“உங்களுக்கு என்ன மாமா வேணும் இப்போ.. எதுக்காக இப்படி பேசாம முகத்தை திருப்பிட்டு போறீங்க…”
அவனோ சில நொடிகள் லட்சுமியின் கண்களை ஆழப் பார்த்தவன், பின் வேகமாய் அவளின் இரண்டு தோள்களையும் இறுகப் பற்றி,
“இன்னும் என்னென்ன சொல்லாம விட்டிருக்க லஷ்மி..” என, அவன் கேட்ட விதமோ, லட்சுமி வேண்டுமென்றே சொல்லாமல் விட்டது போலிருக்க,
“என்.. என்ன சொல்றீங்க மாமா??” என்றாள் படக்கென்று..
“எல்லாம் தெரிஞ்சிருக்கு ஆனா ம் நீ சொல்லல. நீதான என்கிட்ட முதல்ல சொல்லிருக்கணும்.. கொஞ்ச நேரம் முன்னாடி எதையோ நினைச்சு தலையில வேற அடிச்ச..” என்று சொல்ல, ‘ஆகா தெரிஞ்சு போச்சா…’ என்று கண்களை விரித்தாள்.
“எனக்கென்ன தெரியாதா.. சொல்லு.. இன்னும் என்னென்ன சொல்லாம விட்டிருக்க..” என்று பிடியை இறுக்கி உலுக்க, அதுவோ வலி கொடுக்க,
“விடுங்க மாமா.. நான் ஒண்ணும் வேணும்னே சொல்லாம இல்ல.. இதை பாலாவே உங்கக்கிட்ட சொல்லிருப்பான்னு நினைச்சேன்” என்றாள்.
“நல்லா நினைச்ச.. அப்படி என்கிட் டஅவன் சொல்லிருந்தா இதுவரைக்கும் நான் உன்கிட்ட சொல்லாம் இருந்திருப்பேனா லஷ்மி..” என்றவனுக்கு என்ன தோன்றியதோ,
“போடி.. நீ மட்டும் உனக்கு நான் இம்பார்டன்ஸ் கொடுக்கணும்னு நினைக்கிற, ஆனா நீயே இப்படி பண்ணிட்ட…” என்று வேதனை படிந்த முகமாய் போய் அமர, அவளுக்கு அச்சோ என்றானது..
‘இதை ஈஸ் மாமா இப்படி நினைச்சுட்டாங்களா..’ என்று நினைத்தவள் அவனருகே செல்ல, அவனோ முன்போல் லட்சுமியை தன்னை நெருங்க விடாமல் செய்ய,
“அப்போ நான் வேணும்னே எல்லாம் பண்ணதா நினைக்கிறீங்களா??” என்றாள் கலங்கிப் போய்..
ஆம் அவளுக்கு நிஜமாகவே கலக்கமாய் தான் போனது. நொடிப் பொழுது என்றாலும் ஈசன் அவளைத் தவறாய் நினைத்துவிட்டானே என்று.. லட்சுமியின் குரலில் இருந்த பேதம் கண்டு, அவளை நிமிர்ந்து பார்த்தவன், அவள் கண்ணில் நீர் படலம் கண்டு,
“ஒண்ணுமில்ல விடு…” என்று ஈசன் எழ, அவனை வம்படியாய் பிடித்து அமர வைத்தவள்,
“நான் வேணும்னே சொல்லாமயில்ல.. எப்படி நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல வேற யார் வந்தாலும் பிடிக்காதோ, அதேபோல தான் பாலாக்கும் உங்களுக்கும் நடுவுல நானாவே இருந்தாலும் வரக்கூடாதுன்னு நினைச்சேன்..
அவனுக்கு இது தேவைன்னு நான் சொல்றதை விட, எனக்கு இது வேணும்ணா அப்படின்னு அவனே கேட்கிறது எப்படியிருக்கும்.. ஒருவேளை இது நானே சொல்லிருந்தாக் கூட நீங்க அப்படிததான் மாமா சொல்லிருப்பீங்க ஏன் இதை அவனே கேட்கமாட்டான்னு..” என்று அவளும் மூச்சு வாங்கப் பேச, அவனோ அமைதியாய் இருந்தான்.
