“வாங்க சித்தப்பா..” என்று கஜேந்திரனை எஸ். பியே வந்து வரவேற்க, பின்னே வந்த ஈசனையும், லட்சுமியையும் பார்த்தும் ஸ்நேகமாய் ஒரு புன்னகையும் சிந்த, அவர்களோ சம்பிரதாயத்திற்காக சிரித்தாலும், முகமெல்லாம் யோசனையாய் இருந்தது.
“வேல் பாண்டி என்னாச்சு கிடைச்சிட்டாங்களா..??” என்று கஜேந்திரன் கேட்க,
“சித்தப்பா உள்ள வாங்க பேசிக்கலாம்.. ஈசா நீயும் வா..” என்றவன் லட்சுமியைப் பார்த்து, “நீங்களும் வாங்க அண்ணி..” என்று மரியாதைக்காக சொல்ல, சரியென்று மூவருமே அறைக்குள் செல்ல, அங்கேயே யாருமே இல்லை..
ஒருவேளை வேலாயுதமும், அவர் குடும்பமும் உள்ளே அமர்த்த வைக்கப் பட்டிருப்பார்களோ என்ற சின்ன எதிர்பார்ப்பும் அங்கே பொய்யாய் போய்விட, உள்ளூர சிறு ஏமாற்றம் தோன்றினாலும் அதைக் காட்டாது மூவரும் அமர,
“சாரி.. இந்நேரத்துக்கு உங்களை வர சொன்னதுக்கு..” என்று எஸ். பி, வேல்பாண்டி பேச்சை ஆரம்பிக்க,
“அண்ணா அதுனால ஒண்ணுமில்ல.. ஆனா என்னாச்சு??” என்ற ஈசனின் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள்..
“ம்ம்..” என்று சில நொடி மௌனம் காத்தவன் முகத்தில், எப்படி சொல்ல என்ற தயக்கமே நிறைய இருந்தது.
வேறு யாராவது இப்படி ஒரு புகார் கொடுத்து, அதனை பற்றிய விபரம் என்றால் அவனுக்குத் தயக்கமே இருந்திருக்காது. ஆனால் வந்திருப்பவர்கள் ஒருமுறையில் சொந்தமும் அதை தாண்டி நல்ல பழக்கமும் கூட.. அதுதான் எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை அவனுக்கு..
“வேல்பாண்டி.. எதுவும் பிரச்சனையா..” என்று கஜேந்திரன் கேட்க,
“ம்ம் பிரச்சனை தான் சித்தப்பா.. ஆனா…” என்று இழுத்தவன், பின் மூச்சை இழுத்துவிட்டு, “குமுளி வரைக்கும் போகணும்..” என்றான்.
“ஒண்ணுமில்லை சித்தப்பா..” என்று நாடியைத் தடவியவன், பின் என்ன இருந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும் என்று தோன்ற,
“அது.. அவங்க எல்லாம் கிடைச்சிட்டாங்க… குமுளி ஸ்டேசன்ல போய் பேசி கூட்டிட்டு வரணும்..” என்றவன் முகம் இன்னும் தெளிவில்லாமலே இருக்க,
“அண்ணா அதுமட்டும் தானா..??” என்று ஈசன் கேட்க, லட்சுமி அனைத்தையும் அமைதியாய் தான் பார்த்திருந்தாள்.
“வேல்பாண்டி எதையும் வெளிப்படையா பேசுப்பா..” என்று கஜேந்திரன் சொல்ல, அதற்குமேலும் அவனால் ஒன்றும் சொல்லாமல் இருக்க முடியவில்லை..
“அது சித்தப்பா.. வேலு மாமா இப்போ உயிரோட இல்லை..” என்று சொல்லி முடிக்கவும், அங்கே பெருத்த அமைதி..
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, தாங்கள் கேட்டது நிஜம்தானா என்று உணர சில நேரம் பிடித்தது. அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள்..
