வேலாயுதம் இறந்த அன்று கூட லட்சுமி இப்படி அழவில்லை.. ஈசனுக்குத் துணையாய் நின்று அனைத்து வேலைகளையும் செய்தாள். கண்கள் கலங்கி இருந்தாலும், அனைவரும் அழுவதைப் பார்த்தாலும் அவள் அழவில்லை. அவள் உள்ளத்தில் எத்தனையோ இருந்தது.. ஆனால் அதற்க்கெல்லாம் அப்போது நேரமில்லை என்பதுபோல் இருந்தாள்..
‘அழறதுன்னா அழு லஷ்மி..’ என்று ஈசன் சொன்னபோது கூட, ‘இப்போ அதுக்கான நேரமில்லை மாமா..’ என்றுவிட்டாள்,.
ஆனால் இப்போது நன்றாய் பேசிக்கொண்டு இருந்தவள் அழ, ஈசனுக்கு என்னவோ போலானது. சரி ஏதுவாக இருந்தாலும், அழுது முடித்து அவளே சொல்லட்டும் என்றெண்ணி மென்மையாய் அவள் முதுகையும், கேசத்தையும் தடவியபடி இருக்க, கொஞ்சம் கொஞ்சமாய் லட்சுமியின் அழுகை மட்டுப்பட்டது.
“லஷ்மி..” என்று மெல்ல அழைக்க, “மனசே ஆரல மாமா…” என்று முதல் முறையாய் வேலாயுதத்தை எண்ணி வருந்தினாள்.
“ஹ்ம்ம் அவருக்கு இப்படி ஒரு சாவு வரணும்னு யாரும் நினைக்கல லஷ்மி..”
“ஒருவேளை இங்கவே இருந்திருந்தா இப்படி நடந்திருக்காதுல மாமா..” என்றவள், “சித்தப்பா வந்தா அவர்க்கிட்ட நிறைய விஷயம் கேட்கனும்னு நினைச்சிருந்தேன் மாமா.. ஏன் இப்படி பண்ணீங்க.. அப்போ என்னை நினைக்கலையான்னு.. இன்னும் நிறைய.. அவ்வளோ கோவமும் வெறுப்பும் இருந்தது.. ஆனா இப்போ அவர்கிட்ட நம்மதான் நன்றிகடன் பட்டிருக்கோம் மாமா…” என, அவள் கடைசியில் சொன்னது அவனுக்குச் சுத்தமாய் புரியவில்லை..
இத்தனை நேரம் அழுதாள், இப்போது இப்படி பேசுகிறாள் என்றிருக்க, “புரியுற மாதிரி சொல்லு லஷ்மி..” என்றான்.
அன்றொரு நாள் மரகதம் இவளிடம் ‘வேலு அண்ணா பண்ண ஒரே நல்லது உங்க கல்யாணம் பத்தி பேசினது தான்..’ என்று அதன் விபரம் சொன்னவள்,
“அப்போ இதெல்லாம் கேட்டு அவ்வளோ வெறுப்பா இருந்தது மாமா.. ஆனா இப்போ அவரே இல்லைன்னு ஆகவும், எல்லாம் தாண்டி அவருக்கு நன்றி தான் சொல்ல தோணுது.. அதுக்காகவாவது சித்தி மனோஜ் எல்லாரையும் நல்லா பார்த்துக்கணும் மாமா…” என்றாள் மீண்டும் விசும்பலுடன்..
“ஹ்ம்ம் அப்படி பார்த்தா நான் ரொம்ப பெரிய நன்றி சொல்லணும் லஷ்மி.. அவர் நல்லது பண்ணாரோ கெட்டது பண்ணாரோ.. ஆனா அவர் பண்ணது காடைசியில நமக்கு நல்லாதா தான் நடந்திருக்கு.. ம்ம்ச் என்ன அவரும் இருந்திருக்காலம்..” என்று முற்றிலுமாய் வேலாயுதம் மேலிருந்த வருத்தம் எல்லாம் போய் ஈசன் சொல்ல, “ஹ்ம்ம்” என்றுமட்டும் சொன்னவள் முகத்தைத் துடைக்க, இருவருக்குமே அந்த இரவு ஒருவித உணர்வில் தான் கழிந்தது..
மறுநாள் கஜேந்திரனே முத்தரசியிடம் பேச, அவரோ லட்சுமி சொன்னதை போலவே சொல்லி சரியென்று சொல்ல, அடுத்து வக்கீலைப் பார்த்து பேசி ஸ்டே ஆர்டரை திரும்ப வாங்கும் வேலைகள் நடந்தன..
