கஜேந்திரன் அழைத்ததுமே வேண்டா வெறுப்பாய் கிளம்பி வந்தான். வந்தவனோ லட்சுமியை ஒரு முறை முறைத்துவிட்டு, அமர்ந்துகொள்ள, அவளோ பாலாவை பேசு பேசு என்பது போல் பார்க்க, பாலா “அண்ணா…” என்று ஆரம்பிக்கவும்,
ஈசனோ, “அய்யாவும் நானும் பேசிக்கிறோம்..” என்றுவிட, முதலில் அங்கே மௌனம் மட்டுமே நிலவியது.
மரகதமோ ‘இப்படியெல்லாம் ஆகும்னு நினைக்கலையே..’ என்று லட்சுமியிடம் மெல்ல சொல்ல, ‘நீங்க என்கிட்டயாவது முதல்லயே சொல்லிருக்கலாம்..’ என்று அப்போதும் அவள் கருத்திலேயே நின்றாள்.
சொல்லிருக்கலாம்.. பேசியிருக்கலாம்.. கேட்டிருக்கலாம் என்று இத்தனை லாம்கள் இருந்தாலும், என்ன நடக்கவேண்டும் என்று இருக்கிறதோ அதுதானே நடக்கும்.. அதுபோலவே இப்போதும்.. குடும்பம் என்றால் எப்பொழுது சிரிப்பும் சந்தோசமும் மட்டும் இருக்காது. சின்ன சின்ன பூசல்களும், கோவங்களும் விவாதங்களும் சண்டைகளும் இருக்கத்தான் செய்யும்.. அப்படியிருந்தால் தான் ஒரு வீடு முழுமை பெரும்… அதில் ஈசனின் குடும்பமும் விதிவிளக்கல்ல..
“இப்படியே எல்லாரும் அமைதியா இருந்தா எப்படி???” என்று முத்தழகு கேட்க,
கஜேந்திரன் “ஈசா எதுக்கு இவ்வளோ கோவம் உனக்கு…” என்றார் நேருக்கு நேர் பார்த்து. அவனோ ஏன் உங்களுக்குத் தெரியாதா என்பதுபோல் பார்க்க,
“எதுவும் வெளிப்படையா சொல்லு ஈசா…” என,
“நான் மட்டும் அப்படியிருந்து என்னகங்கய்யா செய்ய..” என்றான் கசந்து..
மரகதம் மனதின் ஓரத்தில் சிறு நிம்மதி முன் போல் இல்லாமல் ஈசன் கொஞ்சம் பொறுமையாய் போகிறான் என்று. அதற்கும் மேலாய் லட்சுமி எப்படியாவது அவனை சமாளித்துவிடுவாள் என்றும் இருக்க, அவளைத் திரும்பி பார்க்க, அவளோ கலங்கிப் போய் நின்றிருந்தாள்.
“லட்சுமி நீதான் அவன்கிட்ட பேசி சரி செய்யணும்…” என, “நானா??? ஹ்ம்ம்..” என்று தலையை ஆட்டியவளுக்கு நன்றாக தெரியும், தனியாக அவளுக்கு ஒரு மண்டகப்படி காத்திருக்கிறது என்று.
“உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எதுவும் இல்லை ஈசா.. நீ எப்படி நீயா முன்னேறி வந்தியோ, அதுபோல அவனும் வரணும்னு நினைச்சேன்.. அவ்வளோதான்.. இதை மறைக்கணும்னு இல்லை..” என்று கஜேந்திரன் சொல்லும் போதே,
“அய்யா.. நான் தொழில் ஆரம்பிக்கிறப்போ எனக்கிருந்த மனநிலைமை வேற.. ஆனா பாலாக்கு அப்படியில்ல.. நீங்க இருக்கீங்க.. நான் இருக்கேன்.. நமக்கென்ன வசதியில்லையா.. நான் தனியா பண்ணேன் அதுனால லோன் வாங்கினேன்.. அவன் பிரண்ட்ஸ் கூட சேர்ந்து செய்றான். அதுல லோன் வாங்கவெல்லாம் சரியா வராது.. ஊர்ல யார் யாருக்கோ தொழில் ஆரம்பிக்கன்னு பணம் கொடுக்கிறோம்.. நம்ம வீட்டு பையனுக்கு பணமில்லைன்னு சொன்னா அது சரியா வருமா..” என்றான் வேகமாய்.
கஜேந்திரனுக்கு நிஜமாகவே அங்கே ஈசனின் கோபம் தெரியவில்லை, மாறாக அவன் இந்த குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அன்பும், அவன் தம்பி மீதிருக்கும் அக்கறையும் தெரிய, பொறுமையாகவே தான் பேசினார்..