கிடைப்பார்களா என்றே தெரியாமல் இருந்தபோது கூட தோன்றாத ஒரு வலி, இப்போது இந்த செய்தியைக் கேட்கவும் மனதில் சட்டென்று தோன்றி மறைந்து அனைவரின் மனதுமே ‘ஐயோ’ என்று தான் சொன்னது..
“என்.. என்ன சொல்றீங்க..??” என்று ஈசன் பதறி கேட்கையிலேயே லட்சுமியின் கண்கள் அவளையும் அறியாது நீரை கோர்த்து விட, கஜேந்திரனுக்கோ வார்த்தையே வரவில்லை..
“ம்ம் ஆமா..” என்று வேல்பாண்டி சொல்லவும், அத்தனை நேரம் நிமிர்ந்து அமர்ந்திருந்த மூவரும் தொய்ந்து போய்விட, லட்சுமியின் இதழ்களோ “சித்தப்பா..” என்று முணுமுணுக்க, அடுத்த நொடி எதுவோ மனதில் தோன்றி, “சி.. சித்தி.. மனோஜ்..?” என்று விசாரிக்க,
“அவங்க சேஃப் தான் அண்ணி..” என்றவன்
“ஈசா இப்போ பேசுறதுக்கு நேரமில்ல, நாளைக்குள்ள அவங்களை எல்லாம் இங்க கொண்டு வரணும்.. எனக்குத் தெரிஞ்ச போலீஸ் ஆபிசர் வச்சு அங்க முக்காவாசி பார்மாலிட்டி முடிச்சிட்டேன்.. இனியும் லேட் பண்ண கூடாது….” என்றதும், வேகமாய் ஈசன் தான் தன்னை உலுக்கிக்கொண்டான்.
“எப்.. எப்போ கிளம்பனும்..” என்றபடி ஈசன் எழ, லட்சுமியும் கஜேந்திரனும் அப்படியே அமர்ந்திருக்க, வேல் பாண்டியின் பார்வை அவர்களைத் தொட்டு மீள, ஈசனுக்கோ ‘எப்படி அனைவரையும் சரி செய்ய போகிறேன்..’ என்று தோன்றியது..
வேலாயுதம் செய்த நம்பிக்கைத் துரோகம் எல்லாம் பின்னே சென்றுவிட, இப்போது அவர் இல்லை என்ற இழப்பே பெரிதாய் பட, அனைவருக்குமே நெஞ்சம் துடிக்கத்தான் செய்தது..
கஜேந்திரனுக்கு இத்தனை ஆண்டுகளாய் பழகிய பழக்கம்.. லட்சுமிக்கு அவளது ரத்த சொந்தம்.. ஒரு மகளாக அவளைப் பார்க்கவில்லை என்றாலும், கடமைக்காகவேணும் அப்பா ஸ்தானத்தில் இருந்து வேலாயுதம் தான் எல்லாம் செய்தார். அதெல்லாம் மனதில் வந்து போக, அப்படியே அமர்ந்துவிட்டாள்.
“இப்போவே கிளம்பிடலாம்.. ஆனா அதுக்குமுன்னாடி ஒரு விஷயம்..” என்று வேல்பாண்டி இழுக்க,
“என்னண்ணா..” என்றான் ஈசனும், இன்னும் என்ன இருக்கிறதோ எந்த பதற்றத்தில்..