இதற்கு நடுவே வேல்பாண்டி வந்து சில விசயங்கள் பேசிச் சென்றான்.. வேலாயுதம் மரணம், இயல்பாய் நடந்த ஒன்றல்லவே, ஆக அவரது கூட்டாளியின் பேரில் அந்த குற்றமும் சுமத்தப்பட்டிருக்க, அதற்கான பார்மாலிட்டீஸ் நிறைய இருந்தது..
ஈசனும், லட்சுமியும் தான் முத்தரசியை அழைத்துக்கொண்டு கேரளா சென்றுவந்தனர். லட்சுமி வர முடியாத பொழுது பேச்சி வந்தார் சென்றார்..
மனோஜ் மற்றும் முத்தரசியின் எதிர்காலத்திற்கு தேவையான அளவு வருமானம் வரும்படி ஏற்பாடு செய்துவிட்டு, மீதமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்றிட, அதில் வேலாயுதம் எடுத்த பணம் போக, மீத பணம் அப்படியே முத்தரசி பெயரில் வங்கியில் போடப்பட்டது.. பணத்தை எல்லாம் திரும்ப கொடுத்தபிறகு தான் முத்தரசி கொஞ்சம் தலை நிமிர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.
“இப்போதான் எனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு..” என்று அடிக்கடி சொல்லிக்கொண்டார்..
“பழசை எல்லாம் மறந்திடுங்க சித்தி..” என்று லட்சுமி சொன்னதற்கு கூட,
“அவருக்கு பேராசை கண்ணை மறைச்சிடுச்சு..” என, வேலாயுதம் இறந்தது முத்தரசிக்கு எத்தனை பெரிய இழப்பு என்று லட்சுமிக்கும் நன்றாகவே புரிந்தது..
ஓரளவு மனோஜும் தேறி வர, அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாய் நடந்த விஷயங்கள் எல்லாம் அவனுக்கு சொல்லிக்கொண்டு தான் இருந்தார் முத்தரசி. ஓரளவு அவன் தேறியதுமே முதலில் லட்சுமியைத் தான் “அக்கா…” என்று கட்டிக்கொண்டு அழுதான்..
அவளுக்குமே சங்கடமாய் போனது. ஆனாலும் திடமாகவே, “இங்க பாரு மனோஜ்.. இனி எதுக்காகவும் நீ கலங்கக் கூடாது.. இனிமேல்தான் நீ தைரியமா இருக்கணும்.. உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம்..” என்று சொன்னது மட்டுமல்லாமல், அதை செயலிலும் காட்டினாள்.
ஈசனும் அப்படித்தான், வேலாயுதத்தின் மகனாய் அவனைக் காணாது, பாலாவை எப்படி பார்க்கிறானோ அப்படியே அவனையும் ஏற்றுகொள்ள, மனோஜின் மனநிலையில் ரொம்பவே நல்ல முன்னேற்றங்கள் இருந்தது.
நாட்கள் அப்படியே கடக்க, பாலா நடுவில் இரண்டு முறை வந்து பார்த்துவிட்டு போனான்.. லட்சுமிக்கு ஒரு பக்கம் கல்லூரி.. படிப்பென்று செல்ல, ஈசனுக்கோ அவனுக்கான பொறுப்புகள் இன்னும் கூடியதாகவே இருந்தது..
ஆனால் நேரம் கிடைக்கையில், ஈசன் லட்சுமியை அழைத்துக்கொண்டு தோப்பு வீட்டிற்கு வந்துவிடுவான். இன்றும் அப்படி வந்திருக்க,
“பரவாயில்ல மாம்ஸ் நான் சொல்லாமயே எல்லாம் பண்றீங்க..” என்று கிண்டலடித்தவளிடம், “எல்லாம் பழக்க தோஷம்..” என்று சொல்லி செல்லமாய் முறைப்பையும் வாங்கிக்கொண்டான்.
ஈசனுக்கு இப்போதெல்லாம் எத்தனை வேலைகள் இருந்தாலும், வாழ்வில் முன் இருந்த ஒரு இறுக்கம் இல்லை.. ஒரு பிடிவாதம் ஒரு சலிப்பு எதுவுமில்லை. மாறாக அவன் மனதில் ஒரு அமைதி.. ஒரு சந்தோசம்.. ஒரு உற்சாகம் எப்போதுமிருக்க, இதற்கெல்லாம் காரணம் லட்சுமி என்று அவனுக்குத் தெரியாதா.