“நீ சொல்றது எல்லாம் சரிதான் நீயா தான் உனக்கு எல்லாம் பண்ணிக்கிட்ட.. அலைஞ்சு திரிஞ்ச.. அப்போ வசதியிருந்தாலும் முன்னேற்றத்துக்கான கஷ்டம் உனக்கு புரிஞ்சிருக்கும். ஆனா பாலாக்கு அப்படியில்லை.. நாமம் நிழல்ல தான் இதுவரைக்கும் இருந்தான்.. இப்போதான் அவனுக்கு வெளியுலக அனுபவமே கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. ஸ்டூடியோ ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ மறுக்காம பணம் கொடுத்தோம்..
நம்ம கேட்டதுமே பணம் கிடைச்சிடும்னு அவன் மனசில ஒரு நினைப்பு வந்திட்டாக் கூட அது தப்பில்லையா. அதுனாலதான் உன்கிட்டயும் சொல்லலை.. அவன்கிட்டயும் பணம் கொடுக்க முடியாதுன்னு சொன்னேன்…” என்றவரின் பேச்சு நூற்றுக்கு நூறு சரியாய் இருக்க, ஈசனோ இன்னும் அவன் பிடியில் தான் நின்றான்..
கஜேந்திரன் பணம் கொடுக்க முடியாது என்று சொன்னதுமே பாலாவின் மனம் சுனங்கிப்போனது உண்மை தான்.. ஈசனிடம் கேட்கலாம் என்று நினைத்திருக்கும் போது, வீட்டில் நடப்பவைகளை சொல்லி கஜேந்திரன் அவனிடமும் கேட்கக்கூடாது என்றுவிட, அதற்குமேல் அவனுக்குமே கேட்கும் எண்ணம் வரவில்லை.
ஆனால் இப்படியெல்லாம் ஆகும் என்று அவன் நினைத்தும் பார்க்காத ஒன்று.. கஜேந்திரனோ தன் பக்கத்து நியாயத்தை சொல்லிட, ஈசனோ எதுவாக இருந்தாலும் முன்னேயே சொல்லியிருக்கலாமே.. நானாக தெரிந்துகொண்ட பின், சொன்னால் பின் நான் இந்த வீட்டில் என்ன இடத்தில் இருக்கிறேன் என்ற எண்ணத்தில் இருந்தான்.
“ஈசா.. நான் நினைச்சது இதுதான்.. உனக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாதுன்னு எதுவுமில்லை.. பாலாவை அனுப்பி வச்சிட்டு நானே உன்கிட்ட இதை சொல்லிருப்பேன்.. அதுக்கு முன்னாடியே உனக்கு தெரிய வந்திடுச்சு….” என, “என் கோவம் தப்பில்லையே…” என்றான் அவனும்..
‘ஈஸ் மாமாவும் விடாம பேசுறாங்களே… பெரிய மாமா சொல்றது சரிதானே..’ என்று லட்சுமி நினைக்க, மரகதம் கஜேந்திரனை பாவமாய் பார்த்தார்..
முத்தழகு தான் “அய்யா ஈசா.. உங்கப்பன் சொல்றதும் சரிதான்.. உன் கோவமும் சரிதான்.. அதுக்காக இப்படியே பேசிட்டே இருந்தா எப்படி.. உங்கப்பன் அவன் பக்கத்து காரணத்தை சொல்லிட்டான் ஒரு அப்பாவா அவன் சொல்ற காரணம் சரி.. வீட்டுக்கு மூத்த மகனா, பொறுப்பெடுத்து எல்லாம் செய்றவனா ஒரு அண்ணனா உன் கோவம் சரி.. ஆனா இதுக்கொரு முடிவு வேணுமில்லையா..” என,
“ம்ம்ம்ம்…” என்று தலையை மட்டும் ஆட்டியவன் பேசாமல் இருந்தான்..
மரகதமும் வந்தவர், “ஈசா உனக்குத் தெரியாம நாங்க எதுவும் செய்ய நினைப்போமா…” என்றிட, “ம்ம்ச் விடும்மா..” என்றவன்,
“உனக்கு எவ்வளோ வேணும் பாலா..” என்று நேரடியாய் அவனிடமே கேட்க, பாலாவோ பதில் சொல்லாமல் கஜேந்திரன் முகம் பார்க்க, அவரும் சரி என்பதுபோல் கண்ணிமைக்க, “பதினைஞ்சு லட்சம் ண்ணா…” என்றான்..
“ம்ம் நீங்க கொடுக்குறீங்களா நான் கொடுக்கவாய்யா..” என்று ஈசன் அடுத்துக் கேட்க,
“நானே கொடுக்கிறேன் ஈசா..” என்றவர், “நாளைக்கு பேங்க் போலாம் பாலா..” என்று சொல்லிவிட்டு, “மனசுல எதுவும் வச்சுக்காத ஈசா..” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.
“அண்ணா சாரிண்ணா…” என்று வேகமாய் பாலா வர, “ம்ம்ச் போடா. உன்கிட்ட இதை நான் எதிர்பார்கலை…” என்று முகம் திருப்பினான் ஈசன்..
