“கூட இருந்தே இப்படி பண்ணிட்டானே.. இவனை சும்மாவே விடக்கூடாது..”
இப்படியெல்லாம் அனைவரின் கோபங்களுக்கும், வருத்தங்களுக்கும், சொந்தக்காரரான வேலாயுதம் இன்று உயிரோடு இல்லை..
‘வினாஸ காலே விபரீத புத்தி..’ அழிவு நேர்கையில் தான் புத்தியும் தடம்புரளுமாம்.. ஆனால் இவருக்கு, புத்தி தடம்புரண்டதால் தான் அழிவு நேர்ந்ததோ என்றிருந்தது அனைவருக்கும்.
காலத்தை போன்றொதொரு நன்மருந்து வேறெதுவும் இல்லை.. நாட்கள் செல்ல செல்ல, அனைவரின் வாழ்வும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது.
மனோஜிற்கு மனோதத்துவ நிபுணரிடம் சிகிச்சை மேற்கொண்டனர். முதல் நாள் வந்தபோது, உணர்ச்சியின் பிடியில், இப்படியாகி போனதே என்ற வருத்தத்தில் அனைத்தையும் கொட்டித் தீர்த்த முத்தரசி, அதன் பின் அனைவரும் காட்டிய அக்கறையிலும், பெருந்தன்மையிலும் தனக்குள்ளே ஒடுங்கி, கூனிக்குறுகிப் போனார்.
யாரோடும் பேசாமல், அறைக்குள்ளேயே ஒடுங்க, மனோஜும் இப்படியிருக்க, அனைவருக்கும் எப்படியடா இவர்களை சரி செய்வது என்று முழிப் பிதுங்கியது. முத்தரசி வீட்டினர் பெயருக்கு வந்து சென்றுவிட, பேச்சியோடு தான் அவர்கள் இருந்தனர்..
பேச்சியும் ஒருவராய் இருவரையும் சமாளிக்க முடியாது போக, ஈசன் எல்லாத்தையும் பார்த்தவன்
“லஷ்மி.. எல்லாம் சரியாகுற வரை அங்க இருக்கியா..” என, “நானும் இதே தான் சொல்லணும்னு நினைச்சேன் மாமா…” என்றவள் அடுத்து அங்கே போய் தான் இருந்தாள்.
கல்லூரிக்கும் சென்று வந்தவள், முடிந்தளவு வீட்டில் அவர்களோடு இருந்தாள். மரகதம், முத்தழகு எல்லாம் வேலை நேரம் போக அவர்களோடே இருக்க, முத்தரசி தேறுவது போலவே தெரியவில்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்த லட்சுமி தான், “சித்தி நீங்க இப்படி பண்றது நல்லாருக்கா..” என்று கேட்க, அவரோ கண்ணீர் கண்களோடு பார்த்தார்.
“என்ன சித்தி. மனோஜ பாருங்க… நீங்களும் இப்படியிருந்தா அவன் என்ன செய்வான்.. இந்த நேரத்துல உங்களோட அரவணைப்பு தான் அவனுக்கு வேணும்.. நாங்க எல்லாம் இருக்கோம் தான்.. ஆனா நீங்க இப்படியிருந்தா எப்படி சித்தி.. அப்பாவும் இல்லை, அம்மா இருந்தும் இப்படி ஒதுங்கியிருந்தா எப்படி இருக்கும் அவனுக்கும்.. பாவமில்லையா அவன்..” என, அப்போதும் முத்தரசி அமைதியாய் இருக்க,
“சித்தி… நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.. நாங்க யாரும் எதுவும் நினைக்கல.. ஆனா இப்படி நீங்க உங்களுக்குள்ளவே முடங்கிப்போனா சரியாகிடுமா.. ஒரு பிள்ளைக்கு அப்பா அம்மா ரெண்டுபேரும் தான் முக்கியம்.. அப்பா இல்லாம நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும்.. இப்போ சித்தப்பாவும் இல்லை.. நீங்களும் இப்படின்னா எப்படி..” என்று சற்று காட்டமாகவே கேட்க, அது நன்றாகவே வேலை செய்தது.
“என்னால முடியல லட்சுமி..” என்று அவள் கைகளை பிடித்துக்கொண்டு அழ, “கொஞ்சம் உங்களை நீங்களே திடப் படுத்திக்கோங்க சித்தி..” என்று ஆறுதல் அளிக்க,
அடுத்து மனோஜிற்கு கவுன்சிலிங் செல்லும் போது, முத்தரசிக்கும் இரண்டு முறை கவுன்சிலிங் கொடுக்கப்பட, கொஞ்சம் கொஞ்சமாய் அவரிடம் நல்ல மாற்றங்கள் தெரிந்தது.. கொஞ்சம் கொஞ்சம் அனைவரிடமும் பேசுவதும், பேச்சியோடு வெளியே சென்றுவருவதும், மனோஜைப் பார்ப்பதுமாக இருந்தார்..
