அப்படி ஒரு முறை அழைத்து வந்தபோது.. நவீனின் பெரியமகன்.. மூர்த்தியிடம்.. ‘தாத்தா.. எனக்கு தாத்தாவும் இல்ல.. பாட்டியும் இல்ல.. ஏன்னா.. எங்கப்பாக்கு அப்பாம்மா கிடையாதாம்..” என்று அந்த நான்கு வயது பிஞ்சுகுழந்தை சொல்ல.. அப்பொழுதிலிருந்து லேசாய் மனமிரங்க ஆரம்பித்தனர் மூர்த்தியும் அன்னபூரணியும்.
அதன்பின் பள்ளி விடுமுறை நாளென்றால் பிரசாத்திடம் சொல்லி நவீனின் குழந்தைகளை அழைத்து வரசொல்வார் மூர்த்தி. நவீன் வந்தால் அன்னபூரணியிடம் அவனுக்கு பிடித்த உணவுகளை சமைக்க சொல்வார்.. அன்னபூரணி நவீனிடம் முன்புபோல் பேசஆரம்பித்திருந்தார். பிரசாத்திடமும் அன்னபூரணியிடமும் நவீன்மீதான தன் பாசத்தை காண்பிக்கும் மூர்த்தி.. இன்னும் நேரடியாக நவீனிடம் பேசுவதில்லை. சற்று வீம்போடு இருந்தார். ஆனால் குழந்தைகளிடம் தங்கம் உன் அப்பாக்கு வேலையிருந்தா போகசொல்லுடா.. லீவ் முடியறவரைக்கும் நீ தாத்தாவோட இருப்பியாம்.. என்று நவீன் முன்பாக குழந்தையிடம் சொல்வார்.
தற்போது நடக்கவிருக்கும் பிரசாத்தின் திருமணத்திற்காக தன் அண்ணன் மகனை நீண்ட வருடம் கழித்து.. வீட்டிற்கு அழைத்திருந்தார் மூர்த்தி. தன் சித்தப்பா தன்னிடம் பேசிவிட்ட சந்தோசத்தில் முதன்முறையாக தன் மனைவி மக்களோடு பிரசாத்தின் வீடான.. தான் வளர்ந்த வீட்டிற்கு வந்திருந்தான் நவீன்.
———————————————————————
ஐந்து வருடங்களுக்கு முன்..
கடலுக்கு மீன் பிடிக்க போன திலகவதியின் அப்பா.. மூன்று நாட்களாகியும் வராமல் போகவே.. கண்ணீரோடு அமர்ந்திருந்த ஜெயாவின் வீட்டிற்கு வெளியே..
‘ஜெயாக்கா.. ஜெயாக்கா..” என்ற பதட்டக்குரல் கேட்க..
‘என்ன அலமேலு..?” என்று நடுங்கிய குரலில் ஜெயா கேட்க..
‘அங்க கரையோரமா.. உன்.. உன்..னோட புருசன்..” என்று அலமேலு அழுத அழுகையில் கத்திக்கதறியபடியே ஜெயா கடற்கரை நோக்கி ஓட்டம்பிடிக்க.. பின்னோடே பதிமூன்று வயதேயான திலகவதியும்.. பதினொரு வயது நிரம்பிய அவளின் தம்பியும் ஓட..
கரை ஒதுங்கியிருந்த தன் கணவனின் பூத உடலை அணைத்து கதறிக்கொண்டிருந்தார் ஜெயா. தன் அம்மாவை கட்டிக்கொண்டு திலகவதியும் தேம்பித்தேம்பி அழ.. திலகவதியின் தம்பிதான் அழாதேக்கா.. அழாதேம்மா.. என தானும் அழுதபடி தேற்றினான்.
வேலைக்கு சென்றால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையிருக்க.. தன் கணவரின் பதினோராம் நாள் காரியம் முடிந்ததும் மீன் மார்க்கெட்டிற்கு செல்ல ஆரம்பித்திருந்தார் ஜெயா. கணவர் உயிரோடு இருக்கும் வரை வீட்டோடு இருந்த ஜெயாவிற்கு சரிவர வியாபாரம் செய்ய வராமல் போகவே.. மூன்றுவேளை சாப்பாட்டிற்க்கே திண்டாடினார்கள்.
