அலையில் பூத்த மலர்…
அத்தியாயம் 1
வீல்சேரில் அமர்ந்தபடி வீட்டின் முன் உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார் கமலம். ‘அம்மா..” என்றழைத்தபடி வந்தான் சூர்யபிரகாஷ்.
‘வா.. சூர்யா.. ஏன் மதியம் சாப்பிட வரலை..?”
‘இன்னைக்கு ஓ.பி. ல கூட்டம் அதிகமா இருந்ததும்மா.. வீட்டுக்கு வந்திட்டு போனா லேட் ஆய்டும்னு அங்கையே தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டுட்டேன்… நீங்க சாப்டிங்களா..?” என்று கேட்டுக்கொண்டே.. தன் அம்மாவின் வீல்சேரை தள்ளிக்கொண்டு உள்ளே போனான் சூர்யா.
‘ம்.. சாப்பிட்டேன் சூர்யா..” என்றவர் முகத்தில் சந்தோசம் இல்லை.
தன் அம்மாவைப் பற்றி நன்றாக தெரிந்தவன் ஆதலால்.. சின்ன சிரிப்போடு தனதறைக்கு சென்று குளித்து வெளியே வந்து அன்னையைப் பார்க்க.. வேண்டா வெறுப்பாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார் கமலம்.
‘உங்க சோகத்துக்கு சீக்கிரம் ஒரு முடிவுகட்டிடறேன்மா.. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க..” என்று கமலத்தின் முகத்தை கெஞ்சுதலாய் பார்த்தான் சூர்யா.
‘உண்மையாவா சூர்யா..?” என்று முகம் மலர கேட்டார் கமலம்.
‘உண்மைதான்மா.. ஆனா அதுக்கொரு கண்டிசன் இருக்கு.. நீங்க அதுக்கு ஒத்துக்கிட்டிங்கன்னா.. அடுத்த மாசமேன்னாக்கூட கல்யாணத்தை வச்சிக்கலாம்..” என்றான் சந்தோசமாக.
‘இவ்ளோதான..? என் மகன் ஆசைக்கு நான் மறுப்பு சொல்வேனா..? கண்டிசன் என்னன்னு மட்டும் சொல்லு.. மத்ததை நான் பார்த்துக்கிறேன்..” என்றார் ஆவலாக.
‘பேச்சு மாறக்கூடாது..” என்று அர்த்தமாய் பார்த்தான் தன் அம்மாவை.
‘ம்கூம்.. மாறமாட்டேன்.. நீ முதல்ல கண்டிசன் என்னன்னு சொல்லு..?” என்றார் ஆர்வமாக.
‘சொல்றேன்மா… நீங்க எந்த பொண்ணை எனக்கு தேர்ந்தெடுத்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. ஆனா அந்த பொண்ணு ஒரு மாற்று திறனாளியா இருக்கனும்.. கை இல்லாமையோ.. இல்ல கால் ஊனமாவோ.. இல்ல பார்வையில்லாமையோ.. இப்படி எந்த குறையாயிருந்தாலும் எனக்கு ஓ.கேதான்..” என்றான் இன்முகமாக.
‘என்ன..?” என்று அதிர்ச்சியாய் பார்த்தவர்.. ‘உனக்கென்னடா குறை…?” என்றார் அதிர்வோடு.
‘குறை இருக்கிறவங்களை இன்னொரு குறையிருக்கறவங்கதான் கல்யாணம் பண்ணிக்கனுமாம்மா..? கை கால் நல்லாயிருக்கறவங்களே இப்படி யோசிச்சா.. அப்போ ஊனமா இருக்கறவங்களோட நிலமையை கொஞ்சம் யோசிச்சிப்பாருங்கம்மா.. நான் சொல்லித்தான் அந்த கஷ்டம் உங்களுக்கு தெரியனும்னு அவசியமில்ல.. நாலு வருசமா இந்த கஷ்டத்தை அனுபவிக்கிற உங்களுக்கே இது புரியலைன்னா எப்படிம்மா..?” என்று தனிவாக பேசிக்கொண்டிருந்தான்.