“கம்ப்ளைன்ட் வேலு மாமா மேலதான் அண்ணி கொடுத்தாங்க.. ஆனா இப்போ அவர் டெத்.. இதுக்குமேலயும் நம்ம கம்ப்ளைன்ட் அப்படியே வைக்கணும்னா அடுத்து அவர் பேமிலில இருக்கவங்கமேல தான் கொடுக்கணும்.. அதான் இப்போவே என்ன செய்யலாம்னு முடிவு பண்ணிட்டா அங்க போய் எல்லாம் முடிச்சிட்டு வர்றது கொஞ்சம் ஈசி.. ஒரு போலீஸ்காரனா இதை நான் சொல்லக்கூடாது. ஆனா இப்போ உங்க சொந்தக்காரனா தான் பேசுறேன்..” என்று வேல்பாண்டி இருக்கும் சூழலை அப்படியே விளக்க,
ஈசனுக்கோ சடுதியில் முடிவெடுக்க முடியாமல் போக, கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.. ஆனாலும் ஏதாவது செய்தே ஆகவேண்டுமே, நேரத்தை கடத்துவது நல்லதல்லவே என்று தோன்ற, அவனது உணர்வுகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு, அந்த நேரத்தில் அவன் முன்னால் இருந்த கடமையும், பொறுப்பும் மட்டுமே கண்களுக்குத் தெரிய, வேகமாய் தன்னை சமன் செய்துகொண்டவன்,
“என்ன பண்ணா சரியா இருக்கும்??” என்றான்..
வேல்பாண்டியும் யோசிக்காமல், “கம்பளைன்ட்ட வாபஸ் வாங்குறது தான் நல்லது..” என,
“சரிண்ணா..” என்றவன், “லஷ்மி..” என்று அவளை உலுக்க, அவளோ கலங்கிப் போய் பார்த்தாள்..
நின்று பொறுமையாய் விளக்குவதற்கு எல்லாம் அங்கே நேரமிருக்கவில்லை, ஆக “கம்ப்ளைன்ட்ட வாபஸ் வாங்கலாமா??” என்று மட்டும் ஈசன் கேட்க,
அவன் ஏன் அப்படி கேட்கிறான் என்றெல்லாம் தெரியாமலேயே, “சரி..” என்று லட்சுமி தலையை ஆட்ட, அடுத்து கஜேந்திரனிடமும் சொல்ல, அடுத்தடுத்து அங்கே முடிக்க வேண்டிய அனைத்தையும் முடித்து கிளம்பும் போது,
“ஈசா, சித்தப்பா அவர் வீட்டுக்கு போய் எல்லா ஏற்பாடும் செய்யட்டும்.. ஏற்கனவே அங்க போஸ்ட்மார்டம் பண்ணிட்டாங்க.. சோ எல்லாமே சீக்கிரம் முடிக்கனும்” என்று வேல்பாண்டி சொல்ல,
“ஷ்… அதுவுமா..” என்று ஈசனுக்கு வேதனையாக இருந்தது..
கடைசியில் அவர் முகத்தைக் கூட யாரும் காண முடியாத நிலை அல்லவா இது.. ஒருவேளை இவர்களின் முகத்தை பார்க்க முடியாமல்தான் வேலாயுதம் இப்படி போய் சேர்ந்தாரோ என்னவோ..
ஈசன் வேகமாய், வீட்டிற்கு அழைத்து, மரகதத்திடம் சுருக்கமாய் விஷயத்தை சொன்னவன், அடுத்து பிரபுவை சீக்கிரம் வரச் சொல்லி, கஜேந்திரனை அழைத்துக்கொண்டு செல்ல சொன்னான்..
அங்கே வீட்டிலோ, பெண்கள் மூவரும் இதைக் கேட்டதும் ஆடித்தான் போயினர்..
“ஐயோ என்ன மதினி இப்படியாகிப்போச்சு..” என்று பேச்சி அழ, அடுத்து கொஞ்ச நேரத்திலேயே கஜேந்திரனும் பிரபுவும் வந்துவிட, அடுத்தடுத்து அங்கே எல்லா வேலைகளும் நடக்கத் தொடங்கியது..