இப்படியே ஒருவருடம் முடிந்திருக்க.. தனது கணவரின் நினைவுநாள் வரவும் தர்பனம் செய்ய மகள் மகனோடு கடற்கரைக்கு சென்றார் ஜெயா. சடங்குகள் முடிந்து பிண்டத்தை கடலில் விட்ட அடுத்த நொடி.. ‘அம்மா…” என்ற சத்தத்தோடு திலகவதி வயிற்றைப் பிடித்தபடி நின்றயிடத்திலேயே அமர..
விசயம் புரிந்த ஜெயா.. அச்சோ இருக்கிற துன்பத்துல இதுவேறையா..? என ஓய்ந்தவராய் தன் தலையில் கைவைத்து அமர..
‘என்னாச்சி ம்மா..?” என்று பாலாஜி பதற..
மகனின் பதட்டத்தை தாளமுடியாமல்.. ‘ஒன்னுமில்ல பாலா..” என்று மகனைத்தேற்றி..
கடலன்னையின் மடியில் அலைகளின் அரவணைப்பில் தன் மகள் பூத்திருக்கிறாள்.. சந்தோசமான விசயம்.. புரியாத பிள்ளைக்கு நாமதான பக்கபலமா இருக்கனும்.. அதோடு இன்று தன் கணவர் உயிர்பிரிந்த நாள்.. இனி அனைத்தையும் மேலிருந்து அவர் பார்த்துக்கொள்வார் என தன்னையும் தேற்றி..
‘அக்கா பெரிய பொண்ணாய்ட்டா பாலா..” என்று சிரித்த முகமாக சொல்லி.. ‘வா.. நாம வீட்டுக்கு போலாம்..” என்று மகளையும் அரவணைப்போடு அழைத்து வந்தார் வீட்டிற்க்கு.
திலகவதி பெரிய பொண்ணாகி ஆறு மாதம் முடிந்திருக்க.. ‘வீட்டு வேலைக்கு ஆள் கேக்குறாங்க ஜெயா.. மாசம் மூவாயிரம் குடுக்குறாங்களாம்.. சமைக்கிறதுக்கு வேறஆள் வந்திடறாங்க.. மேல்வேலைதான்.. போறியா..?” என்று பக்கத்துவீட்டு ராணி கேட்க..
தன் கணவர் உயிரோடு இருக்கும்போதே வீட்டு வேலைக்கு செல்ல ஒருமுறை ஜெயா கேட்டிருக்கிறார்.. பொண்டாட்டியை அடுத்த வீட்டு எச்சி பாத்திரம் தேய்ச்சி அதுல வர காசுல சாப்பிடற அளவுக்கு உன் புருசன் இன்னும் சோடைபோகல.. என்று கோபமாய் சொன்னது நினைவு வரவும் கண்கலங்கினார் ஜெயா.
‘யோசிக்காத ஜெயா.. காலை பத்து மணிக்கு போனா மதியம் இரண்டு மணிக்கு வந்திடலாம்.. வேற இடத்துல இவ்ளோ காசு குடுக்கமாட்டாங்க.. அவங்க வீட்டுக்கும் பக்கத்து வீட்லதான் நான் வேலைசெய்றேன்.. நம்பிக்கையான ஆள் இருந்தா சொல்லுங்கன்னாங்க.. எனக்கு உன் நியாபகம்தான் வந்திச்சி.. ஒருநாள் லேட்டானாலும் வேற ஆள் போட்டுக்குவாங்க.. ஆறுமாசத்துக்கு முன்ன அந்தாளோட பொண்டாட்டி செத்துடுச்சி.. அவங்க மகன் கொஞ்சம் லூசுமாதிரி.. நாம சரியா நடந்துகிட்டோம்னா சொன்ன சம்பளத்தைவிட சேத்து கூட பணம் தருவாங்க..” என்று சொல்ல..
