மாவூற்று வேலப்பர் கோவில்.. ஈசனது குடும்பத்தில் எந்தவித முதல் விசேசமும் அங்குதான் நடைபெறும். இன்றும் அப்படியே.. ஈசன் லட்சுமியும் புதல்வன் ‘தியானேஷ்வரன்’க்கு முதல் மொட்டை.
ஆக அனைவரும் மாவூற்று வேலப்பர் கோவிலில் இருந்தனர்.. கோவிலின் கீழ் பிரகாரத்தில் விழாவிற்கு வந்த ஆட்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது..
தாய் மாமன் முறைக்கு மனோஜ் மடியில் வைத்துத்தான் முடி இறக்கினர்.. முத்தரசிக்கும் மனோஜிற்கும் அத்தனை சந்தோசம்.. மனோஜ் இப்போது பழையபடி நன்றாகிவிட்டான். தடைப்பட்ட அவனது படிப்பு மீண்டும் தொடர்ந்தது.
முத்தரசி, பேச்சி, மனோஜ் மூவரும் ஒன்றாகே ஒரே வீட்டில் இருக்க, பழைய கசப்பான விஷயங்களை யாரும் நினைப்பதில்லை. பேசுவதில்லை. பிறர் பேச அனுமதிப்பதும் இல்லை. அதிலும் லட்சுமி கருவுற்ற பிறகு முதலில் அவளைக் கவனிக்கவும், குழந்தை பிறந்த பிறகு அந்த சின்ன வாண்டின் மீது அனைவரின் கவனமும் சென்றிட வேறு நினைப்பதற்கு யாருக்கும் நேரமும் இல்லை.
இத்தனை ஆண்டுகளில் நிறைய நல்ல சங்கதிகள் நடந்திருந்தன.. பள்ளிக்கூடம் நல்ல முறையில் தொடங்கப்பட்டு, ஈசனும் லட்சுமியும் சொன்ன நல்ல விஷயங்கள் எல்லாம் அங்கே நடைமுறைப் படுத்திக்கொண்டிருந்தனர்.
அதே போல ஈசன் பால் பண்ணை இப்போது மதுரையிலும் கூட ஒன்றை தொடங்கியிருந்தான்.. மேலும் மேலும் அவனது தொழில் விஸ்தாரமாகிக் கொண்டு தான் இருந்தது. சூப்பர் மார்க்கெட்டாக இருந்ததை மாற்றி, பாலாவையும் அதில் ஒரு பங்குதாரராய் சேர்த்து பிரம்மாண்டமாய் வளர்ந்து நின்றிருந்தது ‘லஷ்மி சில்க்ஸ்..’
ஈசன் பிடிவாதமாய் ‘இந்த பேர் தான் வைக்கணும்’ என்று சொல்ல, வேறு வழியில்லாமல் சரியென்றாள் லட்சுமி..
“நான் எவ்வளோ அசையா சொல்றேன்.. நீ இப்படி டல்லடிக்கிற..” என்று குறைபட,
“அதுக்கில்ல மாமா..” என்றவளை லேசாய் முறைத்தான்..
“உடனே முறைக்காதீங்க மாமா..” என்றவள் “நான் ஏன் சொல்றேன்னு தெரியாதா???” என, சொன்னா தானே தெரியும் என்பதுபோல் பார்த்தான்.
“ஹ்ம்ம் அது… லஷ்மின்னு நீங்க மட்டும் தான் சொல்வீங்க.. இப்ப கடைக்கு அந்த பேர் வச்சா ஊரே லஷ்மின்னு சொல்லுமே..” என்று அவன் சட்டை பட்டனை திருக்கிக்கொண்டே சொன்னவளைப் பார்த்து, கடகடவென்று சிரித்துவிட்டான் ஈசன்.
“இப்போ ஏன் சிரிக்கிறீங்க??”
“இதென்னடி வம்பு.. முறைக்கவும் கூடாது சிரிக்கவும் கூடாதுன்னா நான் என்ன செய்ய..” என்று அங்கலாய்த்தவன், “ஆனா இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கல லஷ்மி..” என்று மீண்டும் சிரிக்க,
“ம்ம்ஹும் போங்க மாமா..” என்று தள்ளிப் போனவளை பிடித்து நிறுத்தியவன், “அட என் முத்தம்மா.. அது உன் கடை.. நீதானே ஓனர்.. சோ உன் பேர் தான் வைப்பேன்..” என்றான் முடிவாய்.
