அடுத்த இரண்டு நிமிடத்தில் சௌமியாவின் பெற்றோரும் அங்கே வந்திட, இருவரையும் பொதுவாய் பார்த்து சிரித்தவர்கள் “எப்படி மிஸ் படிக்கிறா??” என்று லட்சுமியிடம் கேட்க,
“ப்ரைட் ஸ்டூடன்ட்.. ஸ்போர்ட்ஸ்ல இன்ட்ரஸ்ட் போல.. அதுலயும் கொஞ்சம் ட்ரைன் பண்ணா நல்லாருக்கும்..” என்றாள் சௌமியாவைப் பற்றி நன்கறிந்து..
“விளையாட போனா படிப்பு போயிடுமே..” என்று சௌமியாவின் அம்மா சொல்ல,
“அதெல்லாம் இல்லை.. படிக்கிற பிள்ளைங்க எப்பவுமே நல்லா படிப்பாங்க.. அதுக்கூட அவங்களுக்கு பிடிச்சதையும் பண்ண வச்சா இன்னும் நல்ல நிலைக்கு வருவாங்க..” என்று லட்சுமி சொல்லவும், வேகமாய் சௌமியா “தேங்க் யூ மிஸ்..” என, மற்றவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது..
கொஞ்ச நேரத்தில் அவர்கள் நகர்ந்துவிட, ஈசனோ, “லஷ்மி மிஸ்…” என்றான் சௌமியா சொன்னதுபோல..
“மாமா..” என்று வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அவனை முறைக்க, “ஹா ஹா என்ன பாக்குற.. கடைக்கு அந்த பேர் வைக்க அப்படி அலம்பல் பண்ண.. இப்போ என்ன சொல்வ??” என்றவன் மீண்டும் “லஷ்மி மிஸ்..” என்று சொல்ல,
“சும்மா இருங்க..” என்று விரல் நீட்டி மிரட்டியவளை, இன்னும் ரசித்தவன், “பெருமையா இருக்கு டி..” என்று சொல்லிக்கொண்டான்..
ஆம் இது லட்சுமிக்கான தனிப்பட்ட அடையாளம்.. ஈசன் எப்படி அவனது கடின உழைப்பாலும், விடா முயாற்சியாலும் தனக்கென்று ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டானோ, அதுபோல லட்சுமி எத்தனை கடினமான சூழலிலும் விடாது படித்து இப்போது பாடம் சொல்லிக்கொடுக்கும் குருவாக இருக்க, அவளுக்கென்று ஒரு தனி அடையாளம் கிடைத்திருந்தது..
“இன்னுமா வர்றாங்க..” என்று லட்சுமி சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அனைவரும் வர, பாலாதான் தியானேஷ்வரனை தூக்கிக்கொண்டு வந்தான்..
ஈசனைக் கண்டதும் “ப்பா..” என்று அவனிடம் தாவ, அவனும் “தூக்கிக்கொள்ள, அடுத்து அனைவரும் சந்நிதானத்தில் சென்று நிற்க, லட்சுமிக்கும் ஈசனுக்கும் அவர்கள் திருமணம் தான் நினைவில் வந்தது..
இதே வேலப்பர் சந்நிதானத்தில், மனதில் ஆயிரம் குழப்பங்களை சுமந்துகொண்டு திருமணம் செய்ய, இன்றோ அவர்களின் வாழ்வு போல் சிறப்பானது வேறெதுவும் இல்லை என்ற எண்ணம் வந்திருந்தது.
இருவருமே அதையே நினைக்க, லட்சுமியும் சரி, ஈசனும் சரி, ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்ள, அவர்களுக்கு எதிர் வரிசையில் நின்றிருந்த பாலா, தன் கேமராவில் அழகாய் அதை பதிவு செய்தான்..
ஒருவழியாய் பூஜை முடிந்து, கீழே விருந்தும் முடிந்து, வந்திருந்த விருந்தினர்கள் எல்லாம் கிளம்பிச் சென்றபிறகு, எல்லாம் கிளம்பி வீட்டிற்கு வரவே மாலை ஆகிவிட்டது..
வீட்டிற்கு வந்ததும் மகனை ஒருமுறை குளிக்க வைத்து, கொஞ்சம் வயிற்றை நிரப்பி, வீட்டிலிருப்பவரிடம் கொடுத்துவிட்டு, லட்சுமியும் உடை மாற்றி ரிலாக்ஸ்டாக அமர, அப்போது தான் ஈசன் வந்தான்..
