யமுடியாது.” என்று லட்சுமி சொல்லவும் தான் ஈசனுக்கு கொஞ்சம் மனம் அடங்கியது..
“அவனை எல்லாம் இதுவரைக்கும் விட்டதே பெருசு..” என்றுவிட்டு ஈசன் வெளியே கிளம்ப, பாலாவோ அமைதியாய் இருந்தான்.
அப்போதுதான் அவளுக்கு அன்று பாலா சொன்னதெல்லாம் நினைவில் வர, மற்றவர்கள் முன் இதை அவனிடம் கேட்கவும் மனமில்லாமல் இருக்க, கொஞ்ச நேரத்தில் கஜேந்திரன் எழுந்து வெளியே செல்லவும், மரகதமும் பேச்சியும் கோவிலுக்கு என்று கிளம்ப, ‘நான் வரலை..’ என்று லட்சுமி வீட்டிலேயே தங்கிவிட்டாள்.
அனைவரும் கிளம்பிச் செல்லவும், “நீ இன்னும் ஈஸ் மாமாட்ட சொல்லலையா பாலா..” என்று லட்சுமி கேட்க, “என்ன லச்சு…” என்றான் புரியாமல்..
“லூசு.. அன்னிக்கே சொன்னேன்ல பணம் வேணும்னு ஈஸ் மாமாட்ட கேளுன்னு…”
“இல்ல வேணாம்.. இங்கவே ஆயிரம் செலவிருக்கு.. இப்போ வாங்கின இடத்துக்கு வேற வேலையிருக்கு.. கடையை வேற பெரிசு பண்ணனும்.. அதுனால வேணாமே..” எனவும் அவளோ ஏகத்துக்கும் முறைத்தாள்.
“இந்த விசயம் ஈஸ் மாமாக்கு பின்னால தெரிய வந்தா எவ்வளோ வருத்தபடுவார் தெரியுமா.. நீ சொல்லிருப்பன்னு நானும் சொல்லாம விட்டேன்…” என்று சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே ஈசன் வந்துவிட்டான்..
வீட்டில் யாருமில்லை என்ற நினைப்பில் லட்சுமி கொஞ்சம் சத்தமாகவே பாலாவோடு பேசிட, அவள் பேசியதன் கடைசி வரி மட்டும் ஈசனுக்கு கேட்டிருக்கும் போல.
“என்ன சொல்லாம விட்ட லஷ்மி..” என்று சாதாரணமாய் கேட்டபடி வந்தவனை கண்டு மற்ற இருவரும் முழித்தனர்.
“என்ன இப்படி முழிக்கிறீங்க…” என்றவனோ இருவரும் நண்பர்கள் தானே என்று விளையாட்டாய் கேட்க,
பாலாவோ ஒன்றும் சொல்லாமல் அமைதியாய் இருக்க, லட்சுமியோ சொல்லு என்று ஜாடைக் காட்ட, “என்ன லஷ்மி.. கேள்வி கேட்டது நானு.. நீ அவனைப் பார்த்திட்டு இருக்க..” என்றான் ஈசன்.
“என்ன நடக்குது இங்க..” என்று ஈசன் கொஞ்சம் காட்டமாய்த்தான் கேட்டான் அடுத்து..
லட்சுமிக்கு நிச்சயமாய் தெரிந்துவிட்டது கஜேந்திரனும் இதை ஈசனிடம் சொல்லப் போவதில்லை, பாலாவும் சொல்லப் போவதில்லை என்று.. அவளும் அப்படியிருக்க முடியுமா.. ஆக ஒரு முடிவிற்கு வந்தவளாய், அனைத்தையும் சொல்லிட, பாலாவோ லட்சுமியை முறைத்தான்..
அனைத்தையும் கேட்ட ஈசனுக்கோ மனதில் ஒரு பெரும் வலி அந்த நிமிடம் தோன்றியது நிஜம்.. அவன் சொந்தமாய் தொழில் தொடங்கினான் என்றால் அது முற்றிலும் வேறு விஷயம். ஆனால் அதையே காரணமாய் கொண்டு பாலாவிற்கு ஒரு விஷயம் மறுக்கப்படுமாயின் அது தப்பல்லவா..