“ஹா ஹா.. இதுக்கூட நல்லாருக்கே.. ஆனா முத்தம்மா அப்பப்போதான்.. பட் லஷ்மி எப்பவுமே…” என்று அவன் சொன்ன விதத்தில் லட்சுமிக்கு கொஞ்சம் பேச்சு மறந்துதான் போனது..
“என்ன லஷ்மி அப்படியே நின்னுட்ட..??” என்று அவளை மீட்டவனைப் பார்த்தவள், “ஹ்ம்ம் எனக்கு முன்னாடியே தெரியும் இந்த பேர் தான் நீங்க சொல்வீங்கன்னு…” என்றபடி, அவன் எதிர்பார்க்கா நேரத்தில் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட,
“ஹா ஹா கள்ளி முத்தம்மா..” என்று ஈசன் அவளை அணைத்துக்கொள்ள, அடுத்து வந்த ஒரு நன்னாளில் ‘லஷ்மி சில்க்ஸ்..’ கடைத் திறப்புவிழா அழகாய் நடந்தேறியது.
லட்சுமி படிப்பெல்லாம் முடித்து வரும்வரைக்கும் ஈசன் தான் அவள் பொறுப்பில் பள்ளிக்கூடத்தில் இருந்தான். வெங்கடாசலம் அனைத்தையும் சொல்லிக்கொடுக்க, நேரம் கிடைத்தால் லட்சுமியையும் அழைத்துக்கொண்டு செல்வான்..
ஒருவழியாய் லட்சுமி முதுகலை கணிதம் படித்து முடிக்கையிலேயே, ஈசன் “இது மட்டும் போதுமா..” என, அவளோ யோசனையாய் “M.Phil. பண்ணட்டுமா..” என்றாள்.
“என்ன டீச்சிங்கா… படிக்கணும்னு ஆசையிருக்கு அதுனால சொன்னேன்… ஆனா..” என்று அவள் சொல்லும் போதே, “இரு இரு.. போதும்.. உனக்கு இயல்பாவே சொல்லிக்கொடுக்க நல்லா வருது அதான் சொன்னேன். இப்போ முதல்ல படிக்கிறதை மட்டும் பாரு..” என்றான்..
“ம்ம் அது..” என்றவள் அடுத்து M.Phil – ம் படித்து முடித்தாள்..
ஆனால் ஈசன் விடுவானா, அவளுக்கு நன்றாய் ஒருவிசயம் வருகிறதென்றால், பின் ஏன் அதை சும்மா விட வேண்டும் என்றிருக்க, படிப்பெல்லாம் முடிந்ததும் முதலில் நிர்வாகத்திற்கு என்று பள்ளிக்கூடம் சென்று வந்தவளை, வெங்காடசலத்திடம் சொல்லி வகுப்புகள் எடுக்க வைத்திருந்தான்.
“லட்சுமி.. ஈவ்னிங் டைம்ல கொஞ்ச ஸ்டூடண்ட்ஸ்க்கு டியூசன் போல எடுக்க முடியுமா.. வீக் ஸ்டூடன்ஸ இப்போயிருந்து ட்ரைன் பண்ணிட்டா சரியாகிடுவாங்க..” என்றவரிடம் மறுக்கமுடியவில்லை.
முதலில் கொஞ்சம் திணறலாகவே மாலை நேரத்தில் ஒருமணி நேரம் என்று பள்ளிக்கூடத்திலேயே வகுப்புகள் எடுக்க, நாளடைவில் அதுவே லட்சுமிக்கு பிடித்தமாகி போனது. அதன் பின் இன்னும் கொஞ்சம் வகுப்புகள் எடுக்க பழகி, ஒரு நாளைக்கு மூன்று வகுப்புகள் மட்டும், கணக்கு பாடம் எடுத்தாள்.. மீத நேரம் பள்ளிக்கூட வேலைகளை கவனித்துக் கொண்டாள்.
லஷ்மி சில்க்ஸ் கஜேந்திரன் பொறுப்பில் இருந்தது. ஈசன் பால் பண்ணை, கேபிள்ஸ், தோட்டம், வயல், ஃபைனான்ஸ் என்று எல்லாம் கவனிக்க, ‘லஷ்மி சில்க்ஸ்’ கஜேந்திரன் பார்த்தார். அவ்வப்போது லட்சுமியும் அங்கே செல்வாள்.
ஆக எல்லாமே அதனதன் இடத்தில் பொருந்தி அழகாய் ரிதமாய் உருண்டோடும் சக்கரம் போல் அனைவரின் வாழ்வும் சுழன்றுக் கொண்டிருந்தது.
