ஆனாலும் பொறாமையில் வயிர் எரிய, “உங்க கடைல வேலை நடக்கிறது என் கடைல தூசி விழுது.. சாமான் எல்லாம் பாலாகுது..” என்று சின்ன சின்னதாய் குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்க, அதெல்லாம் கண்டுகொள்ளாது வேலைகள் அதன்போக்கில் நடந்துகொண்டிருக்க, இடையில் ஒருநாள் வேலைக்கு வந்த ஆட்களை துரைசாமி வம்பிழுக்க, அது பெரும் பிரச்சனையாய் போனது..
ஈசன் என்னவென்று போய் பார்க்க, அவர்களோ துரைசாமி மன்னிப்புக் கேட்காமல் எதுவும் நடக்காது என, இந்த துரைசாமி விசயத்தில் தான் இத்தனை நாள் சும்மா விட்டது தப்போ என்று தோன்ற, நேராக தொழில் சங்கத்தில் சென்று புகார் கொடுத்துவிட்டான்.
அங்கே தலைமையில் இருப்பவர் கஜேந்திரனுக்கு நெருங்கிய நண்பர். ஈசனுக்கும் நல்ல பழக்கம்..
“இது தான் மாமா பிரச்சனை..” என்று ஈசன் முன்பு நடந்ததையும் விளக்கி சொல்ல,
“நீ போ மாப்ள அவனை பார்த்துக்குவோம்.. இத்தனை நாள் ஏன் சும்மா விட்ட..” என்று அவரும் சொல்ல,
“இல்ல மாமா.. அவன் கேபிள் வச்சிருந்தான்.. நான் தான் மூட வச்சேன்.. சரி பிழைச்சுக்கிட்டு போகட்டும்னு விட்டா ரொம்ப பண்றான்….” என்றான்..
“நான் பார்த்துக்கிறேன்..” என்றவர், அடுத்து நடந்த தொழில் சங்க மீட்டிங்கில் துரைசாமியை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டார்.
ஆனால் அதற்குள் ஈசன், கட்டிட வேலைக்கு வந்தவர்களை சமாதானம் செய்து மீண்டும் வேலையை தொடங்கச் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிப் போனது.. இந்த துரைசாமி மட்டும் சும்மா இருந்தால், ஈசனும் சும்மாதான் இருப்பான். ஆனால் அவன் இருக்கவேண்டுமே..
தொழில் சங்க மீட்டிங்கில் துரைசாமியிடம் ஈசன் எதுவும் பேசவில்லை என்றாலும், அவன் தான் புகார் கொடுத்திருக்கிறான் என்று நன்றாகவே அனைவர்க்கும் தெரிந்தே இருக்க, வந்திருந்தவர்களில் முக்கால்வாசி பேர்,
“துரைசாமி நீ பண்றது ரொம்ப தப்பு.. இப்படியே போனா சங்கத்துல இருந்து உன்னை விலக்கிடுவோம்.. பின்ன எப்படி நீ எந்த தொழிலும் செய்ய முடியும்” என்று சொல்ல, அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை..
முடிவில் ஈசன் “அவன் பிரச்சனை பண்ணாம இருந்தா நானும் எதுவும் செய்யமாட்டேன்..” என்று சொல்ல,
துரைசாமி இனி எதுவும் செய்யமாட்டேன் என்று அனைவரின் முன்னும் சொன்னவன், அடுத்த ஒரே வாரத்தில் அவனது சூப்பர் மார்க்கட்டை வேறொரு இடத்திற்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டான்.
வேலை வேலை வேலை.. ஓடிக்கொண்டே இருக்கிறான் தான். ஆனால் அலுப்புத் தட்டவில்லை. ஓய்வாய் கொஞ்ச நேரம் கிடைத்தாலும் வீட்டிற்கு வந்திடுவிடுவான், இல்லை லட்சுமியை அழைத்துக்கொண்டு வெளியே எங்கேயாவது சென்று வருவான்.
இப்போதெல்லாம் பெயர் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் தாண்டி மனிதர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஈசன் மனதில் வேரூன்றியிருந்தது. அதன் பொருட்டே, தான் பேசி, கடந்து வரும் ஆட்களோடு முடிந்த வரைக்கும் நிதானமாய் பொறுமையாய் பழகி வருகிறான்..