“ண்ணா.. நீ வேற அய்யா வேறயில்லண்ணா.. ப்ளீஸ் கோவிச்சுக்காத… லச்சுக்கூட உன்கிட்ட சொல்லுன்னு தான் சொல்லிச்சு.. நான் தான் உன்னை கஷ்டப் படுத்தக்கூடாதுன்னு…” என்று இழுக்க,
“என்ன கஷ்டம்.. என்னடா கஷ்டம்..?? பேங்க்ல இருக்கிறத எடுத்து கொடுக்கப் போறேன்.. இதுல என்ன கஷ்டம்..” என்றவனுக்கு கொஞ்சம் மனம் இறங்கியிருந்தது.
மற்றவர்களிடம் இருந்த கோவம் கொஞ்சம் மட்டுபட்டாலும் லட்சுமி மேல் அப்படியே கோவம் இருக்கத்தான் செய்தது. என்ன இருந்தாலும் அவள் என்னிடம் சொல்லிருக்க வேண்டும் என்று ஈசன் பிடிவாதம் பிடித்துகொண்டு இருந்தான்.
மரகதமோ, அண்ணனும் தம்பியும் பேசட்டும் என்று அமைதியாய் விலகிட, முத்தழகு கொஞ்ச அங்கே இருந்தார். பின் ‘லட்சுமி நான் போய் உங்கம்மாவ பார்த்திட்டு வர்றேன்..’ என்று கிளம்பிவிட,
லட்சுமி அமைதியாய் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். யார் பேசும்போதும் குறுக்கே பேசவில்லை. ஈசனைத் தவிர வேறெதையும் பார்க்கவுமில்லை. அவனது ஒவ்வொரு செயல்களையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, ஈசனோ அவளைப் பார்க்காது தவிர்க்க,
பாலாதான் பேசி பேசி அயர்ந்துவிட, இறுதியில் “சரி விடு.. ஆனா இனிமே இப்படி பண்ணாத..” என்று ஈசன் ஒருவழியாய் மலையிறங்க,
“யப்பாடி இப்போதான் நிம்மதியா இருக்குண்ணா…” என்று பாலா மற்றது பேச, நேரம் போனது.
‘ஹ்ம்ம் தெரியாம ஒருவிசயம், அதுவும் கூட பாலா சொல்லிருப்பான்னு நினைச்சு சொல்லாம விட்டேன்.. அதுக்கு ஈஸ் மாமாவுக்கு இவ்வளோ கோவமா…’ என்று லட்சுமி நினைக்கும் போதே, அன்று அனிதா மறுபடி வந்ததையும் அவள் மன்னிப்புக் கேட்டதையும் இன்னும் சொல்லவில்லை என்று நினைவு வர,
‘ஐயோ இதுவேறயா…..’ என்று தலையில் லேசாய் அடித்துக்கொள்ள பாலாவும் ஈசனும் என்னவென்று பார்க்க, உடனே அவளுக்கு பதிலும் சொல்ல வரவில்லை..
ஆனாலும் சுதாரித்தவள் “அது.. கடை பெரிசு பண்ணனும்னு பேசினோமே.. அதுக்கு மாமா சீக்கிரம் பேசி முடிவெடுக்க சொன்னாரில்லையா.. அதை மறந்தே போனேன்னு…” என்று இழுக்க,
“ஆமால்ல..” என்று பாலாவும் ‘நீ சொல்றத நான் நம்பிட்டேன்..’ என்று ஈசனும் பார்த்தனர்.
கொஞ்ச நேரத்தில் பாலா கிளம்பி வெளியே செல்ல, இப்போது கணவன் மனைவி இருவர் மட்டும் ஹாலில் அமர்ந்திருக்க, ஈசனோ ஒன்றும் பேசாது மேலே சென்றுவிட்டான்..
‘ஈஸ் மாமா மறுபடியும் உங்க பின்னால சுத்த வைக்கிறீங்களே…’ என்றெண்ணியபடி அவளும் எழுந்து அறைக்கு சென்றாள்.
அங்கே அமைதியாய் அமர்ந்திருக்க, மெல்ல சென்றவள் அவன் தோள்களை தொட்டு “மாமா…” என்றழைக்க, “ம்ம்ச் போ டி..” என்று அவள் கையை தட்டிவிட்டான்.
“அப்படியெல்லாம் போக முடியாது…” என்றவளோ அவன் முன்னே அமர, அவனோ எழுந்து வேறு பக்கம் செல்ல,
“மாமா என்ன இது பிடிவாதம்..” என்றபடி அவளும் செல்ல,
“ஆமா நான்தான் பிடிவாதமா இருக்கேன் பாரு..” என்றவன் அவளிடமிருந்து விலகி விலகி செல்ல, அவளும் விடாமல் அவன் பின்னேயே செல்ல,
“ம்ம்ச் இப்போ என்னதான் டி வேணும் உனக்கு..” என்றவன் எரிச்சலில் கத்த, அவளோ அவனை அசராமல் பார்த்தாள்.