‘சூர்யா.. உங்கப்பா போனதுக்கப்புறம் உங்களை வளர்த்து ஆளாக்கிறதுக்கு நான் பட்ட கஷ்டமெல்லாம் அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.‚ நமக்கு இப்பதான் இவ்ளோ வசதி வந்திருக்கு.. இதுக்கப்புறமாவது என் புள்ளைங்களாவது சந்தோசமா இருக்கனும்னு எனக்கு மட்டும் ஆசையிருக்காதா..? ஏற்கனவே நீ எவ்வளவோ நல்லது பண்ணிட்டுதான் இருக்க.. என்னைக்காச்சம் நான் அதை தடுத்திருக்கேனா.? இன்னும் ஒரு நூறு ஊனமுற்ற குழந்தைகளை கூட நீ தத்தெடுத்துக்கோ.. அவங்களை படிக்கவை.. இல்ல.. கல்யாணம் பண்ணிக்க காசு பணம் கொடு.. இதையெல்லாம் நான் என்னன்னு கூட கேட்கமாட்டேன்.. ஆனா உன்னோட வாழ்க்கையையும் சந்தோசமா வாழனும்னு நீ ஏன் யோசிக்கமாட்ற..?” என்று கண்கலங்கினார் கமலம்.
‘அம்மா.. நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சதே உங்களுக்காகத்தான்.‚ உங்களுக்கு இப்படி ஆய்டுச்சின்னு தெரிஞ்சதுக்கப்புறம் என்னை காதலிச்சவளே.. உங்கம்மாக்கு ஆயா வேலைபார்க்க நான் தயாரா இல்லன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.. அதுலயிருந்து நான் கல்யாணமே பண்ணிக்க வேணாம்னுதான் நினைச்சேன்.. இப்ப ஒரு மாசமா நீங்க என்னை நினைச்சி ரொம்ப வருத்தப்படுறிங்கன்னுதான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்ங்கிற முடிவுக்கே வந்தேன்..
ப்ரியா என்னை விட்டுட்டு போனதுக்கப்புறம் எனக்கு அழகான பொண்ணுங்கமேல இருக்கிற நம்பிக்கையே போய்டுச்சி.. அதுக்காக எல்லாரும் அப்படியிருப்பாங்கன்னு நான் சொல்லலை.. நாட்ல இருக்கிற எல்லாருடைய கஷ்டத்தையும் என் ஒருத்தனால போக்க முடியாது.. ஏதோ என்னால முடிஞ்சதை பண்ணிட்டிருக்கேன்.. கல்யாணமும் நான் நினைச்சமாதிரி பொண்ணை பண்ணிக்கிட்டாதான்மா என்னால சந்தோசமா இருக்கமுடியும்.. இல்லன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம்..” என்று உறுதியாக சொன்னான் சூர்யா.
கமலம் இராஜேந்திரனின் முதல் மகன் ஆதவன்.. தன் அம்மா பட்ட கஷ்டங்களை கண்கூடாக பார்த்து வளர்ந்தவன் ஆதலால்.. பணம் சம்பாரிப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என நினைத்து படித்தவன். இன்ஜினியரிங் முடித்த கையோடு வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலைகிடைத்ததும் தன் அம்மா எவ்வளவோ மறுத்தும் நான் போயே ஆகவேண்டும் என்று கிளம்பினான்.
