பள்ளிக்கூட வேலைகள் ஒருபக்கம் தொடங்கியிருக்க, புது இடத்தில் பண்ணை அமைக்கவென்று வேலைகள் வேறு ஜரூராய் நடந்துகொண்டு இருக்க, லட்சுமி சொன்னது போல் சூப்பர் மார்கெட்டை விஸ்தரிப்பு செய்யவும் வேலைகள் நடந்துகொண்டு இருந்தது.
பெரிது படுத்தவேண்டும் என்று லட்சுமி சொல்லிவிட்டாள் தான்.. அதற்கு என்ன செய்வது என்று யோசிக்கையில், மதுரையில் இடம் விற்ற பணத்தில், பண்ணைக்கான இடம் வாங்கிய பணம் போக மீதமிருந்ததை லட்சுமி அப்படியே ஈசனிடம் கொடுக்க, இந்த முறை வேண்டவே வேணாம் என்றான்.
“இல்ல லஷ்மி.. இதுல நீ ஏதாவது வாங்கிக்கோ…”
“எனக்கு ஏதாவது வேணும்னா என் ஈஸ் மாமா வாங்கிக்கொடுப்பார்.. சோ இதுல கடை வேலை செய்வோம்..”
“நான் சொல்றத கேளேன்..”
“அந்த கடைக்கு ஓனர் யாரு..??” என்றவளை என்ன சொல்கிறாள் இவள் என்று பார்க்க, “சொல்லுங்க மாம்ஸ்.. சூப்பர் மார்கெட் ஓனர் யாரு.. நான் தானே.. அப்படித்தான சொன்னீங்க..” என்று தலையை சரித்துக் கேட்க,
‘ஆகா நம்ம சொன்னதை வச்சே நம்மளை மடக்குறாளே…’ என்று ஈசன் பார்க்க,
“என்ன பாக்குறீங்க மாமா.. ஆம்பிளைங்க மட்டும் தான் ஃபைனான்சியலி சப்போர்ட்டா இருக்கணுமா.. அதென்ன மத்ததெல்லாம் சரி, பணம்னு வரும் போது மட்டும் நீ கொடுக்கிறது நான் கொடுக்கிறதுன்னு ஒரு எண்ணம்.. நம்ம ரெண்டு பெரும் வேற வேறயில்லைன்னா அப்போ யார் கொடுத்தா என்ன…” என்று சொல்ல,
‘ஹ்ம்ம் இவ ஒரு முடிவோட தான் பேசுறா..’ என்று ஈசனுக்கு நன்றாகவே புரிந்தது..
“சரி இப்போ என்னதான் செய்யணும் சொல்ற லஷ்மி..”
“ஒண்ணுமில்ல, கடைக்கான வேலைக்கு இந்த பணத்தை செலவு பண்ணலாம்.. புது பண்ணைக்கு சார் தானே ஓனர் சோ அதை நீங்க பார்த்துக்கோங்க…” என்றாள் இலகுவாய்
“சரி கடையை பெரிசு படுத்துறது எல்லாம் இருக்கட்டும். பெரிசு பண்ணி என்ன செய்ய??” என்று அடுத்த கேள்விக்கு ஈசன் போக,
“இப்போ சூப்பர் மார்க்கட் இருக்க இடம், பக்கத்துல இருக்க காலியிடம் அப்புறம் குடோனுக்கு சைட்ல இருக்க இடம் எல்லாத்தையும் ஒரே பில்டிங்கா மாத்திட்டு, மொத்தம் நாலு ப்ளோர் போடலாம் மாமா..
நம்ம ஊர்ல பெரிய ஜவுளிக்கடை இல்லைல, மதுரைக்கு இல்லை தேனிக்கு தானே போறோம், சோ ஒரு பெரிய ஜவுளிக்கடை ஆரம்பிக்கலாம்.. அண்டர் க்ரௌண்ட்ல சூப்பர் மார்க்கட்..” என்று கண்கள் மின்ன லட்சுமி சொல்ல, ஈசனுக்கும் அதெல்லாம் கேட்க நன்றாய் தான் இருந்தது.
ஆனால் அதற்கெல்லாம் கோடிக் கணக்கில் பணம் வேண்டுமே.. லட்சுமி கையில் இருக்கும் பணம் கட்டிடம் கட்டவே சரியாய் போகுமா என்று தெரியாது, அதற்குமேலும் செலவுகள் இருக்கிறதே.
