“பணம் இப்போ பிரச்சனை இல்லை லட்சுமி.. நம்மலே சமாளிச்சுக்கலாம்.. ஸ்டே மட்டும் திரும்ப வாங்கிடலாம்..” என்று கஜேந்திரன் சொல்ல,
“இல்ல மாமா.. வேணாம்.. மனோஜ் நல்லாகி அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை அமையும் போது எந்த காரணத்துக்காகவும் சித்தப்பா பண்ண எதுவுமே அவன் மேல விழக்கூடாது.. உன் அப்பா இப்படி பண்ணிட்டார்.. அது இதுன்னு எதுவுமே அவனை பாதிக்க கூடாது.. முக்கியமா சித்தப்பா பண்ண வேலைக்கு அவன் கடன்பட்டு நிக்க கூடாது…” என, அங்கே பெருத்த அமைதி..
ஈசனுக்கோ லட்சுமி சொல்வது சரியாகவே இருந்தாலும் இன்னும் மனத்தில் பழையது எல்லாம் வைத்திருக்கிறாளோ என்று தோன்றியது..
அன்று ‘உன் சித்தப்பா..’ என்று சொன்னதற்காக எத்தனை வருந்தினாள் என்பது அவனுக்கு மறக்க முடியுமா என்ன.. ஆக அதெல்லாம் மனதில் வைத்துத்தான் இப்போதும் பேசுகிறாளா என்றிருக்க, அவளையே கூர்மையாக பார்த்திருந்தான்.
அனைவரும் அமைதியாய் இருக்க “நான்.. நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா..” என்றாள் தயக்கமாய்.
கஜேந்திரனோ “நீ சொல்றது தப்பில்லைம்மா.. ஆனா இப்போ இருக்கிற நிலைல சொத்து அது இதுன்னு எழுதி கொடுக்க சொல்லி, பணம் விஷயம் எல்லாம் பேசி.. அதான் தயக்கமா இருக்கு..” என்று சொல்ல,
“இல்ல மாமா.. எதையுமே சூட்டோட சூட்டா செஞ்சிட்டா தான் நல்லது.. சித்திக்குமே அதுக்கப்புறம் தான் ஒரு நிமிர்வு வரும்.. இப்பவும் பாருங்க மனசுக்குள்ள ரொம்ப மறுகுறாங்க…” என்றாள்..
மரகதமும், முத்தழகும் இதில் நீங்க எடுக்கும் முடிவு தான் என்றிட, கஜேந்திரனோ ஈசனைப் பார்த்தார்..
‘ஓ.. பேசிட்டு வந்து தான் எல்லாம் பேசுறாளா..’ என்றெண்ணிய ஈசன், “இதுக்குமேல என்னய்யா.. என்ன செய்யணுமோ செய்யலாம்..” என்றிட, அவன் முகத்தில் தெரிந்த மாற்றம் கண்டு, ‘இப்போ ஏன் ஈஸ் மாமா உர்ருன்னு இருக்காங்க..’ என்று யோசிக்க,
“நீயேவா லட்சுமி இதை பேசின..” என்று மரகதம் கேட்க, “ஆமா அத்தை.. இப்படி பண்ணிட்டா அவங்களுக்கு கொஞ்சம் திருப்தியாவாது இருக்குமே.. நாளைக்கு மனோஜுக்கும் பிரச்சனை வராது பாருங்க..” என்றாள்..
“பரவாயில்ல லட்சுமி.. நோய் இருக்கும்போது தான் மருந்து சாப்பிடனும்.. நாள் போகட்டும்னு தள்ளி போட்டா சரி வராது..” என்று முத்தழகு சொல்ல, முடிவாய் அனைவரும் கஜேந்திரனைப் பார்த்தனர்.
“சரி நாளைக்கு இன்னொரு தடவ, முத்தழகுக் கிட்ட பேசிட்டு, லாயரைக் கூப்பிட்டு பேசிடலாம்..” என்று கஜேந்திரன் சொன்ன பிறகே லட்சுமிக்கு இயல்பாய் மூச்சு விட முடிந்தது.
அவளுக்கு மனோஜை நினைத்து நிஜமாகவே வருத்தமாய் இருந்தது. அவள் சிறு வயதில் தந்தையை இழந்து, என்னதான் வசதி இருந்தாலும் இன்னொருவர் நிழலில் வளர்ந்து என்று நிறைய ஏக்கங்கள் சுமந்தாளோ, அதைவிட கஷ்டமான சூழல் இப்போது மனோஜிற்கு.