முகம் இறுக லட்சுமியைப் பார்த்து “உனக்கு யார் சொன்னா??” என, அவன் குரலே, ஈசனின் உணர்வை தெரிவிக்க, லட்சுமிக்கு திக்கென்றது. என்ன செய்வது என்று யோசித்தபடி லட்சுமி நிற்க,
“லஷ்மி…” என்று பல்லைக் கடித்தான் ஈசன்..
“மாமா…” என்றவளை ஈசன் முறைக்க, பாலாவோ சொல்லவேண்டாம் என்று சொன்னேனே என்பதுபோல் பார்த்தவன்,
“அண்ணா ப்ளீஸ்.. லச்சுவ எதுவும் சொல்லவேணாம்.. ப்ளீஸ்.. நான் தான் லச்சுக்கிட்ட சொன்னேன்..” என, “சோ உனக்கு முன்னாடியே தெரியும்..??” என்றான் அவளிடம்.
“ம்ம்…” என்று பயந்துபோய் தலையை லட்சுமி ஆட்ட, பாலாவிற்கு பதற்றமாய் போனது. எங்கே தன்னால் இவர்கள் இருவருக்கும் இடையில் பிரச்சனை வந்துவிடுமோ என்று.
லட்சுமிக்கு அந்த நேரத்தில் ஈசனின் பார்வையை நேருக்கு நேராய் சந்திக்க முடியவில்லை. என்னவோ இதில் தன்மீதும் தவறு இருப்பது போல் தோன்ற, பாலா சொல்லிடுவான் என்று நினைத்ததற்கு பதிலாய் தானே சொல்லிருக்க வேண்டுமோ என்றிருக்க, குழப்பமாய் நின்றிருந்தாள்.
“லஷ்மி.. என் பொறுமைய சோதிக்காத..”
“அ.. அது ஊருக்கு போறதுக்கு முன்னாடியே…”
“வீட்ல எல்லாருக்கும் தெரியுமா???”
“ம்ம் அய்யாக்கு முன்னாடியே தெரியும் ண்ணா..” என்றான் பாலா. (Diazepam)
“ம்ம்…” என்று மட்டும் தலையை ஆட்டியவன், லட்சுமியை ‘நீ கூட மறைத்தாயே..’ என்பதுபோல் பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டான். அவன் புல்லட் சத்தத்திலேயே எத்தனை வேகத்தில் வண்டியைக் கிளப்பி செல்கிறான் என்று தெரிந்தது இருவருக்கும்.
“போடா… நீ முன்னாடியே சொல்லிருந்தா இப்போ இது தேவையா.. இனி வீட்ல இருக்க எல்லாரையும் கோவிப்பாங்க…” என்றவள், நிஜமாகவே சோர்ந்து தான் போனாள்..
ஈசனுக்கோ வேறு மாதிரி எண்ணங்கள்.. முன்னே வீட்டில் என்ன பிரச்சனை என்று தெரிந்தும் அதனை பெரிதாய் நினைக்காமல் விட்டு கஜேந்திரன் உடல்நிலையே மோசமாய் போனது. அதன்பின்னோ லட்சுமியை சரியாய் கவனிக்கமால் போய் இருவரும் பிரியும் சூழ்நிலை வந்தது..
இனியாவது எல்லாவற்றையும் சரியாய் செய்திட வேண்டும் வீட்டில் அனைவரும் ஒன்றாய் ஒற்றுமையாய் மகிழ்வோடு இருக்கவேண்டும் என்றெண்ணி பார்த்து பார்த்து, அனைத்தையும் தன் பொறுப்பாக்கி செய்துகொண்டு இருக்கையில் அவனுடன் பிறந்தவனுக்கு என்ன தேவை என்பது அவனுக்கு தெரியவராமலே போக,
அதிலும் வீட்டில் இருப்பவர் யாரும் அவனிடம் சொல்லாமல் இருக்க, அதிலும் முக்கியமாய் லட்சுமி சொல்லாமல் விட, இவர்கள் எல்லாம் என்னை என்ன நினைத்தனர் என்று மனதினுள் அப்படியொரு கோவம்.
வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சொல்லாமல் விட்டதை விட, லட்சுமி சொல்லாமல் போனது தான் அவனுக்கு வேதனையைக் கொடுத்தது. கடந்த நான்கு நாட்களாய் அவளும் அவனுமாய் தானே இருந்தார்கள்..
பேசி பேசி எத்தனையோ நேரங்கள் கடந்திருக்க, பேசாது பொழுது போகாது கூட சில நேரங்கள் கடக்க, அப்போது கூட சொல்ல தோன்றாமல் போனதா என்று நினைக்க, அவனுக்கு அப்படி கோபம் வந்தது.
இப்போதும் அவனாக கேட்டிராவிட்டால், இந்த விஷயம் தெரியாமலே போயிருக்குமே.. அப்போ அண்ணன் என்ற ஸ்தானத்தில் அவனிருந்து என்ன பிரயோஜனம். பணம்.. அது ஒரு விசயமேயில்லை.. ஆனால் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் சேர்ந்து இதை தன்னிடம் மறைத்ததை அவனால் ஏற்றுகொள்ளவே முடியாமல் போக, மனம் தனிமையை நாடியது. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் என்று தோட்டத்திற்கு சென்றுவிட்டான்..
மனதை அமைதிப் படுத்த இயற்கையை விட சிறந்த மருத்துவர் வேறு யார் இருக்கிறார்கள்.. ஆனால் அந்த இயற்கையான சூழல் கூட ஈசனுக்கு அமைதி தருவதாய் இல்லை.. அவன் அங்கே அப்படி தவித்துக்கொண்டு இருக்க, அங்கே வீட்டிலோ வெளியே போனவர்கள் எல்லாம் வந்துவிட, பாலாவோ முதல் வேலையாய் நடந்தவைகளை சொல்லிட,
‘ஐயோ..’ என்று மரகதம் பார்க்க, ‘என்ன லட்சுமி இது..’ என்று பேச்சி மகளிடம் கேட்க,
‘முன்னாடியே பெரியவன்கிட்ட சொல்லுங்கன்னு சொன்னேன்..’ என்று முத்தழகு சொல்ல, கஜேந்திரனோ அமைதியாய் அமர்ந்திருந்தார்..
“லட்சுமி ஈசனுக்கு போன் போடு..” என்று மரதகம் சொல்ல, ‘நானா…’ என்று பயந்துபோய் தான் லட்சுமி பார்த்தாள்.
அவளுக்கு ஈசன் கோவத்தின் மீதான பயம் ஒருபுறம் இருந்தாலும், இந்த விசயத்தை முன்னேயே சொல்லிருக்கவேண்டும், அவனுக்கு அவளே முன்னுரிமை கொடுக்காமல் விட்டால் வேர் யார் கொடுப்பார்கள் என்றும் தோன்ற, குற்ற உணர்வே தலையை தூக்கியது..
அந்த குற்றவுணர்வே லட்சுமியை மேற்கொண்டு என்ன செய்வது என்று யோசிக்கவிடாமல் செய்திருக்க, மரகதமோ அவளையே அழைக்கச் சொல்ல, அத்தனை பேரின் முன்னிலும் மறுக்கமுடியாமல் ஈசனுக்கு அழைத்தாள்.
ஈசனது கரங்களில் தான் அலைபேசி இருந்தது. அழைப்பது லட்சுமி என்று தெரிந்தும் முதலில் எடுக்காமல் இருந்தான். தொடர்ந்து அழைப்பு வர, “ம்ம்ச்” என்றபடி எடுத்தவன் ஒன்றுமே பேசாமல் அமைதியாய் இருக்க,
“மா.. மாமா… வீட்டுக்கு வாங்க மாமா…” என,
“எதுக்கு???” என்றான்.