இதற்கிடையில் ஈசன் “ம்மா யார் என்ன கேட்டாலும் ஆக்ஸிடன்ட்னு மட்டும் சொல்லுங்க.. வேற எதுவும் பேசவேணாம்..” என்று அழைத்துச் சொல்ல, கஜேந்திரனும் அப்படியே சொல்ல, அனைவருக்கும் ஓரளவு சூழல் புரிந்தது..
அங்கே ஈசனும், லட்சுமியும், வேல்பாண்டியோடு கிளம்ப, போகும் போது லட்சுமி வாய் திறந்து பேசினாள் இல்லை.. மேலும் இரண்டு காவலர்கள் தனியே ஒரு வண்டியில் அவர்களை பின் தொடர, வேல்பாண்டி தான் காரை ஓட்டிக்கொண்டு சென்றான்.
ஈசனும் கொஞ்ச என்றம் அமைதியாய் வந்தவன், அடிக்கடி லட்சுமியை திரும்பிப் பார்க்க, அவளோ இருக்கையில் சாய்ந்திருந்தாள். அனைவர் மனதிலுமே கலவையான உணர்வுகள்..
குமுளி போகும் வழியிலேயே நடந்தவைகளை சுருக்கமாய் வேல்பாண்டி சொல்ல, அதெல்லாம் கேட்ட ஈசனுக்கோ இன்னும் ம் வேதனை கூடியது. இதெல்லாம் தேவையா கடைசியில் உயிரே அல்லவா போய்விட்டது என்றெண்ணியவன், மீண்டும் லட்சுமியை திரும்பிப் பார்க்க, அவளோ அவர்கள் பேசியதை கேட்டாளா என்றே தெரியவில்லை.
ஆடாமல் அசையாமல், கண்களைக் கூட திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள்..
ஈசனுக்கு என்னவோ அந்த நேரத்தில் லட்சுமி இப்படி இருப்பது வேறு கவலையாய் இருக்க, அங்கே வீட்டில் எல்லாம் என்ன செய்கிறார்களோ என்று தோன்ற, காரில் செல்லும் போதே, பாலாவிற்கு அழைத்து சொல்லிவிட்டான்.. முடிந்த அளவு சீக்கிரம் கிளம்பி வா என்று..
குமுளியை நெருங்கும் போதே, வேல்பாண்டி அங்கிருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் அலைபேசியில் பேசிட, நேராய் இவர்கள் அரசு மருத்துவமனைக்குத் தான் சென்றனர்.
மலைப் பிரதேசம், சீக்கிரமே இருட்டியும் விட்டது.. இவர்கள் சென்று சேரும் பொழுதே இரவாகி விட, அங்கே அத்தனை கூட்டமுமில்லை. வேல்பாண்டி முன்னே நடக்க, ஈசன் அவனுக்குப் பின்னே நடக்க, லட்சுமி முதலில் மெதுவாய் நடந்தவள், பின் ஈசனின் கரங்களை கெட்டியாய் பிடித்துகொண்டு நடக்க, அவனுக்கு என்ன தோன்றியதோ பிடித்த கைகளை விடவேயில்லை.
மருத்துவமனைக்குள் நுழைந்து, சற்று உள்ளே சென்றதுமே, அங்கிருக்கும் காவல் துறையினர் வந்து அழைத்துச் செல்ல, கொஞ்சம் தாண்டி தனியே இருந்த கட்டிடம் ஒன்றிற்கு செல்லும் போதே, லட்சுமிக்கு இதயம் ரொம்ப வேகமாய் துடிப்பது போல் இருந்தது..
எங்கே செல்கிறோம் என்று புரிய.. கலக்கமாய் ஈசனைக் காண, அவனோ அவள் பார்வைக்கான அர்த்தம் புரிந்தவன் போல்,
“லஷ்மி.. மார்ச்சுவரிக்கு எல்லாம் நீ வேணாம்.. இங்க உட்கார்..” என்று அங்கே இருந்த இருக்கையை காட்ட, “இல்ல வர்றேன்..” என்றாள் தனியே அங்கே இருக்க பயந்து..