ஏற்கனவே அவள் பெயரில் இருந்ததை தான் பள்ளிக்கூட வேலைகளுக்காக கொடுத்தாகிவிட்டது. புது பண்ணை ஆரம்பிக்க ஈசன் தனியே வங்கியில் லோன் வாங்க ஏற்பாடு செய்திருந்தான். ஆக மேற்கொண்டு பணம் தேவைப்படும் என்று தோன்ற,
“ஹ்ம்ம் சரி பாப்போம் லஷ்மி.. முதல்ல எஸ்டிமேசன் போடுவோம்.. எடுத்த உடனே நாலு ப்ளோர் வேண்டாம். ரெண்டு போதும்.. இடமே பெரிய இடம்.. சோ எஞ்சினியர் கிட்ட பேசலாம்.. அதுக்குமுன்னாடி வீட்ல பேசிடலாம்..” என்றவன் வீட்டினரையும் அழைத்து இதைப் பற்றி பேச,
அனைவரும் ஒரே கருத்தாய் எடுத்த உடனே அகலக்கால் வைக்காது கொஞ்சம் நிதானமாக செல்வோம் என்று சொல்ல, சரி யோசித்து முடிவெடுப்போம் என்றாகிவிட்டது.
பாலாவும் ஊருக்கு சந்தோசமாகவே கிளம்பினான். ஈசன்தான் மதுரை வரைக்கும் சென்று விட்டு வந்தான்.. பாலா கிளம்புவதற்கு முன்பு
“இங்க பாருடா, உனக்கு எதுன்னாலும் நாங்க இருக்கோம்.. அதை மறக்காத.. நம்ம வீட்ல நான் முதல்ல பிறந்ததுனாலயோ, இல்ல நான் தனியா பிஸ்னஸ் பண்றதுனாலயோ நீ வேற நான் வேற இல்ல.. நம்ம வீட்ல நம்ம ஒண்ணுதான்.. ” என்று சொல்ல,
“ம்ம் சரி விடு.. புதுசா எது பண்ணாலும் யோசிச்சு நிதானமா முடிவு எடுங்க.. நிறைய அனுபவம் இனிமே தான் கிடைக்கும்.. யாரையும் ரொம்ப பகைச்சுக்காத பிடிக்கலையா ஒதுங்கிப் போ. அவ்வளோ தான்.. நிறைய கத்துக்கோ..” என்று சொல்லி அனுப்பி வைத்தான்..
பாலாவுக்குமே ஈசனிடம் நிறைய மாற்றங்கள் வந்திருப்பதாய் தெரிந்தது. முன்னை விட இப்போது இன்னும் பக்குவப் பட்டவனாய், பொறுமையாய் பேசுகிறான் என்பதுபோல் இருக்க, சென்னைக்கு சென்றபிறகு ஒருநாள் அதை லட்சுமியிடம் பேசுகையில் கேட்டான்.
“என்ன லச்சு.. நிஜமாவே எங்க சிங்கத்த நீ என்னவோ செஞ்சிட்ட…” என்று கிண்டலடிக்க,
“அடடா பெண் சிங்கம்தான் வேட்டையாடும்… இப்போ சொல்வியா ஈஸ் மாமாவ சிங்கம்னு…” என்று அவளும் பதிலுக்கு சொல்ல,
“அப்போ சரி என் அண்ணன் புலி..” என்று சொல்ல,
“ஏன்டா.. அவர் மனுசனா நல்லாத்தானே இருக்கார்.. பின்ன ஏன் சிங்கம் புலி சிறுத்தைன்னு மிருகங்களோட கம்பேர் பண்ற…” என்றாள் அவளும்
“சரிம்மா தெரியாம சொல்லிட்டேன். நீங்க லவ் பேர்ட்ஸ்.. அப்படியாவது சொல்லிக்கலாமா..”
“இதுவேணும்னா சொல்லிக்கோ..” என்று போனால் போகுது என்பதுபோல் சொல்ல,
“ஹ்ம்ம் நீயும் மாறிட்ட அண்ணனும் மாறிட்டான்.. எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம் லச்சு… நானும் கண்டிப்பா என் லைஃப்ல நல்ல நிலைமைக்கு வருவேன்..” என்றான் உறுதியாய்.
“கண்டிப்பா பாலா.. நீயும் பெரிய ஆளா வருவ..” என்று பேசி முடிக்க,
“யார் லஷ்மி…” என்றபடி ஈசன் வந்தான்..
“உங்க பாச மலர் தான் மாம்ஸ்…” என்றாள் சிரித்தபடி..