தான் என்ற எண்ணம் இருந்தாலும், அதனை அப்படியே வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அவனுக்கே அவனது மாற்றங்கள் நன்றாக தெரிந்தது. அனைத்திற்கும் காரணம் லட்சுமி என்றும் புரிந்தது. அவளை நினைத்தாலே போதும், மனம் உற்சாகமடைந்து, உடலில் இருக்கும் அலுப்பெல்லாம் காணாமல் போவது போல் இருக்கும். இதை அவளிடம் சொன்னால்,
“நான் என்ன க்ளுகோஸா மாமா…” என்பாள் கிண்டலாய்..
அவளுக்கும் உள்ளூர சந்தோசம் தான் இருந்தாலும், சின்ன சின்ன நகைச்சுவை உணர்வு வாழ்வை இன்னும் அழகாக்குமே.. கிண்டல்கள் கேலிகள் சிரிப்புகள் இதெல்லாம் ஈசனுக்கும் லட்சுமிக்கும் இடையில் தங்கு தடையில்லாமல் இருக்க, இன்னும் அவர்களின் உறவு மெருகேரியாதாய் இருந்தது.
கல்லூரி சென்றுவருவது போக, விடுமுறை நாட்களில் லட்சுமியும் என்ன வேலை நடக்கிறது என்று சென்று பார்த்துவிட்டு வருவாள்.
எல்லாம்.. எல்லாமே சரியாய் சென்றுகொண்டு இருக்க, அன்று பொழுது விடிந்ததில் இருந்தே லட்சுமிக்கு உள்ளம் படபடவென்று இருந்தது.. என்ன காரணம் என்று அவளுக்கு தெரியவில்லை. இதுவரைக்கும் இப்படியான உணர்வு அவளுக்கு இருந்ததாகவும் தெரியவில்லை. ஈசன் தான் எப்போதும் போல எழுப்பினான்..
“ம்ம் கொஞ்ச நேரம் மாமா..” என்று படுத்தவளை, “நேரமாகுது லஷ்மி.. அப்புறம் பஸ் போயிடுச்சுன்னு சொல்வ..” என்று விடாது எழுப்ப,
“பஸ் போனா நான் கார்ல போயிக்கிறேன்…” என்று சொல்லி மீண்டும் படுத்தாள்.
“அதுசரி.. உன்னை கார் பழக்க வச்சது தப்பா போச்சு…”என்றவன், “எந்திரி லஷ்மி… ரிலாக்ஸ்டா கிளம்பி போகணுமில்லையா…” என,
“ம்ம்ம்..” என்று சோம்பலாய் தான் எழுந்தமர்ந்தாள்.
அவள் முகமே தெளிவில்லாமல் இருப்பது கண்ட ஈசன், என்றும் இப்படியிருக்கமாட்டாளே என்றெண்ணி,
“என்ன லஷ்மி உடம்புக்கு எதுவும் செய்யுதா..” என்று விசாரிக்க, “இல்ல மாமா.. ஆனா டல்லா இருக்கு..” என்றபடி குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து வந்தவள், ஈசன் அங்கேதான் இருப்பதை கண்டதும், “என்ன மாமா கிளம்பலையா..” என்று கேட்க,
“லீவா.. அதெல்லாம் முடியாது மாமா.. இன்னிக்கு செமினார் இருக்கு..” என்றவள் அடுத்து வேக வேகமாய் கிளம்பினாள்.
“இதுக்கு தான் சீக்கிரம் எந்திரிக்க சொல்றேன்..” என்றவன், அவள் உண்டு முடிக்கவும், அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டு வர, அங்கேயும் லட்சுமிக்கு அப்படித்தான் இருந்தது.
மதிய இடைவேளையில் அமைதியாய் இருந்தவளை ஸ்நேகா கூட கேட்டாள் “என்ன டி எப்படியோ இருக்க..” என்று..
“தெரியலை டி.. எப்படியோ இருக்கு.. ஆனா உடம்பெல்லாம் நல்லாத்தான் இருக்கு.. மனசு தான் அடிச்சுக்குது…” என்றவளை மேலும் கீழுமாய் ஸ்நேகா பார்க்க,
“ஏய் என்ன டி..” என்று லட்சமி தோளில் தட்ட,
“ஹ்ம்ம் நீ ஹனிமூன் போய்ட்டு வந்ததுல இருந்து ஒருமாதிரி தான் இருக்க..” என்றாள் கிண்டலாய்.
“போ டி.. நாங்க போய்ட்டு வந்து எத்தனை நாளாச்சு இப்போ சொல்ற..” என்றவளுக்கு உள்ளுணர்வு என்னவோ நடக்கப் போகிறது என்றே சொல்லிக்கொண்டு இருந்தது..
கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தவள், மீண்டும் குளித்து பூஜையறைக்கு சென்று விளக்கேற்றி வெகு நேரம் கடவுளை வணங்கிக்கொண்டு இருந்தாள். லட்சுமி எப்போதும் இப்படி செய்ய மாட்டாள் என்பதால், மரகதம் என்னவென்று கேட்க,
“மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு அத்தை அதான்..” என்று உள்ளத்தை மறைக்காமல் சொல்ல, ஈசன் அப்போது அங்கே வந்தவன்,
“ஏன் என்னாச்சு..” என்று விசாரிக்க,
“ஒண்ணுமில்ல மாமா..” என்று லட்சுமி சொல்லும்போதே, ஈசனின் அலைபேசி அலற, எடுத்து பேசியவன் முகம் அப்படியே மாறிவிட்டது..
அவனை பார்த்துக்கொண்டு நின்றிருந்த இரு பெண்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, பேசிவிட்டு வைத்தவன்
“ம்மா.. லஷ்மி.. போலீஸ் ஸ்டேசன் போகணும்..” என்று சொல்லிக்கொண்டே கஜேந்திரனைத் தேடிப் போனான்..
கஜேந்திரன் அவர் அறையில் இருக்க, நேராய் அங்கே சென்றவன், “அய்யா..” என்று அழைத்துவிட்டான், ஆனால் அதற்குமேல் என்ன சொல்ல என்று தெரியாமல் நின்றிட,
“அது.. தேனி போலீஸ் ஸ்டேசன்ல இருந்து போன்..” என்று ஈசன் சொல்லவும், கஜேந்திரனுக்கு புரிந்துவிட்டது..
“ஓ..” என்று மட்டும் சொன்னவர், “கிளம்பனுமா..” என்று கேட்க,
“நான் மட்டும் போறேன்..” என்றான்
“இல்ல வேணாம்.. நானும் வர்றேன்..” என்று கஜேந்திரன் சொல்ல, அதற்கு ஈசன் பதில் சொல்வதற்குள் மீண்டும் அவனுக்கு அழைப்பு வந்தது.
எடுத்துப் பேசியவன் முகம் யோசனையாய் சுருங்க, “ம்ம் சரி..” என்று மட்டும் சொல்லி பேச்சை முடித்தவன்,
“லஷ்மியும் வரணுமாம்.. அவதான கம்பளைன்ட் கொடுத்திருக்கா..” என்றான் பொதுவாய் அனைவரையும் பார்த்து..
வேலாயுதம், முத்தரசி, மனோஜ் எல்லாம் கிடைத்தார்களா என்ன என்று அவர்களுக்குத் தெரியாது, ஆனால் வர சொல்லியிருக்கிறார்கள் என்றதுமே, அனைவரின் மனதும் அவர்கள் கிடைத்திருக்க வேண்டுமே என்று எதிர்பார்க்க,
மரகதமோ “தைரியமா போயிட்டு வா லஷ்மி..” என்று சொல்ல,
“ம்ம்…” என்று மட்டும் சொன்னவள், மீண்டும் பூஜையறைக்குச் சென்றாள்.
ஒருவேளை இதற்குத்தான காலையிலிருந்து அவள் மனம் அப்படி அடித்துக்கொண்டதோ என்றிருந்தது..
சாமி படத்திற்கு முன் கை கூப்பி நின்றவள், “கடவுளே.. இனியாவது எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும்..” என்று அனவைருக்குமே சேர்த்து தான் வேண்டினாள்..
கொஞ்சம் நேரம் அப்படியே நின்றிருக்க. ஈசனும், கஜேந்திரனும் அங்கே வந்து நிற்பது தெரிந்ததும், “போலாமா…” என்று லட்சுமி கேட்கையிலேயே விசயம் அறிந்து பேச்சி வந்துவிட்டார் அங்கே..
“நானும் வரட்டுமா..” என்று பேச்சி கேட்க,
“அத்தை.. அங்க என்ன சூழ்நிலைன்னு தெரியாது.. வர சொல்லிருக்காங்க.. போய் பார்த்துட்டு வர்றோம்..” என்றவன், “ம்மா பார்த்துக்கோ..” என்று சொல்லி, கிளம்ப, லட்சுமி ஒரு இறுகிய முகத்துடன் தான் கிளம்பிச் சென்றாள்.