மனத்தில் எதுவோ தோன்ற, “லஷ்மி..” “இப்போ உன் மனசுல எந்த வருத்தமும் இல்லையே..” என, ரொம்ப நேரம் யோசித்தவள் “ஒண்ணு இருக்கு..” என்றாள்
‘இன்னுமென்ன..’ என்று ஈசன் பார்க்கவும், கலகலவென்று சிரித்தவள் “என்னனு கேளுங்க மாம்ஸ்..” என, அவனுக்கு புரிந்து போனது என்னது என்று..
“நீ சொல்லவே வேணாம்..” என்று பிகு செய்ய,
“போங்க இனி கேட்டாலும் சொல்லமாட்டேன்..” என்றாள் அவனுக்கும் மேலாய்.
“இருக்கட்டும் நான் என் முதம்மாக்கிட்ட கேட்டுக்கிறேன்..” என, “அப்போ லஷ்மி பிடிக்குமா முத்தம்மா பிடிக்குமா..” என்று லட்சுமி ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிக்க,
“உன்கிட்ட இருந்து எப்பவும் நான் தப்பிக்க விரும்பல லஷ்மி..” என்றவன் அவளை அப்படியே அமர்ந்தவாக்கில் அணைக்க, “அப்படியா அரெஸ்ட் பண்ணணுமா??” என்றாள் கண்களை விரித்து..
“அதான் எப்பவோ பண்ணிட்டியே..” என்றவனுக்கு சிரிப்பை மட்டும் பதிலாய் கொடுத்து, தோப்பில் இருக்கும் நீர் தொட்டியில் காலை விட்டு ஆட்டியவளை ரசித்தபடி இருந்தான்.. எப்போதும் அவனுக்குத் தோன்றும் அதே எண்ணம் தான் இப்போதும் அவனுக்குத் தோன்றியது..
‘என்ன பொண்ணுடா இவ..’
இந்த எண்ணம் இனி எப்போதுமே மாறப் போவதில்லை.. ஈசன் மனதில் லட்சுமிக்கான இடமென்பது யாருமே நினைத்து பார்க்காத ஒன்றாய் தான் இருக்கும்.. அதை விட, ஈசன் வேறில்லை.. லட்சுமி வேறில்லை.. இருவரும் ஒன்றே..
லட்சுமியோ அவனின் அமைதியைக் கண்டு திரும்பிப் பார்க்க, ஈசனது கண்களில் தெரிந்த மாற்றம் பார்த்து, “மாம்ஸ்.. இப்போ மாட்டிக்கிட்டீங்க.. சொல்லுங்க இப்போ பார்த்த பார்வைக்கு என்ன அர்த்தம்..??” என்று கேட்க,
“ஆகா.. இனி விடமாட்டாளே..” என்று அவள் காது படவே சொன்னவன், “சொல்லாட்டி என்ன செய்வ லஷ்மி..??” என்றான்.
“இதோ இந்த தொட்டில தள்ளி விடுவேன்..” என்றாள் யோசிக்காமல்.
“அடிப்பாவி.. ‘என்ன பொண்ணுடா இவ’ன்னு நான் பார்த்தா, நீ இப்படி தள்ளி விடுவன்னு சொல்ற..” என்றவன் கண்களை விரிக்க, “ஹ்ம்ம் சரி தள்ளி விடல..” என்றாள் வேகமாய்.
“என்ன பின் வாங்கிட்ட??”
“பின்வாங்கல.. பதில் வாங்கிட்டேன்..” என்று சிரித்தவள், “மாம்ஸ் சொல்லமாட்டேன்னு சொல்லிட்டு நீங்க சொல்லிட்டீங்களே..” என்றதும் தான் அவனுக்கும் புரிந்தது தான் நினைத்ததை சொல்லிவிட்டோம் என்று..
“சரியான போக்கிரி….” என்றவன், “என் மனசுல எப்பவுமே உன்னைப் பார்க்கிறப்போ இது தான் தோணும் ‘என்ன பொண்ணுடா இவ..’ அப்படின்னு….” என்று மூச்சை அடக்கி நெஞ்சில் கை வைத்து ஈசன் சொல்ல, அவனது ஒவ்வொரு செய்கையிலும் அவன் காதல் தெரிய, லட்சுமி மலர்ந்த புன்னகையோடு காதலாய் அவன் முகத்தைப் பார்த்திருந்தாள்.