ஒரு வருடத்திலேயே தன் அம்மா.. தம்பிக்காக அழகான வீட்டை கட்டிமுடித்தவன்.. அவர்களின் செலவிற்கும் மாதாமாதம் அளவிற்கு அதிகமாகவே பணம் அனுப்பி வைப்பான். இருபத்தேழாவது வயதில் தன் அம்மா பார்த்த பெண்ணையே மனம் முடித்துக்கொண்டான். மனைவியோடு மீண்டும் அமெரிக்கா சென்றவன்.. வருடத்திற்கு ஒருமுறை இந்தியா வந்துபோவான். ஆதவனுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். தன் அம்மா தம்பி என.. தன் குடும்பத்தை தவிர்த்து யாருக்கும்.. எந்த செலவும் செய்யமாட்டான் ஆதவன்.
சூர்யா.. ராஜேந்திரன் கமலம் இவர்களின் இரண்டாவது மகன். ஆதவனுக்கு நேர் எதிரானவன் சூர்யா. தன் வருமானத்தில் ஒருபங்கை அநாதை இல்லங்களுக்கு கொடுத்துவிடுவான்.. மேலும் அந்த இல்லத்தில் இருக்கும் சில குழந்தைகளின் படிப்பு செலவையும் இவன்தான் பார்க்கிறான். மிகவும் வறுமையில் உள்ளவர்கள் என்றால் தான் செய்யும் ஆப்ரேசனுக்கு கட்டணம் வாங்கமாட்டான். சூர்யாவின் இந்த சேவை மனப்பாண்மைதான் டாக்டர் பட்டம்பெற்ற குறைந்த வருடங்களிலிலேயே அவனை பிரபலமடையச்செய்தது.
சூர்யா எம்.எஸ். பட்டம் பெற்ற சர்ஜன் ஆவான். வயது இருபத்தி ஏழு. நல்ல நிறத்தோடும்.. உயரத்தோடும்.. உயரத்திற்க்கேற்ற கச்சிதமான தேகத்தோடும் இருப்பவன்.. குணத்திலும் முகச்சாயலிலும் தன் கணவனைப்போலவே இருக்கும் சூர்யாமீது கமலத்திற்க்கு தனிப்பாசம்தான். ஆனாலும்.. கமலத்திற்க்கு சூர்யாமீதான பெரிய குறையே அவனுக்கென எதையும் யோசிக்காமல் இருப்பதுதான்.
சூர்யா திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததிலிருந்து கமலம் தினமும் எதாவது பெண்ணின் படத்தை காட்டிக்கொண்டேதான் இருப்பார். ஆனால்.. சூர்யா நினைப்பதைபோல அவர்கள் மாற்றுத்திறனாளியாக இருக்கமாட்டார்கள்.. லேசாக சாய்ந்து நடக்கும் பெண்ணை காட்டி இவளுக்கு கால் ஊனம் என்பார். இல்லையென்றால் இந்த பொண்ணு கருப்பா இருக்கிறதால யாரும் கல்யாணம் பண்ணிக்கலையாம்.. இவளை பார்க்கலாமா..? என்று மாநிறமென்றாலும் கண்ணைக் கவர்ந்திழுக்கும் லட்சணமான பெண்ணையே காண்பிப்பார். இதோ கடந்த மூன்று மாதமாக தன் அம்மா காட்டிய அனைத்து பெண்களையும் நிராகரித்திருந்தான்.
அதில் கோபமடைந்த கமலம்.. ஒரு நாள் சூர்யாவிடம்..‘ஆதவனுக்கு போன் போடு.. நான் பேசனும்..” என்றார்.
வீடியோ காலில்தான் பேசினார்கள். ‘ஏன்மா இவ்ளோ கோபமா இருக்கிங்க..?” என்றான் ஆதவன்.
‘உன் தம்பிக்காரன் என்ன பண்ணிட்டிருக்கான் தெரியுமா..?” என்று சூர்யாவின் திருமண கண்டிசனையெல்லாம் சொன்னார்.