முத்தரசி சரியாகவும் தான் திரும்ப லட்சுமி ஈசன் வீட்டிற்க்குச் சென்றாள்.. ஈசனுக்கோ வேலை வேலை வேலை.. வீட்டில் இருக்கும் நேரமே கம்மியாகி, இரவு மட்டும் தான் வீடு வரும் நிலை.
லட்சுமியோ, காலை எழுந்து, மரகதத்திற்கு உதவியாய் வேலைகளை செய்துவிட்டு, கல்லூரி கிளம்பி சென்றாள் என்றால், மாலை வந்து ஒருமுறை அவள் வீட்டிற்கு சென்று வந்து, தன் படிப்பையும் பார்த்து என்று அவளுக்கும் நேரம் சரியாய் இருந்தது.
இருவருக்குமான தனிப்பட்ட நேரம் என்பது எல்லாம், உறங்கும் பொழுதுகள் என்றுமட்டுமாகி விட, அதிலுமே இருவருக்கும் அலுப்பத்தான் மிஞ்சியிருக்க, பேசும் பொழுதுகள் என்பது குறைந்து போனது.
பாலாவிற்கு அவனது வேலைகள் சென்னையில் சரியாய் இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் அவனும் அவனது துறையில் முன்னேறிக்கொண்டு இருந்தான்..
வேலாயுதம் மரணத்திற்கு பின் யாருமே அவரைப் பற்றி பேசுவதில். என்ன பேசி என்ன பிரயோஜனம் என்றிருக்க,
“நம்ம கோவத்தை கூட காட்ட முடியாம போச்சே..” என்றார் முத்தழகு ஒருநாள் ஆற்றாமையாய்.
“ம்மா என்ன பேச்சு இது.. அவனே இல்லை….” என்று கஜேந்திரன் அரட்ட,
“அதுக்கு சொல்லல கஜா… இங்க இருந்திருந்தா உயிரோட இருந்திருப்பானோ என்னவோ அதனால சொன்னேன்..” என்று வருத்தத்தில் முடிக்க, அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த லட்சுமிக்கு மனதில் வேறொரு சிந்தனை.
ஈசன் அன்றிரவு கொஞ்சம் சீக்கிரமே வீடு வர, மறுநாள் வார விடுமுறை என்பதால், லட்சுமியும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்க, அப்போது தான் இருவருக்கும் பேசவே நேரம் கிடைத்தது.. வழக்கம் போல் இரவு நேரம் மாடியில் அமர்ந்துகொண்டு பேச, “ரொம்ப நாள் ஆச்சுல்ல..” என்றாள்.
“ஆமா லஷ்மி..” என்றான் அவனும்
“வேலை எல்லாம் எப்படி மாமா போகுது.. அடுத்து ரெண்டு நாள் லீவ்தானே ஸ்கூல் போய் பார்க்கலாம்..”
“நாளைக்கு கூட்டிட்டு போறேன் லஷ்மி..” என்றவன் அடுத்து மனோஜைப் பற்றி கொஞ்சம் பேசினான்..
மனோஜை இப்போது வீட்டிற்குள்ளேயே இருக்க விடுவதில்லை. ஈசன் அடிக்கடி அவனோடு வெளியே அழைத்துச் சென்றான்.. தோட்டத்திற்கு போகும் போது, கட்டிட வேலை நடக்கும் இடத்திற்கு என்று கூடவே அழைத்துச் சென்று, அவனோடு அடிக்கடி பேசிக்கொண்டிருக்க, மனோஜிடமும் நல்ல முன்னேற்றம் இருந்தது.
“இப்போ பரவாயில்ல லஷ்மி கேட்கிறதுக்கு பதில் சொல்றான்
“சாயங்கலாம் நானும் பேசினேன் மாமா.. இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு.. சித்தப்பா பண்ணதுக்கு இவன் கஷ்டபடனுமான்னு நினைச்சேன்…” என்றவளின் முகம் யோசனையாய் போக,
“என்ன லஷ்மி யோசனை..” என்றான்.
“சித்திக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு நினைச்சேன் மாமா.. பேசிட்டு சொல்றேன்..” என்றதும், அவனும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை..