அன்று பள்ளிக்கூடம் அரைதினம் என்பதால், சீக்கிரமே லட்சுமி வீடு வந்திட, மரகதம் “நல்லா சாப்பிடு லட்சுமி.. பார்க்கவே சோர்வா தெரியுற…” என்று சொல்ல, அவளுக்கும் அதே சோர்வை உணர முடிந்தது..
“எதுக்கும் டாக்டர பார்த்துட்டு வரலாமா..” என்று அக்கறையாய் விசாரித்தவரிடம்,
“அச்சோ வேணாம்.. அங்க போனா டானிக் தான் குடுப்பாங்க.. அதுக்கு ரெண்டு கிளாஸ் ஜூஸ் நான் சேர்த்தே குடிக்கிறேன்..” என்றவளை பார்த்தவர், “அப்போ இப்போவே குடி..” என்று வேலையாளிடம் ஜூஸ் போட்டு எடுத்து வர சொல்ல,
‘தெரியாம வாய் விட்டோமோ..’ என்று எண்ணியபடி கொண்டு வந்து கொடுத்த ஜூஸை குடித்து முடித்தாள்.
ஆனால் குடித்த கொஞ்ச நேரத்திலேயே அத்தனையும் வாந்தியாய் வெளி வர, மரகதம் முதலில் பதறியவர் வேகமாய் ஈசனுக்கு அழைத்துவிட, அவனோ அதை விட வேகமாய் வீடு வந்து சேர்ந்தான்..
“என்னாச்சு லஷ்மி.. கிளம்பு கிளம்பு டாக்டர் கிட்ட போகலாம்..” என்று ஈசன் சொல்ல,
அதற்குள் மரகதம், பேச்சி வீட்டிலும் சொல்லிட, அங்கிருந்தும் அனைவரும் என்னவோ என்று வந்திட, முத்தழகு தான் “எல்லாம் கொஞ்சம் சும்மாயிருங்க..” என்றுவிட்டு, லட்சுமிக்கு நாடி பிடித்து பார்த்தார்..
அனைவருமே ஒருவித ஆவலும், ஆசையுமாய் என்ன சொல்ல போகிறாரோ என்று பார்க்க, அவர் முகமோ பிரகாசமாய் ஜொலித்தது..
திருமணமாகி இத்தனை வருடங்கள் ஆகிறதே, லட்சுமிக்கு அடுத்து திருமணம் நடந்த ரேவதி, ஸ்நேகாவிற்கு கூட அடுத்தடுத்து பிள்ளைகள் பிறந்திட, இவர்களுக்கு மட்டும் ஏனில்லை என்று அனைவரின் மனதிலும் இருந்தாலும் யாரும் அதை வெளிக்காட்டவில்லை..
‘லஷ்மியின் படிப்பு முடியட்டும்..’ என்று ஈசன் காத்திருக்க, அது அவளுக்கும் தெரியும். படிப்பு முடிந்த பிறகோ, அவளுக்கு எப்போது எப்போது என்றிருந்தது..
ஈசன் கூட “முதல்ல இந்த டென்சன விடு லஷ்மி..” என்று அதட்ட, “அதுக்கில்ல மாமா..” என்று அவள் சொல்லும் போதே,
“நமக்கென்ன குறை லஷ்மி.. இந்த டென்சன் தான் பெரிய பிரச்னை..” என்றவன் பார்வையில், “ம்ம் சரி மாமா நான் எதுவும் நினைக்கல..” என்றவளிடம் என்றுமில்லாத ஒரு வலி தெரிய,
“யாரும் எதுவும் சொன்னாங்களா??” என்றான் கோபமாய்..
“அதெல்லாம் இல்ல மாமா.. நீங்க ஏன் இப்போ டென்சன் ஆறீங்க..”
“ம்ம் நீ டல்லானாலே கஷ்டமா இருக்கு டி..” என்று அணைத்துக்கொண்டான்..
“சரி மாம்ஸ் இனிமே நான் ப்ரைட்டாவே இருப்பேன்..” என்று அவனுக்காக சிரித்துக் கூறியவளை, இன்னும் இறுக அணைத்துக்கொண்டவன்,
“இங்க பாரு லஷ்மி.. எதுக்கும் நீ கவலைப் படக்கூடாது.. எது எப்போ நடக்கனும்னு இருக்கோ அப்போ கண்டிப்பா நடக்கும்.. நீ என் லைஃப்ல வந்தது போல. நமக்கும் காட்ஸ் கிப்ட் கண்டிப்பா கிடைக்கும்..” என்று ஆறுதல் சொல்லியவன், அடுத்து இரண்டொரு நாளில் அவளை அழைத்துக்கொண்டு இரண்டாவது தேனிலவு சென்றுவந்தான்.