‘சரி நான் போறேன்..” என்று சொல்லி வேலைக்கு போகவும்.. ஜெயாவிற்கும் அங்கு வேலைசெய்ய பிடித்திருக்க.. அங்கும் வேலை செய்துகொண்டு.. மாலையில் வேறொரு வீட்டிற்கும் வேலைக்கு செல்ல கொஞ்சம் வறுமை போனது.
ஒரு நாள் ஜெயாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக.. அன்று திலகவதி வேலைக்கு செல்ல.. அன்றிலிருந்து ஒருவாரமாக திலகவதியை கவனித்த முதலாளி.. உடல்நிலை சரியாகி வந்த ஜெயாவிடம்..
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் பதினைந்து வயதே ஆன திலகாவை.. நாற்பத்தைந்து வயதிற்கு மேலிருக்கும் முதலாளி இரண்டாம் தாரமாக பெண்கேட்க.. வெலவெலத்துப் போனார் ஜெயா.. அத்தனை பெரிய பணக்காரரிடம் தன் கோபத்தை காட்டவும் தைரியம் வரவில்லை ஜெயாவிற்கு.. ஆனால் வேலைக்கு செல்வதை நிறுத்தியிருந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு ராணிமூலம் வீட்டினை தெரிந்துகொண்ட முதலாளி திலகவதியின் வீட்டிற்கே வந்து தொந்தரவு செய்யவும்..
சற்றே தைரியத்தை வரவழைத்து.. ‘என் பொண்ணுக்கு இப்போதான் பதினைஞ்சு வயசு.. அவ ஸ்கூல் வாத்தியாரோட அப்பா போலீசா இருக்காராம்.. அவர்கிட்ட நீங்க பண்றதை சொன்னா என்னாகும்னு யோசிச்சிக்கோங்க.. அநாவசியமா என்னை போலீஸ் ஸ்டேசன்க்கு போகவச்சிடாதிங்க..” என்று தைரியமாய் பேச..
ஜெயாவின் பேச்சினில் பயம் எட்டிப்பார்த்தாலும்.. அதை மறைத்தவனாய்.. ‘என்னை எதிர்த்திட்டு உன் பொண்ணை யாருக்கு கட்டி கொடுக்கிறேன்னு நானும் பார்த்திடறேன்..” என்று சூளுரைத்து சென்றான்.
அந்த வீட்டின் வருமானம் போகவும் மீண்டும் வறுமை வாட்ட.. பத்தாம் வகுப்பை முடித்த திலகவதி விடுமுறை நாளில் தானும் வேலைக்கு செல்ல விருப்பம் தெரிவித்தாள் அன்னையிடம்.
மகள் வேலைக்கு சென்றால் அந்த பணத்தில் அவளுக்கு எதாவது சேர்க்கலாம் என்றெண்ணினார் ஜெயா. ஆனாலும் வீட்டு வேலைக்கு மகளை அனுப்ப மனமின்றி.. பக்கத்தில் இருந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலைகேட்க.. அவர்களும் ஒத்துக்கொள்ள அன்றிலிருந்து அங்கு வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள் திலகவதி.
தானும் வேலைக்கு செல்வதால் மூன்று வேளையும் நல்ல உணவு கிடைக்கவும்.. பத்தாவது பாசாகியும் பதினொன்றாம் வகுப்பு படிக்கமாட்டேன் என சொல்லி.. மூன்று வருடமாக வேலைக்கு சென்று வந்திருந்த திலகவதிக்கு டெய்லரிங் மீது ஆர்வம் வரவும்.. மாலையில் டெய்லரிங் கற்றுக்கொள்ள துவங்கினாள்.
டெய்லரிங் கிளாசை விட்டு வந்துகொண்டிருந்த திலகவதி.. மீண்டும் அந்த முதலாளியின் கண்ணில் பட.. மெல்ல நயமாக திலகவதியிடம் ஆசை வார்த்தை பேச ஆரம்பித்தான்.
