.
அத்தியாயம் 16
இரவு எட்டு மணியாகியிருக்க.. பெரியவர்கள் சாப்பிடும் நேரம் நெருங்கவே.. இல்ல நிர்வாகி.. ‘டாக்டர் தம்பி.. இவங்க சாப்பிடும் நேரம் ஆய்ட்டு…” என்று கொஞ்சம் அவஸ்தையோடு சொல்ல..
‘ஓ..” என்று டைம் பார்த்தவன்.. ‘குழந்தைங்களுக்கு பரிமாறியாச்சுங்களா ஆன்ட்டி..?” என்றான் அக்கறையோடு.
‘ம்ம்.. சாப்டுட்டிருக்காங்க..” என்று நிர்வாகி சொல்ல..
‘சரிங்க ஆன்ட்டி.. நான் கிளம்பறேன்..” என்று எழவும்.. திலகாவும் அங்கிருந்த பெரியவர்களுக்கு வணக்கம் சொல்லி சூர்யா பின்னோடு வந்தாள்.
காரில் அமர்ந்தவளுக்கு.. தான் இத்தனை நாளாய் பார்த்திருந்த சூர்யா நிஜமானவனா..? இல்லை இப்போ பார்க்கும் சூர்யா நிஜமானவனா என குழம்பிப்போனாள்.
மனைவி அமர்ந்ததும் டோரை சரியாக சாத்தியிருக்காளா எனப் பார்த்தவன்.. அவள் கதவை கையில் பிடித்திருந்ததைப் பார்த்ததும்.. ‘க்ளோஸ் பண்ணு திலகா..” என்றான்.
‘அது மூடமாட்டுது..” என்றாள். மனைவியருகே வந்தவன் அவளின் துப்பட்டாவை உள்ளே இழுத்து சரிசெய்து.. பின் கதவை அறைந்து சாத்தி.. அவளுக்கு சீட் பெல்ட்டும் போட்டு காரை ஸ்டார்ட் செய்தவன்.. ‘வரும்போது எப்படி சாத்தின..?” என்றான்.
‘இப்படியே பிடிச்சிட்டேதான் வந்தேன்..” என்று திலகவதி சொல்ல..
‘என்ன..?” என தலையில் கையை வைத்தவன்.. ‘சொல்லமாட்டியா என்கிட்ட..? அறிவிருக்கா உனக்கு..? டிரா‡பிக்கில ஏது கதவை விட்டுருந்தினா என்ன ஆகியிருக்கும்..?” என்று மிகுந்த கோபத்தோடு கடிய..
என்கூட இருந்தா மட்டும் இவனுக்கு எங்கயிருந்துதான் கோபம் வருமோ..? என மனதில் திட்டி.. ‘அதான் விடலயே.. கெட்டியா பிடிச்சிக்கிட்டேனே..? எதுக்கு டென்சன் ஆகுறிங்க..?” என்று சன்னக் குரலில் சொல்ல..
‘ச்ச.. நான் எப்படி கவனிக்காம விட்டேன்.?” என்று தன்னைத்தானே நொந்து கொள்ள.. ‘இத்தனை நேரம் நல்லாதான இருந்திங்க.. இப்போ ஏன் இப்படி..?” என்று திலகவதி தயக்கத்தோடே கேட்டே விட..
‘லூசு.. பின்னாடியேது டூ வீலர்ல யாரவது வந்திருந்து.. நீயேது அந்த நேரம் டோரை விட்ருந்தேன்னா என்னவாகியிருக்கும் தெரியுமா..? உயிர் போனா திரும்ப வருமா..? என்னால மூட முடியலன்னு வீட்லயே என்கிட்ட சொல்றதுக்கென்ன..?” என்று கொஞ்சமும் கோபம் குறையாமல் கடிய..
‘அன்னைக்கு பார்க்குக்கு வந்ததுக்கப்புறம் இப்போதான் இரண்டாவது முறையா கார்ல உக்காருறேன்.. இப்படி மூடினாதான் மூடும்னு எனக்கென்ன தெரியும்..? நீங்கதான் கார்லயே பிறந்து வளர்ந்தவங்க.. நான் சரியா பண்றனா இல்லையான்னு முன்னமே பார்த்திருக்க வேண்டியதுதான..?” என்றாள் தானும் கொஞ்சம் குரலுயர்த்தி.