“ஆரம்பிச்சுட்டா..” என்று ஈசனும் சிரிக்க, “இப்படி கூப்பிடுறது நல்லாயிருக்குல..” என்று அவளே சொல்லிக்கொள்ள,
“அதை நான் சொல்லணும்…” என்று அவனும் சொல்ல, “ஓ.. அப்போ நல்லா இல்லைன்னு வேற சொல்வீங்களா..” என்றவள் அவ்வளவு தைரியமா என்று பார்க்க,
“ஹா ஹா நான் சொல்வேணா முத்தம்மா…” என்றான் அவனும் அவளைப் போல பார்த்து..
“நான் எவ்வளோ அழகா மாம்ஸ்னு சொல்றேன்.. நீங்க இப்படி சொல்றீங்க..” என்றவள் வேண்டுமென்றே பிடிக்காதவள் போல் முகத்தை சுருக்க,
“அடேங்கப்பா.. அப்படியே பிடிக்காதது மாதிரி தான்.. போ டி முத்தம்மா..” என்றவன், “சரி சரி.. பேசினா வந்த வேலை மறந்திடும், இங்க பாரு..” என்று ஒரு காகித சுருளை அவளிடம் நீட்டினான்..
“என்னதிது மாமா..”
“பிரிச்சு பாரு..” என்றவனே அவளிடமிருந்து வாங்கி, டேபிள் மேலே வைத்து அந்த சுருளை விரிக்க, அது ஒரு கட்டிடத்தின் ப்ளூ பிரிண்ட் என்று நன்றாகவே தெரிந்தது லட்சுமிக்கு. ஆனால் என்ன கட்டிடம் என்று புரியவில்லை. ஈசனை புரியாமல் பார்க்க,
“என்ன புரியலையா ஓனரம்மா..” என்று ஈசன் சொல்லவும், சட்டென்று புரிந்துவிட்டது அது எந்த இடத்தின் ப்ளூ பிரிண்ட் என்று..
“நம்.. நம்ம இடமா..” என்று ஆவலாய் கேட்க, “ஹ்ம்ம் இப்போதான் எஞ்சினியர் கிட்ட இருந்து வாங்கிட்டு வந்தேன்.. இப்போதைக்கு க்ரௌண்ட் ப்ளோர் சேர்த்து மூணு ப்ளோர்.. அப்புறம் போக போக டிவலப் பண்ணிக்கலாம்..” என்று ஈசன் விளக்க, லட்சுமிக்கு ஆச்சர்யமாய் இருந்தது..
இப்போதைக்கு வேண்டாம் என்று கொஞ்சம் தள்ளி வைத்திருந்த வேலை, திடீரென்று ஈசன் வந்து காட்டவும் அவளுக்கு நிஜமாகவே மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம் தான்..
அவளது முக பாவனைகளை கண்டவன், “அய்யாவும் நானும் பேசினோம் லஷ்மி.. நீ கொடுத்த பணம் பில்டிங் கட்ட போதும்.. சோ மேற்கொண்டு செய்ய வேண்டிய வேலைகளுக்கு அய்யா வேற ஒரு ஐடியா சொல்றார்…” என,
“பெரிய மாமா என்ன சொன்னாங்க??” என்றாள் ஆவலாய்.
“பாலாவுக்கு நம்ம இங்கயும் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்யணுமில்லையா, அதுனால ஊருக்கு வெளிய அய்யா பேர்ல சும்மா இருக்கிற இடம், அப்புறம் மதுரைல தேனில இருக்க வீடுங்க இதெல்லாம் வித்துட்டு, அந்த பணத்தை இதுல போடலாம்னு சொல்றார்.. எப்படி இருந்தாலும் நீயும் பாலாவும் தானே அதை பின்னாடி எடுத்துக்க போறீங்க, இப்படி பண்ணிட்டா அவனுக்கும் இதுல பார்டன்ர்ஷிப் போல ஆகிடும்ல அப்படின்னு சொல்லார்..” என்று ஈசன் கஜேந்திரன் சொன்னதை சொல்ல, லட்சுமிக்கும் அது சரியாய் புரிந்தது..
பாலாவை அப்படியே விட முடியுமா, என்னதான் அவன் தனியாய் அங்கே அவனுக்குப் பிடித்தமாய் செய்கிறான் என்றாலும், இங்கேயும் அவனுக்கு சில ஏற்பாடுகள் செய்து வைத்தால் நல்லது தானே..