‘நானும் பார்க்கிறேன்.. மூனு தாவனி பாவாடையையே மாத்தி மாத்தி போட்டுட்டிருக்க.. எதுக்கு இப்படி கஷ்டப்படனும்..? நீ என்னை கல்யாணம் செய்துகிட்டா உங்கம்மாக்கு ஒரு வீடு கட்டி தரேன்.. செலவுக்கும் மாசா மாசம் பத்தாயிரம் தரேன்.. உன் தம்பியையும் நானே படிக்கவைக்கிறேன்.. “ என்பது போல பேசவும்.. தன் அம்மா பணத்திற்கு படும் பாட்டை நினைத்தவள்..
பேசாம இவங்களையே கல்யாணம் செய்துக்கலாமே.. நம்ம அம்மாவோட கஷ்டமெல்லாம் போயே போய்டும் என யோசிக்க ஆரம்பித்தவள்.. அதை தன் அன்னையிடமும் கபடமின்றி சொன்னாள்.
அதிர்ச்சியான ஜெயா.. ‘எத்தனை நாளா அந்தாளு உன்கிட்ட பேசுறான்..?” என கேட்க..
‘ஒரு மாசமா பேசுறாங்கமா.. நல்லாருக்கியா.. படிக்கிறியா..? உன் தம்பி எப்படியிருக்கான்.? உன் அம்மா எப்படி இருக்காங்கன்னுதான்மா கேட்ப்பாங்க.. இன்னைக்குத்தான் கல்யாணத்துக்கு கேட்டாங்க..” என்றாள்.
‘இனி நீ எங்கயும் வேலைக்கும் போகவேண்டாம்.. துணி தைக்கவும் கத்துக்கவேண்டாம்..” என்று தீர்க்கமாக சொல்ல..
‘கல்யாணம்தானம்மா…? பண்ணிக்கிறேனே.. நம்ம கஷ்டமெல்லாம் போய்டும்..” என்று தன்னை திருமணம் செய்துகொண்டால் என்னென்ன செய்வேன் என்று சொன்னானோ.. அத்தனையும் சொல்லி திலகவதி சிறுபிள்ளையாய் கெஞ்ச..
மகளின் சிறு பிள்ளைதனத்தில் கோபமுற்றவர்.. ‘உனக்கு எப்போ கல்யாணம் செய்யனும்னு எனக்கு தெரியாதா..? வாய மூடுடி..” என்று கத்த..
‘நீ சரியான லூசுமா.. அவங்ககிட்ட எவ்ளோ பணம் இருக்கு.. நமக்கும் தரேன்னுதான சொல்றாங்க.. நீயும் வேலைக்கு போய் கஷ்டப்படவேணாம்.. உனக்குத்தான் எதுவுமே விளங்கமாட்டுக்குது.. நான் அவங்களையே கட்டிக்கிறேன்…” என்று திலகவதி தன் அன்னைக்கு புத்திபுகட்ட..
ஜெயாவிற்கு வந்த கோபத்தில் மத்துக்கட்டையால் கோபம் தீரும்வரை மகளை அடித்தவர்.. ‘நாலு பணம் சம்பாதிக்கவும் எனக்கே புத்தி செல்றியா..? ஒழுங்கா வீட்டோட இரு..” என்று திட்ட..
ஜெயாவின் திட்டலெல்லாம் காதில் வாங்காதவளாய் உப்பிசிவந்திருந்த அடிபட்ட இடத்தினை தேய்த்தபடி திலகவதி தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருக்க.. வலிதாளாமல் மகள் அழுவதையும் காண சகியாமல் அருகிலிருந்த கோவிலுக்கு சென்றார்.
வழக்கமாக அந்த கோவிலுக்கு வரும் அன்னபூரணி.. அழுதுகொண்டிருந்த ஜெயாவைப் பார்த்து.. யாரிந்த பொம்பள..? இதுவரை இந்த கோவில்ல நாம பார்த்ததில்லையே.. கோவிலுக்கு வரவங்க இப்படியா குளிக்காம கொள்ளாம அள்ளிமுடிஞ்ச கொண்டையோடவும் இழுத்து சொருகின புடவையோடவும் வருவாங்க..? என நினைத்தபடியே சாமிகும்பிட்டு வரவும்.. அப்பொழுதும் அதேநிலையில் அழுதுகொண்டிருந்தவரைப் பார்த்த அன்னபூரணிக்கு இம்முறை பரிதாபம் தோன்ற..