பார்க்கென்று சொன்னதும்.. அன்னைக்கு பிரசாத்தோட ஸ்கார்பியோல வந்ததுனால பிரசாத் நியாபகம் ஏது வந்திடுச்சோ என முதலில் திலகாவின் முகத்தை பார்த்தவன்.. அப்படி ஏதுமில்லாமல் அவளின் முகம் கோபத்தை காட்டிக்கொண்டிருக்க.. ஆசுவாசப்பட்டவன்.. பிறகுதான் கொஞ்சநேரமாக தன்னிடம் சரிக்கு சரியாக வாய் பேசிக்கொண்டிருக்கும் மனைவியை ஆழ்ந்து பார்த்தான்.
இதன்ன..? வழக்கம்போல சண்டை கட்டுவான்னு பார்த்தா.. இப்படி பார்க்கிறான் என நினைத்தவள்.. கண்ணிமைக்காமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த சூர்யாவின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலைகவிழ்ந்தாள்.
பிறகு சில நொடி இடைவெளிவிட்டு கோபம் குறைத்தானா என சூர்யாவின் முகத்தையே அவனறியாமல் ஓரக்கண்ணால் பார்த்தாள். ஆனால் அவனின் முகத்தினில் இருந்து எதையும் அறியமுடியவில்லை திலகாவால்.
திலகவதிக்கு பழைய நினைவு வராமல் இருந்ததே சூர்யாவிற்க்கு பெரும் நிம்மதியை கொடுத்திருக்க.. என்றுமில்லாமல் இன்று கள்ளப்பார்வை பார்த்து வரும் மனைவியை அவளறியாமல் தானும் பார்த்து வந்தான்.
(பிரசாத்தின் இறப்பிற்க்கு ஒருநாள் முன்பாக தான் கொடுத்த டீயை பெற்றுக்கொள்ளாமல்.. தன்னையே பார்த்திருந்தது.. அதன்பிறகும் வரும்போதெல்லாம் தன்னை ஊன்றிப்பார்ப்பது.. பிறகு மூர்த்தி அன்னபூரணியின் முன் நல்ல பையனாக நடிப்பதென்று.. அப்பொழுதிலிருந்தே சூர்யாவின் மேல் நல்ல அபிப்பிராயம் இல்லை திலகாவிற்க்கு.
இதெல்லாம் போக சமயம் பார்த்து தன்னை மிரட்டி கல்யாணம் செய்ததற்க்கு பிறகு முழு அயோக்யனாகவே சூர்யா நிலைத்திருந்தான் திலகவதியின் மனதினில்.)
தன் நினைப்பிற்க்கு மாறாக இன்று அங்கிருக்கும் குழந்தைகளிடம் சிரித்தமுகமாக எத்தனை அன்பை பொழிந்தான். வீட்டில் நொடிக்கொருமுறை தன்னை சுத்தம் செய்துகொள்பவன்.. இன்று அந்த பெரியவர்களிடத்தில் சின்ன முகசுழிப்புக்கூட காட்டாமல் எப்படி அவர்களை தொட்டு பார்;த்தான்.?
அதோடு அங்கு வேலை செய்பவர்களெல்லாம் இவனுக்கு எத்தனை மரியாதை தருகிறார்கள்..? ஒரு நாளுக்கு இத்தனை பேருக்கும் சாப்பாட்டிற்க்கே எவ்வளவு செலவாகும்..? எல்லாம் இவன்தான் பார்க்கிறான் என்று அந்த பாட்டி ரொம்ப பெருமையா சொன்னாங்களே..? அந்த டாக்டர் சொன்னது போல கொஞ்சம் நல்லவன்தானோ..? என யோசித்தவள் மீண்டும் ஒருமுறை கள்ளப்பார்வை பார்த்தாள் கணவனை. சூர்யா காரோட்டுவதில் கவனமாயிருப்பதுபோல் தோன்றவும் நிம்மதியாக பார்வையை விலக்கினாள்.