அவன் அதை உணரும் நிலையில் இல்லைதான். இருந்தாலும் அவன் தெளிவாகி நன்றாகி வரும்போது, அவனுக்கென்று ஒரு வாழ்க்கை அமையும்போது பழைய கசப்பான விசயங்கள் எதுவுமே அவனது வாழ்வில் இருக்கக் கூடாது என்றுதான் இதெல்லாம் யோசித்தாள்.
ஆனால் ஈசன் மனதிலோ வேறு ஒரு எண்ணம்.. லட்சுமி இன்னும் அந்த விசயங்களை மறக்கவில்லையோ என்று.
ஈசன் முதலில் மேலே சென்றிட, மீதமிருந்த வேலைகள் எல்லாம் முடித்து லட்சுமியும் மேலே செல்ல, அவள் வந்தது தெரிந்தும் ஈசன் கண்களைத் திறக்கவில்லை..
‘லஷ்மி நீ இன்னும் அதெல்லாம் மறக்கலையா..’ என்று அவனாகவே நினைத்துக்கொண்டிருக்க, அருகே வந்து லட்சுமி படுப்பது தெரிந்தது.
ஏதாவது பேசுவான், என்று எதிர்பார்த்து வந்தால், அவனோ திரும்பிக் கூட பார்க்காமல் இருக்க, கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தவள், அவனிடம் எந்த மாற்றமும் இல்லாது போக, “மாமா..” என்றழைத்தாள் மெல்ல.
அவனோ கேட்காதது போல ஈசன் படுத்திருக்க, “ஈஸ் மாமா..” என்றாள் மீண்டும்..
அவன் சட்டை செய்யாமல் இருக்க, திரும்ப திரும்ப “ஈஸ் மாமா…” என்று உலுக்க, “ம்ம்ச் என்ன டி வேணும் உனக்கு…” என்றான் கடுப்பாய்.
“இப்போ ஏன் மாமா இப்படி பண்றீங்க..??” என்றாள் நிஜமாகவே அவன் ஏன் இப்படி செய்கிறான் என்று புரியாமல்.
“உனக்கு என்ன டி ஆச்சு..” என்றான் அவனும் அதே பிடிவாதமாய்.
“எனக்கென்னாச்சு.. நல்லாதானே இருக்கேன்..” என்று வேகமாய் சொன்னவளை பிடித்து இழுத்தவன், “நிஜமா…” என்று அவள் கண்களைப் பார்க்க, அவளோ குழப்பமாய் பார்த்தாள்.
“சொல்லு டி.. என்னாச்சு உனக்கு.. அப்போ நீ இன்னும் பழசை மறக்கல.. அப்படித்தானே” என்று இன்னும் பிடியை இறுக்கிக் கேட்க,
“முதல்ல எப்போ பார் இப்படி பிடிக்கிறதை விடுங்க மாமா..” என்று அவன் கைகளை தட்டிவிட்டவள், அவன் அடுத்து பேசுவதற்கு முன்பே, அவன் மீது சாய்ந்து படுத்துக்கொண்டு “இது ஓகே வா..” என, அவனோ முறைத்தான்.
“இப்போ ஏன் மாமா முறைப்பு..” என்றவள், இன்னும் நேராய் சாய்ந்து அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க, “ஏன் உனக்கு தெரியாதா..” என்றான்.
“நிஜமா தெரியலை.. கீழ நான் பேசினதுல எதுவும் தப்பிருக்கா.. உங்களுக்கு இந்த ஏற்பாடு பிடிக்கலையா மாமா..??” என்றாள் ஒருவேளை அவன் மனதில் வேறு எதுவும் யோசனை இருக்கிறதோ என்றெண்ணி..
“இல்ல.. கொஞ்ச நாள் அப்புறம் நானே இதைத்தான் சொல்லிருப்பேன் லஷ்மி.. ஆனா.. நீ பேசினப்போ இன்னும் உன் மனசுல பழசெல்லாம் அப்படியே இருக்கோன்னு தோணுது…”
“என்ன பழைய விஷயம்..”
“உனக்கு நிஜமாவே புரியலையா இல்லை சும்மா சொல்றியா..”