“எதுக்குன்னு கேட்டா எப்படி மாமா.. வாங்க பேசிக்கலாம்…”
“அதான் எல்லாம் பேசி ஏற்கனவே ஒரு முடிவுக்கு வந்தாச்சே.. அப்புறம் நான் அங்க வந்தா என்ன வராட்டி என்ன…” என்று கத்தியவன் அழைப்பைத் துண்டித்துவிட, லட்சுமிக்கோ உள்ளம் பதறி போனது..
“ரொம்ப கோவமா இருக்காங்க..” என்று அனைவரையும் பார்த்து சொன்னவள், சோர்வாய் அமர, அடுத்து பாலா அழைத்தான் ஈசனுக்கு..
“எதுக்குடா இப்போ எல்லாரும் போன் பண்ணிட்டு இருக்கீங்க…” என்று ஈசன் எடுத்த எடுப்பிலேயே எகிற,
“ஓஹோ.. நான் ஒருத்தன் இருக்கிறது யார் கண்ணுக்குத் தெரியலை…” என்று கத்திவிட்டு போனை வைக்க, வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்குமே ஒருவித பதற்றமாய் போனது..
லட்சுமிக்கோ மனதில் இப்போது கோவமும் கூட, பாலாவிற்கு பணம் வேண்டும் என்ற விஷயம் அவளுக்குக் தெரியும் முன்பே வீட்டில் தெரிந்திருக்கிறது அப்போ ஏன் யாருமே இதை தங்களிடம் சொல்லவில்லை என்று தோன்ற,
“ஏன் அத்தை எல்லாத்தையும் என்கிட்ட சொல்வீங்க தானே இதை மட்டும் ஏன் சொல்லலை.” என்றாள் கசந்த குரலில்.
‘இதற்கு நான் என்ன பதில் சொல்லட்டும்..’ என்று மரகதம் கஜேந்திரனைப் பார்க்க, அவரோ, “லட்சுமி நான்தான் இதைப் பத்தி பேசவேணாம்னு சொன்னேன்…” என,
“ஏன் மாமா.. இது ஈஸ் மாமாக்கு எவ்வளோ கஷ்டமாயிருக்கும் தெரியுமா.. ஏற்கனவே அவர் உங்களை, என்னை எல்லாம் சரியா பார்த்துக்கலையோன்னு அவ்வளோ வருத்தப்பட்டாங்க.. இப்போ இதுவும் சேர்ந்து ரொம்ப வருத்தப்படுவாங்க..” என்று என்றும் இல்லாத திருநாளாய் கஜேந்திரனிடம் அப்படி பேசியவளுக்கு ஈசனது வேதனையை எண்ணி அழுகையே வந்திட்டது..
கண்ணில் நீர் முட்டியபடி நின்றவளைப் பார்க்க அவருக்கு எப்படி இருந்ததோ, ஆனால் கணவன் மனைவி ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பை பார்த்து மகிழ்வாய் இருந்தது.
“ஹ்ம்ம் என் பெரிய பையனைப் போலவே சின்னவனும் அவனா முன்னேறி வரணும்னு ஆசைப் பட்டேன்.. அவ்வளோதான்.. மேல மேல ஈசனை கஷ்டப் படுத்த வேணாமேன்னு தான் சொல்லலை லட்சுமி….” என்று பொறுமையாய் விளக்கியவரைப் பார்த்து அங்கிருந்த அனைவருக்குமே ஆச்சர்யமாய் போனது..
ஈசன் இருந்திருந்தால் கூட கஜேந்திரனை கேள்வி கேட்டிருப்பானோ என்னவோ, ஆனால் லட்சுமி கேட்டுவிட்டாள், அவள் பேசியது சரியா தப்பா என்றெல்லாம் அவள் சிந்திக்கவில்லை, தன் கணவனை ஒரு விஷயம் கஷ்டப் படுத்த, அதற்கு தானும் ஒரு காரணமாகி போனோமே என்று தோன்ற, வேறெதுவும் சிந்திக்கும் நிலையில் அவளில்லை.
கஜேந்திரன் லட்சுமியின் முகத்தைப் பார்த்தவர், அவரே ஈசனுக்கு அழைத்தார்.