லட்சுமி அமர்ந்த வாக்கிலேயே அவன் மீது சாய்ந்துகொள்ள அவனும் அவளை தன்னோடு இறுக்கிக்கொள்ள, இருவருமே மௌனமாய் தான் இருந்தனர்.. பாசைகள் பேசா மொழியை அவர்களின் அமைதி பேசியதோ என்னவோ…
மறுநாள் விடிந்ததும் வேலைகளை முடித்துவிட்டு லட்சுமி முத்தரசியை காண வந்தாள்.
“சித்தி உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றவள் அவரிடம் சில விசயங்களை வெளிப்படையாகவே பேச, இதற்கிடையில் இங்கே நடந்த பிரச்னைகள் அனைத்தையும் சொல்லியிருக்க, லட்சுமி வந்து பேசிய விசயத்தையும் கேட்டு, அமைதியாய் இருந்த முத்தரசி கடைசியில் “என்னை மன்னிச்சிடு லட்சுமி..” என்று அவள் காலுக்கு விழப் போக, “ஐயோ என்ன சித்தி இது..” என்று பதறி விலகினாள்.
“இல்ல லட்சுமி.. சின்ன பிள்ளைல இருந்து எங்க கண்ணு முன்னாடி தான் நீ வளர்ந்த, உன்னைய கூட நினைக்காம…” என்று இழுத்தவர்,
“சத்தியமா சொல்றேன் லட்சுமி எல்லாருக்கும் தெரிஞ்சுதான் இவர் இதெல்லாம் செய்றார்னு நினைச்சேன்.. அவர் சொன்னதை எல்லாம் நம்பினேன்.. மனோஜ் படிப்பு, இன்னும் வசதியான வாழ்க்கை.. அது இதுன்னு சொல்லவும் நானுமே கொஞ்சம் புத்தி பெசகிட்டேன்.. இங்கிருந்து கிளம்பி போறப்போ கூட யாருக்கிட்டயும் சொல்லிட்டு போகல…” என்று மீண்டும் பழைய நினைவிற்கு செல்ல,
“சித்தி ப்ளீஸ் அதெல்லாம் இனி வேணாமே.. இனிமே என்ன செய்யணுமோ அதை மட்டும் பாப்போமே..” என்றவள், “மனோஜ் வாழ்கை நல்லாயிருக்கனும் சித்தி.. அவனோட வாழ்க்கை ஆரம்பிக்கிறப்போ யாரும் அவனை கை நீட்டி ஒரு வார்த்தை சொல்லிட கூடாது..” என,
“நீ என்ன சொல்றியோ அதுபடி செய்யலாம் லட்சுமி..” என்றார் சம்மதமாய்..
முத்தரசி என்ன சொல்வாரோ என்று நினைத்திருந்தவளுக்கு, அவர் சம்மதம் சொல்லவும் கொஞ்சம் நிம்மதியாய் இருந்தது. அன்றிரவே, வீட்டில் அனைவரிடமும் இதைப் பற்றி பேசவேண்டும் என்று லட்சுமி நினைத்திருக்க, அதற்கான சந்தர்பமும் தானாகவே அமைந்தது..
கஜேந்திரன் லட்சுமியையும் ஈசனையும் அழைத்தவர், “நம்ம ஸ்டே வாங்கிருந்தோமே வேலாயுதம் சொத்து மேல.. அதை இன்னமும் அப்படியே வச்சிருக்க முடியாதே..” என்றார்.
லட்சுமியும் இதுதான் வாய்ப்பென்று , “மாமா.. நான் கொஞ்சம் பேசலாமா..” என, கஜேந்திரன் சம்மதமாய் தலையசைக்க, ஈசனோ இருவர் பேசுவதையும் ஒரு பார்வையாளனாகப் பார்த்திருக்க, அவனையும் ஒரு பார்வை பார்த்தே லட்சுமி ஆரம்பித்தாள்.
“சித்தப்பா ப்ராபெர்ட்டி மேல இருக்க ஸ்டே ஆர்டர திரும்ப வாங்கிடலாம்.. அவங்க பேர்ல இருக்க சொத்துல தேவையானது போக, மத்த எல்லாத்தையும் வித்துட்டு, சித்.. சித்தப்பா எவ்வளோ பணம் எடுத்தாரோ, அது போக மீத பணம் இருந்தா அதை அப்படியே சித்திக்கிட்ட கொடுத்துடலாம்..” என, மற்றவர்கள் அனைவருக்குமே இதென்ன புதிதாய் என்று இருந்தது..