“பெரிய மாமா சொன்னது சரிதான்.. ஆனா பாலாக்கிட்ட ஒருவார்த்தை கேட்டிட்டு அடுத்து எதுவும் செய்யலாம் மாமா..” என்றிட,
அடுத்து கஜேந்திரன் பாலாவிடம் கேட்க அவனுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே விளங்கவில்லை.. எந்த பதிலும் கூறாது அப்படியேதான் இருந்தான்.
அது ஈசன் முதன்முதலில் சொந்தமாய் ஆரம்பித்தது. சூப்பர் மார்கெட் சுற்றி இருக்கும் இடமும் அவனது உழைப்பில் வாங்கியது தான். அதில் இப்போது பணத்தை மட்டும் போட்டு தனக்கும் பங்கிருக்கு என்று சொன்னால் எப்படி என்று தோன்ற, அதை அப்படியே ஈசனிடமும் கஜேந்திரனிடமும் அவன் சொல்லிட,
“டேய் பெரிய மனுஷா நீ யோசிக்கிறதை நாங்க யோசிக்காம இருப்போமா.. அய்யா அந்த இடத்துக்கான பணத்துல பாதி எனக்கு கொடுக்கிறேன்னு சொல்லிருக்கார்.. அப்புறம் இன்னொண்ணு இதுபத்தி நீ பேசுறதுனாலும் லஷ்மிக்கிட்ட தான் பேசணும்.. ஏன்னா அது உங்க ரெண்டு பேருக்கும் தான்…” என்று ஈசன் சொல்லிவிட, அடுத்து பாலா லட்சுமியிடம் பேச, அவளோ மணிக்கணக்காய் பேசித்தான் அவனை சம்மதம் சொல்ல வைத்தாள்.
கஜேந்திரனுக்கு தன் மக்களை நினைத்து பெருமையாய் இருந்தது. அதைவிட, லட்சுமியை நினைத்து இன்னும் பெருமையாய் இருந்தது. தான்.. தனக்கு என்று நினைக்காமல், தன் குடும்பம் தன் மனிதர்கள் என்று நினைக்கும் பெண் வீட்டிற்கு வந்தால் வீடும் சரி அவர்கள் தலைமுறையும் சரி மேலும் மேலும் சுபிக்க்ஷம் அடையுமே.
நாட்கள் இப்படியே செல்ல, அனைத்து வேலைகளும் சரியாய் சென்றுகொண்டு இருந்தது. மதுரை சண்முகம் மூலமாய் இடங்களையும், வீடுகளையும் கஜேந்திரன் விற்க ஏற்பாடு செய்ய,
“அய்யா.. தனுஸ்கோடிய சண்முகம் அண்ணன் கூட சேர்த்துக்க சொல்லுங்க.. என்ன ப்ரோக்கரேஜோ வாங்கிக்கட்டும்.” என்றான் ஈசன்.
“எதுக்கு ஈசா.. சண்முகம் இதை நட்பு அடிப்படைல தான் செய்றான்..”
“இல்லைய்யா.. தனுஸ்கோடி புது பண்ணை ஆரம்பிக்கிற இடம் முதல்ல அவன்தான் சொன்னான்.. நான் வாங்கிட்டா அவனுக்கு ஏதாவது செய்யனும்னு நினைச்சேன்.. இப்பவும் நம்ம வாங்கிட்டோம் தான்.. ஆனா அவனுக்கு எதுவும் பண்ணலை. அதான் இதுல சேர்த்துவிட்டா அவனுக்கும் தொழில் வட்டம் பெருகும்தானே…”
கஜேந்திரனுக்கு ஈசன் தான் வளர்வது மட்டுமில்லாமல் பிறரும் வளர வேண்டும் என்று நினைத்து செய்வது நன்றாகவே புரிய, சரி என்றவர், சண்முகத்தை அழைத்துப் பேச, அவரும் சரி என்று சொல்லிவிட்டார்.. ஈசனும் அழைத்து தனுஸ்கோடிக்கு பேச, அவனுக்கோ அப்படியொரு சந்தோசம்.
அனைத்துமே நினைத்தது போல் நடந்துகொண்டு இருக்க, துரைசாமி தான் தையா தக்கா என்று குதித்துக்கொண்டு இருந்தான். சூப்பர் மார்கெட் வேலைகள் தொடங்கியதுமே என்ன என்று பார்த்தவன், பின் விபரம் தெரியவும் வாயடைத்து தான் போனான்.