“உங்கக்கிட்ட சொல்லிருக்கணும் தான்.. தப்புதான்.. ஆனா பெரிய மாமா மனசுல இப்படியொரு காரணம் இருக்கும்னு எனக்குமே நிஜமா தெரியாது.. பாலா என்கிட்ட சொன்ன மறுநாள் நம்ம ஊருக்கு கிளம்பிட்டோம்.. அவனே சொல்லனும்னு தான் நினைச்சேன்..” என்றவள் அதற்குமேல் எப்படி சமாதானம் செய்வதென்று தெரியாமல் அப்படியே பொத்தென்று அமர்ந்தவள் தன் தலையை இரு கைகளால் தாங்கிக்கொண்டாள்..
வெகு நேரம் அங்கே அமைதி நிலவ, அப்போதும் ஈசன் பேசாதிருக்க, லட்சுமி நிமிர்ந்து பார்த்தவள், “அப்போ இவ்வளோ சொல்றேன்.. நீங்க நம்பலைல மாமா..” என,
“அப்படியில்ல டி…” என்று அவனும் எதுவோ சொல்ல, அவனது குரலில் இருந்த மாறுபாடே சரி இத்தனை நேரம் யோசித்திருக்கிறான் என்று நன்றாக புரிந்தது.
“வேற எப்படி மாமா.. உங்களுக்கு எப்படி உங்க பக்கம் ஒரு நியாயம் இருக்குமோ, அதேபோல தான் எல்லாருக்கும்..”
“ம்ம் சரி விடு..” என்று கொஞ்சம் ஈசன் இறங்கி வர,
“எப்படி விட.. நீங்கதான் இப்படி இருக்கீங்களே..” என்று கையை ஆட்டி சொல்ல, அவள் சொன்ன விதத்தில் லேசாய் சிரிப்பு வர, ஆட்டிய அவளின் கரங்களைப் பற்றியவன், தன்னருகே இழுத்து,
“அதில்லை லஷ்மி.. ஏற்கனவே அந்த பணப் பிரச்சனை பாலா சொல்லியும் நான் பெருசா எடுத்துக்காம விட்டு அடுத்து எவ்வளோ ஆச்சு.. அப்புறம் நீ.. வேலை வேலைன்னு பார்த்து உன்னை கவனிக்காம விட்டு அதுவும் பிரச்சனை.. இப்போதான் எல்லாமே சரியாகி வருதுன்னு நினைக்கிறப்போ என் தம்பி அவனுக்கு ஒரு தேவைன்னா நான் செய்ய வேணாமா..
நம்மக்கிட்ட பணம் இல்லாமயிருந்து கொடுக்க முடியலைன்னா அது வேற.. அவன் கண் முன்னாடியே இடம் வாங்குறோம்.. ட்ரிப் போறோம்.. கடையை பெரிசு பண்ணனும்னு பேசுறோம்.. அப்போ அவனுக்கு மட்டும் இல்லைன்னு சொன்னா என்ன நினைப்பான் சொல்லு…
அய்யா சொன்னது சரிதான். அதையே என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிருந்தா கண்டிப்பா நானும் சரின்னு தான் சொல்லிருப்பேன்.. இப்போ எனக்கா தெரியவரவும் அது ஒரு மாதிரி ஆகிடுச்சு..