ஈசனும் ஓய்வெடுக்கலாம் என்று படுக்க, அந்த அசைவில் கண்கள் திறந்தவள், “எங்கயும் போகாம ரெஸ்ட் எடுங்க..” என்றபடி திரும்பிப் படுக்க, “ம்ம் குட்டி எங்க..” என்று மகனைத் தேடினான் ஈசன்..
“கீழ இருக்கான்..” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.
எப்போதுமே இப்படிதான் என் பிள்ளை என்னிடம் தான் இருக்கவேண்டும் என்றில்லாமல், வீட்டில் இருப்பவர்களிடம் விட்டுவிடுவாள். அதற்காக ஒரு அன்னையாய் அவளது பொறுப்பில் இருந்து என்றுமே விலகியதில்லை.. எங்களை நன்றாய் வளர்த்தவர்கள் எங்கள் பிள்ளையை வளர்க்க மாட்டார்களா என்ற எண்ணம் அவளுக்கு..
தியானுவும் அனைவரோடும் பொருந்திவிட்டான், ஆனால் ஈசன் வீட்டிற்கு வந்திட்டால் போதும், அவனோடுதான் இருப்பான்.. லட்சுமி போலவே தியானுவுகும் ஈசனோடு புல்லட்டில் செல்ல பிடிக்கும்.. தினம் ஒரு ரவுண்டாவது அடிக்காமல் விடமாட்டான்..
இப்போது பேச்சும் வருகிறதா “ப்பா ப்பா..” என்று வெளியே கை காட்டி ஈசனை ஒருவழி செய்திடுவான்.
இதோ இப்போதும் ஈசன் புல்லட்டின் சத்தம் அவனுக்கு கேட்டிருக்க, கீழே அனைவரிடமும் “ப்பாட்ட” என்று அடம் பிடிக்க, பாலா தான் தூக்கிக்கொண்டு மேலே வந்தான்..
“நீயும் போய் ரெஸ்ட் எடு பாலா நேத்து இருந்து அலைச்சல் தான் உனக்கு..” என்றவளிடம் கிண்டலாய் “சரிங்க மதினி..” என்று சொல்லிச் செல்ல,
“டேய்..” என்று பல்லைக் கடித்துக்கொண்டு லட்சுமி முறைக்க, “தேய்…” என்று தியானுவும் அதுபோலவே சொல்ல, பாலா “நல்லா ட்ரைன் பண்றம்மா நீ..” என்று சொல்லியபடி இறங்கிவிட்டான்..
“தியானு சித்தப்பாவ அப்படியெல்லாம் சொல்லக்கூடாது..” என்று லட்சுமி சொல்லிக்கொண்டே உள்ளே வந்தவள் “ஈஸ் மாமா இவனை பிடிங்க..” என,
தியானுவோ “ஈச் மாம்மா..” என்று சொல்ல, லட்சுமி சிரித்துவிட்டாள்.
இது எப்போதும் நடக்கும் ஒன்றுதான்.. வழக்கமாய் ‘ப்பா’ என்பவன், அவன் முன்னே லட்சுமி ‘ஈஸ் மாமா..’ என்றால், அவனும் ‘ஈச் மாம்மா..’ என்று சொல்லிக்காட்ட ஈசன் தான் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொள்வான்..
“தியானு அப்பா சொல்லணும்..” என்று எப்போதுமே ஈசன் சொல்ல, “ப்பா” என்பவன் அடுத்து லட்சுமி சொன்னால் அவளைப் போலவே சொல்வான்..
“நீதான் அவன் முன்னாடி சொல்லாம இரேன்..” என்பவனிடம் “அடேங்கப்பா இந்த பொடிசுக்கு பயந்து நான் என் புருசன ஈஸ் மாமா சொல்லக்கூடாதா.. ரொம்பத்தான்.. நீங்க எனக்கு புருசனாக முன்னாடிய ஈஸ் மாமாவா தான் இருந்தீங்க..” என்று பொங்கி விடுவாள்.