‘அம்மா.. அவன் பக்குவமெல்லாம் உண்மையாவே எனக்கு வராதுதான்.. அவன் பண்றது தப்பு இல்லம்மா.. இது பெருமைப்படவேண்டிய விசயம்..” என்று ஆதவன் தன் தமையனுக்கு ஆதரவுக்கரம் நீட்டவும்.. அதில் இன்னும் கோபமடைந்த கமலம்..
‘நீ அடுத்தமாசம் ஊருக்கு வரன்னல்ல..? முதல்ல நீ இங்க வா.. மத்தது அப்புறம் பேசிக்கலாம்..” என்று முகத்தை திருப்பிக்கொண்டார்.
ஆதவன் சூர்யாவிடம்.. ‘சூர்யா.. என்னால அடுத்தமாசம் வரமுடியாது. நான் வர இன்னும் நாலஞ்சி மாசம் பக்கம் ஆகும்டா.. அம்மாகிட்ட கொஞ்சம் எடுத்துசொல்லு..” என்று கெஞ்சியவன்..
‘தினம் தினம் அம்மாவை படுத்தாத.. நான் ஊருக்கு வரதுக்குள்ள சீக்கிரம் ஒரு பொண்ணை செலக்ட்பண்ணிடு.. நான் வந்ததும் கல்யாணத்தை முடிச்சிடலாம்.. எந்த பொண்ணுக்கு கொடுத்து வச்சிருக்கோ..” என்று சிரித்தான் ஆதவன்.
‘நீயாவது என்னை புரிஞ்சிக்கிட்டியே..” என்று தன் அண்ணன் குழந்தைகள்.. அண்ணி என அனைவரிடமும் பேசி.. கட்செய்தான்.
————————————
அடுத்தநாள் ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது.. சூர்யாவின் போன் அடிக்கவும். ஆன்செய்தவன்.. மிக சந்தோசமாக… ‘ஹேய்.. நிஜமாவே ஊருக்கு வரியா பிரசாத்..” என்றான் சூர்யா என்கிற சூர்யபிரகாஷ்.
‘வரது மட்டுமில்ல சூர்யா.. அம்மா பொண்ணு பார்த்து வச்சிருக்காங்களாம்.. இந்த முறை வந்தா.. கல்யாணத்தை முடிச்சிட்டுதான் போகனும்னு.. முகூர்த்த தேதிகூட முடிவு பண்ணிட்டாங்க..” என்றான் சிரிப்போடு.
‘என்னடா அதிர்ச்சிக்குமேல அதிர்ச்சி கொடுக்கிற..? கல்யாணவிசயத்தில மட்டும்.. உங்கம்மா என்ன சொன்னாலும் நீ கேக்கமாட்டியே… இப்ப மட்டும் எப்படி சம்மதிச்ச..? நீ பார்த்ததும் மயங்கிப்போற மாதிரி.. பொண்ணு ரொம்ப அழகா இருப்பாங்களா..?” என்றான்.
‘அழகுக்காக அப்படியெல்லாம் இல்லடா.. இங்க ஆர்மில உள்ள எதிரிங்களோட பெரிய பெரிய வெப்பன்சைகூட சமாளிச்சிடலாம்.. ஆனா.. எங்கம்மா அதை விட பெரிய வெப்பன்சா இந்த முறை யூஸ் பண்ணி என்னை சம்பதிக்க வச்சிட்டாங்கடா.‚” என்றான் சந்தோசம் கலந்த சலிப்போடு.
ஆச்சர்யமானவனாய்.. ‘நேர்ல கூட பார்க்காம.. போன்லயே சம்மதிக்கிற அளவுக்கு அப்படி என்னடா பண்ணினாங்க..?” என்றான் சூர்யா.
‘வேற என்ன..? எல்லா அம்மாவும் பாலோ பண்ற கண்ணீர் வெப்பன்தான்.. கிட்டதட்ட அரைமணிநேர அழுகை தாக்குதல்.. சரண்டர் ஆவதைத் தவிர எனக்கு வேற வழியே தெரியல..” என்று சிரித்தான்.
