எப்போது எப்போது என்று லட்சுமி எதிர்பார்க்கும் போதெல்லாம் கிடைக்காத இந்த வரம், கிடைக்கும் போது கண்டிப்பாய் கிடைக்கும் என்றெண்ணி, குடும்பத்திலும் வேலைகளிலும் கவனம் செலுத்திக்கொண்டு இருக்கும் போது தானாகாவே கிடைக்க, அந்த நொடி லட்சுமி எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கு மட்டுமே தெரியும்..
ஈசனுக்கோ என்ன சொல்ல என்றே தெரியவில்லை. மௌனமாய் லட்சுமியின் கைகளை பிடித்து அமர்ந்திருந்தான். அவளுக்கோ கண்களில் நீர் கோர்த்திருந்தது.. நீர் நிறைந்த கண்களோடும், உதட்டில் ஒட்டிய புன்னகையோடும் ஈசனை நிமிர்ந்து பார்த்து சிரித்தவள் முகத்தில் ஆயிரம் உணர்வுகள்..
“ச்சு அழாத டி..” என்றவன் யார் இருக்கிறார்கள் என்றெல்லாம் பாராது அவளை தோள் மீது சாய்த்து அணைத்துக்கொள்ள, அவளுக்கோ ஆனந்தத்தில் உடல் குலுங்கியது..
பேச்சி சற்று தள்ளி நின்று மகள் முகத்தைப் பார்த்து, சந்தோஷத்தில் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்.. இப்போதுதான் அந்த அன்னையின் மனம் முழுதாய் குளிர்ந்து போனது.. அனைவரையும் பார்க்கிறாள் தன் வாழ்வில் கொஞ்சம் கவனமில்லாமல் இருக்கிறாளோ என்றே நினைத்திருந்தார். ஆனால் இப்போது லட்சுமி வாழ்வை பற்றிய எந்தக் கவலையும் அவருக்கில்லை என்றானது..
ஈசன் தோள்களில் சாய்ந்திருந்தவள், பேச்சியைப் பார்க்க, அவரோ பரிபூரணமாய் புன்னகைப் பூத்தார்.. பல வருடங்கள் கழித்து பேச்சியின் முகத்தில் இப்படியொரு புன்னகை.. சக்திவேல் உயிரோடு இருந்தபொழுது எப்போதும் இப்படித்தான் சிரிப்பார். அது இப்போ மீண்டிருந்தது..
“இதோ வர்றேன்..” என்று சொல்லி, பேச்சியிடம் எழுந்து சென்றவள் “அம்மா…” என்று கட்டிக்கொண்டு அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட, இதுவுமே கூட சக்திவேல் இருந்தபொழுது அடிக்கடி நிகழும் ஒன்று..
ஆனால் அதன்பிறகு, பேச்சியும் சரி, லட்சுமியும் சரி எதோ ஒரு அழுத்தத்தில் இருந்துவிட, இப்போதுதான் அதெல்லாம் கழண்டு காணாமல் போயிருந்தது..
“நீ எப்பவும் சந்தோசமா இருக்கணும் கண்ணு..” என்று லட்சுமியின் கன்னத்தை தடவ, லட்சுமி அவரை இன்னும் அழுத்தமாய் கட்டிக்கொண்டாள்..
“எதுக்கும் ஒருதடவ டாக்டர் கிட்ட போயிட்டு வரலாம்..” என்று மரகதம் சொல்ல, ஈசனுக்கும் அதுவே சரியெனப்பட, மருத்துவரிடமும் சென்றுவந்தனர். அங்கேயும் லட்சுமி கருத்தரிதிருக்கிறாள் என்பதை உறுதிபடுத்த, அதன் பின் அனைவரின் வேலையும் அவளை கவனிப்பது மட்டுமே என்றானது..
அதுவும் மருத்துவமனை சென்றுவந்த அன்று, அறைக்குள் சென்றதுமே லட்சுமி ஈசனை இறுக கட்டிக்கொண்டாள்..
“ஈஸ் மாமா….” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை..
“ஏன் டி லஷ்மி அழற..” என்று கேட்டவனுக்குமே குரல் கரகரப்பாய் இருக்க, “உங்களுக்கு மட்டுமென்ன கண்ணு வேர்க்குதா..” என்றாள் சிரிப்போடு..
“போட டி.. எனக்கு இப்போ எப்படி இருக்கு தெரியுமா..??” என்றவனின் அணைப்பு இறுக, “ஈஸ் மாமா..” என்று அவளும் ஒண்டிக்கொண்டாள்..