இன்றோ “நீங்களாச்சு உங்க ஜூனியர் ஆச்சு..” என்று லட்சுமி மீண்டும் படுத்துக்கொள்ள, “ப்பா ப்பா..” என்று தியானு வெளிய கைக் காட்ட, ஈசனுக்கோ மகன் கேட்டது புரிந்தாலும், அலுப்பாய் இருக்க,
“நாளைக்கு போலாம் தியானு.. இப்போ அப்பா டயர்ட்.. புல்லட் டயர்ட்..” என்று அவனுக்கு புரியும்படி சொல்ல, “ம்ம்..” என்று கொஞ்ச நேரம் அவன் முகத்தையே பார்த்திருந்தவன்,
“பாத்தி….” என்று கீழே போக கிளம்பினான்.
“தியானு ஒரு இடத்துல இரேன்டா..” என்று லட்சுமி படுக்க வைக்க முயல, அவனோ “பாத்தி..” என்று சத்தமாய் கத்த,
“விடு லஷ்மி.. அவன் வந்த வேலை நடக்கலை.. அதான் கிளம்பிட்டான்..” என்று மகனைத் தூக்கிக்கொண்டு கீழே விட்டு வந்தான்..
லட்சுமி அப்போது உறங்கவில்லை, சாய்ந்து அமர்ந்திருந்தாள்.. ஈசனும் வந்து அப்படியே சாய்ந்துகொள்ள, “டயர்டா இருக்கா மாம்ஸ்..” என்றாள்.
“லேசா.. ஆனா இப்படி அவன் முன்னாடி சொல்லிடாத” என்று பயந்தவன் போல் சொல்ல,
“அப்போ நான் முத்தம்மான்னு சொல்வேன்..” என்று ஈசன் மிரட்டவும், “சொல்லிட்டாலும்..” என்றவள், வழக்கம் அவன் கன்னத்தில் இதழ் பதிக்க, “ம்ம்ச் இதெல்லாம் சும்மா..” என்று ஈசன் தன் கன்னங்களை துடைத்துக்கொள்ள,
“அப்போ சூப்பரா எதுவும் இருக்கா??” என்று லட்சுமி விஷமமாய் கண்களை உருட்டி கேட்க,
“ரொம்ப ரொம்ப..” என்றவன், அவளை கிடத்தி, அவன் சாய்ந்துகொள்ள, “மாம்ஸ்..” என்றழைத்தாள் லட்சுமி..
“சொல்லு முத்தம்மா…”
“உங்கக்கிட்ட ஒண்ணு சொல்லணும்…”
“சொல்லு முத்தம்மா…”
“இங்க பாருங்க..” என்று அவன் முகத்தை நிமிர்த்த, “சொல்லு முத்தம்மா..” என்று அப்போதும் ஈசன் அதையே சொல்ல, “ம்ம்ச் போயா…” என்று நிமிர்த்திய முகத்தை அவளே தள்ள,
“ஹா ஹா…” என்று சிரித்தவன் “என் லஷ்மி முத்தம்மா…” என்று கொஞ்ச, “ஐ லவ் யூ ஈஸ் மாமா..” என்றாள் அவன் காதுகளில் கிசுகிசுப்பாய்..
திருமணமாகி இத்தனை நாட்களில் லட்சுமி ஒருமுறை கூட இதை சொன்னதில்லை. மாலத்தீவு சென்றுவந்த பிறகு ஈசன் அடிக்கடி சொல்லியிருக்கிறான்.. அவளையும் சொல் சொல் என்றிருக்கிறான்..
ஆனால் இன்றோ அவன் கேட்காமலே லட்சுமி சொல்ல, வேகமாய் நிமிர்ந்து லட்சுமியின் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், அதில் தெரிந்த காதலில் தானே மூழ்கிப் போக ஆசைக் கொண்டு, அவளை மொத்தமாய் எடுத்துக்கொண்டான்.
வாழ்வில் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும், சங்கடங்கள் தலைக்கொடுத் தாலும், அதெல்லாம் எங்களை ஒன்றுமே செய்யாது இனி எங்கள் வாழ்வில் என்றுமே ஆனந்தம் பூந்தோரணம் கட்டி, மகிழ்ச்சி அலை சாமரம் வீசிக்கொண்டிருக்கும் என்பது போல் இருந்தது அவர்களின் காதல் சங்கமும்..
லட்சுமியும் ஈசனும் இன்றுபோல் என்றும் இருக்க, நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்… நன்றி வணக்கம்…!!!!!