இதெல்லாம் விட என் லஷ்மிக்கும் எனக்கும் நடுவுல தெரியாத விஷயங்கள் எதுவுமே இல்லைன்னு நினைச்சிட்டு இருக்கிறப்போ உனக்கும் இது தெரிஞ்சிருக்கு நீயும் என்கிட்ட சொல்லாம விட்ட அப்படிங்கவும் ரொம்ப ரொம்ப ஒரு மாதிரி ஆகிடுச்சு…” என,
அவளும் இதெல்லாம் யோசித்திருந்தாள் தானே, ஆக, “ஹ்ம்ம் யாருமே உங்கக்கிட்ட மறைக்கணும்னு இல்லை.. ஆனா என்ன நீங்களாவே தெரிஞ்சுக்கவும் இப்படியாகிடுச்சு.. சரி.. இனியும் இதை மனசுல போட்டுக்காதீங்க மாமா…” என்று சமாதானம் செய்ய,
“ம்ம் சரி விடு..” என்று மீண்டும் ஈசன் சொல்ல,
“என்ன விடு விடுன்னு.. சரி இதை இதோட விடுறேன்னு சொன்னா என்னவாம்??” என்றாள் வேகமாய்..
“சொல்லலாம்தான்.. ஆனா இன்னும் ஒண்ணு என்னவோ நீ சொல்லாம விட்டிருக்கியே அதையும் சொல்லிட்டா பேசி முடிச்சுட்டு இதோட விட்டுடலாம்…” என்றிட, அத்தனை நேரம் அவ்வளவு வேகமாய் தெளிவாய் பேசிக்கொண்டு இருந்தவள் சட்டென்று அமைதியாகி விட்டாள்..
மறுபடியும் அனிதா வந்து பேசினாள் என்றால் ஈசன் எப்படி எடுத்துக் கொள்வானோ என்றிருக்க, அவனைத் தயக்கமாய் லட்சுமிப் பார்க்க, “என்ன லஷ்மி சொல்லு..” என்று ஊக்கினான்..
“அது வந்து மாமா…” என்று தயங்கியவள், இன்றோடு அனைத்தையும் முடிக்கவேண்டும் என்றெண்ணி, முழுமூச்சாய் அனிதா வந்து பேசியதை சொல்ல, முதலில் ஈசனால் அதை நம்ப முடியவில்லை.
அவன் நம்ப முடியாமல் பார்க்க, “நிஜமா மாமா..” என்றாள் சத்தியம் செய்யாத குறையாய்..
“ம்ம்… இதை ஏன் சொல்லாம விட்ட லஷ்மி.. இத்தனை விசயங்களை மனசுல போட்டுக்கிட்டு தான் ட்ரிப் வந்தியா…” என, “உங்கக்கூட வந்ததுனால தான் மாம்ஸ் எல்லாமே மறந்து போச்சு…” என்று லட்சுமி லேசாய் சிரித்தபடி சொல்ல,
“நினைச்சேன் இதைத்தான் நீ சொல்வன்னு…” என்று ஈசனும் சிரிக்க,
“ஹப்பா ஒருவழியா சமாதானம் ஆகிட்டீங்களா மாமா…” என்று ஆசுவாசமாய் மூச்சு விட,
“ஹ்ம்ம் எல்லாரும் இவ்வளோ கெஞ்சினதுனால தான்…” என்று போனால் போகிறது என்று, சொல்ல,
“ம்ம் சரி சரி இதை இதோட விடேன்..” என்றபடி அவளை அணைத்துக்கொண்டவன்,
“இப்பவும் சொல்றேன் லஷ்மி.. வீட்ல நான் இல்லைன்னாலும் நடக்கிறது எனக்கு தெரியனும் இல்லையா.. பாலா உன்னோட ஃபிரண்ட் தான் இல்லைன்னு சொல்லலை.. ஆனா நான் உன்னோட புருஷன் அது தான் இனிமே உனக்கு முதல்ல மனசில நிக்கணும்…” என,
லட்சுமியும் இதுபோலவே தானே எண்ணியிருந்தாள், எந்த நேரத்திலும் ஈசனது மனதில் அவள் முதலில் இருக்கவேண்டும் என்று.. இப்போது ஈசனும் அதையே சொல்லவே, மிக மிக அவளுக்குத் திருப்தியாய் இருக்க, “ம்ம் மாம்ஸ்…” என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட, “ஹா ஹா.. இனிமே உன் பேர் முத்தம்மா…” என்று ஈசன் சொல்ல,