“ஹ்ம்ம் மனோஜ் விசயம் சொன்னல்ல, அப்போ இன்னும் உன் மனசுல அதாவது ‘உன் சித்தப்பா..’ அப்படின்னு சொல்லி அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் அப்படியே இருக்கா…” என்று ஈசன் கேட்டதும், அவள் பார்த்த பார்வை இப்போது அவனுக்குத் தான் புரியாமல் போனது..
“என்ன டி.. சொல்லு அப்படித்தான..”
அவனுக்கு சொல்லப்போனால் கோவம் கூட இல்லை.. வருத்தம் தான். அதை அப்படி வெளிப்படுத்துகிறான். இன்னும் இவள் மனதில் என்ன இருக்கிறதோ என்ற வருத்தம்.. உள்ளேயே வைத்திருக்கிறாளோ என்ற வருத்தம்.. அதை எப்படி வெளிபடுத்த என்று தெரியாமல் இப்படி பிடிவாதமாய் பேச, அவளோ இப்போது அவனை விட முறைத்தாள்.
“இப்போ ஏன் நீ முறைக்கிற..??”
“பின்ன முறைக்காம… அப்போ இவ்வளோ தான் நீங்க என்னை புரிஞ்சுக்கிட்டீங்களா மாமா..” என்றவள் வேகமாய் விலகிப் படுக்க, அவள் விலகுவதும் பிடிக்காமல், “இப்போ ஏன் தள்ளி போற..” என்றவன், அவள் சாய்ந்தது போல், அவள் மீது சாய,
“போங்க போங்க.. நான் என்ன சொன்னேன் நீங்க என்ன கேட்கிறீங்க..” என்று அவனைத் தள்ளினாள் லட்சுமி..
“நீ சாயும் போது நான் ஏதாவது சொன்னேனா..??” என்றவன் இன்னும் அழுத்தமாய் சாய,
“என்ன கேட்டாலும் பதில் சொல்லமாட்டேன்.. இப்போக் கூட நீங்க என்னை புரிஞ்சுக்கலை..” என்று லட்சுமி வருத்தம்கொள்ள,
“உன்னை புரிஞ்சுக்கலைன்னு இல்லை லஷ்மி.. இன்னும் உன் மனசுல அந்த வருத்தமெல்லாம் இருக்கோன்னு தோணிச்சு.. உள்ளயே வச்சிருக்கியோன்னு தோணிச்சு.. அப்போ நான் உன்னை சரியா கவனிக்கலையோன்னு தோணிச்சு. அதான்..” என்று தனக்கு தோன்றியதை சொன்னான்.
“நான் இன்னும் அதெல்லாம் நினைப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா மாமா..” என அவளையே பார்ததிருந்தவனின் தலை இட வலமாய் ஆட,
“ஹ்ம்ம் அப்புறம் ஏன் இந்த கேள்வி..??” என்றாள்.
“அப்போ தோணிச்சு லஷ்மி..”
“நல்லா தோணிச்சு.. உங்க மனசுல இப்பவும் ஒரு பயம் நம்ம யாரையும் சரியா பார்த்துக்காம இருந்திடுவோமோன்னு.. முதல்ல அதை விடுங்க மாமா.. அப்புறம் இந்த கோவமெல்லாம் போயிடும்…” என்று ஈசனின் மனதை சரியாய் புரிந்து சொல்ல, அவனுக்கும் அது புரிந்தாலும் வேண்டுமென்றே,
“பயமா எனக்கா போ டி..” என்றவன், முன் போல அவனிடத்தில் படுக்க, “எங்க போக..” என்றவளும் அப்படியே இருக்க,
“எங்கயும் போகவேணாம் இங்க வா..” என்றவன் மீண்டும் அவளை தன் மீது சாய்த்துக்கொண்டான்.
“ம்ம்..” என்று அமைதியாய் அவன் மார்பில் முகத்தை வைத்துக்கொள்ள, லட்சுமி எதுவும் பேசுவாள் என்று நினைத்திருந்த ஈசன், அவள் அமைதியாய் இருக்கவும், “என்ன லஷ்மி அமைதியா இருக்க..” என அப்போதும் அவளிடம் பதிலே இல்லை..
அடுத்த நொடி அவன் மார்பில் ஈரம் உணர, “லஷ்மி என்னாச்சு..” என்று அவள் முகத்தை நிமிர்த்த முயல, அவளோ இன்னும் அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள்..