பார்வையை மட்டும்தான் விலக்கினாள். மனம் சூர்யாவையே சுற்றிக்கொண்டிருந்தது. குழந்தைகளிடம் அத்னை அன்பு காட்டுகிறான்.. ஊனமுள்ள குழந்தைகளை படிக்க வைக்கிறான்.. அம்மா மீது உயிரையே வைத்திருக்கான்.. இவன்கூட வேலை செய்யிறவங்களும் இவனைப்பத்தி பெருமையாத்தான் சொல்றாங்க.. மூர்த்தி அப்பாவும் கூட சூர்யா ரொம்ப நல்லவன்னு சொன்னாரு..
அப்போ ஏன் என்கிட்ட மட்டும் இத்தனை கெட்டவனா இருக்கான்..? இவனோடு கல்யாணம் வேணாம்.. எனக்கு இவனை பிடிக்கல என்பதுபோல நான்தான் என் மனதை தெளிவாக வெளிப்படுத்தினேனே.. அப்படியிருந்தும் என்னை மட்டும் ஏன் சித்திரவதை செய்யிறான்..? என யோசிக்க மீண்டும் ஒருமுறை பார்த்தாள் சூர்யாவை.
சரியான கேடி.. யார் யாரை எங்க வளைக்கனுமோ அங்க வளைக்க கத்துருக்கான்.. இவனைப்போய் குழந்தை உள்ளம் கொண்டவன்னு சொல்றாங்களே.. இதுல இவனை நாம சந்தோசமா வச்சிக்கனுமாம்.. அந்த கிழவி அத்தனை முறை நமக்கு புத்திசொல்லுது.. அறிவு கெட்ட கிழவி.. உன்னை யாராவது பிடிக்காம கல்யாணம் செய்திருந்தா என் கஷ்டம் உனக்கு அப்போ புரிஞ்சிருக்கும்.. என சற்றுமுன் இல்லத்தில் பாட்டி என மரியாதையாய் நினைத்தவரை தற்போது கிழவி என்று வசைபாடினாள்.
சூர்யா மீது எத்தனை வெறுப்பிருந்தாலும்.. இன்று அவன் அழுதது மனதை ஏதோ செய்ய.. எதுக்குத்தான் அப்படி கதறினான்..? அதோடு இன்று நாம கோபமா பதில் சொல்லியும் நம்மளை திட்டாதது.. இத்தனை நேரம் இல்லத்தில் இருந்தபோது இருந்த அவனின் சந்தோசமான முகவாட்டம் என மீண்டும் மீண்டும் யோசிக்க.. இந்த சூர்யா முற்றிலும் திலகாவிற்க்கு புதியவனே. புதியவனை மீண்டும் ஒரு முறை பார்க்க..
இம்முறை அவளின் பார்வையை எதிர்கொண்டவன்.. எதுக்கு ஒரு செகன்ட் இரண்டு செகன்ட்ன்னு பார்த்திட்டு பார்த்திட்டு திரும்பிக்கிற..? கொஞ்சம் தாரளமாத்தான் பாரேன்.. நான்ல்லாம் உன்னைமாதிரி முகம் திருப்ப மாட்டேன்..” என்றான் முழுதாய் இயல்புநிலைக்கு திரும்பியவனாய்.
‘நானெதுக்கு உங்களை பார்க்கப்போறேன்..? எதுக்கு இப்படி பெல்ட் போட்டு என்னை கட்டிவச்சிருக்கிங்க..? காரை மூடத்தான் தெரியாது.. மத்தபடி உக்கார்ந்துட்டு கூடவா வரத்தெரியாது..?” என முனுமுனுக்க..
அமைதியாய் ஓட்டிக்கொண்டிருந்தவன்.. கொஞ்சம் போக்குவரத்து குறைந்திருந்த இடத்திற்க்கு வந்தும் ஓரமாக சடனாக நிறுத்த.. திலகாவின் தலை முன்னே வந்து செல்ல..
‘ம்ம்.. இதுபோல சடர்ன்னா நிறுத்தினா நீ முன்னாடி இடிச்சிக்காம இருக்கவும்.. சப்போஸ் சின்னதா ஆக்சிடன்ட் ஆனாலும் பலமா அடிப்படாம இருக்கத்தான் அந்த பெல்ட்.. புரியுதா..?” என்றான்.