‘ஓ.. அதுதான் விசயமா..? அம்மா சரியான வீக்னஸ் பாயிண்ட்லதான் உன்னை அடிச்சிருக்காங்க.. சரி சரி.. இந்த விசயத்தை நீ எங்கம்மாகிட்ட சொல்லிடாத.. அப்புறம் அவங்களும் அதே வெப்பன்சை யூஸ் பண்ணிடுவாங்க..”
‘முயற்ச்சி பண்றேன்.. ஆனா உங்கம்மாவை நேர்ல பார்த்துட்டேன்னா.. என் முயற்ச்சி தோல்வியில முடிஞ்சாலும் முடிஞ்சிடும்…” என்றான் சோகமாக.
‘போனா.. போகுது.. உயிர் தோழனாச்சே… உன் கல்யாணம் முடிஞ்சதும் உங்களை விருந்துக்கு கூப்பிடலாம்னு இருந்தேன்.. இப்ப அந்த ஐடியாவை கேன்சல் பண்ணிட்டேன்..” என சூர்யா கோபிக்கவும்..
‘ஹ..ஹ.. என்கிட்ட கோபப்படறதுக்கு என் சூர்யாவால முடியவே முடியாதுன்னு எனக்கு தெரியாதா..?” என சிரித்தவன்.. ‘சரி.. சூர்யா.. இப்ப கொஞ்சம் வேலையிருக்கு.. அடுத்த வாரம் ஊருக்கு வந்திடுவேன்.. நேர்ல பார்க்கலாம்..” என்று கட்செய்தான்.
சூர்யாவும் பிரசாத்தும் ஒரே பள்ளியில் படித்தவர்கள்.. பிரசாத்தைவிட சூர்யா இரண்டு வயது இளையவன். படிக்கும் காலம்வரை.. சூர்யா.. பிரசாத்.. நவீன்.. இவர்கள் மூவரையும் பிரிக்கவே முடியாது. மும்மூர்த்திகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்கள்.
மூர்த்தி.. அன்னபூரணி அவர்களின் ஒரே மகன் பிரசாத்.. இராணுவத்தில் பணிபுரிபவன்.. மூர்த்தியின் அண்ணனும் அண்ணியும் ஒரு விபத்தில் இறந்திட.. மூர்த்தியும் அன்னபூரணியும் நவீனை தன்மகனைப்போல் வளர்த்தார்கள்.
அன்னபூரணிக்கு திருமணமாகி நான்கு வருடத்திற்க்கு பிறகுதான் பிரசாத் பிறந்தான். பிராசாத்தைவிட.. நவீன் மூன்று வயது மூத்தவன். எம்.பி.எ படித்து முடித்ததும் பெங்கரில் காவலர் வேலை கிடைக்கவும்.. வேலைக்காக சென்ற இடத்தில் ஒரு வடநாட்டு பெண்ணிடம் காதல் வயப்படவும்..
மூர்த்தி அதற்கு ஒத்துக்கொள்ளவே இல்லை.. நவீனாலும் அந்த பெண்ணை விடமுடியாமல் போகவே.. ரகசியமாக பதிவுத்திருமணம் செய்துகொண்டான். அப்பொழுதிலிருந்து நவீனை வீட்டில் சேர்ப்பதில்லை மூர்த்தி.
ஆனால்.. பிரசாத் நவீனோடு பாசமாகத்தான் இருப்பான். எப்பொழுது ஊருக்கு வந்தாலும்.. நவீனின் வீட்டிற்கு ஒருமுறையேனும் செல்லாமல் பணிக்கு திரும்பமாட்டான். மூர்த்தியின் பேச்செல்லாம்.. நவீன் விசயத்தில் பிராசத்திடம் எடுபடாது. பிரசாத் பணிவிடுப்பில் வந்தானென்றால்.. நவீனின் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்திடுவான்.