வேல்பாண்டி முன்னே சென்றவன், இவர்கள் வரமால் போனதை உணர்ந்து, என்னவென்று திரும்பிப் பார்க்க, ஈசன் விபரம் சொல்ல, “ம்ம்..” என்று யோசித்தவன்,
“ரெண்டு பேருமே இங்க இருங்க…” என்றுவிட்டு மற்ற காவல்துறையினரை அழைத்துக்கொண்டு முன்னே சென்றான்..
லட்சுமி கலக்கமாய் ஈசனைப் பார்க்க, அவனோ அவளது கைகளை பிடித்தபடி அப்படியே நிற்க, கொஞ்ச நேரத்தில் ஆட்கள் நடந்து வரும் சப்தமும், பேசும் சப்தமும் கேட்க, ஈசன் முதலில் சுதாரித்தவன், “லஷ்மி..” என்றழைக்க, அவளும் ஒரு திடுக்கிடலோடு எழுந்து நின்றாள்.
மருத்துவர்கள் சிலரும், காவல் துறையினர் சிலரும் வந்துகொண்டு இருக்க, அவர்களுக்கு பின்னே ஸ்ட்ரெச்சரில் வேலாயுதத்தின் உடலும், சற்று தள்ளி, முத்தரசியும் மனோஜும் வருவது தெரிந்தது..
ஈசன் அவர்களை கண்டதும் “லஷ்மி வா..” என்று சொல்லி முன்னே நடக்க, லட்சுமி அங்கே போகவெல்லாம் இல்லை. அப்படியே நின்றிருந்தாள்..
தான் என்ன உணர்கிறோம் என்றெல்லாம் தெரியாமல், அப்படியே நிற்க, முத்தரசி முதலில் லட்சுமியைப் பார்த்தவர் வேகமாய் ஓடி வந்து “லட்சுமி…” என்று கட்டிக்கொண்டு கதற, அப்போதும் லஷ்மிக்கு எவ்வித உணர்வும் இல்லை..
ஸ்ட்ரெச்சர் அவர்களை கடந்து செல்ல, ஈசனோ அங்கிருந்த மருத்துவர்களோடும், காவல்துறையினரோடும் பேசிக்கொண்டிருந்தவன், முத்தரசியின் அழுகையில் திரும்பிப் பார்க்க, அப்பபோது தான் கவனித்தான் மனோஜ் எங்கேயோ பார்வையை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தான்..
முத்தரசி முகத்தில் இருக்கும் அழுகை கவலை எதுவும் அவனிடம் இல்லை. சுற்றி நடப்பது எதுவுமே உணராமல் என்னவோ வேடிக்கை பார்த்து நிற்பது போல் நின்றிருந்தான்..
முத்தரசியின் கதறலில் லட்சுமி கொஞ்சம் தெளிய, “சி.. சித்தி…” என்று அவரைப் பார்க்க,
“இப்படியாகும்னு நினைக்கலையே லட்சுமி…” என்று மீண்டும் முத்தரசி கதற, அப்போது தான் அவள் சுற்றிலும் பார்க்க, வேலாயுதம் உடல் அங்கில்லை..
“சித்தி..” என்று மீண்டும் அவள் கேள்வியாய் பார்க்க, என்னவோ அவளுக்கு அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் போக, அவளையும் அறியாமல் அவளின் பார்வை முத்தரசிக்கு பின்னே இருந்த மனோஜ் மீது படிய, அவனோ எங்கேயோ பார்த்து நின்றிருந்தான்..
“இ.. இவன் ஏன் இப்படியிருக்கான்..” என்று லட்சுமி மனோஜை நோக்கி கேட்க, முத்தரசி திரும்பி மகனைப் பார்த்தவர், “என்னென்னவோ நடந்திடுச்சு லட்சுமி..” என்று மேலும் அழ ஆரம்பித்தார்.