முதல் மூன்று மாதங்கள் வீட்டில் இருந்தவள், அதன்பின் மீண்டும் பள்ளிக்கூட செல்ல ஆரம்பித்துவிட்டாள். முத்தழகு தான் “ஓடு.. ஓடு.. இப்படி சுகமா உட்காந்திருந்தா சுக பிரசவம் எப்படி ஆகும்..” என்று விரட்டினார்.
ஓடு ஓடு என்று லட்சுமியை சொன்னாலும், நாட்களும் ஓடி, வருடமாகி, இதோ ‘தியானேஷ்வரன்’ பிறந்தும் ஒருவருடம் முடிந்தது, முதல் மொட்டை என்பதால், எப்போதும் போல் மாவூற்று வேலப்பர் கோவிலில் எடுக்கவென்று எல்லாம் வந்திருந்தனர்.
ரேவதி அவள் கணவன் பிள்ளையோடும், ஸ்நேகா அவள் குடும்பத்தோடும், கதிரவன் வசுமதி நட்சத்திராவோடும் வந்திருக்க, அனைவரையும் ஒன்றாய் ஒரே இடத்தில் பார்ப்பது ஈசனுக்கும் லட்சுமிக்கும் சந்தோசமாகவே இருந்தது..
அதிலும் பாலாவைக் வெகு நாட்கள் பிறகு நேராய் பார்ப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியே.. விளம்பரங்கள் எடுப்பதில் பாலாவின் குழுவினர் தான் இப்போது முன்னணியில் இருக்க, அடிக்கடி வெளிநாடுகளுக்கு வேறு சென்றுவந்தான். இங்கு வந்தும் அவன் சும்மாயிருக்கவில்லை. கேமராவும் கையுமாய் தான் அலைந்துகொண்டு இருந்தான்..
மனோஜ் மடியில் லேசாய் சிணுங்கியபடி, தலையில் சந்தானம் தடவி தியானேஷ்வரன் அமர்ந்திருக்க, அவனருகே ஈசன் அமர்ந்திருந்தான்.. முகத்தினில் அப்படியொரு கலவரம்.. இருக்காதா பின்னே குட்டி ஈசனுக்கு காது குத்தப் போகிறார்களே.. அப்படியே ஈசனின் சாயல் தான்.. ஆனால் செய்யும் செயல் எல்லாம் லட்சுமி போல..
லட்சுமியும் அங்கேதான் இருந்தாள், ஈசனுக்கு அருகே.. இன்னும் கொஞ்சம் பூசினார் போல் இருந்தாள்.. முன்னைவிட இப்போது இன்னும் ஒரு நிமிர்வு வந்திருக்க, அழகாய் ஜொலித்தாள். அந்த ஜொலிப்பு, அவர்களின் வாழ்வில் இருக்கும் பரிபூரணத்துவம் கொடுத்தது..
தலையை இப்படி அப்படி திருப்பி, அடம் பண்ணிக்கொண்டிருந்த மகனை “தியானு தியானு அப்பா இங்கதான் இருக்கேன்..” என்று ஈசன் சமாதானம் செய்து அவன் பக்கம் மகனது கவனத்தை திருப்ப, அந்த நேரத்தில் சரியாய் குழந்தையின் காதில் அழகாய் வந்து இரண்டு சிறிய வைரத் தோடு அமர்ந்திருக்க, அடுத்த நொடி அந்த இடமே தியானேஷ்வரனின் அழுகையில் நிரம்ப,
“வா வா..” என்று லட்சுமிதான் அவனைத் தூக்கி சமாதானம் செய்தாள்..
அழுகை மட்டுப்பட கொஞ்ச நேரம் பிடிக்க, அத்தனை நேரமும் ஈசனது முகத்தில் ஒரு பதற்றம் இருந்துகொண்டே இருந்தது..
“அதுசரி.. காது யாருக்கும் குத்துறதில்ல பாருங்க..” என்ற முத்தழகு, “வா ராசா..” என்று கொள்ளுப் பேரனைத் தூக்கிக்கொள்ள,
மரகதம் வந்தவர், “லட்சுமி அந்த பொங்கல் சர்வத்தையும், அபிசேகத் தட்டையும், மேல சந்நிதனதுல சாமி முன்னாடி கொண்டு போய் நீயும் ஈசனும் வைங்க.. நாங்க எல்லாம் பின்னாடியே வர்றோம்..” என,
“சரிங்கத்தை..” என்றவள், ஈசனை ஒருபார்வை பார்த்துவிட்டு, பொங்கல் பானையை எடுக்க போக, அதுவோ சின்னதாய் இல்லை, கொஞ்சம் பெரியதாகவே இருந்தது..