‘அப்போ உங்களுக்கு சரியா கார் ஓட்டத்தெரியாதுன்னு சொல்லுங்க..?” என்று பதில் பேச.. சூர்யா முறைக்க.. கொஞ்சமாய் பயந்தவள்..
‘இல்ல.. நீங்களும் பெல்ட் போட்ருக்கிங்களேன்னு சட்டுன்னு சொல்லிட்டேன்..” என்றாள் தயக்கத்தோடே.
இவளை அப்பப்போ வெளில கூட்டிட்டு வந்தா பரவால்ல போலவே.. கொஞ்சம் பரவால்லையா வாய்பேசுறா என நினைத்தவன்.. காரை நிறுத்தி அவளின் பெல்ட்டை கழற்ற முற்பட..
அதற்க்குள் தானே பெல்ட்டை கழற்றியவள்.. கதவை திறந்து வெளியே வர.. இவன் ஆச்சர்யமாய் பார்க்க.. அவனின் பார்வை புரிந்தவள்.. ‘படிப்புத்தான் வராது.. மத்தபடி எந்த ஒரு விசயம்ன்னாலும் சட்டுன்னு கத்துக்குவேன்.. முன்ன நீங்க இறங்கும்போது எப்படி திறந்திங்கன்னு கவனமா பார்த்தேன்.. அதேபோல செய்தேன்.. திறந்திடுச்சி..” என்று முறுக்கி உள்ளே போனாள்.
திலகாவின் நீளமான பேச்சிலும் பாவனையிலும் அசந்து நின்றான் சூர்யா.
‘திலகா.. வெளிலயே நில்லு..” என்று கமலம் குரல் கொடுக்க..
அச்சோ.. இவங்க மகனை எதிர்த்து பேசுனது இவங்களுக்கு காது கேட்ருச்சோ..? என்று தவிப்போடு திலகா நின்றிருக்க..
‘ஏன் இங்கையே நின்னுட்ட..?” என்று கேட்டபடியே சூர்யா உள்ளே வர எத்தணிக்க..
‘அங்கையே நில்லு சூர்யா..” என்றபடி கமலம் அவர்களை நோக்கி தன் வீல்சேரை தள்ளிக்கொண்டு வர.. பின்னோடு முத்துவும் ஆரத்தி தட்டோடு வர..
இவர்களிடம் வந்ததும் முத்துவிடமிருந்து தட்டை வாங்கிய கமலம்.. மகனுக்கும் மருமகளுக்கும் திருஷ்டி கழிக்கவேண்டி சுற்ற..
திலகவதி சங்கடத்தோடு நின்றிருக்க.. சூர்யா விரும்பி ஏற்றான் இச்செயலை. ம்ம்.. திருமணமானதிலிருந்து திலகவதிக்காக அன்னை செய்யும் முதல் சாங்கியமல்லவா..? கொஞ்சம் பூரிப்பாய் உணர்ந்தான்.
‘ம்ம்.. இப்போ உள்ள வா..” என்று சந்தோசமாய் வரவேற்க்க..
‘திலகவதியோட அம்மா கிளம்பிட்டாங்களாம்மா..?” என்றான்.
‘இப்போ கொஞ்சம் முன்னதான் கிளம்பினாங்க..” என்றார்.
‘சாப்ட்டிங்களாம்மா..?”
‘ம்ம் வழக்கம் போல எட்டுமணிக்கெல்லாம் சாப்டுட்டேன்.. நானும் சம்மந்தியும் பேசிக்கிட்டே சாப்பிட்டோம்.. எட்டரை ஆகவும் டாக்டர் தம்பி வந்தா சொல்லிடுங்க.. பாலாக்கு சமைக்கனும் நான் கிளம்பறேன்னு கிளம்பிட்டாங்க..” என்றார்.
திலகவதி நின்றுகொண்டே இருக்க.. ‘ஏன் நின்னுட்டிருக்க…? ஒன்பது மணியாகிடுச்சி.. முதல்ல இரண்டுபேரும் சாப்பிடுங்க..” என்றார் கமலம்.