அவரருகில் சென்றவர்.. ‘யாருக்குதான் துன்பமில்ல..? கோவிலுக்கு வந்திட்டு சாமி கும்பிடாம இப்படி அழுதிட்டிருந்தா கஷ்டம் போய்டுமா..?” என அனுசரனையாய் கேட்டு.. ‘இந்தாங்க..” என குங்குமமும் விபூதியும் கொடுக்க..
குங்குமத்தை காண்பித்து.. ‘இந்த பிராப்த்தமெல்லாம் எனக்கில்லம்மா..” என்றழுதவர்.. ‘இந்த கோயில்ல இருக்க சாமிக்கெல்லாம் கண்ணு தெரியுமோ தெரியாதோ..? எதுக்குத்தான் எங்களுக்கு மட்டும் இத்தனை துன்பத்தை தருதோ.. சாமி கும்பிட்டா மட்டும் என் துன்பம் போய்டுமா..?”என்று அழவும்..
‘அப்படி சொல்லக்கூடாது..” என்ற அன்னப்பூரணி ஆறுதலாய் அவரருகில் அமரவும்.. தன் துன்பத்தையும் திலகவதியின் நிலையையும் சொல்லி ஜெயா அழவும்..
‘இத்தனை வெள்ளந்தியா உன் பொண்ணு..? ஒரு நாளைக்கு என் வீட்டுக்கு கூட்டிட்டு வரியா..? நான் பார்க்கனும்..” என்று பிரசாத்தை மனதில் வைத்து கேட்க..
ஜெயா சரி என்பதாய் தலையசைக்க.. அடுத்தநாளே ஜெயா அன்னபூரணியின் வீட்டிற்கு திலகவதியை அழைத்து வரவும்.. திலகவதியின் குழந்தை முகமும்.. கபடமற்ற பேச்சும் அன்னபூரணிக்கு மிகவும் பிடித்திட.. உங்க வீடு எங்கயிருக்கு என்று விபரம் கேட்டறிந்தவர்.. ஜெயாவையும் திலகவதியையும் சாப்பிடவைத்து அனுப்பிவைத்தவர்..
தன் கணவரிடம் திலகவதியை மருமகளாக்கிக்கொள்ளும் தன் ஆசையை அன்னபூரணி சொல்ல. பொதுவாக மகனை பெற்றவர்கள் தன் மகனுக்கு பெரிய இடத்தில் பெண்பார்க்க நினைப்பதையும்.. பெண்வீட்டில் மகனுக்கு சீராக நிறைய கேட்பதையும் நினைத்த மூர்த்தி.. தன் மனைவியை பெருமையோடு பார்த்து..
‘உனக்கு பிடிச்சிருந்து பிரசாத்துக்கும் பிடிச்சிருந்தா எனக்கு சம்மதம்தான்..” என்று முழுமனதாய் சொல்ல.. அடுத்து வந்த வாரத்திலேயே ஜெயாவின் வீட்டிற்கு சென்ற அன்னபூரணி தன் மகனின் விபரம் சொல்லி பெண்கேட்க.. முழு மனதாய் சம்மதித்தார் ஜெயா.
முதலில் திருமணத்திற்கு மறுத்த பிரசாத்தையும் தன் அழுகையால் தொடர்ந்து தாக்கவும்.. மகனும் திருமணத்திற்கு சம்மதித்திட.. தன்னிடமிருந்த நகைகளில் கொஞ்சமும்.. துணிமணிகளும் புதிதாய் எடுத்துக்கொண்டு தன் கணவரோடும் அக்கம் பக்கம் வீட்டினர் சிலபேரோடும் ஜெயாவின் வீட்டிற்கு சென்று.. திலகவதியை தன் மகனுக்கு பரிசம் போட.. கனவிலும் பாராத நகைகளும் புதுத்துணிமணிகளும் திலகவதிக்கு அத்தனை சந்தோசத்தை கொடுக்க.. மனம் நிறைந்த சந்தோசத்தோடு திருமணத்திற்க்கு தயாரானாள்.