பட்டு சேலையை வேறு கட்டிக்கொண்டு, அத்தனை படியை, அவளால் பொங்கல் பானையை தூக்கிக்கொண்டு ஏற முடியவில்லை..
ஈசன் பார்த்துக்கொண்டே வந்தவன், “லஷ்மி நில்லு..” என்றுவிட்டு, அவன் கையில் இருந்த அபிசேகத் தட்டை அருகே இருந்தவரிடம் “ஒருநிமிஷம் பிடிங்க..” என்று கொடுத்து வேகமாய் வேட்டியை மடக்கிக் கட்டிக்கொண்டு “என்கிட்ட கொடு..” என்றபடி அவனே லட்சுமியின் கையில் இருந்த பொங்கல் பானையை வாங்கிக்கொண்டான்..
“இருக்கட்டும் மாமா..” என்று சொல்லும் போதே, “அதை நீ வாங்கிக்கோ..” என்று அபிசேகத் தட்டை வாங்கச் சொல்ல, அவளும் வாங்கிக்கொள்ள, இருவரும் மீண்டும் படியேறினர்..
“இவ்வளோ வெய்ட் இருக்கு.. சின்ன பானைல பொங்கல் வச்சா பத்தாதா…” என,
“எல்லா இலைக்கும் கொஞ்சமாது பொங்கல் வைக்கணும்ல மாமா..” என்றபடி அவளும் ஏற, எதிரே வந்த உறவுக்கார பெரியவர் ஒருவர்,
“அட என்ன மாப்ள நீ தூக்கிட்டு வர்ற.. இதெல்லாம் பொம்பளைங்க தான் தூக்கணும்..” என்று சொல்ல, ஈசனோ அசலாட்டாய், “பொங்கல் சாப்பிடுற யார் வேணா தூக்கலாம் மாமா..” என்றபடி அவரை கடந்து சென்றான்..
அந்த மனிதர் தான் ‘என்ன சொல்கிறான் இவன்..’ என்பதுபோல் நின்றுபார்க்க, லட்சுமி, “மாமா இப்படித்தான் சொல்வாங்களா. பாருங்க அவர் நின்னு பார்த்திட்டு இருக்கார்..” என்றாள்.
“பார்க்கட்டும்.. அதென்ன ஆம்பிளைங்க வேலை பொம்பளைங்க வேலைன்னு. பொங்கல் மட்டும் எல்லாரும் சாப்பிடுறோம் தான.. அதுபோக நான் என் பொண்டாட்டிக்கு ஹெல்ப் பண்றேன். அவரென்ன சொல்றது.” என,
“நீங்க இருக்கீங்களே..” என்று லட்சுமி சொன்னாலும், அவள் முகத்தில் ‘எல்லாமே எனக்காக..’ என்ற பெருமிதம் நன்றாகவே தெரிந்தது..
பூசாரியிடம் பொங்கல் பானையையும், அபிசேகத் தட்டையும் வேலப்பர் முன் வைக்கச் சொல்லிவிட்டு, மற்றவர்கள் வருவதற்காக இருவரும் காத்திருந்தனர்.
“இப்படி உட்காரலாம் லஷ்மி.. எப்படியும் எல்லாம் வர நேரமாகும்..” என்றவன், அங்கிருந்த இடத்தில் அமர, அவளும் அவனருகே அமர்ந்துகொண்டாள்..
மேலே இறைவன் சந்நிதானத்தில் அத்தனை கூட்டமில்லை. அனைவரும் கீழிருக்க, கோவிலுக்கென்று வந்தவர்கள் மட்டுமே அங்கே இருந்தனர்.. அமைதியாய் அங்கே இருந்த சூழ்நிலை இருவருக்கும் மனதில் அமைதியைக் கொடுக்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாய் புன்னகைத்துக் கொண்டனர்..
அப்போது அந்தபக்கம் வந்த சிறுமி “லஷ்மி மிஸ்..” என்று இவள் முன்னே வந்து நிற்க, “ஹே.. சௌமியா நீ எங்க இங்க..” என்று வினவினாள் லட்சுமி
“அப்பா அம்மாக்கூட வந்தேன் மிஸ்.. உங்களைப் பார்க்கவும் வந்தேன்..” என்று அவளும் சொல்ல,
“ஓ சரி சரி..” என்றவள், ஈசனைப் பார்த்து “என் ஸ்டூடன்.. பர்ஸ்ட் டைம் இவங்க கிளாஸ் தான் எடுத்தேன்..” என, ஈசன் அந்த காட்சியை ரசித்துப் பார்த்துக்கொண்டு இருந்தான்.